Saturday, September 29, 2012

எங்கள் ஊர் ஆட்டோ ஸ்டாண்ட்


என்னடாது! சிட்னில போயி ஆட்டோ எல்லாம் இருக்குதான்னு யோசிக்காதீங்க. டாக்ஸி ஸ்டாண்டை தான் அப்படி சொன்னேன். அந்த டாக்ஸி ஸ்டாண்ட், நான் இருக்கிற இங்கில்பர்ன் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்குது. நம்ம பஞ்சாபி அண்ணாத்தைங்க ரெண்டு பேரு தான் அந்த டாக்ஸி ஸ்டாண்டையே, குத்தகை எடுத்திருக்காங்க. அவுங்க ரெண்டு பேரும் ஒரு பத்து, பன்னிரெண்டு வண்டிகளை வச்சு, நம்ம இந்தியர்களுக்கு டிரைவர் வேலையை கொடுத்திருக்காங்க. நான் தினமும் காலைல 7.30 மணிக்கு என்னோட காரை கொண்டுப்போய் ஸ்டேஷனுக்கு கொஞ்ச துரத்துல இருக்கிற பார்க்கிங்ல நிறுத்திட்டு ஸ்டேஷனுக்கு நடந்து போகும்போது, இந்த டாக்ஸி ஸ்டாண்ட் கண்ணுல படும். உடனே எனக்கு நம்மூர்ல இருக்கிற ஆட்டோ ஸ்டாண்ட் தான் நியாபகத்துக்கு வரும். அங்க எல்லோரும் ஆட்டோவை ஓரங்கட்டிட்டு, அரட்டை அடிச்சுக்கிட்டு இருப்பாங்க. யாராவது போயி ஆட்டோ வருமான்னு கேட்டா, ரெண்டாவதோ, மூணாவதோ உள்ள ஆட்டோல போயி ஏறிக்க சொல்லுவாங்க. அதே மாதிரி, இங்கேயும் எல்லோரும் ஒண்ணா நின்னு அரட்டை அடிச்சுக்கிட்டு இருப்பாங்க. யாராவது டாக்ஸி வருமான்னு கேட்டா, அதே மாதிரி ஏதாவது ஒரு கார்ல ஏறிக்க சொல்லுவாங்க. என்ன! இங்க பக்கத்துல டீக் கடை எல்லாம் இல்ல, அது தான் வித்தியாசம். நான் தினமும் இந்த டாக்ஸி ஸ்டாண்ட்ல இருக்கிறவங்களை பார்க்குறதுனால,  ஒண்ணு, ரெண்டு பேர் என்னைய பார்த்து, “கைசா ஹை”ன்னு கேப்பாங்க. நானும் எனக்கு தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு ஹிந்தி வார்த்தைகளை நியாபகம் வச்சு, “அச்சா ஹை”ன்னு சொல்லுவேன். ஒரு நாள் என்னோட வண்டியை காலைல சர்வீஸுக்கு விட்டுட்டு, சியாந்திரமா ஆபிஸ் முடிச்சு வரும்போது வண்டியை எடுத்துக்கலாம்னு ஆபிஸ் போனேன். ஆபிஸ்ல இருக்கிற கடன்காரனுங்க(!) அன்னைக்குன்னு பார்த்து என்னைய ராத்திரி பத்து மணி வரைக்கும் ஆபிஸ்ல உக்கார வச்சுட்டாணுங்க. அப்புறம் இங்கில்பர்ன் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது மணி 11.30 ஆச்சு. சரி, இந்த நேரத்துல நம்ம வீட்டுக்கு நடந்து போக வேண்டாம்னு (நடந்தா ஒரு 15-20 நிமிஷம் தான் ஆகும்) நினைச்சு, அந்த டாக்ஸி ஸ்டாண்டுக்கு வந்தேன். அங்க என்னைய பார்த்து “கைசா ஹை”ன்னு கேக்குறவர் தான் இருந்தாரு. நான் அவரிடம் வீட்டு முகவரியை சொல்லி, வண்டிக்குள்ள ஏறி உட்கார்ந்தேன். அவர் வண்டியை எடுத்தவுடனே, என்கிட்ட சரளமா ஹிந்தில பேச ஆரம்பிச்சுட்டாரு. எனக்கோ தர்ம சங்கடமா போச்சு. சரி, வீடு பக்கத்துல தானே இருக்கு, எப்படியாவது சமாளிச்சுக்கலாம்னு நானும் எனக்கு தெரிஞ்ச அச்சா ஹை” “டீக்கே” அப்படின்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு வந்தேன். ஒரு நேரத்துல டிரைவர் அண்ணாத்தைக்கு தெரிஞ்சுப் போச்சு, எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு. அப்புறம் அவர் ஹிந்தில கேட்ட கடைசி கேள்வியை, ஆங்கிலத்துல கேட்டாரு. அவர் கேட்ட கேள்வி, இது தான், அடிக்கடி உங்களுக்கு வேலைல இந்த மாதிரி லேட்டாகுமா, இல்ல எப்பவாது தானான்னு கேட்டாரு. அவர் இந்த கேள்வியை ஹிந்தியில கேட்டபோது, நான் ரொம்ப புத்திசாலித்தனமா அச்சா ஹை”ன்னு சொல்லியிருக்கேன். அதுல தான் அவர் கடுப்பாயிட்டு, ஆங்கிலத்துல கேட்டாரு. அட! ராமா! ஆரம்பத்துலேயே, இப்படி புரியிர மாதிரி ஆங்கிலத்துலேயே பேசிக்கிட்டு வந்திருந்தாருன்னா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும் . நமக்கு ஹிந்தி தெரியாதுங்கிறதையும் கண்டுப்பிடிச்சிருக்க முடியாதேன்னு நினைச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் வீடு வர்ற வரைக்கும் அவர் என்கிட்ட ஒண்ணுமே பேசலை. மறு நாள்லேருந்து காலைல அவர் என்னைய டாக்ஸி ஸ்டாண்ட்ல பார்க்கும்போது, ஆங்கிலத்துலயே “good morning” அப்படின்னு சொல்லுவாரு. (பரவாயில்லை மனுசனுக்கு கற்பூர புத்தி தான்!!)
அன்னைக்கு நான் ஸ்டேஷன்லேருந்து டாக்ஸி எடுக்கும்போது, சரி, எப்படியும் ஒரு 5$ தான் வரும்னு நினைச்சேன். கடைசில பார்த்தா, அந்த மீட்டர் 8.50$ரை காட்டுது. என்னாடான்னா, ராத்திரி 10மணிக்கு மேல 20% கூட கொடுக்கணுமாம். சரி தான், நம்ம ஊர்ல இருக்கிற ஆட்டோ டிரைவருங்க, மீட்டர் போடாம நம்ம கிட்ட கொள்ளை அடிக்கிறாங்கன்னு பார்த்தா, இங்க இருக்கிற டாக்ஸி டிரைவர்களோ, மீட்டர போட்டு நம்மளை கொள்ளை அடிக்கிறாங்களேன்னு நினைச்சுக்கிட்டேன். 

