Monday, January 28, 2019

சிட்னி ஸ்ரீ கற்பக விநாயகர் குடமுழுக்கு விழா

வலைப்பூ உறவுகளுக்கு வணக்கம். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கழித்து உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்துவந்த வேலையை உதறிவிட்டு சொந்தமாக தொழில் செய்ய  ஆரம்பித்துவிட்டேன்.  அதனால்  தான் வலைப்பூ உலகத்திற்குள் என்னால் வர இயலவில்லை. 

இந்த வருடத்தில் இருந்து சற்று நேரத்தை ஒதுக்கி வலைப்பூவிற்குள் மீண்டும் வரலாம் என்று எண்ணி இந்த பதிவிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஆனால் நான் பின்பற்றுபவர்களின் பதிவுகளுக்கு கருத்துக்களை பதிவிட முடியுமா என்று தெரியவில்லை . அதனால் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். 

வேலையில் இருக்கும்போது எவ்வாறு நேரம் கிடைத்தது என்பதை வேறொரு பதிவில் சொல்கிறேன்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு எழுத ஆரம்பிக்கும்போது எதைப்பற்றி முதலில் எழுதுவது என்று யோசித்தேன். ஆனால் அதிக நேரம் மூளையை பயன்படுத்த விடாமல் என் அப்பன் விநாயகன் என்னை காப்பாற்றி  விட்டான். ஆம் சிட்னியில் நேற்று நடைப்பெற்ற குடமுழுக்கு விழவைப்பற்றித்தான் இந்த பதிவு.

முதலில் எனக்கும் இங்குள்ள கற்பக  விநாயகர் கோயிலுக்குமான  உறவை  சொல்லி விடுகிறேன். நாங்கள் இங்கு சிட்னி வந்து முதன் முதலில் சென்ற கோயிலே இந்த  தான். பொதுவாக வெளிநாடுகளில் உள்ள கோயில்களில் அமாவாசையன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்றால் மோட்ச தீபம் தான் ஏற்றுவார்களே தவிர எள்ளும் தண்ணியும் இறைக்க மாட்டார்கள். ஆனால் இந்த பிள்ளையார் கோயிலில் உள்ள குருக்கள் மட்டும் தான் அதனை செய்து கொண்டிருக்கிறார். நானும் ஒவ்வொரு அமாவாசையன்று இந்த கோயிலுக்குச் சென்று என் தந்தைக்கு தர்ப்பணம் செய்துவிட்டு  அலுவலகம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். இதனாலேயே குருக்களும்  என்னுடன் நன்றாக பழக ஆரம்பித்துவிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் வீட்டில் நடக்கும் எல்லா விசேடங்களுக்கும் இந்த குருக்கள் தவறாமல் வந்து விடுவார். அதாவது எங்களின் மூன்று குழந்தைகளுக்கும் 16ஆம் நாள்  புண்ணியசானம், வீட்டு கிரகப்பிரவேசமும், என் பெற்றோருக்கு வருடாந்திர திதி கொடுப்பது என்று எல்லாவற்றிருக்கும் இந்த குருக்கள் தான் செய்து கொடுப்பது  வழக்கம். திதி  கொடுக்கும் நாளில் வீட்டு அம்மணிக்கு தோது இல்லையென்றால், நான் பிள்ளையார் கோயிலிலேயே கொடுத்து விடுவேன். சென்ற வருடம், குருக்கள் தன்னுடைய மகனுக்கு திருமணம் என்று பத்திரிகை வைத்தார். இந்த அளவிற்கு எனக்கு பிள்ளையார் கோயிலோடும் குருக்களோடும் ஒரு உறவு இருந்துகொண்டு இருக்கிறது. மேலும் இந்த கோவில் எனக்கு எப்பவுமே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலைத்தான் நினைவு படுத்தும்.  

