Tuesday, January 31, 2012

கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது

சமீபத்தில் ஒரு இணையத்தளத்தில்  படித்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 
கணவன் மனைவியிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறான் என்று பார்ப்போம்.

  • அலுவலகத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லச் சொல்லி நச்சரிக்க கூடாது.
  • என்னைக்காவது(?) லேட்டாக வந்தால், தான் சொல்லுகின்ற காரணங்களை நம்ப வேண்டும்.
  • ஆலோசனை தருகிறேன் என்ற பெயரில் எதையும் உளறக்கூடாது.
  • அடிக்கடி ஷாப்பிங் போகணும்னு கூப்பிடக் கூடாது.
  • அலுவலகம் முடித்து களைப்போடு(?) தான் வரும்போது, வீட்டு வாசலில், சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும்.

மனைவி கணவனிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது

அடுத்து,  மனைவி தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாள்  என்பதை பார்ப்போம்.

  • தன்னிடம் கலந்துக் கொண்டு தான் எந்த ஒரு முடிவையும் எடுக்க         வேண்டும்.
  • மற்றவர்கள் முன்னிலையில் தப்பு கண்டுப் பிடிக்க கூடாது. 
  • சாப்பாடு எப்படி இருந்தாலும் (வாய்க்கு விளங்கலை என்றாலும்)  பாராட்ட  வேண்டும்.  
  •  வீட்டை விட்டு வெளியே போன நொடி முதல், வீட்டிற்கு திரும்பி வரும்     வரை நடந்த அனைத்தையும் சொல்ல வேண்டும்.  
  •   இருவருக்குள் சண்டை வந்தால், விட்டுக் கொடுத்து கணவன் தான்        முதலில் பேச வேண்டும்.  
  • அடிக்கடி வெளியே ஷாப்பிங்குக்கு கூட்டிச் சென்று, எவ்வளவு        நேரமானாலும் பொறுமையாக ஷாப்பிங் முடிகிற வரை ஒன்றும்        சொல்லாமல் கூட வர வேண்டும்.  

