Showing posts with label அமெரிக்காவில் அடியேன். Show all posts
Showing posts with label அமெரிக்காவில் அடியேன். Show all posts

Friday, October 5, 2012

அமெரிக்காவில் அடியேன் – 10

பகுதி-9

நானும் மேப்பையும் ரோடையும் பார்த்துக்கிட்டே அந்த பஸ்ல வந்தேன். எனக்கு பின்னாடி உக்கார்ந்த வெள்ளைக்காரரும், என்னையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்திருக்காரு. அது எனக்கு தெரியலை. அடுத்த பஸ்ஸை எடுக்கிறதுக்கான ஸ்டாப்பும் வந்துச்சு. எதிர் சைட்ல “KMART” கடை ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்குள்ள இருந்துச்சு. எதுக்கு இன்னொரு பஸ் எடுத்து போகணும், பேசாம இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கே போனா என்னன்னு யோசிச்சு, அந்த ஸ்டாப்லேயே இறங்கி எதிர் பக்கம் போறதுக்காக, சிக்னல்ல நின்னேன். எனக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தவரும் பின்னாடியே இறங்கி நடந்து அந்த சிக்னல்ல எனக்கு பக்கத்துல வந்து நின்னாரு. என் கிட்ட வந்து, நீங்க எங்க போகணும்னு கேட்டாரு. நான் உடனே அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு போகணும்னு சொன்னேன். உடனே, அவருக்கு சிரிப்பு வந்துடுச்சு. அட கடவுளே! இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு போறதுக்குதானா, நீங்க மேப்பையும் ரோடையும் பார்த்துக்கிட்டு வந்தீங்க. நான் கூட, நீங்க போக வேண்டிய பாதையை விட்டுட்டீங்க, எங்க இறங்குறதுன்னு தெரியாம கஷ்டப்படுறீங்கன்னு நினைச்சேன், ஆமா, நீங்க அமெரிக்காவுக்கு புதுசா, இல்ல இந்த இடத்துக்கு புதுசான்னு கேட்டாரு. நான் சிட்னிலேருந்து வறேன்னு சொன்னேன். அவர், உடனே பரவாயில்லையே, நீங்களே தனியா பஸ் எடுத்து சுத்திப் பார்க்கிறீங்களான்னு ஆச்சிரியப்பட்டு, சரி, உங்களுக்கு இந்த மாலைப் பொழுது, நல்ல சந்தோஷத்தை கொடுக்கட்டும்னு சொல்லி, ரோட்டைக் கடந்து, அந்தப் பக்கம் போனாரு. ஊர் பேர் தெரியாத இடத்துல, நம்மளையும் மதிச்சு, ஏதாவது உதவி வேணுமான்னு கேக்குறதுக்கு கூட ஒருத்தர் இருக்கறேன்னு நினைச்சு எனக்கு ரொம்ப ஆச்சிரியமா போச்சு. அப்புறம் நானும் ரோட்டைக் கடந்து அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்குள்ள போயி,KMART” கடைக்கு போனேன். சிட்னில இருக்கிற “KMART” கடைக்குள்ள போனா எப்படி இருக்குமோ, அதே மாதிரி, கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாம, அப்படியே இருந்துச்சு. நானும் அந்த கடைக்குள்ளேயும், அங்க இருந்த மற்ற கடைக்குள்ளேயும் கொஞ்சம் நேரம் சுற்றிப் பார்த்துட்டு, திரும்பவும் ரெண்டு பஸ் எடுத்து, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தேன். அப்பவே மணி ஏழரை ஆயிருந்துச்சு. அந்த இடத்துலேயே, ஒரு ரெஸ்டாரண்ட் இருந்துச்சு. அதுக்குள்ள போய்,pasta”வை ஒரு கட்டு கட்டிட்டுட்டு, நண்பரோட அறைக்கு வந்தேன். அறைக்குள்ள, நண்பரும்,மனைவியும், அவரோட நண்பரும், அவர் மனைவியும் இருந்தாங்க. அந்த நண்பரும் அங்கேயே இன்னொரு அறையை எடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சுது. நான் உள்ள போனவுடனே, “எங்க தனியா போய் சுத்திட்டு வரிங்கன்னு” ஒரு பெரிய கேள்விக்கனையை எல்லோரும் தொடுத்தாங்க. நானும், அமெரிக்கா வந்ததே, ஊரை சுத்திப்பாக்குறதுக்கு தானேன்னு சொன்னேன். உடனே, இன்னொரு நண்பரோட மனைவி, அது எப்படிங்க நீங்க மட்டும் தனியா அமெரிக்கா வரலாம். மனைவியையும் கூட்டிக்கிட்டு இல்ல வந்திருக்கணும்னு சொன்னாங்க. ஆஹா, வீட்டு அம்மணிக்கு இப்படியெல்லாம் சப்போர்ட் கிடைக்குதான்னு நினைச்சேன். என்னோட ரெண்டு மகாராணிகளும் ரொம்ப சின்னவங்களாக இருக்காங்க. அவுங்களை கூட்டிக்கிட்டு நாங்க வந்திருந்தோம்னா, நாங்க அமெரிக்காவை சுற்றிப் பார்க்க வேண்டாம், அமெரிக்காவே எங்களை சுத்தி சுத்திப் பார்த்திருக்கும்னு சொல்லி, ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாடியே,UNIVERSAL STUDIOS HOLLYWOOD” போறதுக்கு இணையதளம் வழியா முன்பதிவு செஞ்சு வச்சிருந்தேன். நண்பர்கள் எல்லாம் மறுநாள் என்ன பண்ணப்போறிங்கன்னு கேட்டாங்க. “HOLLYWOOD STUDIOS” போகப்போறேன்ன்னு சொன்னேன். உடனே, அவுங்க எல்லோரும் நாங்களும் வரோம், எல்லோரும் ஒண்ணா போகலாம்னு சொன்னாங்க. மறுநாள், எல்லோரும் அந்த நண்பரோட கார்ல “UNIVERSAL STUDIOS HOLLYWOOD”க்கு போனோம். நான் ஏற்கனவே எட்டு வருஷத்துக்கு  முன்னாடி, ஜப்பான்ல  “UNIVERSAL STUDIOS”க்கு போயிருக்கிறேன். என்ன இருந்தாலும் அங்க இருந்தது “நகல்”, இது தானே “அசல்” அதனாலே அசலுக்கும், நகலுக்கும் என்ன வித்தியாசம்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருந்தேன்.  

சும்மா சொல்லக்கூடாது, அசல், அசல்தான். நகல், நகல்தான். உண்மையிலே ரொம்ப பிரம்மாண்டமாகவும், ஆச்சிரியமாவாகவும் இருந்துச்சு.
உள்ள போகும்போதே, அங்க, அங்க நின்னு புகைப்படம் எடுத்துக்கிட்டோம்.



அந்த அமெரிக்காவிலே இருக்கிற நண்பர் வந்து, இங்க நில்லுங்க, நான் உங்களை புகப்படம் எடுக்கிறேன்னு, ஒரு இடத்துல நிக்கச் சொல்லிட்டு, என் எதிர்ல, நின்னு ஃபோகஸ் பண்ணிப் பார்த்தாரு, அப்புறம் அப்படி, இப்படின்னு ஃபோகஸ் பண்ணிப் பார்த்தாரு, கடைசில, குத்த வச்சுக்கிட்டு ஒரு வழியா என்னைய புகைப்படம் எடுத்தாரு. நான் கூட, இவரு, இந்த இடத்துக்குள்ள வந்தவுடனே, தன்னை ஒரு ஹாலிவுட் காமிரா மேன்னு நினைச்சுக்கிட்டாரு போலன்னு நினைச்சுக்கிட்டேன். அந்த புகைப்படத்தை பார்த்ததுக்கு அப்புறம் தான் இவர், உண்மைலேயே, அப்படி  நினைச்சிருந்தாலும் தப்பில்லைன்னு தோணுச்சு. இது தான் அந்த  புகைப்படம்.

“SPECIAL EFFECTS STAGE” அப்படிங்கிற ஒரு இடத்துல, ஹாலிவுட் படங்கள்ல சில காட்சிகளை எப்படியெல்லாம் எடுத்திருக்காங்கன்னு காமிச்சாங்க. படத்துல நாம பார்த்து ஆச்சிரியப்பட்டு பார்த்த சில காட்சிகள், இங்க அதை எப்படி எடுத்தாங்கன்னு காமிக்கும்போது, ச்சை!! இப்படிதான் எடுத்தாங்களான்னு தோணும். அந்த அளவுக்கு தொழில் நுட்பம் முன்னேறியிருக்கு.


அப்புறம் ஒரு மணிநேரம் train மாதிரி உள்ள வண்டில போயி உள்ளுக்குள்ள சுத்திப்பார்த்தோம். நிறைய தெருக்கள்,வீடுகள்ன்னு எல்லா செட்டிங்ஸ்சையும் பார்த்தோம்.





அதற்கப்புறம்,SHREK” திரைப்படத்தை “4D”யில் பார்த்தோம். அந்த அனுபவமும் ரொம்ப நல்லா இருந்துச்சு. அமெரிக்காவை சுற்றிப் பார்க்க போறவுங்க, கண்டிப்பா இந்த இடத்துக்கு போயே ஆகணும். அந்த அளவுக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு.