அமெரிக்காவில் அடியேன் – 9

பகுதி-8

ஒரு வழியா, நான் மதியம் அந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன். பார்த்தா, நண்பரும் அவர் மனைவியும், அவரோட இன்னொரு நண்பரோட வெளியில போயிட்டாங்க. சரி, நம்மளோட கை வந்த கலையை திருப்பியும் ஆரம்பிப்போம்னு, வரவேற்பறைல இருந்த அம்மா கிட்ட போயி, இங்க ஷாப்பிங் பண்றதுக்கு எப்படி போலாம்னு கேட்டேன். (நானும் ஒவ்வொரு ஊருலேயும் பொழுது போறதுக்காக ஷாப்பிங் பண்றேங்கிற பேர்ல பஸ்ல ஊரை சுத்துறதே வேலையாப் போச்சு). வரவேற்பறைல இருந்த அம்மா, ரொம்பவே நல்ல அம்மாவா இருந்தாங்க. நீங்க எந்த மாதிரி ஷாப்பிங் பண்ணணும்னு முதல்ல கேட்டாங்க. நானும், இந்த மாதிரி, இந்த மாதிரி, இது வாங்கணும், அப்புறம், அந்த மாதிரி அந்த மாதிரி அது வாங்கணும்னு, என்னமோ எல்லாம் வாங்கப் போற மாதிரி பீலா விட்டேன். உடனே, அந்த அம்மா பக்கத்திலிருந்த ஒரு மேப் எடுத்து, நாம நடுவுல இருக்கோம். இடது பக்கமா பஸ்ல போனோம்னா “wall mart” ஷாப்பிங் கடை வரும். அங்க இது ஒண்ணு தான் இருக்கு. அதுவே வலது பக்கம் பஸ் எடுத்து போனோம்னா, ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும், அங்க நிறைய கடைங்க இருக்கு, உங்களுக்கு பிடிச்சதை நீங்க அள்ளிக்கிட்டு வரலாம்ன்னு சொன்னாங்க (அவுங்க நினைச்சுக்கிட்டாங்க, நான் என்னமோ கடையையே சுருட்டிக்கிட்டு வரப்போறேன்னு). எந்தப் பக்கம் போனாலும் நீங்க ரெண்டு பஸ் மாறனும்ன்னு சொன்னாங்க. எந்த எந்த ஸ்டாப்ல இறங்கி பஸ் மாறனும்னு வேற என் மண்டைக்கு புரியுற மாதிரி சொன்னாங்க. அவுங்களுக்கு ஒரு பெரிய கும்புடு போட்டு, அந்த மேப்பையும் வாங்கிக்கிட்டு அந்த அறைய விட்டு வெளியில வந்து முதல்ல எந்தப் பக்கம் போறதுன்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன். நமக்கு தான் சாமானியத்துல ஒரு முடிவும் எடுக்க வராதே. சரி, காசைப் போட்டு பாக்கவேண்டியதுதான்னு காசைப் போட்டு பார்த்ததுல ஷாப்பிங் கம்ப்ளெக்ஸ்க்கு போகலாம்னு வந்துச்சு. நானும் முத பஸ்ஸை எடுத்து, மேப்பை பார்த்துகிட்டே, ரெண்டாவது பஸ் மாறுவதற்காக,சரியான  ஸ்டாப்பிங்ல இறங்கி, ரெண்டாவது பஸ்ல ஏறினேன். உடனே எனக்குள்ள இருந்த முன் ஜாக்கிரதை முத்தன்னா  முழிச்சுக்கிட்டான். ஏற்கனவே ஒரு தடவை அடிப்பட்டதுனால, இந்த தடவை ஒழுங்கா அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல இறங்கணும்னு, அந்த டிரைவர் அண்ணாத்தைக்கிட்ட சொல்லி, அவர் பக்கத்துலேயே நின்னேன். உடனே அவருக்கு வந்ததே கோபம், முதல்ல என்னைய உள்ள போயி உக்காரச் சொன்னாரு. நான் அவர் பக்கத்துலே நிக்கக்கூடாதாம் (என்னமோ அவரை மடக்கி, பஸ்ஸை கடத்திக்கிட்டு போயிருவேனோன்னு அவருக்கு பயம் போல). அப்புறம் அந்த ஸ்டாப்பிங் வந்தவுடனே, என்னைய கூப்பிட்டு இறங்க சொன்னாரு. பஸ்ஸை விட்டு இறங்கி பார்த்தா, ஒரு பெரிய ஸ்தூபில கடைங்க பேரா எழுதி இருந்துச்சு. 


