Sunday, March 24, 2013

காதல் கீதம் – 11

பகுதி - 10
மறு நாள் காலையில், அவன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவன் தந்தை போன் பண்ணி, நீ ஒரு நாள் லீவு சொல்லிட்டு, இன்னைக்கு ராத்திரியே கிளம்பி மெட்ராஸுக்கு வா என்று கூறினார். 

அவனும், அன்றிரவே மெட்ராஸுக்கு கிளம்பி போனான். காலையில் வீட்டில் போய் இறங்கி, குளித்து காலை சிற்றுண்டி சாப்பிட்டு முடித்தவுடன், அவனுடைய தந்தை அவனிடம்,

“ஏண்டா, இது எத்தனை நாளா நடக்குது” என்று கேட்டார்

“எதுப்பா”

“ஆதாண்டா, நீ ஒரு பொண்ணை விரும்புறது”

“அப்பா, அது யாரோ ஒரு பொண்ணு இல்லப்பா, நம்ம மணியோட சொந்தக்கார பொண்ணுப்பா” என்றான் அடைக்கப்பன்.

“அது எல்லாம் எங்களுக்கு தெரியும். எனக்கு தான் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காதுன்னு உனக்கும் தெரியும் தானே. தெரிஞ்சும் நீ, காதலிச்சிருக்கேன்னா, என்னடா அர்த்தம்” என்று கோபப்பட்டார்.

“அப்பா, நான் வேற ஜாதி பொண்ணை காதலிச்சிருந்தா நீங்க கோபப்படுறதுல அர்த்தம் இருக்கு. எப்படியும் நீங்க எனக்கு ஒரு செட்டிய வீட்டு பொண்ணை தான் கல்யாணம் பண்ணி வைப்பீங்க, அது ஏன் இந்த ஜனாகியா இருக்க கூடாது?” என்று திருப்பி கேட்டான் அடைக்கப்பன்.

“ஏங்க அவன் சொல்றதிலும் என்ன தப்பு இருக்குங்க” என்று இருவருக்கும் இடையில் புகுந்தாள் அவன் தாய்.

“இவனா ஒரு பெண்ணை தேடிக்கிறதுக்கு, பெத்தவங்கன்னு நாம எதுக்கு இருக்கோம்” என்று கேட்டார்.

“அவன் ஒண்ணும் மத்த பசங்களை மாதிரி வேற யாரையோ காதலிக்கலை. நமக்கு தெரிஞ்ச குடும்பத்து பொண்ணை தான் காதலிக்கிறான். அந்த பொண்ணும் ரொம்ப நல்ல பொண்ணா தான் தெரியிது” என்று பதிலுரைத்தாள்.

“எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான், அவனை இப்படியெல்லாம் பண்ண வைக்குது. சரி நான் இப்ப என்ன பண்ணனும்” என்று சற்று கீழிறங்கி வந்தார்.

“அந்த பொண்ணும் அடுத்த மாசத்துல படிப்பை முடிக்க போகுது. நாம நம்ம மணிக்கிட்ட, நம்ம பிள்ளையோட ஜாதகத்தை கொடுத்து, அந்த பொண்ணோட ஜாதகத்தை கேப்போம்”

“எனக்கு என்ன ஒரே கஷ்டம்னா, நமக்கு இருக்கிறது ஒரே புள்ள, அவனுக்கு நான் ஒரு நாலைந்து இடத்துல அலைஞ்சு, நல்ல குணமுள்ள ஒரு பொண்ணை கட்டி வைக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்ன, இப்ப அது முடியாது.” என்று வருத்தப்பட்டார்.

“இங்க பாருங்க, நமக்கு அவன் சந்தோஷம் தானே முக்கியம். அதனால ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்.”.

“சரிடா, இதை கேக்குறதுக்காக தான் நான்,உன்னைய இன்னைக்கே வர சொன்னேன். நீ இன்னைக்கு ராத்திரி கிளம்பு, நானும் உன் அம்மாவும் மேக்கொண்டு ஆக வேண்டிய வேலைகளை பார்க்கிறோம்” என்றார் அவனிடம்.

அடைக்கப்பனுக்கோ, உள்ளுக்குள் ஒரே சந்தோஷம். அதை வெளியே காட்டாமல். ரொம்ப தாங்க்ஸ்மா, ரொம்ப தங்க்ஸ்ப்பா என்று கூறி வெளியே போனான்.

மறு நாள் மீண்டும் படமாத்தூருக்கு சென்று வேலையில் மூழ்கினான். 

பிறகு வந்த ஒரு மாதமும் ஜானகிக்கு கடைசி செமெஸ்டெர் பரீட்சை என்பதால், அவனால் ஜானகியை பார்க்க முடியவில்லை. ஜானகிக்கும் பரீட்சை முடிந்த இரண்டு வாரத்திற்கு பிறகு ஒரு நாள் மணியும்,உண்ணாவும்,அடைக்கப்பனின் பெற்றோரும் படமாத்தூருக்கு ஜானகியின் வீட்டுக்கு வந்து, ஜனாகியை தங்கள் வீட்டு மருமகளாக ஆக்கிக் கொள்ள ஆசைப்படுவதாக கூறினார்கள். ஜானகியின் தந்தை நாராயணனுக்கு, இவர்களின் காதல் தெரிந்திருந்த படியால், அவரும் சம்மதித்தார். இரு வீட்டாரும் தங்கள் வழக்கப்படி,ஜாதகம் மாத்திக்கொண்டார்கள். ஜாதகத்தை பார்த்துவிட்டு மேற்கொண்டு நடக்கலாம் என்று முடிவு எடுத்தனர்.