என்னால ரொம்ப நேரம் அங்க இருக்க முடியலை, ஏன்னா அன்றைக்கு இரவு தான் நான், அமெரிக்காவிலிருந்து திரும்பி சிட்னி வந்தாகனும். நான் தங்கியிருந்த ஹோட்டல்லுக்கு ஏர்போர்ட் ஷட்டில் வேன் 6.30க்கு வரும். அதற்குள்ளே, நான் திரும்பி ஹோட்டல்லுக்கு போகணும். அதனால 4.30 மணிக்கு, நான் “HOLLYWOOD”லேருந்து கிளம்பி, ஒரு டாக்ஸி பிடித்து,Union Station”க்கு வந்து,  அங்கேருந்து ஒரு train எடுத்து நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு 6.15க்கு வந்து சேர்ந்தேன். சொல்லி வச்ச மாதிரி, சரியா 6.30க்கு அந்த ஏர்போர்ட் ஷட்டில் வேன் வந்தது. நானும் அதில ஏறி, லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலயத்துக்கு வந்து, அங்கேருந்து சிட்னி போற விமானத்துல ஏறி, ஜூன் 15ஆம் தேதி காலை சிட்னி வந்து சேர்ந்தேன். அன்று தான், எங்கள் இரண்டாவது மகாராணி இந்த பூவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் ஆன திருநாள். அதனால தான் நானும், இன்னும் ஓரிரெண்டு நாள் அமெரிக்காவில் இருக்காமல் திரும்பி வந்தேன்.

முற்றும்


Saturday, September 29, 2012

அமெரிக்காவில் அடியேன் – 9

பகுதி-8

ஒரு வழியா, நான் மதியம் அந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன். பார்த்தா, நண்பரும் அவர் மனைவியும், அவரோட இன்னொரு நண்பரோட வெளியில போயிட்டாங்க. சரி, நம்மளோட கை வந்த கலையை திருப்பியும் ஆரம்பிப்போம்னு, வரவேற்பறைல இருந்த அம்மா கிட்ட போயி, இங்க ஷாப்பிங் பண்றதுக்கு எப்படி போலாம்னு கேட்டேன். (நானும் ஒவ்வொரு ஊருலேயும் பொழுது போறதுக்காக ஷாப்பிங் பண்றேங்கிற பேர்ல பஸ்ல ஊரை சுத்துறதே வேலையாப் போச்சு). வரவேற்பறைல இருந்த அம்மா, ரொம்பவே நல்ல அம்மாவா இருந்தாங்க. நீங்க எந்த மாதிரி ஷாப்பிங் பண்ணணும்னு முதல்ல கேட்டாங்க. நானும், இந்த மாதிரி, இந்த மாதிரி, இது வாங்கணும், அப்புறம், அந்த மாதிரி அந்த மாதிரி அது வாங்கணும்னு, என்னமோ எல்லாம் வாங்கப் போற மாதிரி பீலா விட்டேன். உடனே, அந்த அம்மா பக்கத்திலிருந்த ஒரு மேப் எடுத்து, நாம நடுவுல இருக்கோம். இடது பக்கமா பஸ்ல போனோம்னா “wall mart” ஷாப்பிங் கடை வரும். அங்க இது ஒண்ணு தான் இருக்கு. அதுவே வலது பக்கம் பஸ் எடுத்து போனோம்னா, ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும், அங்க நிறைய கடைங்க இருக்கு, உங்களுக்கு பிடிச்சதை நீங்க அள்ளிக்கிட்டு வரலாம்ன்னு சொன்னாங்க (அவுங்க நினைச்சுக்கிட்டாங்க, நான் என்னமோ கடையையே சுருட்டிக்கிட்டு வரப்போறேன்னு). எந்தப் பக்கம் போனாலும் நீங்க ரெண்டு பஸ் மாறனும்ன்னு சொன்னாங்க. எந்த எந்த ஸ்டாப்ல இறங்கி பஸ் மாறனும்னு வேற என் மண்டைக்கு புரியுற மாதிரி சொன்னாங்க. அவுங்களுக்கு ஒரு பெரிய கும்புடு போட்டு, அந்த மேப்பையும் வாங்கிக்கிட்டு அந்த அறைய விட்டு வெளியில வந்து முதல்ல எந்தப் பக்கம் போறதுன்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன். நமக்கு தான் சாமானியத்துல ஒரு முடிவும் எடுக்க வராதே. சரி, காசைப் போட்டு பாக்கவேண்டியதுதான்னு காசைப் போட்டு பார்த்ததுல ஷாப்பிங் கம்ப்ளெக்ஸ்க்கு போகலாம்னு வந்துச்சு. நானும் முத பஸ்ஸை எடுத்து, மேப்பை பார்த்துகிட்டே, ரெண்டாவது பஸ் மாறுவதற்காக,சரியான  ஸ்டாப்பிங்ல இறங்கி, ரெண்டாவது பஸ்ல ஏறினேன். உடனே எனக்குள்ள இருந்த முன் ஜாக்கிரதை முத்தன்னா  முழிச்சுக்கிட்டான். ஏற்கனவே ஒரு தடவை அடிப்பட்டதுனால, இந்த தடவை ஒழுங்கா அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல இறங்கணும்னு, அந்த டிரைவர் அண்ணாத்தைக்கிட்ட சொல்லி, அவர் பக்கத்துலேயே நின்னேன். உடனே அவருக்கு வந்ததே கோபம், முதல்ல என்னைய உள்ள போயி உக்காரச் சொன்னாரு. நான் அவர் பக்கத்துலே நிக்கக்கூடாதாம் (என்னமோ அவரை மடக்கி, பஸ்ஸை கடத்திக்கிட்டு போயிருவேனோன்னு அவருக்கு பயம் போல). அப்புறம் அந்த ஸ்டாப்பிங் வந்தவுடனே, என்னைய கூப்பிட்டு இறங்க சொன்னாரு. பஸ்ஸை விட்டு இறங்கி பார்த்தா, ஒரு பெரிய ஸ்தூபில கடைங்க பேரா எழுதி இருந்துச்சு. 


ஆனா, இந்த ஷாப்பிங் மாலும் வித்தியாசமா இருந்துச்சு, என்னன்னா, வானமே இந்த ஷாப்பிங் மாலுக்கு கூரையா இருந்தது தான்.



நானும், அப்படியே எல்லாக் கடைக்குள்ளேயும் ஏறி, இறங்கி வேடிக்கை!! பார்த்து, அப்புறம் பேருக்கு, ஏதோ ஒரு சிலதை மட்டும் வாங்கிக்கிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன், அப்புறம்  வால் மார்ட்டுக்கு” போலாம்னு முடிவெடுத்து, மேப்பை பார்த்து, பஸ்ல ஏறினேன். மறுபடியும் அடுத்த பஸ்ஸுக்காக எங்க இறங்கணும்னு மேப்பையும் ரோடையும் மாறி, மாறி பார்த்துக்கிட்டே வந்தேன். எனக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தவரு, என்னையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்திருக்காரு. அது எனக்கு தெரியலை.

அவர் என்ன பண்ணினாருங்கிறதை அப்புறம் சொல்றேன். 
இதுவே கடைசி பாகமா இருக்கும்னு  நினைச்சேன். ஆனா, அடுத்த  பாகம் தான்  இந்த தொடரோட கடைசி பாகமா இருக்கும்னு சொல்லிக் கொள்கிறேன். (10 பாகமாக இருக்கட்டுமேன்னு தான், வேற ஒண்ணும் இல்லை)
                                                    பகுதி-10

