Monday, July 29, 2013

தலைவா படம்–ஆகஸ்ட் 9ஆம் தேதி வருமா இல்லை இன்னும் தள்ளி போகுமா????


சிட்னியில் தலைவா படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில், படம் எப்போது வெளி வரும் என்று இயக்குனர் விஜய்யிடம் நாங்கள் கேட்டபோது, ஜூன்15 அன்று வெளி வரும் என்று சொன்னார். கொஞ்ச நாள் கழித்து, நடிகர் விஜய் பிறந்த நாளான ஜூன்  22ஆம் தேதி அன்று படம் வெளிவரும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு ஜூலை 15ஆம் தேதி வெளிவரும் என்று சொன்னார்கள். கடைசியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தான் தலைவா படம் வெளி வரும் என்று தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் என்று ஊடகங்கள் வெளியிட்டிருந்தது.

“நீ நடித்த படம் எப்போது வெளிவருகிறது”(என்னமோ நான் தான் அந்த படத்தின் கதாநாயகன் மாதிரி!!!!!) என்று கேட்கும் நண்பர்களிடம் எல்லாம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவரும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அதனை உறுதி செய்கிற மாதிரி, என்னுடன் நடித்த நண்பர் ஒருவர் நேற்று எனக்கு போன் பண்ணி, நாம நடித்த படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி “Reading Cinemas”ல வெளிவர இருக்கிறது. படத்துக்கான டிக்கெட் இந்தியன் ஸ்டோர்ஸ்ல விற்க ஆரம்பித்து விட்டார்கள். நாம அந்த படத்துக்கு போட்ட காஸ்ட்யூமையே, போட்டுக்கிட்டு போய் அந்த படத்தை பார்ப்போம் என்று கூறினார். நானும் நம்முடன் நடித்த மற்ற நடிகர்களிடம் சொல்லிவிடுகிறேன் என்று சொன்னேன். இன்றைக்கு காலையில் ஆபிஸ் வந்து பத்திரிக்கையை படித்தால், தலைவா படம் வெளிவரும் தேதி , இன்னும் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக  இருக்கிறது என்று போட்டிருந்தது. அட கடவுளே! இன்னும் தள்ளிப் போகப் போகுதான்னு (சிட்னி வாழ் தமிழர்களான நாங்க நடிச்சதுல,யாருக்கோ பிடிக்கலை போல!!!) அந்த செய்தியை படித்தேன். பிரச்சனை என்னவென்றால், படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. ஆனால் படத்தை தயாரித்தவர்களோ யு சான்றிதழ் தான் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு தணிக்கை குழுவினர், படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கிறது, அதனால் யு/ஏ சான்றிதழ் தான் கொடுக்க முடியும். யு தான் வேண்டுமென்றால், சில காட்சிகளை நீக்குங்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு படம் சம்பந்தப்பட்டவர்களோ, கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த அந்த காட்சிகளை நீக்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். இப்போது ரிவைசிங் கமிட்டிக்கு இந்தப் படத்தை அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார் தயாரிப்பாளர், அதனால் படம் வெளிவருவதில் இன்னும் தாமதமாகலாம்  என்று அந்த செய்தியில் இருந்தது.

கொஞ்ச நாளைக்கு முன்பு தான் தலைவா படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் என்று ஒரு செய்தியை படித்தேன். கடைசில அந்த செய்தியில் உண்மை இல்லையாம். அடப்பாவிகளா !!!! கிசு கிசுக்கள் எல்லாம் படிச்சிருக்கோம். அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை அப்படிங்கிறது, அந்த செய்தியில் சம்பந்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனா, இந்த தணிக்கை சான்றிதழ் பற்றி எல்லாம் ஒரு பொய்யான செய்திகளை எப்படி பரப்புறாங்கன்னு தான் தெரியலை. பிறகு அந்த நண்பரை போனில் கூப்பிட்டு, என்னங்க, நேற்று தான் நீங்க சொன்னிங்க, ஆனால் இன்னைக்கு படம் வெளிவரும் தேதி தள்ளிப்போகலாம்னு போட்டிருக்கேன்னு கேட்டேன். அதற்கு, அவர் ரொம்ப கூலாக, நடிகர் விஜய் நடிச்ச காட்சிகள் எல்லாம் வெட்டிட்டு, நாம நடிச்ச காட்சிகள் மட்டும் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை அப்படின்னு சொன்னாரு. நான் உடனே, எப்படிங்க உங்களால, இப்படியெல்லாம் பேச முடியுதுன்னு கேட்டேன். அதற்கு அவர், நாம நடிச்ச எந்த காட்சியிலும் வன்முறையே இல்லையே அப்படின்னாரு (என்னமோ நாங்க படம் முழுக்க வர மாதிரி அவருக்கு நினைப்பு).  