அதன்பிறகு, அடைக்கபப்பனும், ஜானகியும் தங்களுக்கு திருமணம் நிச்சயம் நடக்கப்போகிறது என்று மிகுந்த சந்தோசத்துடன் இருந்தார்கள்.

கிட்டதட்ட பத்து நாள் கழித்து, ஒரு நாள் அடைக்கபனுக்கு,அவனுடைய தந்தை, உடனே  வருமாறு கூப்பிட்டார். அவனும் தன் வீட்டிற்கு போனான்.

“அடைக்கப்பா, மனசை தளர விடாதே, உனக்கும் ஜானகிக்கும் கலியாணம் நடக்காது” என்றார் அவன் தந்தை.

“என்னப்பா சொல்றீங்க. திடீர்னு குண்டை தூக்கி போடுறீங்களேன்னு” அதிர்ச்சியோடு கேட்டான் அடைக்கப்பன்.

“உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பொருந்தலைப்பா” என்றாள் அவன் தாய்.

“என்னம்மா, இந்த காலத்துலேயும் ஜாதகம் அது இதுன்னுட்டு. உங்களுக்கு ஜானகியை பிடிக்கலை, அது தான் ஏதாவது ஒரு காரணம் சொல்றீங்க” என்று கோபப்பட்டான்.

“ஏண்டா, பிடிக்காமதான் நாங்க ஜாதகம் எல்லாம் பார்த்தோமாக்கும். இதோ பாருப்பா, உன் சந்தோஷம் தான் ங்க சந்தோஷம். ஒண்ணுக்கு மூணு ஜோசியர் சொல்லிட்டாங்க. அதோட ஜானகி வீட்டுலேயும் ஜாதகம் பார்த்த இடத்தில இந்த ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணாதீங்கன்னு  சொல்லி இருக்காங்க”  என்று விளக்கினார் அவன் தந்தை. .

“ஏம்பா, அப்படி பார்த்தா, வெளி நாட்டுல இருக்கிறவங்க எல்லாம் ஜாதகம் பார்த்தா கல்யாணம் பண்ணிக்கிறாங்க” என்று கேட்டான்

“அவுங்க கலாச்சாரம் வேற, நம்ம கலாச்சாரம் வேற. உங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் உங்களுக்கு கலியாணம் பண்ணி வச்சு, பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தா என்னப்பா பண்றது” என்று கூறினார்.

“அம்மாண்டா, உங்கப்பா சொல்ற மாதிரி, பின்னாடி எதுவும் பிரச்சனை வரக்கூடாது. நீ நூறு வயசுக்கும் சந்தோஷமா இருக்கணும். உனக்கு வேற நல்ல இடத்துல பொண்ணு பார்க்கிறோம்பா. ஜானகியை மறந்துடுப்பா” என்றாள் அவன் தாய்.

“ஈஸியா சொல்லிட்டீங்க, அவளை மறந்துடுங்கன்னு. நான் எவ்வளவு நம்பிக்கையா இருந்தேன் தெரியுமா, ரெண்டு பெரும் ஒரே இனம், அதனால ஒரு பிரச்சனையும் வராதுன்னு, இப்படி கடைசில ஜாதகத்து மேல பழியை போட்டுடிங்களே “ என்று புலம்பினான்.

“இங்க பாருடா, நிறைய பேருக்கு, அவுங்க விரும்புனவங்களை கலியாணம் பண்ணிக்க முடியாத சூழ்நிலை உருவாயிடும். இனி நமக்கு அவ்வளவு தான், வாழ்க்கையே போச்சுன்னு நினைச்சுக்காம வேற யாரையாவது கலியாணம் பண்ணிக்குவாங்க. அதனால நீயும் அவளை மறந்துட்டு வேற ஒரு பொண்ணை கலியாணம் பண்ணிக்கோ” என்று எடுத்துரைத்தார் அவனுடைய தந்தை.

அடைக்கப்பனும், வேண்டா வெறுப்பாக, இருவரின் அறிவுரைகளையும் கேட்டுக்கொண்டு, அன்று இரவு படமாத்தூருக்கு பஸ் ஏறினான். மறு நாள் காலை ஆபிஸுக்கு போன மறு நிமிடம், ஜானகியின் வீட்டுக்கு போன் பண்ணினான். ஜானகி தான் எடுத்தாள்.

“ஜானகி, நாம வழக்கமா சந்திக்கிற சிவகங்கை பார்க்குக்கு சியாந்திரம் வரியா? உன் கூட நிறைய பேசணும்”.

“சரிப்பா நான் வரேன்”

மாலை இருவரும் சிவகங்கை பூங்காவில் சந்தித்தார்கள்.