Saturday, September 22, 2012

அமெரிக்காவில் அடியேன் – 8

பகுதி-7

தோசா உணவகத்துல போயி உட்கார்ந்தோம். அப்பத்தான் எங்க பக்கத்து டேபிள்ல உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார குடும்பத்துக்கு தோசையை கொண்டாந்து வச்சுட்டு அந்த சர்வர் போயிட்டாரு. அந்த சர்வருக்கு பின்னாடியே வந்த இன்னொருத்தர் அந்த தோசையை எப்படி முள்கரண்டியும், தேக்கரண்டியையும் வச்சு சாப்பிடுறதுன்னு சொல்லிக்கொடுக்க  ஆரம்பிச்சார். அதாவது, முள்கரண்டியால பிச்ச தோசையை அந்த சாம்பார் கிண்ணத்துல போட்டு, அப்புறம் தேக்கரண்டியால அதை எடுத்து சாப்பிடணும்னு சொல்லிக் கொடுத்துட்டு அவர் போயிட்டாரு. நான் கூட அந்த வெள்ளைக்காரங்களுக்கு கையால எப்படி தோசையை பிச்சு சாப்பிடணும்னு சொல்லிக்கொடுப்பாங்களோண்ணு நினைச்சேன். அடப்பாவிகளா! எதை எதை தான் தேக்கரண்டி, முள்கரண்டியெல்லாம் வச்சு சாப்பிடறதுன்னு இல்லையா. என்னதான் தேக்கரண்டியால எடுத்து சாப்பிட்டாலும், சாம்பாரை எடுத்து தோசை மேல ஊத்தி, அதை நம்ம கையால பிச்சு சாப்பிடுற மாதிரி வருமா என்ன! இதெல்லாம் அந்த வெள்ளக்காரங்களுக்கு எங்க புரியப் போகுது. நாங்களும் சாப்பிட்டு முடிச்சு, அறைக்கு திரும்பின பிறகு, நண்பரும் அவர் மனைவியும் வேற ஊருக்கு போறதுக்கு கிளம்பி போனாங்க. மறு நாள் காலைல நான் அறையை காலி பண்ணிக்கிட்டு, மறுபடியும் ஒரு உள்ளூர் விமானத்துல லாஸ் ஏஞ்சல்ஸ் போனேன். சிட்னிலேருந்து போறதுக்கு முன்னாடி, என்னோட இன்னொரு நண்பர் நீங்க  லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஏன் தனியா தங்குறீங்க, நாங்க தங்குற அறையிலே தங்கிக்கலாம்னு சொன்னதுனால, நானும் அங்க தங்கிக்கலாம்னு முடிவெடுத்தேன்.  லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே போயி, எப்படி அந்த ஹோட்டலுக்கு போறதுன்னு தெரியலை. ஏன்னா, அந்த ஹோட்டல் இருக்கிற இடமோ டிஸ்னி லாண்டுக்கு பக்கத்துல இருக்கு. நல்ல காலம் அந்த விமான நிலையத்துக்குள்ள ஒரு தகவல் மையம் இருந்துச்சு. அதுல, தன்னார்வலர்கள் தான் அங்க இருந்து உதவி கேக்குறவுங்களுக்கு, உதவுறாங்க. நான் அப்ப போனப்போ ஒரு வயசான தாத்தா தான் இருந்தாரு. அவரு என்னைய பார்த்து “வாங்கோ, வாங்கோன்னு” வாய் முழுக்க கூப்பிட்டு, எனக்கு எப்படி அந்த ஹோட்டலுக்கு போறதுன்னு சொன்னாரு. நானும் அவர் சொன்னபடி வெளியில வந்து டிஸ்னி லாண்ட் போற ஷட்டில் வேன் வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல அந்த வண்டி வந்துச்சு. நானும் அதுல ஏறி உட்கார்ந்தேன். என்னோட சேர்த்து 3 பேரு அந்த வண்டிக்குள்ள உட்கார்ந்திருந்தோம். அந்த வண்டியும் புறப்பட்டுச்சு. நானும் பட்டிக்காட்டான் வேலையை செய்ய ஆரம்பிச்சிட்டேன் (ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்து வாயை பிளந்துக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தேன்). ரொம்ப நேரமா அந்த வண்டி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாதிரி தெரியலை. நானும், இந்த விமான நிலையம் ரொம்ப பெருசு போல, அதான் இதை விட்டு வெளியே வர ரொம்ப நேரமாவதுன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் தான் என் மரமண்டைக்கு உரைச்சுது, இந்த வண்டிக்காரன் விமான நிலையத்தையே சுத்திக்கிட்டு இருக்கான்னு. அந்த வண்டிக்குள்ள நாங்க 3 பேரு தான் இருந்கோம். அதனால இன்னும் 10 பேரையாவது வண்டிக்குள்ள ஏத்திடலாம்னு நினைச்சிருப்பான் போல. அதனால நவக்கிரகத்தை சுத்துற மாதிரி  அந்த விமான நிலையத்தையே சுத்திக்கிட்டு இருந்தான். அடப்பாவிகளா, சென்னைல தான், இந்த ஷேர் ஆட்டோக்காரனுங்க பண்ற தொல்லை பெருந் தொல்லையா இருக்கும்னு பார்த்தா, இங்க கூடவா இப்படின்னு கோபம் கோபமா வந்துச்சு. அப்புறம் சரி, ஊர் எந்த ஊரா இருந்தா என்ன, எல்லா மனுசனுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குதே, பாவம் இந்த டிரைவரும் என்ன பண்ணுவான்னு நினைச்சு, உடனே மனசு  அவன் மேல இரக்கப் பட ஆரம்பிச்சுது. ஒரு வழியா எப்படியோ டிஸ்னி லாண்ட்ல இருக்கிற ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன்.
அன்னைக்கு, தனியா மறுபடியும் பஸ் எடுத்து, அந்த ஊரை எப்படி சுத்தினேன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                  பகுதி-9

Tuesday, September 11, 2012

அமெரிக்காவில் அடியேன் – 7

 
என்னடா ஒரு தமிழ் நடிகையின் உணவகத்துல போயி சாப்பிட்டாங்களான்னு ரொம்பவும் யோசிக்காதீங்க. அந்த உணவகத்தோட பேரு “சினேகா உணவகம்”. இதுக்குத்தான்(!) போன பதிவுல ஒரு சின்ன பில்டப். ஆனா இந்த உணவகத்துக்கும், நடிகை சினேகாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமான்னா, அது எனக்கு தெரியாது. சாப்பாடும் சும்மா சொல்லக்கூடாது, சினேகா மாதிரியே ரொம்ப நல்லா இருந்துச்சு. மறு நாள் காலையில  ஒன்பது மணிக்கு அறையை காலி செஞ்சுட்டு, ஒரு வாடகை வண்டில, நாங்க மூணு பேரும் சான்பிரான்சிஸ்கோ போனோம். நல்ல காலம் அங்க முன்பதிவு செஞ்சு வச்சிருந்த ஹோட்டல்லேயும் உடனே ஒரு அறையை கொடுத்துட்டாங்க. இல்லன்னா, எல்லாப் பெட்டி, மூட்டையெல்லாம் வரவேற்பறையிலேயே வச்சிருந்திருக்கணும். அப்புறம் அங்கேருந்து மூணு பஸ் மாறி, “தங்க கதவு பாலம்” அதாங்க “Golden Gate Bridge”க்கு போனோம். 1935ஆம் ஆண்டு, திறந்த பாலமாம் அது.

 எல்லா ஊருலேயும் ஒரு பாலத்தை கட்டி, அதுக்கு ஒரு பேரை வச்சு பிரபுலமாக்கிடுறாங்க. நம்ம ஊருலேயும் பாம்பன் பாலம்னு ஒண்ணு இருக்குதுன்னு நாம சொன்னாத்தான் மத்தவுங்களுக்குத் தெரியுது. இத்தனைக்கும் பாம்பன் பாலம் 1914லேயே கட்டப்பட்ட பாலமாக்கும். இந்தியாவோட முதல் கடல் பாலம் அது தான். இப்படி பாம்பன் பாலத்துக்கு இன்னும் நிறைய சிறப்புகள் இருந்தும், நம்ம ஆளுங்க அதை பிரபுலப்படுத்தாம விட்டுட்டாங்க. எங்களுக்கு நேரம் இல்லாததுனால, அந்த பாலத்தை கொஞ்ச நேரம் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு, அங்கேருந்து ஒரு வாடகை வண்டியை பிடிச்சு “fisherman wharf Pier 33”க்கு வந்தோம். அங்கேயிருந்து கப்பல்ல 20 நிமிஷம் பிரயாணம் செஞ்சு “Alcatraz islandல” இருக்கிற ஒரு சிறைச்சாலைக்கு போனோம்.

நமக்கு எல்லாம் சிறைச்சாலைக்குள்ள போற கொடுப்பினையே கிடைக்காது, ஏன்னா, நாம தான் ரொம்ப நல்லவங்களாச்சே(!). அந்த அல்ப ஆசையை போக்கிக்கிறதுக்காக, வெள்ளக்காரங்க, ஒரு சிறைச்சாலையையே சுற்றுலாத்தலமா மாத்தியிருக்காங்க. நகரத்தை விட்டு, ஒரு நட்ட நடுக் கடல்ல தனித் தீவா, அந்த சிறைச்சாலையை அமைச்சிருக்காங்க. நானும் அந்த சிறைச்சாலைக்குள்ள வலது காலை எடுத்து வச்சு நடக்க ஆரம்பிச்சேன். “cell house”குள்ள போனா!, நம்ம தமிழ் சினிமாவில காட்டுற மாதிரி ஒரு பெரிய வராந்தாவோட ரெண்டு பக்கமும், கைதிங்க தங்குற அறை இருக்கு. ஒவ்வொரு அறைக்குள்ளேயும், ஒரு சின்ன கட்டில் இருக்கு, அந்த கட்டிலுக்கு அப்புறம் காலைக் கடன்கள் போறதுக்கு வசதி பண்ணி வச்சிருக்காங்க. தமிழ் சினிமாலையாவது, கைதிங்க அறையை கொஞ்சம் பெருசா காட்டுவாங்க. ஆனா, இங்க அந்த அறைக்குள்ள, ஒரு ஆள் மட்டும் தான் உள்ள இருக்க முடியும். என்னடா, இவன் எப்பப் பார்த்தாலும் தமிழ் சினேமாவையே உதாரணமா சொல்றானேன்னு நினைக்காதீங்க, ஏன்னா, எனக்கு தான் உண்மையான சிறைக்கு போன அனுபவம் இல்லையே, அதனால சினிமாவையே உதாரணம் காட்ட வேண்டியிருக்குது.
நாமளும் வேணுன்னா, அந்த அறைக்குள்ள போயி நின்னு புகைப்படம் எடுத்துக்கலாம். நண்பர் ரொம்ப பெருந்தன்மையா(?), நீங்க உள்ள போயி, கம்பிக்கு பின்னாடி நில்லுங்க, என்னோட “photography” திறமை எல்லாம் பயன்படுத்தி, உங்களை தத்ரூபமா எடுக்கிறேன்னு சொன்னாரு. ஆஹா, “இவரு போதைக்கு நாம ஊருகாவான்னு” நினைச்சுக்கிட்டு, ஐயா! சாமி, அது எல்லாம் ஒண்ணும் வேணாம்னு நழுவிட்டேன். ஆனாலும், சில பேரு அந்த அறைக்குள்ள போயி நின்னு போஸ் கொடுத்தாங்க பாருங்க, உண்மையான கைதியே தோத்துருவான் போங்க. அப்புறம் ஒரு வழியா அந்த சிறைச்சாலை சுற்றுலாவை முடிச்சு, வந்த கப்பல்லேயே திரும்பி போனோம். சான்ப்ரான்சிஸ்கோவில ஒரு “குறுக்குத் தெரு” ரொம்பவும் புகழ் பெற்ற தெருவாம். அதனால கப்பல விட்டு இறங்கி நேரா, அந்த குறுக்குத்தெருவுக்கு போகலாம்னு முடிவு பண்ணி, மறுபடியும் ஒரு வாடகை வண்டில அந்த தெருவுக்கு போனோம். இந்த குறுக்குத்தெருவை, ஆங்கிலத்துல “crooked street”ன்னு சொல்றாங்க. அதாவது இந்த தெரு தான் உலகத்துலேயே மிகவும் குறுகலான தெருவாம். இந்த தெரு எப்படி இருக்குதுன்னு பார்த்தீங்கன்னா, ரொம்ப குறுகலான தெருவுக்குள்ள, ரெண்டு பக்கமும் வீடு, அதை ஒட்டி ரெண்டு பக்கமும் நடக்கறதுக்கு படிகள், அந்த நடைபாதை படியை ஒட்டி பூங்கா மாதிரி பூச்செடிகளை நட்டுவச்சிருக்காங்க. அதுக்கப்புறம் வண்டிகள் போறதுக்கு சாலை.