ஆனா, இந்த ஷாப்பிங் மாலும் வித்தியாசமா இருந்துச்சு, என்னன்னா, வானமே இந்த ஷாப்பிங் மாலுக்கு கூரையா இருந்தது தான்.



நானும், அப்படியே எல்லாக் கடைக்குள்ளேயும் ஏறி, இறங்கி வேடிக்கை!! பார்த்து, அப்புறம் பேருக்கு, ஏதோ ஒரு சிலதை மட்டும் வாங்கிக்கிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன், அப்புறம்  வால் மார்ட்டுக்கு” போலாம்னு முடிவெடுத்து, மேப்பை பார்த்து, பஸ்ல ஏறினேன். மறுபடியும் அடுத்த பஸ்ஸுக்காக எங்க இறங்கணும்னு மேப்பையும் ரோடையும் மாறி, மாறி பார்த்துக்கிட்டே வந்தேன். எனக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தவரு, என்னையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்திருக்காரு. அது எனக்கு தெரியலை.

அவர் என்ன பண்ணினாருங்கிறதை அப்புறம் சொல்றேன். 
இதுவே கடைசி பாகமா இருக்கும்னு  நினைச்சேன். ஆனா, அடுத்த  பாகம் தான்  இந்த தொடரோட கடைசி பாகமா இருக்கும்னு சொல்லிக் கொள்கிறேன். (10 பாகமாக இருக்கட்டுமேன்னு தான், வேற ஒண்ணும் இல்லை)
                                                    பகுதி-10

Thursday, September 27, 2012

சுந்தர பாண்டியன் – விமர்சனம்


முதல்ல, அமெரிக்காவில் அடியேனின் கடைசி பாகத்தை தான் எழுதணும்னு உட்கார்ந்தேன். ஆனா பாருங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்த இந்த படம், விமர்சனத்தை எழுது,எழுதுன்னு என்னைய ரொம்ப தொந்தரவு பண்ணிக்கிட்டு இருந்துச்சு. அதனால முதல்ல விமர்சனம் அப்புறம் அந்த அமெரிக்கவோட கடைசி பாகத்தை எழுதலாம்னு முடிவு பண்ணி, இதோ உங்களுக்காக சுந்தர பாண்டியன் விமர்சனம்.

நட்பு, காதல், துரோகம் என்று ஒரு கலவை தான், இந்த சுந்தர பாண்டியன். ஒரு பெண்ணை இருவர் ஒரு தலையாக காதலிப்பதும், அந்த பெண்ணின் பெற்றோரோ, அவரை தங்கள் மூத்த மாப்பிள்ளையின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பதும், அந்த பெண்ணோ மற்றொருவரை காதலிப்பதும், இறுதியில் அவர் யாரை கைப் பிடித்தார் என்பது தான் இந்த படத்தின் கதை. அந்த பெண்ணுக்காக, அடிதடி, கொலைன்னு படம் பயணிக்குது. ஒரு பெண்ணுக்காக கொலை வரைக்கும் போகணுமான்னு யோசிக்க தோணும். ஆனா, அந்த யோசைனையை கூட , மிக அழகாக தன்னுடைய நடிப்பால் லக்ஷ்மி மேனன் மறக்க வைக்கிறார். வெட்கப்படும்போதும் சரி, கண்களை உருட்டி அதட்டும் போதும் சரி மிக அழகாக நடித்திருக்கிறார். நிறைய இடங்களில் அவருடைய கண்களும் நடித்திருக்கிறது. தனக்கு நகைச்சுவையாகவும் நடிக்க தெரியும் என்று சசிகுமார் நிருபித்திருக்கிறார். தன் அத்தைப் பெண்களை வம்புக்கு இழுப்பதும், அதுவும் திருமணமான அந்த அத்தைப் பெண் ஜானகியை  அடிக்கடி வம்புக்கிழுப்பதும்,  நண்பனின் காதலுக்கு உதவி புரிவதும்னு ஒரு பக்கா வெட்டி ஆபிசராக வாழ்ந்திருக்கிறார். இடைவேளை வரை, அந்த “தாமரை” பஸ்லேயே திரைக்கதை பயணம் செஞ்சாலும், நமக்கு அலுப்பே வரலை. அதற்கு முக்கிய காரணம் அவருடைய நண்பனாக வரும் பரோட்டா சூரி தான். அவர் வாயைத் திறந்தாலே போதும் சிரிப்பு மழை தான். பஸ்ஸில் வருகிற பெண்களை கவருவதற்கு, இயக்குனர் PH.D. பட்டமே வாங்கியிருப்பாரு போலயிருக்கு.

தன் நண்பனின் காதலுக்கு சசிகுமார் உதவி பண்ணப்போய், தானே அவளுடைய காதலில் விழுந்து, இறுதியில் தன் நண்பர்களின் துரோகத்தால் கொல்லப்பட்டாரா என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்லுகிறது. அந்த க்ளைமாக்ஸ் சண்டை தான், சினிமாத்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு அப்பாவியாக அறிமுகமாகி, பிறகு வில்லனாக அவதாரம் எடுக்கும் அப்புக்குட்டியின் நடிப்பு மிக அருமை. இன்னொருவரையும் கண்டிப்பாக சொல்ல வேண்டும், அது லக்ஷ்மி மேனனின் நண்பியாக வரும் அந்த பெண். அவருடைய பேர் தெரியல. அவரும் அழகாக இருக்கிறார்,மிக அருமையாகவும் நடித்திருக்கிறார். அதுவும், பஸ்ஸில், சசிகுமாரின் நண்பன்,இனிகோ பிரபாகரன், லக்ஷ்மி மேனனிடம் காதலை சொல்லுவதற்காக நின்றுக் கொண்டிருக்குக்கும்போது, எங்கே தன்னிடம் மாற்றி காதலை சொல்லிவிடுவானோ என்ற பயத்தில், எண்ணையில் போட்ட கடுகாட்டம் பொரி பொரின்னு அந்த இனிகோ பிரபாகரனை பொரித்து எடுப்பாரே அருமை. சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேனும் சரி, லக்ஷ்மி மேனனின் அப்பாவாக வரும் தென்னவனும் சரி, உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி தான், இந்த படத்துல வர ஒரு காட்சி. அது சசிகுமாரின் தந்தை நரேன், தனியாக தன் மகனுக்கு பெண் கேட்கும் காட்சி. அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதமே, அழகு தான். அந்த காட்சியில் பங்குப்பெற்றிருந்த நடிகர்களும் தங்கள் பங்கை மிக நேர்த்தியாக செய்து அந்த காட்சியை தூக்கி நிறுத்தியிருப்பார்கள்.