சரி, பார்ப்போம் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளிவருகிறதா இல்லை இன்னும் தள்ளிபோகுதான்னு.

Friday, July 26, 2013

கல்கியின் சரித்திரப் படைப்புகளை – படிக்காமல் கேட்கலாம்


நான் ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்கு சென்று வரும்போது, குறைந்தது இரண்டு கிலோவிற்கு புத்தகங்களை மட்டுமே வாங்கி வருவேன். இப்படி வாங்கி வந்ததில், என் வீட்டில் ஒரு மிகச் சிறிய தமிழ் நூலகமே அமைந்து விட்டது. அதில் பாதிக்குப்பாதி சரித்திர நாவல்கள். அதுவும் தமிழக சரித்திர நாவல்கள் மட்டும் தான். என்னை மாதிரி  ஆட்கள், சரித்திர நாவல்களை தேடித்தேடி படிப்போம். ஒரு சிலருக்கு சரித்திர நாவல்களை பார்த்தாலே பயம் வந்து விடும். வேறொன்றுமில்லை, அந்த புத்தகங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் இருக்கும். இந்த புத்தகத்தை எப்போது படித்து முடிப்பது என்ற எண்ணம் தான் அந்த பயத்திற்கு காரணமே. அவர்களுக்கெல்லாம் ஒரு அரிய செய்தி, கல்கியின் பிரசத்திப்பெற்ற நாவல்களான “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்” மற்றும் “பார்த்திபன் கனவு” போன்றவற்றை அமெரிக்க வாழ் தமிழர், திரு. ஸ்ரீகாந்த் ஆடியோ புத்தகங்களாக  உருவாக்கியிருக்கிறார். ஆடியோ புத்தகம் என்றால், செய்தி வாசிப்பது போல் தான் இருக்கும்' என்ற, பொதுவான விமர்சனங்களை உடைத்தெறிந்து, தனித்துவத்துடன் உருவாக்கி இருக்கிறார் அவர்.நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு குரலையும் பயன்படுத்தி உள்ளார். கல்கியின், "பொன்னியின் செல்வன்' நாவலில் வரும், 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, தானே பேசி அசத்தியுள்ளார். இது, 75 மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக வும், சிவகாமியின் சபதம் நாவல் 33 மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக வும்,பார்த்திபன் கனவு 11 மணி நேரமாக  ஓடக் கூடிய  ஆடியோ புத்தகமாக தயாரித்திருக்கிறார். தற்போது உ.வே.சாமிநாத ஐயரின், "என் சரித்திரம்” நூலை, ஆடியோ புத்தகமாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.  அன்றைக்கு ஓலைச்சுவடிகளாக இருந்த அரும்பெரும் தமிழ் நூல்களையெல்லாம் அச்சு வடிவத்திற்கு மாற்றியவர் உ.வே.சாமிநாத ஐயர். இன்று, அவருடைய நூலையே ஆடியோ புத்தகமாக மாற்றுகிறார் திரு. ஸ்ரீகாந்த். இப்படி தமிழ் சேவை செய்யும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.  
 