ஒரு வாரத்திற்கு முன்பு குருக்களிடம் அழைப்பு வந்தது. அதாவது, கும்பாபிஷேகத்திற்கு குடும்பத்தோடு வந்து விடுங்கள் என்று. அதனால் எப்படியாவது கும்பாபிஷேகத்துக்கு போய்விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு துர்க்கை அம்மன் கோயிலில் நடைப்பெற்ற குடமுழுக்கு விழாவிற்கு தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. அதனால் இந்த தடவை சரியான நேரத்துக்கு (8.30-9.30 மணிக்குள்)செல்ல வேண்டும் என்று ஒரு பரபரப்பு இருந்தது. குடமுழுக்குக்கு முதல் நாள் அதாவது சனிக்கிழமை அன்று எண்ணைக்காப்பு. இங்கு நம் கைகளாலேயே சுவாமி சிலைகளுக்கு எண்ணைக்காப்பு செலுத்தலாம். எனக்கு இந்த அனுபவம் முதன் முதலில்18 ஆண்டுகளுக்கு முன்பு  யுகேயிலுள்ள (UK) பர்மிங்காம் நகரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் முருகன் சிலையை ப்ரதிஷ்ட்டை செய்யும்போது கிடைக்கப்பெற்றது. சனிக்கிழமை காலை 11 மணி வாக்கில் எண்ணைக்காப்பு செலுத்தினோம். ஓவியாவுக்கும் இனியாவுக்கும் எண்ணைக்காப்பு சாத்துவது மிகவும் பிடித்து போய் விட்டது.

மறு நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் அடித்து பிடித்து வீட்டை விட்டு கிளம்பி 7.50 மணியளவில் flemington (இந்த இடத்தில் தான் பிள்ளையார் கோவில் இருக்கிறது) வந்து சேர்ந்தோம். வண்டியை வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு 10 நிமிடம் நடந்து கோயிலுக்கு வந்து சேர்ந்தபோது, இராஜ  கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்து கொண்டு இருந்தது. பிறகு கூட்டத்தோடு சேர்ந்து நாங்களும் கோயிலுக்குள்  சென்றோம், பார்த்தா அங்கே ஏற்கனவே அவ்வளவு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நாங்களும் எப்படியோ உட்கர்ந்து, பிள்ளையார் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடப்பதை பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் எங்களுக்கு அது சரியாக தெரியவில்லை. இருந்தாலும் சன்னிதானத்தின் விமானத்திற்கு  நடந்த கும்பாபிஷேகத்தை நன்றாக பார்க்க முடிந்தது. அங்கே முடியும் சமயத்தில் நாங்கள் பின்னாடி இருக்கும் சிவன் சந்நிதானத்தின் முன்பு அமர்ந்து விட்டோம். அதனால் கண்குளிர சிவனுக்கு நடந்த கும்பாபிஷேகத்தை கண்டு களித்தோம். பிறகு எல்லாம் முடிந்து வெளியே வந்தவுடன் சர்பத்தும், சாம்பார் சாதமும் வழங்கினார்கள். அங்கேயே இருந்து மகா தீபாராதனையை பார்த்துவிட்டு, அன்னதானத்தையும் முடித்துவிட்டு வரலாம் என்று பார்த்தால் நண்பர் ஒருவர் தன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு அழைத்து இருந்தார், அதனால் அங்கே செல்ல வேண்டியதாகி விட்டது. 







































கும்பாபிஷேகத்திற்காக அழைத்து வரப்பட்ட பசுக்கள் 


சென்ற மாதத்தில் தான் அரிமளத்தில் சிவன் கோவில் கும்பாபிஷேகம்  நடைபெற்றது. ஊரில் இருந்திருந்தால் அந்த கும்பாபிஷேகத்தை போய் பார்த்திருந்திருக்கலாமே என்று ஒரு ஏக்கம் இருந்தது. கடைசியில் இங்கேயே கும்பாபிஷேகத்தை பார்த்து அந்த ஏக்கத்தை போக்கியாச்சு.