 படத்தில நச்சுன்னு சில வசனங்கள் வரும்.
"எதிரியை அழிக்க நினைக்கக் கூடாது... ஜெயிக்க நினைக்கணும்!"
"எதிரியே இல்லைன்னா, நாம வாழலாம். ஆனா, வளர முடியாது",
 "வீட்டுல இருந்து வெளியில போறப்ப எல்லாம், 'பார்த்துப் பழகு... பார்த்துப் பழகுனு சொல்லுவாங்க. பழகுன நீங்களே இப்படிப் பண்ணினா யாரைடா நம்புறது?"
"குத்துனது நண்பனா இருந்தா செத்தாக்கூட சொல்லக்கூடாது, அதாண்டா நட்பு" இப்படி ஆங்காங்கே வரும் வசனங்கள், நம்மை யோசிக்கச் செய்கின்றன.

இந்த படத்தை பார்த்த பிறகு, ரொம்ப நாளைக்கு அப்புறம் கலகலப்பா ஒரு படத்தை பார்த்தோம்னு திருப்தி ஏற்படும். அது தான் இந்த படத்தோட வெற்றியே.  
 

Tuesday, September 25, 2012

நான் படித்து ரசித்த சிரிப்புத் துணுக்குகள்


ஆண்களுக்கு பிடித்தவை:

மனைவி: நம்ம பையனுக்கு வர்ற தையோட முப்பது முடியுதுங்க. அவன் கல்யாணமே வேணாம்னு சொல்றதை நினைச்சாதான் கவலையா இருக்கு. அவன் யாரையோ மனசுல வச்சுக்கிட்டு சொல்றானோன்னு தோணுது.
 
கணவன்: ''கரெக்ட் மரகதம்! அவன் என்னைய மனசுல வெச்சுக்கிட்டுத் தான் அப்படி சொல்றான். உன்கிட்ட நான் தினம்தினம் படற அவஸ்தையை பார்த்த பிறகுமா நம்ம பையன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவான்"!



ராமு: ''மச்சி! உலகத்துலயே நம்பர் ஒன் சந்தேகப்பிராணி யார்னு கேட்டா அது என் வொய்ப்தாண்டா...''

சோமு: ''மாப்ள! அப்படி என்னடா அவங்களுக்கு உன்மேல சந்தேகம்?''

ராமு: ''புதுசா ஒரு வேலைக்காரிய சேர்த்திருக்கா. அவளை டெய்லி காலையில பத்து மணிக்கு நான் ஆபீஸ் போன பின்னாடி வரச்சொல்லிட்டு, ஈவ்னிங் ஆறு மணிக்கு நான் வீடு திரும்புறதுக்குள்ள போகச் சொல்லிடுறா... ஞாயித்துக்கிழமை வேலைக்கே வரவேணாம்னுட்டா. இப்ப சொல்லு"!.
 
 
ரமேஷ்: ''மச்சான், சிஸ்டர் போன்ல என்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்றாங்கடா... டெய்லி நீ வீட்டுக்கு லேட்டா போறியாமே?''
 
சுரேஷ்: ''தலைவலியும் திருகுவலியும் அவனவனுக்கு வந்தாத்தான் தெரியும்!''
 
ரமேஷ்: ''என்னடா சொல்ற?''
 
சுரேஷ்: ''நீ புதுசா கல்யாணம் ஆனவன்தானே? மவனே, ஆறு மாசம் போகட்டும். அப்புறம் உன் வீட்டுலருந்து எனக்கும் இதே மாதிரியா புலம்பல் போன் வராட்டி என்னை செருப்பாலயே அடி"!
 
 
கணவன்: ''அடியே, அம்மா பாத்ரூமிவழுக்கி விழுந்துட்டாங்களாம்...''
 
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!''
 
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
 
மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
 
 
சோமு: நான் எது செஞ்சாலும் என் மனைவி குறுக்கே நிக்கிறா!
 
ராமு: பேசாம கார் ஓட்டிப் பாரேன்!!
 
 
மனைவி: டார்லிங்! இன்னைக்கு நம்மளோட கல்யாண நாள். நாம என்ன பண்ணலாம்?
 
கணவன்: எழுந்து நின்னு, ரெண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தலாம். 
 
 
 
பெண்களுக்கு பிடித்தவை:
 
அர்சனா: எதுக்கு உன் மாமியாரை திட்டுற?
ஆராதனா: பின்ன, நான் போன் பண்ணினா நாய் கொலைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வச்சிருக்காங்களே. அதுக்கு தான்.
 
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.  
 