 

இவருடைய ஆடியோவை கேட்ட, மாற்றுத் திறனாளிகளும், முதியோரும், இவருடைய சேவையை பாராட்டி, நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், பாராட்டி வருகின்றனர். இவரை மாதிரி தன்னலமில்லாத பொதுச் சேவையில் ஈடுபடுவோருக்கு தேவை பணமோ, புகழோ இல்லை, வெறும் பாராட்டுக்கள் மட்டும் தான். அதனால் நாமும் இவரின் இணையத்தளத்திற்கு சென்று அவரை பாராட்டுவோமாக. அவரின் இணையத்தளம் - www.tamilaudiobooks.com

 

Tuesday, July 23, 2013

தமிழகத்தில் – தமிழும்,ஆங்கிலமும்


இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் “பிள்ளைகளின் அன்றாட வாழ்வினில் தமிழுக்கான இடம் குறைந்து போனது” பற்றி நீயா நானாவில் விவாதிக்கப்பட ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். அந்த கொடுமையை என்னத்த சொல்றது. அதாவது பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழை படிப்பதால் என்ன பயன்,அதற்கு ஆங்கிலத்தை படித்தாலாவது வாழ்கையில் முன்னேறலாம் என்றும், மேலும், பிறர் முன்பு ஆங்கிலம் பேசினால் தான் தன்னுடைய செல்வாக்கு உயரும் என்றும் எண்ணுகிறார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் பெற்றோர்களும் சரி, கல்வியை கற்றுக்கொடுக்கும் பள்ளிகளும் சரி, இந்த ஒரு தப்பான எண்ணத்தை தான் அவர்களின் மனதில் பதிய வைக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் பேசிய குழந்தைகள், வெளியிடங்களில் ஆங்கிலத்தில் தான் பேசுவோம், அப்பொழுது தான் தாங்கள் மதிக்கப்படுகிறோம் என்று கூறினார்கள். பெற்றோர்களும், நாங்கள் அவ்வாறு தான் அவர்களை பேசச் சொல்லி வலியுறுத்துகிறோம் என்று கூறியது தான் கொடுமையே. இன்னும் ஒரு பெண் குழந்தை, நான் என்னுடைய வீட்டிற்குள் செல்வதையே வெறுக்கிறேன். வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள், நான் ஆங்கிலத்தில் பேசினால், என்ன, இப்படி பேசுற,ஒழுங்காக ஆங்கிலத்தில் பேசு என்று ஒவ்வொருவரும் ஆங்கில வகுப்பு எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று கூறினார். இதற்கு பதிலளித்த அந்த பெண்ணின் தாயாரும், ஆமாம், நாங்கள் அவளின் எதிர்காலத்தை(?) கருத்தில் கொண்டு தான் இப்படி நடக்கிறோம் என்று கூறியதை கேட்டபொழுது, இவர்களின் அறியாமையை நினைத்து அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியின் உச்ச கட்ட கொடுமை என்னவென்றால், கிராமப்புற பகுதியிலிருந்து வந்த ஒரு பெண்மணி (அவருக்கு தமிழ் மட்டும் தான் தெரியும், ஆங்கிலம் தெரியாது), தனக்கு ஆங்கிலம் தெரியாது, அதனால் என் மகன் ஆங்கிலத்தில் பேசும்போது எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருகிறது என்று கூறினார். இது பரவாயில்லை, தனக்கு தெரியாத ஒன்றை தான் மகன் தெரிந்து வைத்திருக்கான் என்று நினைக்கும்போது, பெற்றோருக்கு ஒரு பூரிப்பும், பெருமையும் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் அந்த பெண்மணி அடுத்த சொன்ன விஷயம் இருக்கிறதே, அது தான் உண்மையிலேயே தமிழர்களாகிய நம்மை தலை குனிய வைக்கிறது. அதாவது, அவருடைய மகனுக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியும், எழுதப் படிக்க தெரியாதாம். அவன் தமிழ் எழுதப் படிக்க மிகவும் சிரமப்பட்டான், அதனால் அவனை பள்ளியில் தமிழ் மொழியை படிப்பதற்கு பதில், பிரெஞ்ச் மொழியைப் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இப்போது அவன் பிரெஞ்ச் மொழியை தான் படிக்கிறான் என்று கூறினார். இப்படியுமா இருப்பார்கள்?. எனக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது என்று கூறுவது தான் தமிழகத்தில் நாகரீகமாகிவிட்டது. இன்றைய சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் தான். ஆனால் அதற்காக தாய் மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தையும் மற்ற மொழிகளையும் கற்றுக்கொல்வது என்பது பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை புறக்கணித்துவிட்டு மற்றவர்களை “தாயே” என்று போற்றுவது போலாகும்.  இங்குள்ள என்னுடைய நண்பர்கள் சிலர் தமிழ் வழிக் கல்வியில் தான் படித்து முன்னறியவர்கள். அவர்கள் சொல்வது என்னவென்றால், “எவன் ஒருவன் தாய் மொழியை நன்றாக கற்கிறானோ,அவனால் தான் மற்ற மொழிகளையும் நன்றாக கற்க முடியும்” இது கண்டிப்பாக சத்தியமான வார்த்தை.
 