“உங்க வீட்டில என்ன சொல்றாங்க ஜானு என்று கேட்டான் அடைக்கப்பன்.

“எங்க வீட்டிலையும், ஜாதகத்துமேல பழியை போடுறாங்கப்பா” என்றாள் ஜானகி.

“பேசமா நாம யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிக்கலாமா” என்றான்.

“எனக்கு அதுல உடன்பாடு இல்ல. நம்ம கல்யாணம் எல்லோருடைய சம்மதத்திலும் தான் நடக்கணும்னு நினைக்கிறேன். ” என்றாள் அவள்.

“நீ நினைக்கிறது சரி, ஆனா நமக்கு கல்யாணம் நடக்காது போல இருக்கே” என்றான் அவன்.

“பேசாம நாம ரெண்டு பெரும் பிரியிறது தான் சரிப்பா”

“எப்படி உன்னால அப்படி சொல்ல முடியுது. எனக்கு உன்னைய மறக்கணும்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு”

“எனக்கு மட்டும் உங்களை மறக்கிறது அவ்வளவு ஈஸியா என்ன? என்ன பண்றது, நம்ம அம்மா, அப்பா நம்மளோட நல்லதுக்கு தானே சொல்றாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு, நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா, அப்புறம் என்ன பண்றது”.

“நீ சொல்றதும் சரி தான், இந்த சமாதானத்தை புத்தி கேட்டுகிது, ஆனா மனசு கேக்க மாட்டேங்குதே. நாம பிரியிறதை தவிர வேற வழி இல்லையா” என்று ஆதங்கத்தோடு கேட்டான்.

“எனக்கு தெரிஞ்சு இல்லப்பா. நீங்க சொன்ன மாதிரி, நாம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா என்ன நம்மளை பெத்தவங்களோட மரியாதை போயிடும். பிள்ளைங்களை வளர்க்கத் தெரியாம வளர்த்திருக்காங்கன்னு அவுங்களுக்கு ஒரு பேர் உண்டாகும். பெத்தவங்களோட மனசை காயப்படுத்தி நாம நம்ம வாழ்க்கையை தொடங்க வேண்டாங்க” என்று நிதானமாக பதிலுரைத்தாள்”.

“சரிப்பா, நீ சொல்ல, சொல்ல என் மனசுக்கு தெளிவு கிடைக்குது. சரி, நாளைக்கும் நாம இதே இடத்தில சந்திச்சு, நாம எடுத்த புகைப்படங்களையும், கடிதங்களையும் தீயிட்டு அழிச்சிடலாம். நீயும் உங்கப்பாம்மா சொல்றவரை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ, நானும் எங்கப்பாம்மா சொல்றவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் அடைக்கப்பன்.

“சரிப்பா, உங்க கூட பழகின இந்த நாட்கள் ரொம்பவும் இனிமையான நாட்கள்பா, என்னதான் நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், மனசுல ஓரத்துல உங்களோட பழகின இந்த நாட்கள் பதிஞ்சு போயிடும்”.

“ஆனா, அதுவும் காலப்போக்குல அழிஞ்சுடும். எல்லாத்தையும் மறக்கிற சக்தி, காலத்துக்கு தான் இருக்கே. சரி, நீ கிளம்பு. நாளைக்கு மறக்காம எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்துடு” என்றான்.

இருவரும் கிளம்பி போனார்கள். அதற்கு பிறகு, இரண்டு மாதத்தில், அடைக்கப்பன் வேற வேலையை தேடிக்கொண்டு, மெட்ராஸுக்கே போய் விட்டான். ஆறு மாதத்திற்கு பிறகு, அடைக்கப்பன், ராயவரத்தை சேர்ந்த தெய்வானையை கலியாணம் செய்துக்கொண்டான். ஜானகியும் கண்டனுரை சேர்ந்த நாகப்பனை திருமணம் செய்துக்கொண்டாள்.


பழைய நியாபகங்களிலிருந்து, மீண்டு இவ்வுலகுக்கு வந்த அடைக்கப்பன், 
அன்னைக்கு நாம ஈஸியா ஜானகிக்கிட்ட சொன்னோம், காலம் எல்லாத்தையும் மறக்கடித்து விடும்னு, ஆனா 15 வருஷம் கழிச்சும், நம்மளால ஜானகியை மறக்க முடியலையே. இப்ப அவள் இன்னொருவருடைய மனைவி, அவளை நினைக்க கூடாதுன்னு, புத்தி சொன்னாலும், பாழாப்போன இந்த மனசு திடீர்,திடீர்னு என்னைக்காவது ஒரு நாள் அவளை நினைக்குதே. இதை தான் சொன்னார்களோ, முதல் காதலை மறக்க முடியாது, அது எப்பவும் நம்ம மனசுல ஒரு ஓரத்துல இருக்கும்னு. சரி, முடிந்த வரை, அவளை நினைக்காம இருக்க முயற்சிப்போம் என்று மனசுக்குள் உறுதி எடுத்துக்கொண்டு, தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டி, கடவுளே, “ஜானகி எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டு, குளிக்க போனான்.

