Saturday, July 5, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை



சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்



இரண்டாம் அதிகாரம்
இல்வாழ்க்கை
--------------------------
ஐயா அவர்கள் பதினாறாவது வயசில் பிரசோற்பத்தி வருட ஆவணி மீ அ வு கோட்டையூரில் தனவைசியர் குலத்திலே பெருங்குடியிலே மண்ணூருடையார் கோத்திரத்திலே (பட்டத்திலே) வீர பாண்டியபுரம் பூம்புகார்க் காணியாகவும், மாற்றூர் பாண்டிநாட்டுக் காணியாகவுமுடைய, கவீ.ராம. இராமநாதச் செட்டியார் குமாரியாகிய இலக்குமி அம்மையார் என்பவரைத் திருமணஞ்செய்து கொண்டார்கள். தாது வருட மாசி மீ முதல் காரைமா நகரையடுத்த முத்துப் பட்டணத்தில் இல்லம் அமைத்துக்கொண்டு பெற்றோர் முதலியவர்களுடன் அதில் வாசஞ்செய்து வந்தார்கள்.

இருபத்து நான்காம் வயசில் பிரமாதி வருட ஆவணிமீ அ உ திருப்புனவாசல் முதன்மையாரும், பழம்பதிநாதர் பூஜா துரந்தரருமாகியபா தரக்குடி ஸ்ரீலஸ்ரீ வேங்கடாசலபதி குருசுவாமிகளிடத்தில் நகர தனவைசியர் கிரமப்பிரகாரம் காரைமா நகரில் சிவதீஷை பெற்றுக்கொண்டார்கள்.

ஐயா அவர்கள் தமது இருபத்தெட்டாவது வயசில் தம் மனைவியராகிய இலக்குமி அம்மையார் சுபானு வருட ஐப்பசிமீ செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தமையால்; இருபத்தொன்பதாவது வயசில் பார்த்திப வருட ஆனிமீ உயஅ காரைமா நகரையாடுத்த முத்துப்பட்டினத்தில் தனவைசியர் குளத்தில் பெருங்குடியிலே மருதேந்திரபுரமுடையார் கோத்திரத்திலே (பட்டத்திலே)  வீரபாண்டியபுரம் பூம்புகார்க் காணியாகவும் வைரவன்கோவில் பாண்டிநாட்டுக் காணியாகவுமுடைய ராம. மெ. சின்னச் சாத்தப்ப செட்டியார் குமாரியாகிய விசாலாட்சி அம்மையார் என்பவரை இரண்டாவது திருமணஞ்ச் செய்து கொண்டார்கள். ஐயா அவர்கள் முதன் மனைவியாரிடத்துப் பிறந்த மீனாட்சி என்னும் புத்திரிக்குச் சந்ததி விருத்தியடைந்திருக்கிறது.

இரண்டாவது மனைவியாரிடத்து முதற் பிறந்த திலகவதி என்னும் புத்திரிக்கும் சந்ததி விருத்தியாய் வருகின்றது. இரண்டாவது தோன்றிய இராமநாதராகிய திருநாவுக்கரசு செட்டியார் என்னும் ஓர் சற்புத்திரருக்கும் சந்ததி விருத்தியாகி வருகின்றது. அச்சற் புத்திரரும் சைவ சமயாசார சீலராய்ச் சிவ பக்தராய்ச்சிறந்து விளங்கி வருகின்றார்.

ஐயா அவர்களுக்கு நாற்பத்து நான்காம் வயசில் சார்வரி வருட மார்கழி மீ சு உ அபரபட்சச் சதுர்த்தசி திதியில் இரண்டாவது மனைவியாராகிய விசாலாட்சி அம்மையார் சிவபத மடைந்தனர்.

ஐயா அவர்கள் அதிபாலிய முதல் காரைமா நகர் அறுபான்மும்மை நாயன்மார் குருபூசை மடத்திற்கு மிகுதியும் போக்குவரவு வைத்துக்கொண்டு ஸ்நாநம் நித்திய நியம சிவபூசை பாராயணம் ஸ்ரீ அனுகூல விநாயகர் தரிசனம் சிவதரிசனம் முதலில சிவபுண்ணியங்களைத் தவறாது செய்துகொண்டு காலந்தோறும் இல்லத்துக்குச்சென்று திருவமுது செய்து வந்தார்கள்.

ஐயா அவர்களுடைய தந்தையார் சுபானு வருட மாசி மீ எ உ சொந்த இல்லத்தில் கந்தபுராண படனம் நடைபெற்று வருங்காலத்தில் சிவ பதமடைந்தனர். அவருக்கு செய்ய வேண்டிய பிதுர் கர்மங்கள் யாவும் சிரத்தையுடன் அதி விமரிசையாக விதிப்படி ஐயா அவர்கள் செய்தார்கள்.