Sunday, January 22, 2012

தை – 1: நான் வைத்த (கன்னிப்) பொங்கல்

பொங்கல் அன்று நான் விடியற்காலை(?) 8.30 மணிக்கெல்லாம் எந்திரிச்சுட்டேன். வீட்டில யாரும் இல்லாதனால, மதியமும், இரவும்   சாப்பிட  வாங்கன்னு  நண்பர்கள்  சொல்லி இருந்தாங்க.  மதியம் வரைக்கும் என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது தான், ஏன் நாளே பொங்கல் வைக்க கூடாதுன்னு ஒரு விபரீத எண்ணம் வந்துச்சு.
உடனே போயி குளிச்சு, நல்லா சுறுசுறுப்பா வந்தேன். யாருக்காவது  போன் பண்ணி, பொங்கல் எப்படி செய்யுறதுன்னு கேக்கலாம்னு தோனிச்சு.     ஆனா பாருங்க அதுல ஒரு சிக்கல். என்னன்னா, நான் தனியா பொங்கல் செய்யுற விஷயம் ஊர் பூரா பரவிடும். எனக்கு தான் புகழ்ச்சியே பிடிக்காதே. அதனால அந்த போன் பண்ணி கேக்குற எண்ணத்தை விட்டுட்டேன்.
எங்க விட்டு அம்மணி வச்சிருக்காத ரெசிபியா. அதனால ரெசிபி பீரோவிலிருந்து எடுத்துக்கலாம்னு யோசிச்சேன். ஆனா பாருங்க அதுலையும் ஒரு கஷ்டம். என்னன்னா, அவுங்க கிட்ட நீங்க எந்த ஒரு சமயலுக்கும் ரெசிபி கேக்கலாம். அவுங்க சொல்லுவாங்க. என்ன!! அவுங்க கிட்ட இருக்குற ரெசிபி கடல்லேருந்து, உங்க ரெசிபிய தேடி கண்டுப்பிடிச்சு சொல்றதுக்குள்ள, உங்களுக்கு பசி வந்து, அந்த பசி உங்க வயித்த கிள்ளி, கடைசில அந்த பசி வெறுத்துப் போயி உங்களை விட்டு போயிடும். ஒரு ரெசிபியையும் கண்டுப் பிடிக்க முடியாத அளவுக்கு அவுங்க மலை மாதிரி ஏகப்பட்ட ரெசிபியை பிரிண்ட் பண்ணி ஃபைல் போட்டு வச்சுருக்காங்க. அவுங்களாலயே, ஒரு ரெசிபிய கண்டுப் பிடிக்கிறதுக்கு அவ்வளவு நேரம் ஆகும்னா, என்னைய கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.
சரி, நம்மளால அந்த கடலுக்குள்ள மூழ்கி முத்து எடுக்க முடியாது. நாமளே, சக்கரை பொங்கலுக்கு புதுசா ஒரு ரெசிபிய கண்டுப் பிடிச்சிட வேண்டியது தான். இந்த சக்கரை பொங்கல் செய்யுறது என்ன பெரிய கம்பா சூத்திரமான்னு முடிவு பண்ணி, த்தில இறங்கினேன்.
ஒரு சில்வர் பானைய தேடி கண்டுப் பிடிச்சு, அதுல நிறைய தண்ணிய புடிச்சு அடுப்புல வச்சேன். நம்ம ஒரு ஆளுக்கு நிறைய செய்ய வேண்டாம்னு, அரை ஒழக்கு அரிசியும்,  அரை ஒழக்கு பருப்பையும் அந்த கொதிக்கிற தண்ணில போட்டு, அது எப்படா பொங்கி வரும்னு அதையே வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் தான் நியாபகம் வந்துச்சு, வெல்லத்தை போட மறந்துட்டோமேன்னு, உடனே வீட்டுல இருந்த மண்டை வெல்லத்தை ரொம்ப கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடிச்சு, அதை தூளா நச்சு பொடியாக்கி, பானையில போட்டேன். பார்த்தா வெள்ளம் பத்தாத மாதிரியே இருந்துச்சா, அடாடா, பொங்கல் நல்லா இனிச்சாதானே, சாப்பிட முடியும்னு, இன்னும் நிறைய வெல்லத்தை பொடியாக்கி போட்டேன். அப்ப அப்ப கரண்டியை போட்டு கிண்டிக்கிட்டு, அடுப்புக்கு பக்கத்துல நின்னுக்கிட்டு, எப்படா பொங்கல் ரெடி ஆகும்னு காத்துக்கிட்டு இருந்தேன். ரொம்ப நேரம் கழிச்சு, ஒரு குத்து மதிப்பா, சரி பொங்கல் ரெடி ஆகியிருக்கும்னு நினைச்சு(?)முந்திரி பருப்பை நெய்யில வறுத்து, நிறைய நெய்யையும் சேர்த்து அந்த சக்கரை பொங்கல போட்டு நல்லா கிண்டி, அந்த பானையை கீழே இறக்கி வச்சேன். சாமிக்கு வச்சு கும்பிடலாம்னு, ஒரு சின்ன கிண்ணத்தில சக்கரை பொங்கல எடுத்து வச்சா, சாதத்தையே காணோம், வெறும் வெல்லமா இருக்கு, நாம போட்ட வெல்லத்துல, சாதம் எல்லாம் கரைஞ்சு போச்சோன்னு, சந்தேகம் வந்துடுச்சு. என்னடா இது, “பிள்ளையார் பிடிக்க போயி குரங்கு பிடிச்ச கதையா ஆயிடுச்சுன்னு, மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. சரி, இதை சாமிக்கு வச்சு கும்புடாம, முதல்ல இது எப்படி இருக்குனு டேஸ்ட் பண்ணி பத்துடுவோம்னு, ஒரு ஸ்பூன் எடுத்து வாய் கிட்ட கொண்டு போனேன். அப்ப தான் என் மண்டைல ஒரு எச்சரிக்கை மணி அடிச்சுது, வீட்டுல வேற யாரும் இல்ல, நாம இத சாப்பிட்டு, நமக்கு ஏதாவது ஆச்சுன்னா, உடனே வாயிக்கிட்ட கொண்டு போன கை தன்னால இறங்கிடிச்சு. இவ்வளவு வேற செஞ்சாச்சு, என்ன பண்றதுன்னு புரியலை. இதுவே நம்ம ஊரா இருந்தா, மாடு, பூனை, நாய்க்கு எல்லாம் கொடுத்திருக்கலாம்னு தோணுச்சு. ஆஹா நம்ம வீட்டுக்கு ரெண்டு பக்கத்துலையும்      இருக்குற வீட்டில தான் பூனையும், நாயையும் வளக்குறாங்களே, பேசாம அதுங்களுக்கு போயி குடுத்துலாம்னு முடிவு பண்னினேன். அதுக்கப்புறம் தான் தோணுச்சு, இந்த பொங்கலை சாப்பிட்டு அதுங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, அப்புறம் நம்மள கோர்ட், கேசுன்னு  இல்ல அலைய விடுவானுங்க. நாமளே, அத்திப் பூத்த மாதிரி, பொங்கலை செஞ்சிருக்கோம், இதுக்கு பரிசா, கோர்ட், கேசுன்னா போறது. சரி, இந்த பொங்கலுக்கு கொடுப்பினை அவ்வளவு தான்னு மனசை தேத்திக்கிட்டு அவ்வளவு பொங்கலையும் குப்பைல கொட்டிட்டேன்.
இதுலேருந்து, நான் என்ன சொல்ல வரேன்னா, பிரதம மந்திரியை ஊருக்கு அனுப்பிட்டு னியா இருக்கும் ஜனாதிபதிகளே, நீங்களா எதுவும் புதுசா செய்யுறேன்னு மாட்டிக்காதீங்க, அப்புறம் எனக்கு ஏற்பட்ட நிலமை தான் உங்களுக்கும்.