-முற்றும்

Thursday, March 14, 2013

காதல் கீதம் - 10


பகுதி- 9
அடைக்கப்பனும், ஜானகியை முதன் முதலில் பார்த்ததிலிருந்து, அவளை விரும்புவது வரைக்கும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிமுடித்தான்.


“ஏண்டா இவ்வளவு விஷயம் நடந்திருக்கா. எல்லா விஷயத்தையும் என்கிட்ட மறைக்காமல் சொல்லுவ, இதை மட்டும் எப்படிடா மறைச்ச” என்று கேட்டாள்.

“இல்லம்மா, நான் காதலிக்கிறேன்னு சொன்னா, நீ என்ன சொல்லுவியோன்னு பயந்து தான் உன்கிட்ட மறைச்சேன்” என்றான்.

“இப்ப நான் என்ன சொல்லனும்னு நீ எதிர் பார்க்கிற?” என்று கேட்டாள்.

“நீங்க எப்படியும் நம்ம இனத்துல ஒரு பொண்ணை பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணப்போறீங்க. ஜானகியும் நம்ம இனம் தான். பேசாம அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்களேன்” என்று மென்று முழுங்கினான் அடைக்கப்பன்.

“உம். அந்த பொண்ணு,அவுங்க குடும்பமும் நல்லவங்களாக தான் தெரியிராங்க. ஆனா, அப்பா இதுக்கு ஒத்துக்கணுமே. உங்கப்பாவுக்கு காதல்னாலே பிடிக்காதே” என்று கவலைப்பட்டாள் அவன் அம்மா.

“அம்மா, அம்மா பிளீஸ்மா, நீ தான்மா அப்பாக்கிட்ட, அவுங்க குடும்பத்தை பற்றி எடுத்துச் சொல்லணும். நான் காதலிக்கிறதை அப்படியே மறைச்சிடுமா” என்றான்.

“என்னால எல்லாம் உங்கப்பாக்கிட மறைக்க முடியாது. பார்ப்போம் நான் நேரம் காலம் பார்த்து சொல்றேன். அது வரைக்கும் நீ கொஞ்சம் அடக்கி வாசி. அந்த பொண்ணுக்கும் இது கடைசி செமெஸ்டெர், நீ பாட்டுக்கு அவளோட அடிக்கடி பேசி, அவ படிப்பை கெடுத்திடாதே” என்றாள்.

“ரொம்ப தாங்க்ஸ்மா. இல்லம்மா, நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்தான்.

அன்று இரவு அடைக்கப்பனும் படமாத்தூருக்கு கிளம்பி போனான். ஒரு மாதம் கழித்து, சிதம்பரத்தின் கலியாணத்திற்கு, அவர்கள் ஃபேக்டரியிலிருந்து எல்லோரும் காலையிலேயே போய் தலையை காமித்து விட்டு வந்தார்கள். அடைக்கப்பன் மட்டும் காலையில் போனால் கூட்டமாக இருக்கும், ஜானகியை பக்கத்தில் ஈடுந்து பார்க்க முடியாது என்று நினைத்து, மதியமாக நேராக சிதம்பரத்தின் சொந்த ஊரில் இருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அங்கு தான் மாலை பெண் அழைப்பு நடைபெறும். இவனை பார்த்த மாமா மாகன் மணி,

“என்னடா, இப்ப வர? ஏன் காலையிலே வரலை” என்று கேட்டான்.

“காலையில எங்க கம்ப்யூட்டர் சிஸ்டம் டவுன்ல இருந்துச்சு. அதை சரி பண்ணிட்டு இப்ப தான் வரேன்” என்று பதிலுரைத்தான் அடைக்கப்பன்.

அப்போது, ஜானகியும் அவள் தாயாரும் “வாங்க” என்று அவனை கேட்டுவிட்டு போனார்கள். போகும்போது ஜானகி மட்டும் இவனை திரும்பி பார்த்து, புன்னகைத்து விட்டு போனாள். பெண் அழைப்பு சடங்குகள் எல்லாம் நடந்துக்கொண்டிருக்கும்போது, அடைக்கப்பனும், ஜானகியும் மட்டும் கண்களால் பேசிக் கொண்டிருந்தார்கள். நடு, நடுவில் ஜானகி தன் அத்தை பெண் உண்ணா அருகில் உட்கார்ந்திருக்கும்போது, அடைக்கப்பனும், உண்ணாவிடம் சென்று பேசுகிற மாதிரி, ஜானகியிடமும் பேசிவிட்டு வந்தான். அங்கு ஜானகியின் இன்னொரு அத்தை பெண், வள்ளியும், இவர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது  நேரத்தில் வள்ளி, ஜானகியை இழுத்துக்கொண்டு போய்,

“எப்படி உங்க வீட்டுல சொல்லப் போற” என்று ஜானகியிடம் கேட்டாள்.

அதற்கு ஜானகி,”இன்னொரு ரெண்டு மாசத்துல எனக்கு பரீட்சை முடிந்துடும். அப்புறம் சமயம் பார்த்து சொல்லணும்” என்றாள்.