 

என்னடா இது! நாம் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றும், தமிழ்நாட்டில் மக்கள் ஆங்கில மொழிக்கு அடிமையாகி விட்டார்களே என்று வருத்தப்பட்டுக்கொண்டே, விஜய் தொலைக்காட்சியில் வேறு என்ன நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று பார்த்துக்கொண்டு வரும்போது தான் கண்ணில் பட்டது “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” என்று ஒரு நிகழ்ச்சி.  அந்த நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்தால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. எல்லோரும் அருமையாகவும்,  உணர்ச்சிப்பூர்வமாகவும்  தமிழில்  பேசினார்கள். கொந்தளித்த மனதை இந்த நிகழ்ச்சி சாந்தமடைய வைத்து விட்டது. இந்த நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போது, இந்த நிகழ்ச்சியை பார்த்தோமேயானால், நாமும் தமிழுக்கு ஏதோ ஒரு சிறிய வகையில் உதவி புரிகிறோம் என்ற ஒரு திண்ணம் மனதில் ஏற்படும்.

 

Wednesday, July 17, 2013

இங்கிலாந்தின் 2013ஆம் ஆண்டின் புத்திசாலி குழந்தை – ஒரு தமிழ் குழந்தை

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. நம் தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அவர்கள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த பதிவும் அதற்கு ஒரு சான்று தான்.  பிரிட்டனில், சேனல்-4ம் மற்றும் மென்சா அமைப்பும் இணைந்து பிரிட்டனின் புத்திசாலி குழந்தையை தேர்வு செய்ய போட்டி நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த போட்டியில், இந்த ஆண்டு 2000 குழந்தைகள் கலந்துகொண்டு, நான்கு சுற்றுகளாக நடந்த இந்த  போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 21 குழந்தைகள் தகுதி பெற்றனர். இறுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயதான தமிழ் குழந்தை ஸ்ரீநிதி வெற்றிபெற்றிருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தை ஒன்று இப்போட்டியில் வெல்வது இதுவே முதல் முறையாம்.  


     ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
     சான்றோன் எனக்கேட்ட தாய்

இந்த திருக்குறள் எத்தனை தாய்மார்களுக்கு பொருந்தும் என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக அந்த குழந்தையின் தாய்க்கு பொருந்தும்.   


Saturday, July 13, 2013

இறந்தவர்கள் உயிர் பிழைத்த அதிசயம்

ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த செய்தியை பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. ரவி சாஸ்திரி என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிபவர். அவரை இதய கோளாறு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள் சேர்த்திருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு பிறகு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள், அவரது உறவினர்களும் அவருடைய  உடலை  வீட்டிற்கு கொண்டு வந்து, இறுதிச் சடங்குகளை செய்வதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது அன்று இரவு, ரவியின் கால் விரல் அசைதிருக்கிறது. அதனை கண்ட உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உயிருடன் இருப்பதும், இருதயம் பலவீனமாக இருப்பதும் தெரிவந்திருக்கிறது. அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அவர் மறு நாள் எழுந்து உட்கார்ந்து, உறவினர்களோடு பேசியுள்ளார், அவருடைய மனைவி, சிவபெருமானை தொடர்ந்து பூஜித்து வந்தோம், அவர் அருளால் தான் என் கணவர் எமனின் பிடிக்குள் சென்று மீண்டு வந்துள்ளார் என்று கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே, அவர் கடவுளின் அருளால் தான் மீண்டு வந்தாரா அல்லது நம் மருத்துவர்களின் சரியான கவனிப்பின்மையால், அவர் இறந்ததாக அறிவித்து விட்டார்களா? என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். எது எப்படியோ, அவரை அடக்கம் பண்ணுவதற்குள்ளாகவே, அவர் உயிருடன் இருப்பது தெரிந்து அவரை காப்பாற்றி விட்டார்கள். இவருடைய விஷயத்தில், யாருக்கும் பயம் வந்திருக்காது. விரல் அசைவை பார்த்து, உயிர் இருக்கும் போல இருக்கே என்று எண்ணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது.