என்னடா! இதுல கூட ஆண்கள் ரசிப்பதற்கு நிறைய துணுக்குகளையும், பெண்கள் ரசிப்பதற்கு பேருக்கு ரெண்டே ரெண்டு துணுக்குகளை மட்டும் போட்டிருக்கானேன்னு யோசிக்காதீங்க. என்ன பண்றது, இந்த மாதிரி துணுக்குகள் எல்லாம் ஆண்கள் தான் எழுதுறாங்க போல, அதனால தான் நிறைய துணுக்குகள் ஆண்கள் ரசிக்கக்கூடியதாகவே இருக்கு, (அது தான் கண்லேயும் வேற படுது). ஆனா கண்டிப்பா பெண் வாசகர்களை திருப்தி படுத்துறதுக்காக, கண்ல விளக்கெண்ணையை விட்டாவது, பெண்கள் ரசிக்கக்கூடிய துணுக்குகளை தேடிக்கண்டுப்பிடிச்சு பதியுறேன்.
 
 
 

Saturday, September 22, 2012

அமெரிக்காவில் அடியேன் – 8

பகுதி-7

தோசா உணவகத்துல போயி உட்கார்ந்தோம். அப்பத்தான் எங்க பக்கத்து டேபிள்ல உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார குடும்பத்துக்கு தோசையை கொண்டாந்து வச்சுட்டு அந்த சர்வர் போயிட்டாரு. அந்த சர்வருக்கு பின்னாடியே வந்த இன்னொருத்தர் அந்த தோசையை எப்படி முள்கரண்டியும், தேக்கரண்டியையும் வச்சு சாப்பிடுறதுன்னு சொல்லிக்கொடுக்க  ஆரம்பிச்சார். அதாவது, முள்கரண்டியால பிச்ச தோசையை அந்த சாம்பார் கிண்ணத்துல போட்டு, அப்புறம் தேக்கரண்டியால அதை எடுத்து சாப்பிடணும்னு சொல்லிக் கொடுத்துட்டு அவர் போயிட்டாரு. நான் கூட அந்த வெள்ளைக்காரங்களுக்கு கையால எப்படி தோசையை பிச்சு சாப்பிடணும்னு சொல்லிக்கொடுப்பாங்களோண்ணு நினைச்சேன். அடப்பாவிகளா! எதை எதை தான் தேக்கரண்டி, முள்கரண்டியெல்லாம் வச்சு சாப்பிடறதுன்னு இல்லையா. என்னதான் தேக்கரண்டியால எடுத்து சாப்பிட்டாலும், சாம்பாரை எடுத்து தோசை மேல ஊத்தி, அதை நம்ம கையால பிச்சு சாப்பிடுற மாதிரி வருமா என்ன! இதெல்லாம் அந்த வெள்ளக்காரங்களுக்கு எங்க புரியப் போகுது. நாங்களும் சாப்பிட்டு முடிச்சு, அறைக்கு திரும்பின பிறகு, நண்பரும் அவர் மனைவியும் வேற ஊருக்கு போறதுக்கு கிளம்பி போனாங்க. மறு நாள் காலைல நான் அறையை காலி பண்ணிக்கிட்டு, மறுபடியும் ஒரு உள்ளூர் விமானத்துல லாஸ் ஏஞ்சல்ஸ் போனேன். சிட்னிலேருந்து போறதுக்கு முன்னாடி, என்னோட இன்னொரு நண்பர் நீங்க  லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஏன் தனியா தங்குறீங்க, நாங்க தங்குற அறையிலே தங்கிக்கலாம்னு சொன்னதுனால, நானும் அங்க தங்கிக்கலாம்னு முடிவெடுத்தேன்.  லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே போயி, எப்படி அந்த ஹோட்டலுக்கு போறதுன்னு தெரியலை. ஏன்னா, அந்த ஹோட்டல் இருக்கிற இடமோ டிஸ்னி லாண்டுக்கு பக்கத்துல இருக்கு. நல்ல காலம் அந்த விமான நிலையத்துக்குள்ள ஒரு தகவல் மையம் இருந்துச்சு. அதுல, தன்னார்வலர்கள் தான் அங்க இருந்து உதவி கேக்குறவுங்களுக்கு, உதவுறாங்க. நான் அப்ப போனப்போ ஒரு வயசான தாத்தா தான் இருந்தாரு. அவரு என்னைய பார்த்து “வாங்கோ, வாங்கோன்னு” வாய் முழுக்க கூப்பிட்டு, எனக்கு எப்படி அந்த ஹோட்டலுக்கு போறதுன்னு சொன்னாரு. நானும் அவர் சொன்னபடி வெளியில வந்து டிஸ்னி லாண்ட் போற ஷட்டில் வேன் வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல அந்த வண்டி வந்துச்சு. நானும் அதுல ஏறி உட்கார்ந்தேன். என்னோட சேர்த்து 3 பேரு அந்த வண்டிக்குள்ள உட்கார்ந்திருந்தோம். அந்த வண்டியும் புறப்பட்டுச்சு. நானும் பட்டிக்காட்டான் வேலையை செய்ய ஆரம்பிச்சிட்டேன் (ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்து வாயை பிளந்துக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தேன்). ரொம்ப நேரமா அந்த வண்டி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாதிரி தெரியலை. நானும், இந்த விமான நிலையம் ரொம்ப பெருசு போல, அதான் இதை விட்டு வெளியே வர ரொம்ப நேரமாவதுன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் தான் என் மரமண்டைக்கு உரைச்சுது, இந்த வண்டிக்காரன் விமான நிலையத்தையே சுத்திக்கிட்டு இருக்கான்னு. அந்த வண்டிக்குள்ள நாங்க 3 பேரு தான் இருந்கோம். அதனால இன்னும் 10 பேரையாவது வண்டிக்குள்ள ஏத்திடலாம்னு நினைச்சிருப்பான் போல. அதனால நவக்கிரகத்தை சுத்துற மாதிரி  அந்த விமான நிலையத்தையே சுத்திக்கிட்டு இருந்தான். அடப்பாவிகளா, சென்னைல தான், இந்த ஷேர் ஆட்டோக்காரனுங்க பண்ற தொல்லை பெருந் தொல்லையா இருக்கும்னு பார்த்தா, இங்க கூடவா இப்படின்னு கோபம் கோபமா வந்துச்சு. அப்புறம் சரி, ஊர் எந்த ஊரா இருந்தா என்ன, எல்லா மனுசனுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குதே, பாவம் இந்த டிரைவரும் என்ன பண்ணுவான்னு நினைச்சு, உடனே மனசு  அவன் மேல இரக்கப் பட ஆரம்பிச்சுது. ஒரு வழியா எப்படியோ டிஸ்னி லாண்ட்ல இருக்கிற ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன்.
அன்னைக்கு, தனியா மறுபடியும் பஸ் எடுத்து, அந்த ஊரை எப்படி சுத்தினேன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                  பகுதி-9