ஐயா அவர்கள் தம்முடைய தாயாரை மகாமக ஸ்நாநங் கருதிக் கும்பகோணத்திற்கு அழைத்துப்போயிருந்தார்கள். அங்கே தாயாருக்கு உடம்பு அசௌகரியமாயிருக்கக் கண்டு திருவாரூருக்கு அழைத்து வந்து அத்தலத்தில் தங்கி தக்க வைத்தியம் பார்க்கச்செய்து, தொண்டு செய்துகொண்டுவந்தார்கள். அப்படி இருக்கும் நாளில் அந்தத் திவ்ய புண்ணிய ஸ்தலத்தில் துன்முகி வருட மாசி மீ எ உ தாயார் சிவபதமடைந்தனர். அவருக்கு செய்யவேண்டிய மாதுர்கர்மங்கள் யாவும் விதிப்படி சிரத்தையுடன் செய்து முடித்து ஊருக்கு வந்தார்கள். தந்தை தாயாராகிய இருமுது குரவர்களுடைய வருஷாப்திக முதலியவற்றையும் சிரத்தையுடன் நடத்தி வந்தார்கள்.

வேதாரணியம் என்ற உத்தமஸ்தலத்தில் அறுபத்து மூவர் திருமடாலயத்தில் தமது சஷ்டியப்தபூர்த்தி சாந்தியைத் தோகைமலை சுப்பிரமணியக் குருக்களையா முதலிய சிவாச்சாரியார் முகமாகச் சிவகாம முறைப்படி செய்து கொண்டார்கள். ஸ்ரீவேதாரணியே சுவரருக்கும், யாழைப்பழித்த மொழியம்மையாருக்கும், பரிவார தேவர்களுக்கும், கும்ப ஸ்தாபனங்கள் செய்து பூசித்து அபிஷேக பூசை, நைவேதனங்கள் செய்வித்துத் தெரிசனஞ் செய்து கொண்டார்கள்.

ஐயா அவர்கள், குடும்பத்திலிருக்குங் காலத்திலும் “தாமரையிலையிற் தண்ணீர்போலப்” பற்றற்று நின்று குடும்பத்துடனும், தனித்தும், அன்பு மேலீட்டால் இடையிடையே அநேக சிவஸ்தல யாத்திரை செய்து கொண்டு வந்தார்கள். ஸ்ரீ சிதம்பரத்தில் இருக்குங் காலத்தில் அக்ஷய வருஷத்தில் ஸ்ரீகாசி யாத்திரைசெய்து புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து பல சிவஸ்தல தெரிசனஞ் செய்துகொண்டு வந்தார்கள். அந்த யாத்திரை முற்றியபின் “காசி விஸ்வேசர் அடைக்கலப் பதிகம்” என்னும் நூலியற்றினார்கள்.

இரண்டாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
-------------------------------------------------
மூன்றாம் அதிகாரம்

கல்வி கற்றல் 

13 comments:

  1. எல்லாமே, எங்கஏரியாவை சுற்றியவைகளாக இருக்கிறது நன்றி பதிவிற்க்கு நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. முதலில் வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி நண்பரே.
      ஆமாம், எங்களின் சொந்த ஊர் காரைக்குடி.

      Delete
    2. காரைக்குடியா ? சொல்லவே இல்லை..... எந்தஏரியா ?

      Delete
    3. காரைக்குடியில் முத்துப்பட்டினம் முதல் வீதி.

      Delete
  2. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  3. பழைய தமிழ் பருகுவது இனிமை! சொக்கலிங்க ஐயாவின் வரலாற்றை அறிந்து கொள்வதில் பெருமை! நன்றி! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  4. தங்களின் சைவப் பணிக்கு என்னால் முடிந்த தட்டச்சு உதவி செய்ய காத்திருக்கிறேன். சொல்லுங்கள் சகோதரரே. இப்போது இங்கு பதிவிடுவதால் நாங்கள் அறிந்து கொள்ள முடிகிறது, நன்றி. பணி தெடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் உதவிக்கு மிக்க நன்றி சகோதரி.

      இந்த புத்தகத்தை pdf ஆக மாற்றியபோது ஓரத்தில் இருக்கும் எழுத்துக்கள் சரியாக வரவில்லை. மேலும் இன்னும் 40 பக்கங்கள் தான் இருக்கிறது. அதனால் இதனை நானே முடித்துவிடுவேன்.

      தற்சமயம் "தெய்வத்தமிழ்" என்று ஐயா எழுதிய மற்றொரு புத்தகம் இருக்கிறது. அதனை pdf ஆக மாற்றி அனுப்புகிறேன். தங்களால் முடிந்த பக்கங்களை தட்டச்சு செய்து கொடுங்கள். தங்களுடைய முகவரியை அனுப்பினால் உதவியாக இருக்கும்.

      தங்களின் இந்த உதவிக்கு மிக்க நன்றி சகோதரி.

      Delete
    2. முகவரியை அனுப்புகிறேன். நன்றி.

      Delete
  5. தங்களின் பணி சீரிய பணி
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete