Friday, April 19, 2019

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா?


வேண்டுமென்றே(?) பழுதாக்கப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள்....





ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவர்கள்(!) 


மிக சரியாக இயங்கும் ஓட்டுப்பதிவு எந்திரம் 


ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஏந்திச் செல்லும்  நவீன எந்திரங்கள் 




சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்களின் அவல நிலை

அதிமுக நிர்வாகி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக (தயாராக) நின்று கொண்டிருக்கிறார்  


கண்முன்னே இருந்தும் குமரியில் காணாமல் போன 1000 மீனவர்கள் 

குமரியிலும், பட்டுக்கோட்டையிலும் பதிவான கள்ள ஓட்டுக்கள் 

Thursday, April 18, 2019

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 8 (ஊக்கத்தொகை விருது)


(இனியா - புதுமைக்கான விருது (innovation award)
ஓவியா - இணைந்து செயல்பட்டற்கான விருதும்      (collaboration award), ஊக்கத்தொகை விருதும் (Scholarship award)


சென்ற வாரம் ஓவியா,இனியாவின் பள்ளியில் இருந்து, ஓவியாவும் (ஐந்தாம் விகுப்பு), இனியாவும் (இரண்டாம் வகுப்பு) இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முதல் பருவ கூட்டத்தில் (first term assembly) விருதுகள் வாங்குகிறார்கள்,வந்து கலந்து கொள்ளுங்கள் என்று கடிதம் வந்திருந்தது. இங்கு பள்ளிகளில் நடக்கும் கூட்டங்களில் (assembly) எல்லாம் பள்ளியின் தலைவர்கள் (மாணவன்,மாணவி தலைவர் மற்றும் மாணவன், மாணவி துணைத்தலைவர்) - குழு தான் முன்னின்று நடத்தும். தொடக்க கல்வி பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தான், தேர்தலில் நின்று வெற்றிப்பெற்று இந்த பதவிக்கு வருவார்கள்.

இம்மாதிரி விருது வழங்கும் கூட்டத்தில், ஆசிரியர்கள் விருது வாங்கும் மாணவர்களின் பெயர்களை படித்து, அந்த விருதை தலைவர்கள் குழுவிடம் கொடுப்பார்கள், தலைவர்கள் தான் அந்த விருதை மாணவர்களிடம் வழங்குவார்கள். இது ஒரு வகையில் விருது வாங்கும் மாணவர்களுக்கு, நாமும் இந்த இடத்தில் நின்று இம்மாதிரி விருதுகளை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கும்.

இந்த கூட்டத்திற்கு மாணவிகளுக்கான துணைத்தலைவர் விடுமுறையில் இருந்திருக்கிறார். அதனால் ஓவியாவின் வகுப்பில் ஒரு நாள், எல்லோருக்கும் ஒரு தலைப்பை கொடுத்து எந்த ஒரு முன் தயாரிப்புமின்றி, மூன்று நிமிடம் பேச சொல்லியிருக்கிறார்கள். அதில் ஓவியா தேர்வுப்பெற்று, இந்த கூட்டத்தை நடத்தும் ஒருவராக வாய்ப்பு பெற்றிருக்கிறார். எங்களுக்கு அவர் விருது வாங்குவது மட்டுமல்லாமல், இவ்வாறு ஐந்தாம் வகுப்பிலேயே, விடுமுறையில் இருக்கும் பள்ளியின் துணைத்தலைவருக்கு மாற்றாக அவர் வாய்ப்பு பெற்றது, பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

மேலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், பள்ளியின் பட்டிமன்ற குழுவிழும் (SCHOOL DEBATE TEAM) ஓவியா தேர்வாகி இருப்பது தான். பட்டிமன்ற குழு என்ன செய்யும், எவ்வாறு ஓவியாவை தேர்வு செய்தார்கள் என்பதை பற்றியெல்லாம் வேறொரு பதிவில் சொல்கிறேன்.