 
அந்த தெருவைப் பார்த்தீங்கன்னா, “ஊட்டி கொண்டை ஊசி வளைவுகள்” மாதிரி இருக்கும். இந்த தெரு 400மீட்டர் தான் நீளம் கொண்டது. ஆனா வண்டிங்களுக்கு ஒரு வழிப் பாதை தான். அதாவது மேலேருந்து கீழே இறங்க தான் முடியுமே தவிர, கீழேருந்து மேல ஏற முடியாது. அதுவும் 8கிலோமீட்டர் வேகத்துல தான் வண்டியை ஓட்டணும்,அதுவும் ரொம்ப ரொம்ப குறுகலான எட்டு வளைவுகளை கடக்கணும். இப்படி இருக்கிற ஒரு குறுகலான தெருல தான், வீட்டோட விலை ரொம்ப அதிகமாக இருக்குமாம்.(என்ன கொடுமை சார் இது!!!)    400 மீட்டர் துரத்துக்குள்ளேயே, ஏகப்பட்ட புகைப்படத்தை எடுத்துக்கிட்டு, கையில இருக்கிற வழிக்காட்டியை வச்சு ஹோட்டலுக்கு நடந்து போயிடலாம்னு ஒரு தப்பான முடிவு எடுத்துட்டோம். நடந்தோம், நடந்தோம், நடந்தோம், நடந்துக்கிட்டேயிருந்தோம், ஆனா ஹோட்டல் தான் வந்த பாடில்லை. எப்படியோ ஒரு முக்கால் மணி நேரம் நடந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். வரவேற்பறைல இருக்கிறவுங்க கிட்ட, பக்கத்துல எங்க இந்திய உணவகம் இருக்கும்னு கேட்டோம். அதுக்கு அவுங்க கொஞ்ச தூரத்துல, தோசா உணவகம்” ஒண்ணு இருக்கு, அங்க தோசை சாப்பிடறதுக்கு சொல்லிக் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. என்னாது! தோசை சாப்பிடறதுக்கு சொல்லிக்கொடுப்பாங்களா!!! எங்களுக்கு ஒரே ஆச்சிரியமா போச்சு. அங்க அப்படி எப்படிதான் சொல்லிக் கொடுக்கிறாங்கன்னு போயி பார்போமேன்னு, அந்த உணவகத்துகு போனோம். அவுங்க எப்படி சொல்லிக் கொடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.  
                                                                                                                 பகுதி-8  






Wednesday, September 5, 2012

அமெரிக்காவில் அடியேன் – 6

பகுதி-5

நான் பயந்த மாதிரியே, அங்க மாநாட்டுக்கு வந்தவுங்க எல்லோரும் போயிட்டாங்க. என்னைய மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் இருப்பாங்கன்னு மாநாடு நடத்துறவங்களுக்கும் தெரியும் போல, அதனால, ஊரை சுத்திட்டு லேட்டா வருகிறவர்களையும் கூப்பிட்டுகிட்டு போறதுக்காக இரண்டு பேர் காத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களும் என்னைய கருத்தருங்கு நடக்கிற இடத்துக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. அது ஒரு இந்திய உணவகம். அங்க போனவுடனே, நல்லா சூடா ஒரு காபியை குடிச்சேன். அப்புறம் முதல் நாள் நிகழ்ச்சியா, “வெளி நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள் இருக்கிறது, அதை எப்படி சமாளிப்பது” என்பதை பற்றியெல்லாம் பேசினோம். ஒரு அருமையான கலந்துரையாடலா அமைஞ்சது. செவிக்கு ஒரு நல்ல உணவாகவும் அது அமைஞ்சதுல எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு. செவிக்கு நல்ல உணவு கிடைச்ச மாதிரி, வயிற்றுக்கும் நல்ல உணவு கிடக்குமான்னு ஒரு சந்தேகம். பொதுவா, வெளி நாடுகள்ள இருக்கிற பெரும்பாலான உணவகங்கள் வடக்கத்திய உணவகமா தான் இருக்கும். நானும் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் தென்னிந்திய உணவகங்கள் இருக்கும். இந்த வடக்குக்கு வேலையே, நம்ம தமிழை போட்டு அமுக்குறது தான். சாப்பாட்டுலேயும் சரி, சினிமாலேயும் சரி, வெளிநாடுகளில் வடக்கோட ஆதிக்கம் தான் அதிகமா இருக்கும். அதனால தான் எனக்கு அப்படி ஒரு சந்தேகம். சரி, இங்கேயும் இந்த “naanu”, லொட்டு லொசுக்குன்னு தான் இருக்கபோதுன்னு நினைச்சேன். ஆனா, அது ஒரு பக்கா தென்னிந்திய உணவகம். வாயிக்கு நல்லா ருசியா, நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு, அங்கேருந்து கிளம்பி எங்க ஹோட்டலுக்கு வந்தோம். மறு நாள் என் வாழ்கையில் ஒரு மறக்க முடியாத நாள் (பின்ன, முதல் முதலா ஒரு சர்வதேச கருத்தரங்கில் பேசுன நாளாச்சே!). அன்னைக்கு காலைல எந்திரிச்சு, மனசுக்குள்ளேயே சாமி எல்லாம் கும்பிட்டுக்கிட்டு, வீட்டு அம்மணி சொன்ன மாதிரியே அந்த புது சட்டையும் பேண்ட்டையும் போட்டுக்கிட்டு, எங்கள் தமிழ் பள்ளியின் முதல்வரோடு ஹோட்டலுக்கு வெளியே வந்தேன். முதல் நாளே அந்த மாநாடு நடக்கிற இடம் எங்கேன்னு போய்ப் பார்த்துட்டு வந்ததுனால, அந்த வழியாகவே போகலாம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல தான் எங்க ஹோட்டல்லேருந்து இரண்டு பேர் வேக வேகமா எங்களை தாண்டி போனாங்க. சரி, இவுங்க போற வேகத்தைப் பார்த்தா, ஏதோ குறுக்கு வழி இருக்கும் போலன்னு நினைச்சுக்கிட்டு நூல் பிடிச்ச மாதிரி, நாங்களும் அவுங்களை தொடர்ந்துக்கிட்டே போனோம். நாங்க தங்கி இருக்கிற ஹோட்டலை ஒட்டி சைடுல ,ஒரு ரோடு போகும் அந்த ரோட்டுலேயே ஒரு ஐந்து நிமிஷம் நடந்து எதிர் பக்கம் போனா அந்த மாநாடு நடக்கிற “convention centre” வரும். ஆனா எங்களுக்கு முன்னாடி நடந்தவுங்க, அந்த மாதிரி போகாம, பக்கத்துல இருக்கிற “hyatt” ஹோட்டலுக்கு பின் பக்கமா போயி, அதோட கார் பார்க்கிங்கை ஒரு சுத்து சுத்தி, அந்த பார்க்கிங்கோட படிக்கட்டெல்லாம் ஏறி இறங்கி (ஏழு கடல், ஏழு மலையை தாண்டி!!!) அந்த convention centreக்கு நேர் வழியா வராம எப்படியோ உள்ள போனாங்க. எங்களுக்கோ, இவுங்க பின்னாடி வராம ஒழுங்கா தெரிஞ்ச வழியில வந்திருந்தா கூட, இவ்வளவு சுத்து சுத்தியிருக்க வேண்டாமேன்னு தோனிச்சு (இதுக்குத்தான் சொந்த புத்தியை உபயோகப் படுத்தனுங்கிறது!!). சரி, இங்க பக்கத்துல எந்த கோவிலும் இல்லையா, அதனால அந்த “hyattயை சுத்துனதை, பிள்ளையாரப்பா, உன்னைய சுத்தினதா நினைச்சு, எங்க புண்ணியக் கணக்குல சேர்த்துக்கோன்னு வேண்டிக்க வேண்டியதாப்போச்சு. அங்க போனதுக்கு அப்புறம் ஒரு இரண்டு மணி நேரம், அங்க படிக்கிற குழந்தைங்க வித்தியாசமா சிந்திச்சு, ரொம்ப அருமையா கலை நிகழ்ச்சிகள் எல்லாம் பண்ணினாங்க. மதிய உணவுக்கு பிறகு எங்களோட ஆய்வரங்கம் இருந்துச்சு. நானும் உள்ளுக்குள்ள இருக்கிற பயத்தை எல்லாம் வெளியே காட்டாம, ஒரு வழியா என்னோட ஆய்வுக் கட்டுரையை படிச்சு முடிச்சேன்.