அப்போது அந்த பக்கமாக நடந்த உண்ணா,

“என்னடி சமயம் பார்த்து சொல்லணும்” என்று கேட்டாள்.

உடனே ஜானகி, மழுப்பும் விதமாக”அது ஒண்ணும் இல்ல உண்ணா” என்று இழுத்தாள்.

வள்ளியோ, “உண்ணாவோட உதவி தான் இப்ப தேவை, அதனால மறைக்காம அவட்ட சொல்லு” என்று ஜானகியிடம் கூறினாள்.

“உங்களுக்குள்ள எண்ணங்கடி நடக்குது” என்று கேட்டாள் உண்ணா.

“இல்ல, நா வந்து உன் செட்டியாரோட அத்தை பையனை விரும்புறேன்” என்று கூறினாள் ஜானகி.

“யாரு, அடைக்கப்பனையா” என்று வாயைப் பிளந்து கேட்டாள் உண்ணா.
ஆமாம் என்று தலையசைத்தாள் ஜானகி.

“இந்த கூத்து எவ்வளவு நாளா நடக்குது” என்று கேட்டாள்.

“உன் கல்யாணத்திலிருந்து தான்” என்று பதிலுரைத்தாள் ஜானகி.

“என்னது!! என் கல்யாணத்திலிருந்தா?” என்று ஆச்சிரியமாக கேட்டாள் உண்ணா.

“ஆமாம் உண்ணா, விளக்கமா இன்னொரு நாள் சொல்றேன். நீ தான் எங்கப்பாக்கிட்டேயும்,அம்மாக்கிட்டேயும், அவரைப் பற்றியும், அவுங்க குடும்பத்தை பற்றியும் நல்ல விதமா சொல்லணும்” என்றாள் ஜானகி.

“நீ கவலையே படாதே ஜானு, உங்கப்பாம்மாக்கிட்ட அவுங்களைப் பற்றி நான் நல்லா சொல்றேன். இன்னும் நீ, அவுங்க வீட்டூக்கு மருமகளா போக ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். அவுங்க அம்மா ரொம்ப நல்ல டைப். உன்னைய தன்னோட பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க. சரி வா பந்தி பரிமாற” என்று இருவரையும் அழைத்தாள் உண்ணா.

வள்ளியும், ஜானகியும் சாப்பாடு பரிமாறும் இடத்துக்கு போனார்கள். அங்கு அடைக்கப்பன் உட்கார்ந்துக்கொண்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான்.

உடனே, வள்ளி ஜானகியிடம் “என்னடி அதுக்குள்ள அவன் சாப்பிட வந்துட்டான். பாரு என்னமா வெழுத்துக்கட்டிக்கிட்டு இருக்கிறதை என்று சொன்னாள்.

“ஏய், மரியாதையா பேசு, அவனிவன்னு சொல்லாதே. அப்புறம் அவர் சாப்பிடுறதை கண்ணு வைக்காதே” என்று கோபப்பட்டாள் ஜானகி.

“அம்மா தாயே, மன்னிச்சுக்கோடி, தெரியாம சொல்லிட்டேன். சரி, நாம போய் அவர் இலைக்கு பரிமாறாம, அடுத்த இலைக்கு பரிமாறுவோமா” என்று நக்கலாக கேட்டாள்.

“ச்சீ போடி, பாவம். சரி, நீ போய் அந்த வரிசையை கவனிச்சுக்கோ, நான் அவரை கவனிச்சுட்டு வரேன்” என்று கூறி அடைக்கப்பன் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

அடைக்கப்பனை போதும் போதும் என்று சொல்லசொல்ல,அவனுடைய இலையில் எல்லாவற்றையும் இரண்டு மூன்று தடவை வைத்து, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்து பிறகு அங்கிருந்து சென்றாள்.

சிதம்பரத்திடமும், அவனுடைய தந்தையிடமும், சென்று வருவதாக கூறி, அடைக்கப்பன் கிளம்பினான். அவர்கள் இருவரும் அவனை அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவனோ, கிடையவே கிடையாது என்று அன்றிரவே அங்கிருந்து கிளம்பி படமாத்தூருக்கு வந்து சேர்ந்தான்.

மறு நாள் காலையில், அவன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, உடனே மெட்ராஸுக்கு வருமாறு அவன் தந்தையிடமிருந்து போன் வந்தது.      பகுதி - 11

-    அடுத்த பாகத்தோடு முடிவு பெறுகிறது

Friday, March 8, 2013

மகளிர் தினம்


பெண்

ன்பின் வடிவானவள்
ற்றல் மிகுந்தவள்
ல்லறத்தை இனிமையாக நடத்துபவள்
ன்று எடுப்பவள்
ழைப்பதற்கு தயங்காதவள்
க்கத்தை கொடுப்பவள்
ல்லோரையும் அரவனைப்பவள்
ற்றத்தை நோக்கி முன்னேறச் செய்பவள்
யமின்றி வாழ்க்கையை நடத்துபவள்
ற்றுமையாய் வாழ்பவள்
யாமல் வேலை செய்பவள்
கு போல் மனஉறுதி உள்ளவள்
இவ்வளவு திறமைகளைகளையும்
உள்ளடக்கிய பெண்மையை
வாழ்த்துவோம் இன்று!!!!