Tuesday, September 11, 2012

அமெரிக்காவில் அடியேன் – 7

 
என்னடா ஒரு தமிழ் நடிகையின் உணவகத்துல போயி சாப்பிட்டாங்களான்னு ரொம்பவும் யோசிக்காதீங்க. அந்த உணவகத்தோட பேரு “சினேகா உணவகம்”. இதுக்குத்தான்(!) போன பதிவுல ஒரு சின்ன பில்டப். ஆனா இந்த உணவகத்துக்கும், நடிகை சினேகாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமான்னா, அது எனக்கு தெரியாது. சாப்பாடும் சும்மா சொல்லக்கூடாது, சினேகா மாதிரியே ரொம்ப நல்லா இருந்துச்சு. மறு நாள் காலையில  ஒன்பது மணிக்கு அறையை காலி செஞ்சுட்டு, ஒரு வாடகை வண்டில, நாங்க மூணு பேரும் சான்பிரான்சிஸ்கோ போனோம். நல்ல காலம் அங்க முன்பதிவு செஞ்சு வச்சிருந்த ஹோட்டல்லேயும் உடனே ஒரு அறையை கொடுத்துட்டாங்க. இல்லன்னா, எல்லாப் பெட்டி, மூட்டையெல்லாம் வரவேற்பறையிலேயே வச்சிருந்திருக்கணும். அப்புறம் அங்கேருந்து மூணு பஸ் மாறி, “தங்க கதவு பாலம்” அதாங்க “Golden Gate Bridge”க்கு போனோம். 1935ஆம் ஆண்டு, திறந்த பாலமாம் அது.

 எல்லா ஊருலேயும் ஒரு பாலத்தை கட்டி, அதுக்கு ஒரு பேரை வச்சு பிரபுலமாக்கிடுறாங்க. நம்ம ஊருலேயும் பாம்பன் பாலம்னு ஒண்ணு இருக்குதுன்னு நாம சொன்னாத்தான் மத்தவுங்களுக்குத் தெரியுது. இத்தனைக்கும் பாம்பன் பாலம் 1914லேயே கட்டப்பட்ட பாலமாக்கும். இந்தியாவோட முதல் கடல் பாலம் அது தான். இப்படி பாம்பன் பாலத்துக்கு இன்னும் நிறைய சிறப்புகள் இருந்தும், நம்ம ஆளுங்க அதை பிரபுலப்படுத்தாம விட்டுட்டாங்க. எங்களுக்கு நேரம் இல்லாததுனால, அந்த பாலத்தை கொஞ்ச நேரம் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு, அங்கேருந்து ஒரு வாடகை வண்டியை பிடிச்சு “fisherman wharf Pier 33”க்கு வந்தோம். அங்கேயிருந்து கப்பல்ல 20 நிமிஷம் பிரயாணம் செஞ்சு “Alcatraz islandல” இருக்கிற ஒரு சிறைச்சாலைக்கு போனோம்.