 மறு நாளும் எங்களுக்கு தேவைப்படுகிற ஆய்வரங்கத்துல எல்லாம் போயி உட்கார்ந்து, நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு வந்தோம். இரண்டு நாள் மாநாடும் முடிஞ்சது. அன்னைக்கு இரவு உணவுக்கு, நானும் சிட்னிலேருந்து வந்த இன்னொரு நண்பரும்(எங்கள் தமிழ் பள்ளியின் முன்னாள் முதல்வர்),அவர் துணைவியாரும் ஒரு தமிழ் நடிகையின் உணவகத்துல போயி சாப்பிட்டோம். அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                 பகுதி-7
 

Monday, August 20, 2012

அமெரிக்காவில் அடியேன் – 5

 
நானும் ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும், அது தான் கடைசி ஸ்டாப்பிங்கா இருக்கும், நாம இறங்கிக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். திடீர்னு பார்த்தா மறுபடியும் மெயின் ரோட் வந்துடுச்சு.  வண்டி வந்த வழியா திரும்பி போக ஆரம்பிச்சது. முதல்ல எனக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் தான் என் மரமண்டைக்கு ஒரச்சது, நாம வந்த வழியா திரும்பி போறோம்னு. “McCarthy Ranch” ஷாப்பிங் சென்டர்னு பேரு தானே ஒழியே, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எல்லாம் இல்லை. நல்ல காலம் “ஒரு நாள் பயணச் சீட்டு” எடுத்ததுனால டிக்கெட்டைப் பத்தி கவலைப்படலை. ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் கிட்ட வந்து வண்டி நின்னுச்சு. சூப்பர் மார்கெட்டுக்குள்ள போயி பார்க்கலாம்னு நினைச்சு அங்க இறங்கி அந்த சூப்பர் மார்கெட்டுக்குள்ள போனேன். அது ஒரு சீன தேசத்து சூப்பர் மார்க்கெட். ஒண்ணும் வேலைக்கு ஆவாதுன்னு உடனே வெளிய வந்தேன். பக்கத்துலேயே டெலிஃபோன் கார்டு எல்லாம் வித்துக்கிட்டு இருந்தாங்க. அந்த கடைக்கார அம்மாக்கிட்ட, ஆஸ்திரேலியாவுக்கு பேசுறதுக்கு எந்த கார்டு நல்ல கார்டுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க ஒரு கார்டை காமிச்சு ரொம்ப புகழ்ந்து பேச ஆரம்பிச்சுட்டாங்க. போதாக்குறைக்கு, ஐந்து டாலர் கார்டை நாலு டாலருக்கு தரேன்னாங்க. உடனே, எனக்குள்ள இருக்கிற முன் ஜாக்கிரதை முத்தன்னா முழிச்சுக்கிட்டான். ஆஹா, இந்த அம்மா விக்காத ஒரு கார்டை நம்ம தலைல கட்டப் பாற்குறாங்கன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனாலும் துணிஞ்சு வேற ஒரு கார்டை எடுக்க மனசு வரலை. ஏதாவது ஒரு கார்டை எடுத்துடலாம், அந்த கார்டு சரியா வேலை செய்யலைன்னா தான் பிரச்சனையே, நான் தங்கி இருக்கிற ஹோட்டலுக்கு பக்கத்துல ஒரு கடையும் கிடையாது. அதனால ரொம்பவும் யோசிச்சு அவுங்க காமிச்ச கார்டுலேயே இரண்டு டாலருக்கு உள்ள ஒரு கார்டை வாங்கிட்டு, அவுங்ககிட்டேயே அந்த “McCarthy Ranch”க்கு போற பஸ் எங்க நிக்கும்னு கேட்டு, அங்க போயி நின்னேன். கால் மணி நேரத்துல அந்த பஸ் வந்துச்சு. வண்டிக்குள்ள யாருமே இல்லை. வண்டியை பஞ்சாபி அண்ணாத்தை தான் ஓட்டிக்கிட்டு வந்தாரு. இந்த தடவை ஒழுங்கா இறங்கணும்னு டிரைவர் கிட்டே, கொஞ்சம் வால் மார்ட் கிட்ட இறக்கி விடுங்கன்னு சொன்னேன். அவரும் அந்த “McCarthy Ranch” வளைவுக்குள்ள போனவுடனே, ஒரு நிறுத்தத்துல இறங்கிக்குங்கன்னு சொன்னாரு. வால் மார்ட் அதுக்கு பக்கத்துலேயே தான் இருக்குது. இதை முத தடவை வரும்போது நான் கவனிக்காம விட்டுட்டேன். அந்தக் கடைக்குள்ள போனா, சிட்னில இருக்கிற K-mart, target மாதிரிதான் தான் அதுவும் இருந்துச்சு. ஆனா விலை எல்லாம் ரொம்ப கம்மியா இருந்துச்சு. நானும் முதல்ல வீட்டு மகாரணிகளுக்கு துணிமணி எடுக்கலாம்னு பார்த்தா, எதை எடுக்கிறது, எதை விடுறதுன்னு தெரியலை. அந்த அளவுக்கு அங்க எல்லாம் வெறும் நாலு டாலர், ஐந்து டாலர்னு இருந்துச்சு. மிஞ்சிப் போனா, பத்து, பதினைந்து டாலர்குள்ள தான் எல்லாம் இருக்குது. ஆனா என்ன! எல்லாமே வீட்டுக்குள்ள போட்டுக்குற மாதிரி தான் இருந்துச்சே தவிர வெளியே போறதுக்கு போட்டுக்குறது மாதிரி இல்லை (அப்புறம் கொடுக்கிற நாலு,ஐந்து டாலருக்கு partywear துனியா கிடைக்கும்). எப்படியோ  ஒரு  வழியா தெளிஞ்சு, ரெண்டுப் பேருக்கும் குத்து மதிப்பா அவுங்க அளவுக்கு நாலைந்து துணிமணிகளை வாங்கினேன். அப்புறம் எனக்கு ஏதாவது ஒரு டி-ஷர்ட் வாங்கலாம்னு பார்த்தா, எல்லா டி-ஷர்ட்டும் எனக்கு சின்னதா தான் இருக்கு(!),அப்படி சொல்லனும்னு தான் ஆசை. ஆனா அதுக்கு நேர் மாறா தான் இருந்துச்சு. அதாவது அங்க இருக்கிற ஒரு சின்ன அளவு டி-ஷர்ட் கூட எனக்கு பெருசாதான் இருந்துச்சு. அப்படியும் ஒரு டி-ஷர்ட்டை போட்டுப் பார்த்தேன். என் ரெண்டு கையும் அந்த டி-ஷர்ட்குள்ள மறைஞ்சு போச்சு.கையை ஆட்டினா, யானையோட தும்பிக்கை ஆடுற மாதிரி, கை இல்லாம வெறும் டி-ஷர்ட் மட்டும் ஆடுச்சு. சரி, இது நமக்கு ஒத்து வராதுன்னு, ஒண்ணும் வாங்கிக்கலை. வீட்டு அம்மணிக்கு ஏதாவது எடுக்கலாம்னு பார்த்தா, அவுங்க போட்டுக்க கூடிய துணிமணி எல்லாம், அண்டா அளவுக்கு பெருசா இருக்குது. சரி, நம்ம பாடு ஏதாவது வாங்கிக்கிட்டு போயி, அது அவுங்களுக்கு தொள தொள இருந்தா, உடனே கல்யாணம் ஆகி, இத்தனை வருஷம் ஆச்சு, ஒழுங்கா ஒரு துணிமணி வாங்கிக்கிட்டுவர துப்பில்லைன்னு சொல்லி, உபதேசம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, இது நமக்கு தேவையா(!), அதனால அவுங்களுக்கு அப்புறம் வேற ஏதாவது வாங்கிக்கிட்டு போலாம்னு முடிவு பண்ணி, கடையை விட்டு வெளியே வந்தேன். மணியோ 2.30 ஆச்சு. மூணு மணிக்கு மாநாடு நடத்துறவுங்க ஹோட்டல்ல ரெடியா இருங்கன்னு சொல்லி இருந்தாங்க. நானும் லேட்டாயிடுச்சேன்னு பயந்துக்கிட்டு திருப்பியும் பஸ் பிடிச்சு, ரெண்டு train மாறி, ஹோட்டலுக்கு வந்தா சரியா 4.00 மணியாச்சு. எல்லாரையும் கருத்தரங்கு நடக்கிற இடத்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பாங்க. நாம எப்படி போகப் போறோம்னு தெரியலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் நடந்ததை அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                              பகுதி-6

Saturday, August 11, 2012

அமெரிக்காவில் அடியேன் – 4

 
மறு நாள் காலைல எந்திரிச்சு என்ன பண்றதுன்னு யோசிச்சேன்(இதை தான் ரூம் போட்டு யோசிக்கிறதன்னு சொல்லுவாங்க போலயிருக்கு). ஏன்னா எனக்கு எப்பவுமே தனியா போயி ஊர் சுத்திப் பார்க்க பிடிக்காது. மதியம் மூன்று மணிக்கு தான் அந்த கல்வி மாநாடு ஆரம்பமாகும். சரி    அதுவரைக்கும் ஷாப்பிங்காவது பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். நான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி எல்லோரும் வால் மார்ட்ன்னு ஒரு கடை இருக்கும். அங்க எல்லா பொருளும் ரொம்ப மலிவா கிடைக்கும், அதனால கண்டிப்பா அங்க போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சாங்க. இந்த தகவலை சொன்னவுங்க என்கிட்ட தனியா சொல்லியிருந்தாலும் பரவாயில்லை, வீட்டு அம்மணியை வச்சுக்கிட்டு வேற சொல்லிட்டாங்களா, அதனால வீட்டு அம்மணி, நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாடி மூச்சுக்கு முன்னூறு தடவை, நீங்க கண்டிப்பா வால் மார்டுக்கு போயிட்டு வாங்கன்னு என் காதுல மந்திரம் ஓதி, மனசுல பதிய வச்சுட்டாங்க. அதனால இன்னைக்கு வால் மார்ட்டுக்கு போயிடணும்னு முடிவு பண்ணி, ஹோட்டல்ல வேலை பார்க்குறவங்ககிட்ட வால் மார்ட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க அந்த கடை “McCarthy Ranch” ஷாப்பிங் சென்டர்ல இருக்குது. இங்கேருந்து நீங்க போகனும்னா, இரண்டு train மாறி, ஒரு பஸ் பிடிச்சு போகனும். உங்களால போக முடியுமான்னு கேட்டாங்க. நானும் ஜப்பான்ல மொழி தெரியாத போதே, இந்த மாதிரி நிறைய இடத்துக்கு போயிருக்கோம், இது வெறும் ஜூஜிப்பின்னு நினைச்சு, போக முடியும்னு சொன்னேன். உடனே அவுங்க ஒரு மேப்பை கையில கொடுத்து, எந்த trainனை எடுக்கனும், எங்க மாறனும், அப்புறம் எந்த பஸ்ஸை எடுக்கனும்னு சொன்னாங்க. நானும் அதே மாதிரி இரண்டு train மாறி, பஸ் எடுத்தேன். நான் போக வேண்டிய இடம் தான் கடைசி நிறுத்தம். அதனால நிம்மதியா நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கீட்டு போனேன். ஆனா சும்மா சொல்லக் கூடாது, இரண்டு டாலருக்கு நல்லாவே ஊரை சுத்திக் காட்டுனாரு அந்த டிரைவர் அண்ணாத்தே. ரொம்ப நேரத்துக்கு அப்புறம் “McCarthy Ranch”ன்னு ஒரு நுழைவு வாயிலுக்குள்ள பஸ் போனுச்சு. நானும் இதுக்குள்ள தான் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கும் போலன்னு நினைச்சு இறங்குறதுக்கு தயாரா இருந்தேன். ஆனா, நான் நினைச்சது ஒண்ணு, அங்க நடந்தது ஒண்ணு. அது என்னன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                           பகுதி-5