இங்கு பள்ளியின் இடைவேளைகளில் எல்லாம் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்று தான் UKULELI (கிடாரின் சிறிய வடிவம்) என்கிற ஒரு இசை கருவியை இலவசமாக பயிற்றுவித்தல். இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம். அதில் ஓவியாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார். இந்த கருவி மற்றும் வேறு சில கருவிகளையும் முழுமையாக கற்றுக்கொள்ள “MUSIC BUS” என்ற ஒரு தனியார் நிறுவனம் வாரம் ஒரு நாள் பள்ளிகளுக்கே சென்று பயிற்றுவிக்கிறார்கள். ஒரு வகுப்புக்கு (30 நிமிடம்) கட்டணமாக $15 பெறுகிறார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஓவியாவும் நானும் அந்த மியூசிக் பஸ்ல சேரட்டுமா என்று கேட்டிருந்தார். நாங்களும் நீ இந்த ஒரு வருடமும் உங்கள் பள்ளியிலேயே கற்றுக்கொள், அடுத்த வருடம், உனக்கு இன்னும் அதே ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக சேர்த்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் அவரின் நியாமான ஆசைக்கு கடவுள் அளித்த அங்கீகாரம் தான் ஊக்கத்தொகை விருது.

இந்த விருதானது இந்த ஆண்டு தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதின் மூலம் ஓவியா ஒரு ஆண்டு முழுவதும் மியூசிக் பஸ்ஸில் பயிற்சி பெறலாம்.








(உட்கார்ந்திருப்பவர்கள் தான் இந்த ஆண்டின் மாணவர்கள் தலைவர் குழ. அதில் ஓவியா துணைத்தலைவருக்கு மாற்றாக இருக்கிறார்)


(மாணவர் தலைவரின் உரை)


(மாணவி தலைவரின் உரை)


(ஓவியாவின் உரை)




(கூட்டத்தின் ஒரு பகுதி)



(விருதை அளிப்பதற்காக நின்றுகொண்டிருக்கிறார்)



இனியா விருதை வாங்குவதற்காக வருகிறார்)




(விருதை வாங்கிக்கொண்டு நிற்கிறார்கள்)




(ஊக்கத்தொகைக்கான விருதை காணொளி)




பின்குறிப்பு - அடுத்த ஆண்டு பள்ளிக்கூட தேர்தலில், ஓவியாவிற்கு தலைவர் பதவிக்கு நிற்க வேண்டும் என்று ஆசை. ஆனால் தனக்கு யார் வோட்டு போடுவார்கள் என்று கவலை. உடனே இனியா, அக்கா, நீங்கள் நில்லுங்கள் நான் என் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி, உங்களுக்கு வோட்டு போடச்சொல்லுகிறேன் என்று கூறினார். இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டபோது எனக்கு நம்மூரில் நடக்கும் அரசியல் கூத்துக்கள் தான் நியாபகத்துக்கு வந்தது. 

Monday, April 8, 2019

ஓட்டு வாங்குவதற்காக அரசியல்வாதிகள் செய்யும் "ஸ்டண்ட்கள்"

ஓட்டு வாங்குவதற்காக நம்மூர் அரசியல்வாதிகள் மக்கள் முன்பு எப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிக்கிறார்கள் பாருங்கள். இந்த ஸ்டண்ட்கள் எல்லாம் வெற்றி பெற்ற பிறகும் செய்வார்களா??? 
மக்களுக்கு சேவை செய்வதற்கே எங்களுக்கு நேரம் பற்றவில்லை இதில் எங்கேயிருந்து இப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க முடியும் என்று திருப்பி கேட்பார்கள் . 
 

ஒரு டீக்கடையை கூட விட்டு வைக்கலை. ஒவ்வொரு தேர்தலின் போது தான் இவர்களுக்கு எல்லாம் இந்த டீக்கடைகளே கண்ணில் தெரியும் போல. 


டவுட் கோவாலு - இவர்கள் குடித்த டீக்கு காசு கொடுத்திருப்பார்களா?







டவுட் கோவாலு - இவர் குடிப்பது காப்பியா? டீயா?  இல்ல  இரண்டும்  சேர்த்தா?




டவுட் கோவாலு - நம்மவருக்கு இந்த சின்ன கப் போதுமா?





டவுட் கோவாலு - இந்த கிளாசை என்றைக்காவது கையில் தொட்டிருப்பாரா? 




டவுட் கோவாலு - இது தாமரைப்பூ கலந்த டீயா?




டவுட் கோவாலு - பரிமாறுகிறவர்களுக்கு காவி உடை வாங்கிக்கொடுத்திருப்பாரோ?





டவுட் கோவாலு -  எப்படி இந்த சாப்பாட்டை சாப்பிடுறதுன்னு தெரியலையோ? 



டவுட் கோவாலு - நம்ம வேலைக்கு ஆப்பு வச்சுடுவாங்களோ?
                                                           




டவுட் கோவாலு - காய்கறி வாங்குபவர்களுக்கு தாமரைப்பூவும் இலவசமாக கொடுக்கப்படுமா?