நமக்கு எல்லாம் சிறைச்சாலைக்குள்ள போற கொடுப்பினையே கிடைக்காது, ஏன்னா, நாம தான் ரொம்ப நல்லவங்களாச்சே(!). அந்த அல்ப ஆசையை போக்கிக்கிறதுக்காக, வெள்ளக்காரங்க, ஒரு சிறைச்சாலையையே சுற்றுலாத்தலமா மாத்தியிருக்காங்க. நகரத்தை விட்டு, ஒரு நட்ட நடுக் கடல்ல தனித் தீவா, அந்த சிறைச்சாலையை அமைச்சிருக்காங்க. நானும் அந்த சிறைச்சாலைக்குள்ள வலது காலை எடுத்து வச்சு நடக்க ஆரம்பிச்சேன். “cell house”குள்ள போனா!, நம்ம தமிழ் சினிமாவில காட்டுற மாதிரி ஒரு பெரிய வராந்தாவோட ரெண்டு பக்கமும், கைதிங்க தங்குற அறை இருக்கு. ஒவ்வொரு அறைக்குள்ளேயும், ஒரு சின்ன கட்டில் இருக்கு, அந்த கட்டிலுக்கு அப்புறம் காலைக் கடன்கள் போறதுக்கு வசதி பண்ணி வச்சிருக்காங்க. தமிழ் சினிமாலையாவது, கைதிங்க அறையை கொஞ்சம் பெருசா காட்டுவாங்க. ஆனா, இங்க அந்த அறைக்குள்ள, ஒரு ஆள் மட்டும் தான் உள்ள இருக்க முடியும். என்னடா, இவன் எப்பப் பார்த்தாலும் தமிழ் சினேமாவையே உதாரணமா சொல்றானேன்னு நினைக்காதீங்க, ஏன்னா, எனக்கு தான் உண்மையான சிறைக்கு போன அனுபவம் இல்லையே, அதனால சினிமாவையே உதாரணம் காட்ட வேண்டியிருக்குது.
நாமளும் வேணுன்னா, அந்த அறைக்குள்ள போயி நின்னு புகைப்படம் எடுத்துக்கலாம். நண்பர் ரொம்ப பெருந்தன்மையா(?), நீங்க உள்ள போயி, கம்பிக்கு பின்னாடி நில்லுங்க, என்னோட “photography” திறமை எல்லாம் பயன்படுத்தி, உங்களை தத்ரூபமா எடுக்கிறேன்னு சொன்னாரு. ஆஹா, “இவரு போதைக்கு நாம ஊருகாவான்னு” நினைச்சுக்கிட்டு, ஐயா! சாமி, அது எல்லாம் ஒண்ணும் வேணாம்னு நழுவிட்டேன். ஆனாலும், சில பேரு அந்த அறைக்குள்ள போயி நின்னு போஸ் கொடுத்தாங்க பாருங்க, உண்மையான கைதியே தோத்துருவான் போங்க. அப்புறம் ஒரு வழியா அந்த சிறைச்சாலை சுற்றுலாவை முடிச்சு, வந்த கப்பல்லேயே திரும்பி போனோம். சான்ப்ரான்சிஸ்கோவில ஒரு “குறுக்குத் தெரு” ரொம்பவும் புகழ் பெற்ற தெருவாம். அதனால கப்பல விட்டு இறங்கி நேரா, அந்த குறுக்குத்தெருவுக்கு போகலாம்னு முடிவு பண்ணி, மறுபடியும் ஒரு வாடகை வண்டில அந்த தெருவுக்கு போனோம். இந்த குறுக்குத்தெருவை, ஆங்கிலத்துல “crooked street”ன்னு சொல்றாங்க. அதாவது இந்த தெரு தான் உலகத்துலேயே மிகவும் குறுகலான தெருவாம். இந்த தெரு எப்படி இருக்குதுன்னு பார்த்தீங்கன்னா, ரொம்ப குறுகலான தெருவுக்குள்ள, ரெண்டு பக்கமும் வீடு, அதை ஒட்டி ரெண்டு பக்கமும் நடக்கறதுக்கு படிகள், அந்த நடைபாதை படியை ஒட்டி பூங்கா மாதிரி பூச்செடிகளை நட்டுவச்சிருக்காங்க. அதுக்கப்புறம் வண்டிகள் போறதுக்கு சாலை.



 
அந்த தெருவைப் பார்த்தீங்கன்னா, “ஊட்டி கொண்டை ஊசி வளைவுகள்” மாதிரி இருக்கும். இந்த தெரு 400மீட்டர் தான் நீளம் கொண்டது. ஆனா வண்டிங்களுக்கு ஒரு வழிப் பாதை தான். அதாவது மேலேருந்து கீழே இறங்க தான் முடியுமே தவிர, கீழேருந்து மேல ஏற முடியாது. அதுவும் 8கிலோமீட்டர் வேகத்துல தான் வண்டியை ஓட்டணும்,அதுவும் ரொம்ப ரொம்ப குறுகலான எட்டு வளைவுகளை கடக்கணும். இப்படி இருக்கிற ஒரு குறுகலான தெருல தான், வீட்டோட விலை ரொம்ப அதிகமாக இருக்குமாம்.(என்ன கொடுமை சார் இது!!!)    400 மீட்டர் துரத்துக்குள்ளேயே, ஏகப்பட்ட புகைப்படத்தை எடுத்துக்கிட்டு, கையில இருக்கிற வழிக்காட்டியை வச்சு ஹோட்டலுக்கு நடந்து போயிடலாம்னு ஒரு தப்பான முடிவு எடுத்துட்டோம். நடந்தோம், நடந்தோம், நடந்தோம், நடந்துக்கிட்டேயிருந்தோம், ஆனா ஹோட்டல் தான் வந்த பாடில்லை. எப்படியோ ஒரு முக்கால் மணி நேரம் நடந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். வரவேற்பறைல இருக்கிறவுங்க கிட்ட, பக்கத்துல எங்க இந்திய உணவகம் இருக்கும்னு கேட்டோம். அதுக்கு அவுங்க கொஞ்ச தூரத்துல, தோசா உணவகம்” ஒண்ணு இருக்கு, அங்க தோசை சாப்பிடறதுக்கு சொல்லிக் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. என்னாது! தோசை சாப்பிடறதுக்கு சொல்லிக்கொடுப்பாங்களா!!! எங்களுக்கு ஒரே ஆச்சிரியமா போச்சு. அங்க அப்படி எப்படிதான் சொல்லிக் கொடுக்கிறாங்கன்னு போயி பார்போமேன்னு, அந்த உணவகத்துகு போனோம். அவுங்க எப்படி சொல்லிக் கொடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.  
                                                                                                                 பகுதி-8  