Monday, July 16, 2012

அமெரிக்காவில் அடியேன் – 3

நானும் நடந்து போயி விமானத்துக்கிட்ட போனேன். விமானம் இருக்கும்னு பார்த்தா, அங்க ஏதோ ஒரு வேன் மாதிரி சின்னதா ஒண்ணு நின்னுக்கிட்டு இருந்துச்சு. ஓ! இப்படியெல்லாம் கூட விமானம் இருக்கும்மான்னு ஒரே ஆச்சிரியமா போச்சு. இந்த டப்பா விமானத்தை பார்த்தவுடன், விமானத்து மேல இருந்த மதிப்பே போச்சு. அதுக்குள்ள ஏறுனவுடனே, இடது பக்கம் திரும்பி பார்த்தா வண்டிய ஓட்டுற டிரைவர் அண்ணாத்தை கண்ணுக்கு தெரிஞ்சாரு. என்னதான் வண்டி டப்பாவா இருந்தாக்கூட, இப்படி வண்டி ஒட்டுறவரை எல்லாம் பார்க்க முடியுதேன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம். ஆனாலும், விமானத்துக்குள்ள ஒரு வசதியும் இல்லை. பார்க்குறதுக்கு ஒரு வேன் மாதிரி இருந்தாலும்,நம்ம ஊர் வேன்ல இருக்கக்கூடிய வசதி கூட இல்லை. சீட்டை சாச்சுக்க கூட முடியலை. குத்த வச்ச பிள்ளையாராட்டம் உட்கார்ந்துக்கிட்டே போனேன். விமானத்தை எடுத்ததிலிருந்து, இறக்குற வரைக்கும் ஒரே கொர்ருன்னு” சத்தம் வேற. அமெரிக்காவில, உள்ளூர் விமானம் எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல. எப்படியோ ஒரு வழியா “san Jose”  வந்து சேர்ந்தேன். விமானத்தை விட்டு இறங்கினவுடனே சிட்னிலேருந்து வந்த இன்னொரு நண்பரை முதன் முதலா பார்த்தேன். ரெண்டு பேருமா பொட்டி எடுக்கிற இடத்துக்கு வந்தோம். பார்த்தா பொட்டி வந்த மாதிரியே தெரியலை. எனக்கு திருப்பியும் பயம் வந்துடுச்சு. ஆஹா! நம்ம பெட்டியை மாத்தி வேற விமானத்துல போட்டுட்டானுங்க போல இருக்கேன்னு நினைச்சேன். இப்படி ஏதாவது ஆகும்னு தெரிஞ்சு தான் சிட்னிலேருந்து கிளம்பும்போதே இன்சூரன்ஸ்க்கு தேவையான பேப்பர் எல்லாம் எடுத்து கைப்பொட்டில வச்சிருந்தேன். . நண்பர் அதுக்குள்ள அங்கிருந்த தகவல் மையத்துல போய் கேட்டாரு. அவுங்க நீங்க பெட்டி வர்றதுக்குள்ள வந்து பெட்டி எங்கன்னு கேட்டா நாங்க என்ன பண்றதுன்னு திருப்பி கேட்டாங்க. என்னடாது, நம்மலே ஆடி அசைஞ்சு அந்த விமான நிலையத்தை அனு அனுவா பார்த்துகிட்டு இவ்வளவு லேட்டா வரோம், இன்னமுமா பெட்டி வராம இருக்குன்னு ஒரே ஆச்சிரியமா இருந்துச்சு. கடைசில, நான் பயந்த மாதிரி எல்லாம் ஆகாம, என்னோட பெட்டி ரொம்ப சமர்த்தா என்கிட்ட வந்து சேர்ந்துச்சு. அப்புறம் நானும் அந்த நண்பரும் ஒரு டாக்ஸி பிடித்து ஹில்டன் ஹோட்டலுக்கு போனோம். நாங்க போனபோது மணி 11.30 தான் ஆச்சு. Check-in 3 மணிக்கு தான் போட்டிருந்துச்சு. 3 மணி வரைக்கும் ஹோட்டல் வாசல்ல உட்கார்ந்து கூர்கா வேலை தான் பார்க்க போறோம் நினைச்சோம். நல்ல வேளை, எங்களுக்கு எங்க அறையோட சாவியை கொடுத்துட்டாங்க. உடனே நண்பருக்க ஒரு பெரிய சந்தேகம் வந்துடுச்சு, இந்த ஹோட்டல் சுமாரான ஹோட்டல்லா இருக்கும் போலன்னு சொன்னாரு. நான் உடனே, இது பெரிய ஸ்டார் ஹோட்டலுங்க, ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துச்சுன்னு கேட்டேன். அதுக்கு அவரு 3மணி check-inனுக்கு, 11.30 மணிக்கெல்லாம் சாவியை கொடுத்துட்டாங்களே, கூட்டம் இல்லாததுனால தானே முடிஞ்சுது அப்ப இது சுமாரான ஹோட்டல் தானே அப்படின்னாரு. ஆஹா! ஒரு பெரிய கண்டுபிடிப்பை இல்ல கண்டுப்பிடிச்சிருக்காருன்னு நினைச்சுக்கிட்டு, ஏங்க நமக்கு வந்தவுடனே ரூம் கிடைச்சுதேன்னு சந்தோசப்படுவீங்களா, அதைவிட்டுட்டு இப்படி ஆராய்ச்சி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களேனேன்னு சொல்லி அவுங்க அவுங்க ரூமுக்கு போனோம். போயி நல்லா அசதி போக குளிச்சுட்டு கீழே வரவேற்பறைக்கு வந்தோம். பசி வேற வயித்தைக் கிள்ள ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்துல எங்க ஹோட்டல்னு கேட்டோம். பக்கத்துல தான் இருக்குனு சொன்னாங்க. சரின்னு நாங்களும் நடக்க ஆர்ம்பிச்சோம். நடந்தோம்,நடந்தோம், நடந்துக்கிட்டே இருந்தோம், ஹோட்டல் தான் வந்த பாடு இல்லை. நடக்கும்போது தான் தெரிஞ்சுது, அந்த இடம் ஒரு இண்டஸ்டிரியல் இடம்னு. நாங்களும் கிட்டதட்ட ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நடந்திருப்போம், ஒரு ஹோட்டல் கூட கண்ணுக்கு தென்படவேயில்லை. இங்க வேலை பார்க்கிறவுங்க எல்லாம் நம்மளை மாதிரி தினமும் சாப்பாட்டு மூட்டையை கட்டிக்கிட்டு வந்துடுவாங்க போலன்னு நினைச்சுக்கிட்டேன். கடைசியா ஒரு ஹோட்டலை கண்டுப்பிடிச்சோம். நாங்க போன நேரம் பஃப்பே நேரமாம், அதனால பீட்ஸா, பாஸ்தா இதெல்லாம் ஏழரை டாலருக்கு எவ்வளவு வேனாலும் சாப்பிடலாம்னு சொன்னாங்க. ஆஹா! புண்ணியவானுங்க, நம்ம பசி அறிஞ்சு நமக்கு ரொம்ப செலவில்லாம சாப்பாடு போடுறானுங்கன்னு நினைச்சுக்கிட்டு, எல்லாத்தையும் வெளுத்துக் கட்டினோம். கடைசில பில்லு போடுற எடத்துல பார்த்தா எட்டரை டாலர்னு சொன்னாங்க.  ஏழரைன்னு சொன்னிங்க, சாப்பிட்டதுக்கப்புறம் விலையை கூட்டி சொல்றீங்கன்னு கேட்டா, நாங்க எல்லாத்துலையும் வெளிப்படையா இருப்போம். விலைல கூட, விலை தனியா, வரி தனியான்னு போடுவோம்ன்னு சொன்னாங்க. அடப்பாவிகளா! எல்லாத்தையும் ஒரே விலையா பார்த்து பழகிப் போன எங்களுக்கு இது ரொம்ப பெரிய கஷ்டமா இருக்குமேன்னு நினைச்சு, பில்லை கட்டிட்டு, திருப்பியும் சாப்பிட்ட சாப்பாடு எல்லாம் செறிச்சிடுற அளவுக்கு திரும்பி ஹோட்டலுக்கு நடந்தோம்.
எங்களுக்கு மறு நாள் மாலையிலிருந்து தான் கல்வி மாநாடு. மறு நாள் என்ன பண்னினேன்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                               பகுதி-4