மண்ணில் பெண்ணாய் பிறக்க
மாதவம் செய்திடல் வேண்டும்
அதனால் இன்று நான்
இறைவனிடம் வேண்டினேன்
அடுத்த பிறவியில்
பெண்ணாய் பிறக்க வேண்டுமென்று!!!!


Wednesday, March 6, 2013

காதல் கீதம் - 9

பகுதி - 8
சிதம்பரத்திற்கு பெண் பார்த்து முடித்து, மீண்டும் உண்ணாவின் வீட்டிற்கு எல்லோரும் வந்தார்கள். அப்போது அங்கிருந்த அடைக்கப்பனை பார்த்த நாராயணனுக்கு, ஜானகியை பார்க்கத்தான் இவன் வந்திருக்கான் என்று தோன்றியது. அந்த நினைப்பை உண்மையாக்குகிற மாதிரி ஜானகியும், அடைக்கப்பனும் கண்களால் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அடடே, நீங்க எப்ப தம்பி மெட்ராஸுக்கு வந்தீங்க?” என்று அடைக்கப்பனிடம் கேட்டார் நாராயணன்.

ஜானகியை பார்த்துக் கொண்டிருந்த அடைக்கப்பனோ, இந்த கேள்வியால் தடுமாறி, சுதாரித்துக்கொண்டு அவருக்கு பதில் அளிப்பதற்காக திரும்பினான்.

“எனக்கு இங்க மெட்ராஸ் ஆபிஸ்ல வேலை இருந்ததுனால, நேத்து தான் வந்தேன்” என்றான்.

“நீங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தா, உங்களையும் கூட்டிக்கிட்டு போயிருப்போமே” என்று கூறினார் நாராயணன்.

“அதனால என்னங்க பரவாயில்லை. ஆமா எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறீங்க சிதம்பரம்” என்று கேட்டான் அடைக்கப்பன்.

“அடுத்த மாசமே போட வேண்டியது தான்” என்றான் சிதம்பரம்.
“அவ்வளவு சீக்கிரமாவா” என்றான் அடைக்கப்பன்.

“அது வேற ஒண்ணும் இல்லை தம்பி, பொண்ணோட ஆயா சீக்கிரமா பேத்தியை கல்யாண கோலத்துல பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க. அதனால தான்” என்று அவனுடைய கேள்விக்கு பதிலுரைத்தார் நாராயாணன்.

“அப்புறம் எங்க வீடும் பக்கத்துல தான் இருக்கு, எல்லோரும் வீட்டுக்கு வாங்க.அம்மாவும் உங்களை வீட்டுக்கு கூப்பிட்டேன்னு சொல்லச் சொன்னாங்க” என்று கூறினான் அடைக்கப்பன்.

அப்போது உண்ணாவும், நானும் மறந்துட்டேன் மாமா, அத்தையும் உங்களை கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க” என்றாள்.

“நாங்க ஐந்து மணியை போல வரோம்” என்று அடைக்கப்பனிடம் கூறினார் நாராயணன்.

அடைக்கப்பனும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

மாலை சரியாக ஐந்து மணிக்கு, ஜானகி, சிதம்பரம்,அவர்களுடைய பெற்றோர் மற்றும் உண்ணா எல்லோரும் அடைக்கப்னின் வீட்டிற்கு வந்தார்கள்.

“வாங்க, வாங்க, எல்லோரும் வரணும்” என்றாள் அடைக்கப்பனின் அம்மா.

“சௌக்கியமா இருக்கீங்களா?” என்று கேட்டாள் ஜானகியின் அம்மா.

“ரொம்ப சௌக்கியம், எங்க இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராம போயிடுவீங்களோன்னு நினைச்சேன்”.

“அது எப்படி நாங்க வராம போயிடுவோம், தம்பி வேற கண்டிப்பா வீட்டுக்கு வரணும்னு சொல்லியிருக்கு. ஆமா, எங்க அடைக்கப்பனோட அப்பாவை காணோம்” என்று கேட்டார் நாராயணன்.

“அவுங்க, வேலை விஷயமா வெளியூர் போயிருக்காங்க, நாளைக்கு ராத்திரி வந்துடுவாங்க. ஆமா, பையனுக்கு பேசி முடிச்சுட்டீங்க போல இருக்கு” என்று கேட்டாள் அடைக்கப்பனின் அம்மா.

“ஆமா ஆச்சி, நல்ல இடமா இருந்துச்சு, எங்களுக்கும் பொண்ணை பிடிச்சுப்போச்சு. பேசி முடிச்சுட்டோம். இன்னும் தேதி முடிவு பண்ணலை. பத்திரிக்கையை அனுப்புறோம், கண்டிப்பா அண்ணனை கூட்டிக்கிட்டு வந்துடனும்” என்றாள் ஜானகியின் அம்மா.

“கண்டிப்பா நாங்க வரோம். சரி, பேசிக்கிட்டு இருங்க, நான் காப்பி போட்டுக்கிட்டு வரேன்” என்று எழுந்தாள் அடைக்கப்பனின் அம்மா.