ஆனால் இன்னும் ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது ஏப்ரல் மாதத்தில், மதுரை மாவட்டத்தில், இப்படி தான் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இதில் அவர் ஒரு கட்சியின் கிளைச் செயலாளர் வேற. அந்த மருத்துவமனையில் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அவருடைய உறவினர்களும், அவருக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் செய்து, உடலை ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அவரது கட்சியினரும் மயானத்துக்கு வந்து  இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். மயானத்தில் அவரது உடலை தகனம் செய்வதற்கு முன்பு, உடலின் மீது தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிறது. அப்போது அவரது உடல் அசைந்து, அவர் எழுந்து உட்கார்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். (பின்ன, என்ன தான் சொந்தக்காரர்களாக இருந்தாலும், மயானத்துல எரிக்கிறதுக்கு முன்னாடி, இறந்த உடல் எழுந்து உட்கார்ந்துச்சுன்னா, யாருக்கு தான் பயம் வராது!!!) பின்னர் அவர் மட்டும் எழுந்து தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அவரை பார்த்த அவர் மனைவி, மிகவும் சந்தோசப்பட்டு, பழச்சாறு கொடுத்திருக்கிறார். அதனை குடித்த அவர், தான் மிகவும் தெம்பாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


இப்படி, இறக்கிறவர்கள் எல்லாம் மீண்டும் பிழைத்துக் கொண்டால், அவர்களின் உறவினர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.  ஆனால் பாவம் பூமாதேவி தான், என்ன பாண்ணுவாள். சரி, இவர்கள் எல்லாம் இறைவன் அருளால் தான் பிழைத்துக் கொண்டார்களா? இது தான் மில்லியன் டாலர் கேள்வி. ஆத்திக அன்பர்களுக்கு, இது இறைவனின் செயலாகத்தான் தோன்றும். அதே சமயம், நாத்திக அன்பர்களுக்கு, இது முழுக்க முழுக்க மருத்துவர்களின் கவனக்குறையால் ஏற்பட்டாதாக தான் தோன்றும். 

Tuesday, July 9, 2013

அலுவலக நண்பரின் அனுபவம் – ஒரு பாடம்

என்னோட அலுவலகத்துல பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர் ஒருத்தர் வேலை பார்க்கிறார். அவர் சிட்னிக்கு வந்து மூணு வருடம் கழித்து தான் தன்னோட நாட்டுக்கு விடுமுறைக்காக போயிருக்காரு. ஆனா ஊருக்கு போறதுக்கு முன்னாடி அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இருக்கே, அது உண்மையிலேயே நாம கத்துக்க வேண்டிய ஒரு பாடம்தான்னு நான் சொல்லுவேன்.