Wednesday, September 5, 2012

அமெரிக்காவில் அடியேன் – 6

பகுதி-5

நான் பயந்த மாதிரியே, அங்க மாநாட்டுக்கு வந்தவுங்க எல்லோரும் போயிட்டாங்க. என்னைய மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் இருப்பாங்கன்னு மாநாடு நடத்துறவங்களுக்கும் தெரியும் போல, அதனால, ஊரை சுத்திட்டு லேட்டா வருகிறவர்களையும் கூப்பிட்டுகிட்டு போறதுக்காக இரண்டு பேர் காத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களும் என்னைய கருத்தருங்கு நடக்கிற இடத்துக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. அது ஒரு இந்திய உணவகம். அங்க போனவுடனே, நல்லா சூடா ஒரு காபியை குடிச்சேன். அப்புறம் முதல் நாள் நிகழ்ச்சியா, “வெளி நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள் இருக்கிறது, அதை எப்படி சமாளிப்பது” என்பதை பற்றியெல்லாம் பேசினோம். ஒரு அருமையான கலந்துரையாடலா அமைஞ்சது. செவிக்கு ஒரு நல்ல உணவாகவும் அது அமைஞ்சதுல எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு. செவிக்கு நல்ல உணவு கிடைச்ச மாதிரி, வயிற்றுக்கும் நல்ல உணவு கிடக்குமான்னு ஒரு சந்தேகம். பொதுவா, வெளி நாடுகள்ள இருக்கிற பெரும்பாலான உணவகங்கள் வடக்கத்திய உணவகமா தான் இருக்கும். நானும் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் தென்னிந்திய உணவகங்கள் இருக்கும். இந்த வடக்குக்கு வேலையே, நம்ம தமிழை போட்டு அமுக்குறது தான். சாப்பாட்டுலேயும் சரி, சினிமாலேயும் சரி, வெளிநாடுகளில் வடக்கோட ஆதிக்கம் தான் அதிகமா இருக்கும். அதனால தான் எனக்கு அப்படி ஒரு சந்தேகம். சரி, இங்கேயும் இந்த “naanu”, லொட்டு லொசுக்குன்னு தான் இருக்கபோதுன்னு நினைச்சேன். ஆனா, அது ஒரு பக்கா தென்னிந்திய உணவகம். வாயிக்கு நல்லா ருசியா, நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு, அங்கேருந்து கிளம்பி எங்க ஹோட்டலுக்கு வந்தோம். மறு நாள் என் வாழ்கையில் ஒரு மறக்க முடியாத நாள் (பின்ன, முதல் முதலா ஒரு சர்வதேச கருத்தரங்கில் பேசுன நாளாச்சே!). அன்னைக்கு காலைல எந்திரிச்சு, மனசுக்குள்ளேயே சாமி எல்லாம் கும்பிட்டுக்கிட்டு, வீட்டு அம்மணி சொன்ன மாதிரியே அந்த புது சட்டையும் பேண்ட்டையும் போட்டுக்கிட்டு, எங்கள் தமிழ் பள்ளியின் முதல்வரோடு ஹோட்டலுக்கு வெளியே வந்தேன். முதல் நாளே அந்த மாநாடு நடக்கிற இடம் எங்கேன்னு போய்ப் பார்த்துட்டு வந்ததுனால, அந்த வழியாகவே போகலாம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல தான் எங்க ஹோட்டல்லேருந்து இரண்டு பேர் வேக வேகமா எங்களை தாண்டி போனாங்க. சரி, இவுங்க போற வேகத்தைப் பார்த்தா, ஏதோ குறுக்கு வழி இருக்கும் போலன்னு நினைச்சுக்கிட்டு நூல் பிடிச்ச மாதிரி, நாங்களும் அவுங்களை தொடர்ந்துக்கிட்டே போனோம். நாங்க தங்கி இருக்கிற ஹோட்டலை ஒட்டி சைடுல ,ஒரு ரோடு போகும் அந்த ரோட்டுலேயே ஒரு ஐந்து நிமிஷம் நடந்து எதிர் பக்கம் போனா அந்த மாநாடு நடக்கிற “convention centre” வரும். ஆனா எங்களுக்கு முன்னாடி நடந்தவுங்க, அந்த மாதிரி போகாம, பக்கத்துல இருக்கிற “hyatt” ஹோட்டலுக்கு பின் பக்கமா போயி, அதோட கார் பார்க்கிங்கை ஒரு சுத்து சுத்தி, அந்த பார்க்கிங்கோட படிக்கட்டெல்லாம் ஏறி இறங்கி (ஏழு கடல், ஏழு மலையை தாண்டி!!!) அந்த convention centreக்கு நேர் வழியா வராம எப்படியோ உள்ள போனாங்க. எங்களுக்கோ, இவுங்க பின்னாடி வராம ஒழுங்கா தெரிஞ்ச வழியில வந்திருந்தா கூட, இவ்வளவு சுத்து சுத்தியிருக்க வேண்டாமேன்னு தோனிச்சு (இதுக்குத்தான் சொந்த புத்தியை உபயோகப் படுத்தனுங்கிறது!!). சரி, இங்க பக்கத்துல எந்த கோவிலும் இல்லையா, அதனால அந்த “hyattயை சுத்துனதை, பிள்ளையாரப்பா, உன்னைய சுத்தினதா நினைச்சு, எங்க புண்ணியக் கணக்குல சேர்த்துக்கோன்னு வேண்டிக்க வேண்டியதாப்போச்சு. அங்க போனதுக்கு அப்புறம் ஒரு இரண்டு மணி நேரம், அங்க படிக்கிற குழந்தைங்க வித்தியாசமா சிந்திச்சு, ரொம்ப அருமையா கலை நிகழ்ச்சிகள் எல்லாம் பண்ணினாங்க. மதிய உணவுக்கு பிறகு எங்களோட ஆய்வரங்கம் இருந்துச்சு. நானும் உள்ளுக்குள்ள இருக்கிற பயத்தை எல்லாம் வெளியே காட்டாம, ஒரு வழியா என்னோட ஆய்வுக் கட்டுரையை படிச்சு முடிச்சேன்.

 மறு நாளும் எங்களுக்கு தேவைப்படுகிற ஆய்வரங்கத்துல எல்லாம் போயி உட்கார்ந்து, நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு வந்தோம். இரண்டு நாள் மாநாடும் முடிஞ்சது. அன்னைக்கு இரவு உணவுக்கு, நானும் சிட்னிலேருந்து வந்த இன்னொரு நண்பரும்(எங்கள் தமிழ் பள்ளியின் முன்னாள் முதல்வர்),அவர் துணைவியாரும் ஒரு தமிழ் நடிகையின் உணவகத்துல போயி சாப்பிட்டோம். அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                 பகுதி-7