உடனே, உண்ணாவும், ஜானகியும் எழுந்து பின்னாடியே போனார்கள்.

கொஞ்ச நேரத்தில் உண்ணாவும், ஜானகியும், காபியை எல்லோருக்கும் கொடுத்தார்கள்.

“பரவாயில்லை, பொண்ணை நல்லா வளர்த்திருக்கீங்க. காபி எல்லாம் நல்லா போடுறா” என்றாள் அடைக்கப்பனின் அம்மா.

“அவளுக்கு சமையல்ல நல்ல ஈடுபாடு” என்று பதிலுரைத்தாள் ஜானகியின் அம்மா.

“இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் கலியாணம் ஆவதற்கு முன்னாடி சமையல் கட்டு பக்கம் வராங்கண்ணா பெரிய அதிசயம் தான்”

மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க, மறுபடியும் அடைக்கப்பனும், ஜானகியும் கண்களால் காதல் பாஷை பேசிக்கொண்டிருந்தார்கள்.

“சரி, நாங்க கிளம்புறோம். அவசியம் கலியானத்திற்கு வந்துடுங்க” என்று கூறி எல்லோரும் கிளம்பி போனார்கள்.

அடைக்கபனின் அம்மாவோ அடைக்கப்பனிடம், “ரொம்ப நல்ல குடும்பமா இருக்கு. அதிலும் அந்த ஜானகி, ரொம்ப நல்லா பொண்ணா இருக்கா” என்றாள்.

அடைக்கப்பனுக்கு உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷம். அதை வெளியே காட்டாமல், “ஏம்மா, காபி போட்டுட்டா, ரொம்ப நல்லா பொண்ணா” என்று வேண்டுமென்றே சீண்டினான்.

“அப்படி இல்லடா, பி.இ. படிக்கிறோம்னு கொஞ்சம் கூட பந்தா இல்லாம, ரொம்ப எளிமையா இருக்கா. அதோட அடுப்படியில, என்னையும் , உண்ணாவையும், நீங்க காபி போடாதீங்க, நானே போடுறேன்னு சொல்லி, ரொம்ப நல்லா காபி போட்டா. அந்த ஆச்சியும் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரியிறாங்க. அந்த செட்டியாரும் தேவைக்கு அதிகமா பேசலை. மொத்தத்துல நல்ல குடும்பமா தான் தெரியிது” என்றாள்.

அடைக்கப்பன் மனதுக்குள், நம்ம வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சுடும்னு எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

“உனக்கும், இந்த மாதிரி ஒரு குடும்பத்துல பொண்ணை எடுத்தா நல்லா தான் இருக்கும். உம். உனக்குன்னு ஆண்டவன் யாரை எழுதி வச்சிருக்கானோ? என்றாள்.

அடைக்கப்பனோ, தன் காதலை சொல்ல, இது தான் சரியான சமயம் என்று எண்ணிக்கொண்டு,

“ஏம்மா, பேசாம இந்த குடும்பத்துலேயே பொண்ணை எடுத்தா” என்று இழுத்தான்.

“என்னடா சொல்ற என்றாள் அவனுடைய தாய்.

“ஆமாம்மா , பேசாம இந்த ஜானகியையே நீ மருமகளாக்கிக்கிட்டா என்ன?” என்று மீண்டும் கேட்டான்.

அவனையே வைத்த கண் வாங்காமால் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனுடைய தாய்.

“என்னம்மா அப்படி பார்க்கிற” என்றான் .

“எப்படிடா, உனக்கு இந்த மாதிரியான ஒரு எண்ணம் வந்துச்சு?”

“இல்லம்மா, நீ தான் சொன்னியே, அவுங்க ரொம்ப நல்லவங்களாக இருக்காங்க, அந்த பொண்ணும் ரொம்ப நல்லா பொண்ணா இருக்குதுன்னு, அதனாலதான் இப்படி கேட்டேன்” என்றான்.

“டேய், உன்னைய பத்தி எனக்கு தெரியும், உண்மைய சொல்லு என்றாள்.

அடைக்கப்பனும், ஜானகியை முதன் முதலில் பார்த்ததிலிருந்து, அவளை விரும்புவது வரைக்கும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, அம்மா என்ன சொல்லப்போறாங்களோன்னு, உள்ளுக்குள் பயந்துகொண்டு, அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