Tuesday, January 17, 2012

உச்சிதனை முகர்ந்தால் - விமர்சனம்

ஈழத்தில் நம் ரத்த பந்தங்கள் பட்ட கஷ்டங்களை, அப்படியே தத்ரூபமாக, எந்த வித மசாலாக்களையும் சேர்க்காமல் தைரியமாக எடுத்ததற்காக இயக்குனர் புகழேந்திக்கு ஒரு மிகப் பெரிய நன்றி.  மட்டக்களப்பு பகுதியில், ஈவு இரக்கம் இல்லாத மிருகங்களின் காமப் பசிக்கு இரையாகி, கருகி போன ஒரு இளம் மொட்டுவின் கதையே இந்த படம்.  இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கும், இதயம் கனத்து போகும். இந்த அளவுக்கா நம் தமிழ் இனத்தவர்கள் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று எண்ணி மனது கலங்கும்.  இன்னும் இந்த மொட்டு போல் எத்தனை, எத்தனை ஆயிரம் மொட்டுக்கள், மலர்ந்த உடனே கருகிப் போயிருக்குமோ என்று என்னும் போது, நம் மனது பாறாங்கல்லாகி விடுகிறது. அந்த மொட்டுக்கள் பெண்மையை உணர ஆரம்பிக்கும் பொழுதே, அந்த பாவிகள் அவர்களின் பெண்மையை கசக்கி எறிந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மனது அப்படியே பதறுகிறது. 