Wednesday, July 4, 2012

அமெரிக்காவில் அடியேன் - 2

 
நானும் லாஸ் எஞ்செல்ஸ் போற விமானத்துல ஏறி உட்கார்ந்தேன். இந்த விமானத்துல சைவ சாப்பாடு வாய்க்கே விளங்கலை.ஒரு சின்ன கரண்டி அளவு வெள்ளை சாதமும், இல்ல! இல்ல! பொங்க சாதமும்!! (அந்த அளவுக்கு குழஞ்சு இருந்துச்சு), வேகவச்ச இரண்டு,மூன்று மஷ்ரூமும்,கொஞ்சம் கீரையும் கொடுத்தாங்க.எப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டேன். இன்னும் இரண்டு நேரத்துக்கு, இதையேத்தான் கொடுக்கப் போறாங்களோன்னு பயம் வந்துடுச்சு. ஆனா, இதையே கொடுக்காம, ஏதோ தம்மாத்துண்டு பர்கர் கொடுத்தாங்க(எப்படித்தான் அவ்வளவு சின்னதா பர்கர் செய்வாங்களோ!!). அதை மட்டும் கொஞ்சம் திருப்தியா சாப்பிட்டு, எப்படியோ 13 மணி நேரத்தை அந்த விமானத்துல ஒப்பேத்தி லாஸ் எஞ்செல்ஸ் விமான நிலயத்துக்கு வந்து சேர்ந்தேன்.அங்கேயும் குடியுரிமைத் துறையில இருக்கிற ஒரு அம்மா தான்,எனக்கு அமெரிக்காவில 6 மாசம் வரைக்கும் தங்குறதுக்கு அனுமதி தந்தாங்க.அதுக்கப்புறம் என்னோட ஒரே ஒரு பெரிய பெட்டியை எடுத்துக்கிட்டு, வலது பக்கம் திரும்பினவுடனே, என் பெட்டில ஒட்டியிருந்த ஸ்டிக்கரைப் பார்த்து, இங்கேயே அந்த பெட்டிய போடுங்கன்னு சொன்னாங்க. என்னை மாதிரியே மற்ற ஊர்களுக்கு போறவங்களையும் அங்கேயே அவுங்க பெட்டியை எல்லாம் போடச் சொன்னாங்க. எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துடுச்சு., இவுங்க நம்ம பெட்டியை “san jose” போற விமானத்துல ஏத்தாம வேற விமானத்துல ஏத்திட்டா என்ன பண்றது. சரி, பெட்டி போனா போகட்டும், அதுக்குள்ள தங்கமும்,வெள்ளியுமா இருக்குது!!!. அந்த பெட்டிக்குள்ள இன்னொரு சின்ன பெட்டியும்(hand baggage பெட்டி) அந்த சின்ன பெட்டிக்குள்ள ஏழெட்டு சட்டை, பேன்ட் தான் இருக்குது. இதுக்கு போயி நாம ஏன் கவலை படனும்னு மனசை தேத்திக்கிட்ட போதுதான், மூளைக்குள்ள ஒரு அலாரம் அடிச்சுது.என்னன்னா!அந்த பெட்டிக்குள்ள இரண்டு சட்டை பேன்ட் புதுசா வச்சிருந்தேன் அந்த இரண்டும் மாமனார் வீட்டுல கொடுத்தது. அதுல ஒரு சட்டை பேன்டைத்தான் நான் கட்டுரையை வாசிக்கிற அன்னைக்கு போட்டுக்கனும்னு வீட்டு அம்மணியோட உத்தரவு. பெட்டி மட்டும் வராம போகட்டும் அப்புறம் வச்சுக்கிறேன் கச்சேரியைன்னு மனசுக்குள்ள அந்த உத்தரவு மிருதங்கம் வாசிச்சது. கண்டிப்பா பெட்டி கிடைச்சிடுங்கிற நம்பிக்கைல அடுத்த விமானம் எங்க நிக்கும்னு போர்டிங் பாஸ்ல பார்த்து 65A கேட்டுக்கு வழியை தேடிக்கிட்டு போனேன்.சரி, எதுக்கும் மேல இருக்கிற டி‌வி பொட்டில ஒரு தடவை பார்த்துடலாம்னு பார்த்தா, அதுல கேட் 66ன்னு காட்டுனுச்சு. திருப்பியும் 66கேட்டை தேடி கண்டுப் பிடிச்சு போனேன். அப்பவே காலைல 8மணியாயிடுச்சு. 9.20க்கு அந்த விமானம்,அதனால 8.50க்கு எல்லாம் போர்டிங் பண்ணனும்னு சொல்லியிருந்தாங்க.நானும் கேட்-66ல போயி உட்கார்ந்து, எனக்கு ரொம்ப பிடிச்ச இளையராஜா பாடல்களை கேட்டுக்கிட்டு இருந்தேன். மணியோ 9மணியாயிடுச்சு,அந்த கேட்ல கூட்டத்தையும் காணோம், அந்த விமானத்துல வேலை பார்க்குறவங்களையும் காணோம். எனக்கு ஒரே குழப்பமா போச்சு. மறுபடியும் அங்கேயே இருக்கிற டி‌வி பொட்டில போயி பார்த்தேன். அது கேட்-66ன்னு தான் காட்டிக்கிட்டு இருந்துச்சு. என்னடா இது ஒண்ணுமே புரியலையேன்னு யோசிச்சு,அங்க இருக்கிற தகவல் நிலையத்துல போயி ஏங்க, இந்த மாதிரி “san jose” போற விமானம் எந்த கேட்ல நிக்குதுன்னு கேட்டேன். கவுண்ட்டர்ல இருக்கிற அம்மாவுக்கு நான் பேசுன ஆங்கிலம் புரியல போல இருக்கு, அவுங்க திருப்பி என்ன கேட்டீங்கன்னு, கேட்டாங்க.மறுபடியும் நான் கேட்டதையே திருப்பி சொன்னேன். அவுங்க “san jose”, அந்த மாதிரி எந்த ஊரும் இல்லையேன்னு சொன்னாங்க.நானும் “san joseயைவேற விதமா எல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஒண்ணும் வேலைக்கு ஆகலை. மணியோ 9.05ஆயிடுச்சு. இனிமே இவுங்க கிட்ட பேசி புரிய வைக்க முடியாதுன்னு முடிவு பண்ணி, நான் என்னோட போர்டிங் பாஸை எடுத்துக் காமிச்சு சைகை பாஷைல எப்படி போகனும்னு கேட்டேன்.உடனே, அந்த அம்மாவும், ஓ! சேன் உஸேவாஅது கேட்-64Aன்னு சொன்னாங்க. எனக்கு ஒரே சந்தேகம் “san joseன்னுஎழுதுறாங்க, ஆனா சொல்றதை மட்டும் என்னமோசேன் உஸேன்னுசொல்றாங்களேன்னு. (அந்த ஊருக்கு போனப்புறம் தான் ஏன் அப்படி சொல்றாங்கன்னு தெரிஞ்சுது). திருப்பியும் அந்த சந்தேகத்தை கேட்டு, அவுங்களுக்கு அதை புரிய வச்சு முடிக்கிறதுக்குள்ள, விமானம் போயிடும்னு முடிவு பண்ணி, அந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ற வேலையை விட்டுட்டேன்.ஆனா ஏன் இப்படி தாப்பா டி‌வி பொட்டில காட்டுறாங்கன்னு அவுங்க கிட்ட கேட்டேன். அந்த அம்மாவும் ஓ!அதை மாத்தலை போல இருக்குன்னு ரொம்பவும் அசால்டா சொன்னாங்க. அட!கஷ்டமே, இதை நம்பி இருந்தா, நாம அந்த விமானத்தை விட்டிருப்போமேன்னு வேக வேகமா கேட்-64A எங்க இருக்குதுன்னு தேடிக்கிட்டே போனேன், போனேன்,போயிக்கிட்டே இருந்தேன். ஒரு பெரிய சுத்து சுத்தி, ஒரு வழியா அந்த கேட்டுக்கு வந்து சேர்ந்தேன். நல்ல வேளையா, அப்பத்தான் எல்லோரும் வரிசைல நின்னு போர்டிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நானும் போயி அந்த வரிசைல நின்னேன். அப்ப ஒரு அறிவிப்பு செஞ்சாங்க. அதாவது,கைப் பெட்டி பெருசா இருந்தா, அதை விமானத்துக்குள்ள வைக்க முடியாது, அதனால விமானம் ஏறுவதற்கு முன்னாடி அங்க நிக்கிறவங்ககிட்ட கொடுத்துடுங்க, அவுங்க ஒரு ரசீது கொடுப்பங்க. இறங்கும்போது, நீங்க உங்க பெட்டியை வாங்கிக்கலாம்னு சொன்னாங்க. நான் வெறும் கம்ப்யூட்டர் பையை வச்சிருந்ததுனால, எனக்கு அந்த பிரிச்சனை இல்லாம போச்சு. என்னோட போர்டிங் பாசை சரி பார்த்த பிறகு, நடந்து போயி விமானத்துக்குள்ள ஏறச் சொன்னாங்க. நடந்து போயி விமானத்துக்கிட்ட போனவுடனே, எனக்கு ஒரே ஆச்சிரியமாகவும்,அதிர்ச்சியாகவும் போயிடுச்சு. ஏன் எனக்கு அப்படி ஆச்சுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                               பகுதி-3