ஒன்றரை மாசம் முன்னாடி, அவர் ஊருக்கு போறதுக்காக ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ற சமயத்துல, தன்னோட மனைவிக்கிட்ட போன் பண்ணி பாஸ்போர்ட் வேலிடிட்டி எல்லாம் சரியா இருக்கான்னு கேட்டிருக்காரு. அவுங்களும் 2015 வரைக்கும் இருக்குனு பாஸ்போர்ட்டை பார்க்காம சொல்லியிருக்காங்க. இவரும் டிக்கெட்டுக்கு பணம் எல்லாம் கட்டிட்டாரு. அப்புறம் ஒரு வாரம் கழித்து,அவர் பாஸ்போர்ட் எடுத்து பார்த்திருக்காரு. அப்ப தான் தெரிஞ்சிருக்கு, பாஸ்போர்ட் காலாவதியான விஷயமே. அதுவும் அவுங்க மூணு பேருக்குமே(அவர்,அவுங்க மனைவி,மற்றும் மகன்) பாஸ்போர்ட் ஒரே தேதியில காலாவதியாயிருக்கு. மறு நாள் இங்க இருக்கிற பிலிப்பைன்ஸ் எம்பஸ்ஸில போய் பாஸ்போர்ட்டை புதிப்பிக்க அப்ளை பண்ணியிருக்காரு. என்ன பிரச்சனைன்னா, புது பாஸ்போர்ட் வருவதற்கு ஒரு மாசமாவது ஆகும். அவரு ஊருக்கு போற தேதியும், பாஸ்போர்ட் கைக்கு வர்ற தேதியும் கிட்டதட்ட ஒரே சமயம். அவருக்கு எப்படியும் ஊருக்கு போறதுக்குள்ள பாஸ்போர்ட் வந்துடும்னு கொஞ்சம்  நப்பாசை இருந்துச்சு. அதனால அலுவலகத்துல அப்ளை பண்ணின லீவையும் கான்சல் பண்ணலை. சரி, அதுக்குள்ள பாஸ்போர்ட் வரலைன்னா, டிக்கெட்டை மாத்தியாகனுமே, அதனால என்ன பண்ணலாம்னு டிக்கெட்டை புக் பண்ணின டிராவல் ஏஜெண்டு கிட்ட கேட்டிருக்காரு. அவுங்களும் டிக்கெட்டை வேற தேதிக்கு மாத்தணும்னா, ஒரு ஆளுக்கு இருநூறு டாலர் செலவாகும்னு சொல்லியிருக்காங்க. என்ன பண்றது பாஸ்போர்ட் வரலைன்னா, கூட அறநூறு டாலர் செலவு பண்ணி டிக்கெட்டை மாத்திக்கவேண்டியது தான்னு மனசை தேத்திக்கிட்டாரு. ஊருக்கு போறதுக்கு மூணு நாள் இருக்கும்போதும் பாஸ்போர்ட் வரலை. வேற வழியில்லை, டிக்கெட்டை மாத்தவேண்டியது தான்னு டிராவல் ஏஜெண்டுக்கு, அலுவலகத்திலிருந்து போன் பண்ணி கேட்டிருக்காரு. அவுங்க டிக்கெட்டை மாத்துறதுக்கு ஒரு ஆளுக்கு அறநூறு டாலர் ஆகும்னு சொல்லியிருக்காங்க (தொள்ளாயிரம் டாலருக்கு தான் டிக்கெட்டே வாங்கியிருக்காரு!!). இவருக்கு முதல்ல ஒண்ணுமே புரியலை. 

அப்புறம் தான் தெரிஞ்சுது,இவரு வாங்கும்போது இருந்த அந்த ஆஃபர் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் முடிஞ்சுப்போயிருக்கு, இவரு, அவுங்களுக்கு ஒண்ணும் சொல்லாம போனை வச்சுட்டு, வீட்டுக்கு போனை போட்டு மனைவியை ஒரு பிடி பிடிச்சிருக்காரு. இது எனக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு பார்க்கிறீங்களா(!), அவர் என்னோட எதிர் சீட்ல தான் உட்கார்ந்திருப்பாரு. என்ன தான் வேற மொழியில பேசுனாலும், கோபப்பட்டு பேசும்போது என்னமோ லடாய்ன்னு நமக்கு புரிஞ்சிடுமே. போனை வச்சிட்டு, என்கிட்ட நான் டிக்கெட் புக் பண்ணும்போதே என் மனைவிக்கிட்ட கேட்டேன், அப்பவே ஒரு நிமிஷம் பாஸ்போர்ட்டை பார்த்திருந்தாங்கன்னா, இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதுன்னு ஒரே புலம்பல். அப்ப தான் பெண்கள் எந்த நாடாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியா தான் இருப்பாங்கன்னு எனக்கு ஒரு பெரிய உண்மை தெரிஞ்சுது. அப்புறம் ஊருக்கு போக வேண்டாம்னு முடிவு பண்ணி, போன்ல டிக்கெட்டை கேன்ஸல் பண்ணப்பார்த்திருக்காரு. 