தமிழ் நாட்டில், ஈழச் சகோதரர்களுக்காக ஆதரவு குரல் கொடுத்து வரும் சத்யராஜ் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடமும்,  ஆதரவு நாடி, கள்ளத் தோனியில் வருகிறார்கள் 13 வயது புனிதவதியும் , அவரது தாயாரும். இதில் புனிதவதி, வெறி பிடித்த ராணுவத்தினரால் கேங்க் ரேப் செய்யப்பட்டு 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். அவரைப் பெற்ற தாயோ, தன் மகளுக்கு அந்த வெறியர்களின் மூலம் ஏற்பட்ட அவமான சின்னத்தை கலைக்க வேண்டும் , அதனால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து என்றாலும் பரவாயில்லை என்று சொல்கிறார். ஆனால் சத்யராஜ் மற்றும் சங்கீதாவின் பிடிவாதத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். ஒரு பக்கம் தன் மகளின் இந்த நிலமையை எண்ணி அழுவதும், மறு பக்கம் தன் கணவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்று கவலைப் படுவதுமாக இருக்கிறாள் அந்த தாய். இந்நிலையில், புனிதவதியின் தந்தையை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற விஷயம் தெரிய வருகிறது. அதனால் அந்த தாய், புனிதவதியை சத்யராஜின் பாதுகாப்பில் விட்டு விட்டு மீண்டும் மட்டக்களப்பிற்கு திரும்பி செல்கிறார். புனிதவதியை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவருக்கு, புனிதவதிக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வருகிறது. கடைசியில் எய்ட்ஸின் வீரியம் தாங்காமல், புனிதவதி இந்த மண்ணுலகை விட்டு மறைகிறாள்.

இந்த படத்தில் புனிதவதியாக நடித்திருக்கும் நீநிகா, உண்மையிலேயே புனிதவதியாக வாழ்ந்திருக்கிறார். இதில் நடித்த சத்யராஜ், சங்கீதா,நாசர், லக்ஷ்மி, சீமான், மற்றும் திருநங்கையாக நடித்தவர் என அனைவரும் மிக நேர்த்தியாக நடித்துள்ளனர். குறிப்பாக தமிழருவி மானியனின் வசனம், மிக எதார்த்தமாக, அவர்களின் வலிகள் நம் மனதிற்குள் ஊடுருவி செல்லுமாறு எழுதியிருக்கும் பாங்கை பாராட்டப் பட வேண்டும். உதாரணத்துக்கு சங்கீதா கூறும் இந்த வசனம், நம் உள்ளத்தை அப்படியே நொறுங்கச் செய்யும். 

"13 வயசுக் குழந்தை, அவளுக்கு ஒண்ணுமே தெரியலை, அவ பாடு
ஓடுறா, குதிக்கிறா, நமக்கு தான் பயமாக இருக்குது. அந்த குழந்தைக்கு 
போயி இப்படி ஆயிடுச்சுன்னு நினைக்கும் போது அழுகையா வருது.  
ஆனா, அவ அன்னைக்கு தான் வலிச்சுதுன்னு ரொம்ப சாதாரணமா 
சொன்னபோது மனசெல்லாம் ஒடைஞ்சு போயிடுச்சு. "

எல்லோரும் "happy birthday" என்று ஆங்கிலத்தில் பாடும் போது, புனிதவதி மட்டும் "பிறந்த நாள், இன்று பிறந்த நாள்" என்று தமிழில் பாடுவது இருக்கே,  உண்மையாக சாட்டையில் அடித்த மாதிரி இருந்தது. 

பின்னணி இசை மிகவும் அழகாக கையாளப் பட்டிருக்கிறது. டி. இமானின இசையில் "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடல் நம்மையும் உணர்ச்சிப் பொங்க வைக்கும். 

   "இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ!
    இழிவாய் கிடக்க செருப்பா நீ!
    ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
    ஒரு தீபம் அணையுமுன்னே துடிக்கிறதே
     தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே
     எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்
     அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்!!!!"