Monday, June 25, 2012

அமெரிக்காவில் அடியேன் - 1

நானும் மஸ்கட்,சிங்கப்பூர்,மலேஷியா,லண்டன்,ஜப்பான்,தென்கொரியா, ஆஸ்திரேலியா இப்படின்னு பல நாடுகளுக்கு போயிருந்தாலும், அமெரிக்காவுக்கு மட்டும் போக கூடிய வாய்ப்பு அமையலை. ச்சீ, ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு நானும் விட்டுட்டேன். அப்பத்தான் ஒரு நண்பர் அமெரிக்காவில இருக்கிற ஒரு தமிழ் கல்விக் கழகம் உலக அளவுல தமிழ் கல்வி சம்பந்தமா ஒரு மாநாடு நடத்துறாங்க, நீங்க அதுல ஒரு ஆய்வுக் கட்டுரையை படைக்கிறீங்களான்னு கேட்டாரு. நானும் ஒரு ஆர்வக் கோளாறுல ஒத்துக்கிட்டு எப்படியோ ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை அனுப்பிட்டேன். அப்புறம் முழுக்கட்டுரையையும் எழுதும்போது தான் தெரிஞ்சுது, தெரியாமல் இதுல காலை விட்டுடோம்னு. இருந்தாலும், எப்படியோ ஒரு வழியா அந்த கட்டுரையை எழுதி முடிச்சேன். மாநாடு நடத்துறவுங்க என்னோட கட்டுரையை தெரிவு செஞ்சு, அமெரிக்காவுக்கு போகனுங்கிற என்னோட நெடு நாள் ஆசையை நிறைவேத்திட்டாங்க. இந்திய குடிமகன்கிறதுனால விசா வாங்கியாகனும். ஒரு சுப முகூர்த்த நாள்ல, சிட்னில இருக்கிற அமெரிக்க தூதரகத்துக்கு போனேன். முதல்ல 9வது மாடிக்கு போனேன். ஷூவை எல்லாம் கழட்டி செக் பண்ண பிறகு, மொபைல் போனை ஆஃப் செய்து அவுங்ககிட்ட கொடுக்கனுமாம். அட கஷ்டகாலமேன்னு போனை கொடுத்துட்டேன்.       (என்ன(!) முக்கியமான கால்ஸ் எல்லாம் மிஸ் ஆகும் பரவாயில்லை, அமெரிக்காவுக்கு போகனும்னா, இதையெல்லாம் தியாகம் பண்ணித்தானே ஆக வேண்டியிருக்குது!!!). .அப்புறம் 58வது மாடிக்கு போயி நம்மளோட கைரேகைய கொடுக்கனுமாம். அதுவும் முதல்ல 4 விரல்ல உள்ள ரேகையும் அப்புறம் கட்டை  விரலுக்குள்ள ரேகையும் கொடுத்துட்டு , அங்க உட்கார்ந்திருக்கிற கூட்டத்துல போயி ஐக்கியமாகிடனுமாம். நானும் கைரேகையை எல்லாம் கொடுத்துட்டு, அந்த கூட்டத்துல போயி உட்கார்ந்து, எப்படா நம்மளை கூப்பிடுவாங்கன்னு காத்துக்கிட்டு இருந்தேன்.  ரொம்ப நேரம் கழிச்சு, ஒரு ஆபிசர் அம்மா என்னைய கூப்பிட்டாங்க. நானும் அவுங்க முன்னாடி போயி நின்னேன். எதுக்கு அமெரிக்காவுக்கு போறீங்கன்னு கேட்டாங்க. நானும் இந்த மாதிரி, இந்த மாதிரி, அமெரிகாவில தமிழ் கல்வி மாநாடு ஒண்ணு நடக்குது. அதுக்கு என்னையும் மதிச்சு  கூப்பிட்டிருக்காங்க, அதுக்காக போறேன்னு சொன்னேன். அப்ப நீங்க என்ன தமிழ் வாத்தியாரான்னு ஒரு கேள்வி கேட்டாங்க. அடடா, இவுங்க நம்மளை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களேன்னு நினைச்சு, சனிக்கிழமைல மட்டும் என்னோட ஆத்ம திருப்திக்கு தமிழாசிரியரா சேவை செய்யுறேன். வயித்து பொழப்புக்கு கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழுகிறேன்னேன். உடனே அந்த அம்மாவும் பயபுள்ள ஒழுங்கா தான் பதில் சொல்றான்னு புரிஞ்சுக்கிட்டாங்க. ஏன்னா, அந்த அப்ளிகேஷன்ல நான் என்ன வேலை பண்றேன்னு எழுதியிருக்கிறேனே!. சரி, எத்தனை வருஷமா கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழுறீங்கன்னு கேட்டாங்க. அது ஆச்சு ஒரு 20 வருஷமான்னேன். உடனே அந்த அம்மா ரொம்ப குஷியாகி (ஒரு இளிச்சவாயன் மாட்டிக்கிட்டான், இவன்கிட்ட என்ன கேள்வி வேனாலும் கேட்கலாம்னு நினைச்சுட்டாங்க. அது மட்டும் இல்ல, என்னோட பால் வடியும் முகத்தை பார்த்து,  இவன்கிட்ட, நம்மளோட சந்தேகத்தை எல்லாம் தீர்த்துக்கலாம்னு நினைச்சுட்டாங்க போல). நீங்க தினமும் ஆபீஸுக்கு போனவுடனே என்ன பண்ணுவீங்கன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கன்னு, கம்ப்யூட்டர்ல வேலை பார்க்குறவன் கிட்ட கேக்கக்கூடாத கேள்வியை கேட்டாங்க. இவுங்க கிட்ட போயி, காலைல போனவுடனே மெயில், பேப்பர் எல்லாம் படிச்சுட்டு தான் வேலை செய்ய ஆரம்பிப்பேன்னு சொல்ல முடியுமா. அதனால என்னமோ 8 மணி நேரமும் வெறும் வேலையை மட்டும் பார்க்குற மாதிரி கொஞ்சம் பீலா எல்லாம் விட்டேன். பாவம் அந்த அம்மா நான் சொன்னதை எல்லாம் ஆச்சிரியமா கேட்டு நம்பிட்டாங்க.அப்புறம், பாஸ்போர்ட் டோக்கியோவிலா வாங்கினிங்க? டோக்கியோவில எத்தனை வருஷம் இருந்தீங்கன்னு கேட்டாங்க. நானும் கிட்டதட்ட ஒரு அஞ்சு வருஷம்னேன். உடனே அந்த அம்மா, சிட்னில எத்தனை வருஷமா இருக்கீங்கன்னு கேட்டாங்க? அதுக்கும் அஞ்சு வருஷமா இருக்கேன்னேன். இவ்வளவு நேரமா, நான் சொன்னதுக்கு எல்லாம் ஆச்சிரியமா என்னைய பார்த்து தலையெல்லாம் ஆட்டிக்கிட்டு இருந்தவுங்களுக்கு, திடீர்னு ஏதோ சந்தேகம் வந்திருக்கும் போல, சந்தேகமா என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்த்தாங்க. எனக்கு அவுங்க சந்தேகமாதான் பார்க்கிறாங்கன்னு புரியலை. நாம ரொம்ப அழகா இருக்கோம் போல, அதனால தான் நம்பளை அப்படி  பார்க்கிறாங்கன்னு நினைச்சேன். ரொம்ப நேரமா, என்னைய பார்தது மட்டுமில்லாம, என்னோட பாஸ்போர்ட்ல இருக்கிற எல்லாப் பக்கத்தையும் வேற பார்த்தங்களா, அப்பத்தான், என்னோட மரமண்டைக்கு புரிஞ்சுது, நாம அழகா இருக்கோம்னு அவுங்க பாக்கலை, ஏதோ சந்தேகம் வந்துடுச்சு, அதான் அப்படி பார்த்திருக்காங்கன்னு. அவுங்களுக்கு என்ன சந்தேகம் வந்திருக்கும்னு நானும் யோசித்துப் பார்த்தேன், “ஒவ்வொரு நாட்டிலும் 5 வருஷம் தான் இவன் இருப்பான் போல, இப்ப அமெரிக்காவில போயி வேலை தேடிப்பானோன்னு சந்தேகம் வந்திருக்கும்னு நினைச்சேன்”, அப்ப நம்ம அமெரிக்காவுக்கு போற கனவு, கனவாவே போயிடுமோன்னு எனக்கு பயம் வந்துடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு, உங்களுக்கு குடும்பம் இருக்கான்னு கேட்டாங்க. ஏன் இல்லாம, ஒரே ஒரு மனைவியும், ரெண்டே ரெண்டு குழந்தைகளும் இருக்காங்கன்னு சொன்னேன். திருப்பியும் என்னைய பார்த்தாங்க, அப்புறம் அவுங்களே இல்லன்னு தலையை ஆட்டிக்கிட்டாங்க. எப்படியோ ஒரு வழியா தெளிஞ்சு, உனக்கு விசாவை கொடுக்கிறோம்னு சொன்னாங்க. அப்புறம் தான் எனக்கு உயிரே வந்துச்சு. ரொம்ப நன்றியம்மா சொல்லி வெளியே வந்தேன்.
அட கிரகமே, விசாவுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, அங்க போனா, இன்னும் எவ்வளவு கஷ்டம் வருமோன்னு பயமாயிடுச்சு. "வல்லவனுக்கு  புல்லும் ஆயுதம்கிற மாதிரி", என்ன கஷ்டம் வந்தாலும் நம்ம மூளையை வச்சு சமாளிச்சுக்கலாம்னு ஒரு குருட்டு தைரியத்துல, அமெரிக்கா போறதுக்கு விமானத்துல எறிட்டேன்.  அடுத்த பதிவுல இன்னும் சொல்றேன்.
                                                                                                                                              பகுதி-2