டவுட் கோவாலு - ஓட்டுக் கேட்பதற்காக காலை பிடிக்கிறாரா?




டவுட் கோவாலு - இந்த பாட்டியை கட்டிப்பிடிக்க தோனலையா? 



டவுட் கோவாலு - அரசியலும் சினிமாவும் கை விட்டால்?





டவுட் கோவாலு - எந்த ஊர்ல இந்த ஹோட்டலை நடத்துறீங்க?


டவுட் கோவாலு - இந்த குழந்தையையும் கூட்டிக்கிட்டா பிரச்சாரத்துக்கு போறீங்க?





டவுட் கோவாலு - இந்த குழந்தை பெரியவளாகி தாமரைக்கு ஓட்டு போடுமா?



டவுட் கோவாலு - எம்.ஜி.ஆர் படமா பார்க்குறீங்க?







டவுட் கோவாலு - ஒத்த செருப்புக்கு இவ்வளவு பெரிய செருப்பு ஸ்டாண்ட்டா?



இத்தனை புகைப்படத்தைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இந்த புகைப்படம் தான் . 

என்னடா இவன் அரசியல் பதிவெல்லாம் போடுறானேன்னு பார்க்குறீங்களா? தினம் தினம் இவர்கள் அடிக்கின்ற கூத்தை பார்த்து வெறுத்துப்போய் வந்தது தான் இந்த பதிவு. 

டவுட் கோவாலு -  தமிழ் நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும்  நோட்டா  வெற்றி பெற்றால்???

கொசுறு - இந்த ஸ்டண்ட் விஷயத்தில் தாமரை தான் முன்னுக்கு இருக்குது போல!!!!

Sunday, April 7, 2019

கல்லூரியின் 25ஆம் ஆண்டு-நினைவுகளின் ஓர் சங்கமம் - 2


                                                            மினி சந்திப்பு                                                                                 (நானும் செல்லப்பாவும் டயட் கண்ட்ரோல்...)

முதல்  பகுதியை படிக்காதவர்கள் - பகுதி-1


அந்த கடினமான வேலை என்னவென்றால், தீர்க்கதரிசி அதிரா அவர்கள் கூறியது போல் எல்லோரையும் எப்படி ஒரே நாளில் ஒன்று சேர்ப்பது என்பது தான். எங்களை ஒன்று சேர்ப்பதற்கு முன்பு, முதலில் கல்லூரியிலிருந்து அனுமதியைப் பெற்று, கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் அவர்களின் தேதியையும் அறிந்து கொண்டு, பின்னர் எல்லோரிடமும் மே,ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் ஏதாவது ஒரு மாதத்தில் விழா நடத்தலாம் என்று ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளிடம் சொல்லி எல்லோரையும் கேட்கச்சொல்லியிருந்தார்கள். ஒரு சிலர் மே மாதம் இறுதி வாரத்திலும், ஒரு சிலர் ஜூன் மாதத்திலும்  வைக்கலாம் என்று கூறி குட்டையை குழப்ப ஆரம்பித்து விட்டார்கள். இறுதியில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ஜூன் மாதம் 10ஆம் தேதி என்று முடிவானது.

இங்கு எங்கள் துறையில் படித்தவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நாங்கள் மொத்தம் 21 மாணவ,மாணவியர்கள் கணிணித்துறையில் பயின்றோம். அதில் இருவர் மாணவிகள். நான் ஆஸ்திரேலியாவிலும், செல்வம், பழனியப்பன் மற்றும் தாமோதரன் மூவரும் சிங்கப்பூரிலும்,வள்ளியப்பன் மற்றும் செல்வதிருப்பதி அமெரிக்காவிலும்,பாண்டி ஐக்கிய அரபு நாடுகளிலும்  வசிக்கிறோம். தேதி முடிவானவுடன், எங்கள் துறையிலிருந்து 13 பேர் நாங்கள் கலந்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் இருதலைக் கொள்ளியாகவே நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தேன். அதற்கு காரணம் வியாபாரத்தை விட்டுவிட்டு எப்படி வருவது என்பது தான். நண்பர்கள் ஒவ்வொரு முறையும் பேசும்போது கண்டிப்பாக வந்துவிடு என்று தூபம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அம்மணி தான் கண்டிப்பாக நீங்கள் கலந்துகொள்ளுங்கள், நான் வீட்டையும், வியாபாரத்தையும் பார்த்துக்கொள்கிறேன் என்று எனக்கு தைரியத்தையும், உற்சாகத்தையும் அளித்து என்னை வழியனுப்பினார்கள்.