இறுதியாக, இந்த படத்தை ஒரு முறை கண்டிப்பாக பாருங்கள். நம் தமிழ் சகோதரர்களின் கஷ்டங்களையும், கொடுமைகளையும் வெறும் உதட்டளவு மட்டும் உணராமல், இந்த படத்தை பார்க்கும் இரண்டு மணிநேரமாவது உள்ளத்தளவில் உணருங்கள். 


Friday, January 13, 2012

தமிழன் ஒருவனால் தமிழ் அன்னை துகிலுரிக்கப்பட்டாள்

இன்று உலகமெங்கும் தமிழும் ஆங்கிலமும் சேர்ந்து உருவாகிய கொலவெறி பாட்டு மிகவும் பிரபுலமடைந்து இருக்கிறது. ஆனால் உண்மையான தமிழ் உணர்வு கொண்ட தமிழனால், இந்த தமிழ் கொலையை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு பாடல், ஒன்று தமிழில் இருக்க வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். இப்படி இரண்டும் கலந்து ஏன் இரு மொழிகளையும் கொச்சைப் படுத்த வேண்டும்.  இந்த பாட்டை பற்றி, எழுதியவரிடம் கேட்டால், "நான் ஆங்கிலத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட அதில் தமிழ் வாசனை வீசும் (அப்படியா..??) அனைத்துத் தமிழர்களும் இதைக் கேட்க வேண்டும் என்பதே அதற்கு காரணம் (கேட்டு விட்டு எல்லோருக்கும் தமிழ் மறந்து போக வேண்டும் என்ற நல்ல எண்ணம்) என்கிறார்".  இவரை எல்லாம் ஒரு தமிழன் என்று சொல்லுவதற்கே நா கூசுகிறது.  இதுவே, இவர் இந்த பாடலை முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் எழுதி பாடி, புகழ் பெற்றிருந்தால், உண்மையிலேயே பெருமை அடையலாம். ஆனால் இப்போது காறித் துப்பத்தான் தோன்றுகிறது.
இந்த பதிவை பதித்ததால் ஏற்பட்ட பாவத்தை , யாழ்ப்பாணத்து தமிழ் சகோதரர், 'தமிழ் கொலவெறிப்பாட்டு'க்கு எதிராக, தமிழில் எழுதி அதே மெட்டில் பாடியிருக்கும் 'என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறிடா?' என்ற பாட்டை பதித்து  போக்கிக்கொள்கிறேன்.
'கொலவெறிடா - யாழ்ப்பாணம் பதிப்பு' என்ற தலைப்பில் வந்துள்ள அந்தப் பாடலின் வரிகள் முழுமையாக:

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பை இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