அந்த டிராவல் ஏஜெண்டுகாரங்க, நீங்க டிக்கெட்டை கேன்ஸல் பண்ண வேண்டாம், அதுக்கு பதிலா, நாளைக்கே , எம்பஸ்ஸிக்கு போய் டிராவல் டாக்குமென்டை வாங்கிக்கிட்டு ஊருக்கு போங்கன்னு சொல்லியிருக்காங்க. இவரும் மறு நாள் எம்பஸ்சிக்கு போய், இந்த மாதிரி, இந்த மாதிரின்னு சொல்லி, டிராவல் டாக்குமென்டை($360 கொடுத்து) அன்னைக்கே வாங்கிக்கிட்டு மறு நாள் ஊருக்கு குடும்பத்தோட கிளம்பி போயிட்டாரு. இன்னொரு சிக்கல் என்னன்னா, இவரோட புது பாஸ்போர்ட்டை பிலிப்பைன்ஸ்லேருந்து சிட்னிக்கு அனுப்பிடக்கூடாது. அதனால இவரு ஊருக்கு போன அடுத்த நாளே, அங்க இருக்கிற பாஸ்போர்ட் ஆபிஸ் போயி, பாஸ்போர்ட்டை சிட்னிக்கு அனுப்பிடாதீங்க, நானே இங்க வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லணும். மூணு வாரம் கழிச்சு, இவரு சிட்னி திரும்புறதுக்குள்ள, புது பாஸ்போர்ட் ரெடி ஆகலைன்னா, மறுபடியும் இந்த மாதிரி டிராவல் டாக்குமென்டை வாங்கிக்கிட்டு, பாஸ்போர்ட்டை சிட்னிக்கு அனுப்பிடுங்கன்னு சொல்லிட்டு வரணும்.

இவரோட அனுபவத்திலிருந்து, நான் கத்துக்கிட்டது என்னன்னா, வெளிநாடு போறதுக்கு முன்னாடி, பாஸ்போர்ட் எல்லாம் சரியா இருக்குதா, விசா எல்லாம் இருக்குதான்னு செக் பண்ணிட்டு தான் டிக்கெட்டை புக் பண்ணணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். நண்பர்களே! நீங்களும் அவசரப்பட்டு முதல்லயே டிக்கெட்டை புக் பண்ணிடாதீங்க. இதெல்லாம் சரியா இருக்குதான்னு பார்த்துட்டு உங்கள் பயண ஏற்பாடுகளை கவனியுங்கள்.

   

Monday, July 1, 2013

தலைவா படத்தின் டிரைலர்


நிறைய படத்தோட ஆடியோ ரிலீஸ் வெளிநாட்டில நடக்குது, அதனால தலைவா படத்தோட ஆடியோ ரிலீஸ் கூட இங்க சிட்னில நடக்குமோன்னு எனக்கு ஒரு சின்ன நப்பாசை இருந்துச்சு. ஆனா நான் முன்பு சொன்ன மாதிரி, அந்த படத்தோட பட்ஜெட் ஆஸ்திரேலியாவில எடுத்ததுனால தான் அதிகமாயிடுச்சுன்னு  சினிமா இண்டஸ்ட்ரில ஒரு பேச்சாம். அதனால கண்டிப்பா ஆடியோ ரிலீஸ் இங்க நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. கடைசில ஜூன் 21ஆம் தேதி, சென்னைல தலைவா படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. அன்னைக்கே அந்த படத்தோட டிரைலரை ரிலீஸ் பண்ணியிருக்காங்க. சரி, இந்த இரண்டரை நிமிஷ டிரைலர்ல, நம்ம முகம் ஒரு இரண்டு நொடியாவது தெரியுமான்னு, கண்ணுல விளக்கெண்ணைய விட்டுக்கிட்டு பார்த்தேன். நம்ம முகத்தை எல்லாம் இந்த ஜுஜுபி டிரைலர்ல காட்டிட்டா, அப்புறம் நம்ம ப்ரெஸ்டிஜ் எல்லாம் என்னாகிறது(!!!). அதனால நண்பர்களே இந்த டிரைலரை பார்த்துட்டு, என்னைய காணோம்னு நினைச்சிடாதீங்க. கண்டிப்பா படத்துல என்னைய பார்க்கலாம்.  என்னடா, இவ்வளவு உறுதியா இவன் சொல்றானேன்னு பார்க்கிறீங்களா, என்னோட முழு பெயரை எல்லாம் இமெயில் பண்ணி கேட்டிருக்காங்க (அந்த தைரியத்துல தான் வேற ஒண்ணும் இல்லை!!!). இப்போதைக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று படம் வெளிவருதுன்னு சொல்லியிருக்காங்க.