என்னுடைய பயணத்திட்டமானது, ஜூன் 5ஆம் தேதி சிட்னியிலிருந்து கிளம்பி சென்னை சென்று, 6,7 இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி, உறவினர்களை சந்தித்துவிட்டு, ஷாப்பிங் செய்துவிட்டு, 8ஆம் தேதி கரூர்க்கு போய் (மாமனார் வீட்டுக்கு போகாமல் போனால் என்னவாவது!!) அங்கேயிருந்து 9ஆம் தேதி மதியம் தேவகோட்டைக்கு சென்று, இரண்டு நாட்கள் அங்கே தங்கிவிட்டு, 11ஆம் தேதி இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பி 12ஆம் தேதி கடைசி நேர ஷாப்பிங் முடித்துவிட்டு அன்று இரவு சிட்னிக்கு விமானம் ஏறுவது தான் பயணத்திட்டம். நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மொத்தமாக 9 நாட்கள் அம்மணியிடம் வியாபாரத்தையும், வீட்டையும் ஒரு விதமான தைரியத்தில் ஒப்படைத்தேன்.

5ஆம் தேதி இரவு சென்னை வந்தவுடன் மறு நாள் நண்பர் செல்லப்பவை மட்டும் சந்தித்துவிட்டு (20 ஆண்டுகள் கழித்து இவரை சந்தித்தேன்), பர்சேஸ் எல்லாம் செய்து கொண்டு, நடுநடுவில் உறவினர்களையும் சந்தித்து முடித்தேன். 7ஆம் தேதி இரவு நண்பர் சிதம்பரம் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாரை சந்தித்தேன். சிதம்பரத்துக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரின் மாமனார் ஊரும் கரூர் தான். (செல்லப்பா,சிதம்பரம், மற்றும் முத்துகுமார் சென்னையில் வசிக்கிறார்கள்.) செல்லப்பாவும், முத்துக்குமாரும் அசோக் நகரிலிருக்கும் சரவண பவனுக்கு வந்துவிடுகிறோம் என்று கூறியிருந்தார்கள். அதனால் சிதம்பரம் வீட்டில் மாலை பலகாரத்தை(?) மட்டும் முடித்துக்கொண்டு நேராக சரவண பவனுக்கு சென்றோம். அங்கு நால்வரும் இரவு உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் மலரும் நினைவுகளை எல்லாம் அசைபோட்டுவிட்டு மற்ற மூவரும் என்னை கரூர் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டு வீடு திரும்பினார்கள்.

 8ஆம் தேதி காலை கரூர் சென்றடைந்தேன். அங்கு அடுத்த நாள் மதியம் வரை இருந்துவிட்டு, தேவகோட்டைக்கு கிளம்பினேன். கரூரிலிருந்து காரைக்குடி,தேவகோட்டைக்கு செல்வதற்கு பொதுவாக எல்லோரும் திருச்சி வழியாகத்தான் செல்வார்கள். ஆனால் நான் அவ்வாறு செல்லாமல் வேறு மார்க்கமாக சென்றேன். நண்பர்கள் சிலர், கல்லூரி நாட்களில் என்னையும் இன்னொருவரையும் இணைத்து காதல் பறவைகள் வந்து விட்டார்கள் என்று கூறுவார்கள். அந்த காதலியை பார்பதற்காகத்தான் நான் வேறு மார்க்கமாக  சென்றேன். அந்த காதலி யார் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன். 

பி.கு: இந்த பதிவை சென்ற வாரத்தில் இருந்து எழுத வேண்டும் என்று நினைத்து எழுத முடியாமல் போய் விட்டது . கண்டிப்பாக இன்றைக்கு எவ்வளவு நேரமானாலும் எழுதிட  வேண்டும் என்று நினைத்தேன், காரணம் நாளைக்கு ஒரு மணி நேரம் கூட தூங்கலாம் (நாளைக்கு டே லைட் சேவிங்க் முடிவடைகிறது, அதனால் கூடுதலாக ஒரு மணி நேரம் கிடைக்கும்). கடந்த இரண்டு நாட்களாக நண்பர்களின் தளத்திற்கு செல்ல இயலவில்லை. நாளை முதல் எல்லோரின் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இடுகிறேன்.   

                           ---தொடரும்