Thursday, January 5, 2012

மயக்கம் என்ன திரைப்படமும் ஒரு ஆங்கில பெண்மணியும்

பொதுவாக நான் திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதில்லை, காரணம் எங்கள் வீட்டு மகாராணிகளை வைத்துக் கொண்டு எங்களால் படம் பார்க்க முடியாது என்பதால் தான். அதனால் torrents இல் டவுன்லோட் பண்ணி ஒரு படத்தை நானும் என் வீட்டு அம்மணியும் ஒரு வாரம் பார்ப்போம். ஆனால் இப்போது வீட்டு அம்மணியும், மகாராணிகளும் ஊருக்கு போயிருப்பதால்(நிம்மதியாக) திரையரங்குக்கு சென்று படம் பார்க்கலாம் என்று எண்ணி   நண்பர்களுடன் மயக்கம் என்ன என்னும் படத்திற்கு சென்றேன். அங்கே ஒரு 10 பேர் இருந்தார்கள். சரி நாமும் அந்த ஜோதியில் ஐக்கியமாவோம் என்று நாங்கள் அமர்ந்தோம். சற்று நேரத்தில்,  ஒரு வெள்ளைக்கார பெண்மணியும்,  அவருடைய 2 குழந்தைகளும் வந்தார்கள்.  எங்களுக்கோ ஒரே ஆச்சிரியம். சரி அவர்கள் திரையரங்கு மாறி வந்திருப்பார்கள்நம்மை எல்லாம் பார்த்தவுடன்  போய் விடுவார்கள் என்று நினைத்தோம்.  ஆனால் அவரோ எங்களை எல்லாம் பார்த்து சிரித்து  கொண்டு வசதியாக உட்கார்ந்து கொண்டார்கள். அந்த குழந்தைகளோபெரிய!! பாப்கார்ன் பாக்கெட்டை மடியில் வைத்துக்கொண்டு  கொறித்துக் கொண்டிருந்தார்கள். நிமிடம் ஆனது, அவர்கள் எழுந்து போகிற மாதிரி தெரியவில்லை. போதாக்குறைக்கு அந்த பெண்மணியோ அடிக்கடி கை கடிகாரத்தை பார்த்து, எப்படா படத்தை போடுவார்கள் என்று ஆர்வத்தோடு உட்கார்ந்து இருந்தார்கள். சரி தான், ரஜினிக்கு ஜப்பான் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறாகள். அது போல அவருடைய மாப்பிள்ளைக்கு இங்கு சிட்னியில் வெள்ளைக்கார ரசிகர்கள் இருக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன். அதிலும் இந்த பெண்மணி தான் ரசிகர் மன்ற தலைவி போல ஏன்னா, இந்த படம் திரையிடப்பட்ட முதல் காட்சிக்கே வந்து விட்டார்களே. சரி படம் முடிந்தவுடன், அவர்கள் குடும்பத்தை ஒரு புகைப் படம் எடுத்து தனுஷுக்கு அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன். படம் ஆரம்பிக்க ஒரு சில நிமிடங்கள் இருக்கும் தருவாயில், அந்த ஆங்கில குடும்பத்துக்கு முன் வரிசையில் இருந்த தம்பதி, அவர்களிடம் ஏதோ கூறினார்கள். உடனே அந்த வெள்ளைக்கார பெண்மணி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு எங்களை நோக்கி கையை அசைத்து விட்டு சென்று விட்டார்கள். அடடா, தனுஷுக்கு கொடுப்பினை அவ்வளவுதான் போல இருக்கு. அவர்கள் புகைப்படத்தை தனுஷுக்கு அனுப்பலாம் என்ற ஆசை, நிராசையாக போயி விட்டதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். சை, அந்த தம்பதி அப்படி என்ன தான் சொல்லி அவர்களை வெளியேற்றி இருப்பார்கள், என்று ஒரு பக்கம் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தது. சரி, இடைவேளையில் அவர்களிடமே கேட்டு விடலாம் என்று இருந்த எனக்கு, அவர்கள் இடைவேளையில் மாயமாக மறைந்து விட்டார்கள். சரி, நாம தான் ஏதோ தப்புக் கணக்கை போட்டுட்டோம் போல. தனுஷுக்காவது, வெள்ளைக்கார ரசிகர்களாவது என்று ஒரு வழியாக மனதை சாந்தப்படுத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். 

Wednesday, January 4, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என்னடா, போன வருடம் வலைப்பூவை ஆரம்பித்து, இந்த வருடம் தான் ஒரு பதிவை பதிக்கிறானே என்று நினைப்பீர்கள். என்ன செய்வது, என் நேரம் அப்படி அமைந்து விட்டது. ஒவ்வொருவரும், புது வருடத்தில் ஏதாவது ஒரு உறுதி மொழியை எடுத்து அதன்படி நடப்பார்கள். அதன்படி, நானும் இந்த வருடம் ஒரு உறுதி மொழி எடுத்திருக்கிறேன். இந்த வருடத்திலையாவது, ஒழுங்காக பதிவுகளை பதிக்க வேண்டும் என்று.  அதனால், கண்டிப்பாக இனி வரும் காலங்களில், என்னுடைய பதிவுகள், இந்த வலைப்பூவில் இடம்பெறும் என்று நம்பிக்கையுடன் கூறிக் கொள்கிறேன்.