                                                                  -    தொடரும்

Wednesday, February 27, 2013

வீட்டு வேலை – நிறைவு


ஒரு வழியா வீட்டு அம்மணிக்கு ஆபிரேஷன் முடிஞ்சிடுச்சு. ஆனா மறு நாள்லேருந்து, எனக்கு வீட்டு வேலை ஆரம்பமாயிடுச்சு. காலைல நான் எழுந்து குளிச்சு, டீ போட்டு குடிச்சு, அம்மணியை எழுப்பி அவுங்களுக்கு இடது கண்ல(ஆபிரேஷன் பண்ணாத கண்) ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு மருந்து போட்டு, அப்புறம் பாலை கலந்து குடுத்து முடிக்கும்போது சரியா, சின்ன மகாராணி எழுந்திருப்பாங்க. அவுங்களை தூக்கி வச்சுக்கிட்டு, அதையும்,இதையும் காமிச்சு பாலை கொடுத்து முடிச்சு, அப்புறம் குளிப்பாட்டிகிட்டு இருக்கும்போதே பெரிய மாகாரணி எந்திரிச்சிடுவாங்க. சின்ன மகாரணியை குளிப்பாட்டி முடிச்சு, டிரஸ் போட்டுவிட்டு, பெரிய மகாரணியை கவனிக்க ஆரம்பிக்கணும். அவுங்களை ரெடி பண்ணி, காலைல சாப்பிடுறதுக்கு பிரட் கொடுத்து, டே-கேருக்கு(day care) கூட்டிக்கிட்டு போகணும். சின்னவங்களை வீட்டில விட்டுட்டு போக முடியாது, அதனால அவுங்களையும் கார்ல உட்காரவச்சு பெல்ட்டை போட்டு, அங்க போனவுடனே அந்த பெல்டை கழட்டி, அவுங்களை தூக்கிக்கிட்டு, பெரியவங்களை கையை புடிச்சு கூட்டிக்கிட்டு போயி விட்டுட்டு வந்து, மறுபடியும் சின்னவங்களுக்கு பெல்ட்டை போட்டு, திருப்பி வீட்டுக்கு  வந்து , கார்லேருந்து அவுங்களை இறக்கி விட்டுட்டு, அம்மணிக்கு வலது கண்ல மருந்து விடணும். அதுவும் சரியா ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு மருந்தும், நாலு மணி நேரத்துக்கு ஒரு மருந்தும் போடணும். அதற்கப்புறம்  பிரட் டோஸ்ட் பண்ணி அவுங்களுக்கு சாப்பிட கொடுத்துட்டு, நானும் சாப்பிடுவேன். சிங்க்ல இருக்கிற கொஞ்ச பாத்திரத்தை கழுவி, கவுத்துட்டு வந்து உட்காரலாம்னு பார்த்தா, சின்னவுங்க அப்ப தான் டாய்லெட் போயிருப்பாங்க. உடனே அவுங்களுக்கு நாப்பியை மாத்திட்டு, அரிசையை எடுத்து குக்கர்ல வச்சுட்டு அப்பாடான்னு உட்காருவேன். கொஞ்ச நேரத்துலேயே, ரெண்டு மணி நேரத்துக்கு போட வேண்டிய மருந்துக்கான நேரம் வந்துரும். மறுபடியும் அவுங்களுக்கு கண்ல மருந்தைப் போட்டுட்டு உட்காருவேன். சின்னவுங்களுக்கு, என்னது இவன் எப்ப பார்த்தாலும் அம்மாவையே கவனிச்சிக்கிட்டு இருக்கானே, நம்மளை கவனிக்க மாட்டேங்கிறானேன்னு நினைச்சு அழுக ஆரம்பிச்சுடுவாங்க. இவுங்க அழுவுறாங்களேன்னு தூக்க போனா, என்னைய தூக்க விடமாட்டாங்க. அம்மா தான் தூக்கணும்னு, ரொம்ப பொறுமையை சோதிப்பாங்க. அப்புறம் எப்படியோ, கஷ்டப்பட்டு அவுங்களை தூக்கிக்கிட்டு, வீட்டுக்கு பின்னாடி போயி ஆவுங்களோட கொஞ்ச நேரம் விளையாடிட்டு, உள்ள வந்தா மதியம் சாப்பிடுறதுக்கான நேரம் வந்துடும். உடனே நண்பர்களின் புண்ணியத்தில், அவர்கள் கொடுத்த சாப்படை எல்லாம் எடுத்து சூடு பண்ணி, முதல்ல சின்னவங்களுக்கு குழவா பிசைந்து, ஊட்டி விட ஆரம்பிப்பேன். அவுங்க பசிக்கு ஒரு நாலு வாய் மட்டும் வாங்கிக்கிட்டு, அப்புறம் சாப்பிட மாட்டேன்னு ரகளை பண்ணுவாங்க. மறுபடியும் அவுங்களை தூக்கிக்கிட்டு வீட்டுக்கு பின்னாடி போயி காக்கா, குருவி எல்லாம் காமிச்சு, எப்படியோ கஷ்டப்பட்டு கொடுத்து முடிச்சுடுவேன். சில நாள்ல, அதுல கொஞ்சத்தை வச்சுடுவாங்க. உடனே அம்மணி, உங்களுக்கு அவளை டாக்கிள் பண்ண தெரியலை. நானாயிருந்தா எப்படியாவது அவளுக்கு ஊட்டி விட்டுடுவேன்னு புலம்புவாங்க (சின்னவங்க ஒழுங்கா சாபிடலையாம்!!). அப்புறம் தட்டுல அவுங்க கேக்கிறதை எல்லாம் எடுத்து வச்சு கொடுத்துட்டு, நானும் சாப்பிட்டு முடிச்சு, மறுபடியும் அந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி முடிச்சா, பெரியவங்களை கூப்பிட போற நேரம் வந்துடும்,அவுங்களை போயி கூட்டிக்கிட்டு வந்து, ரெண்டு மகாரணிகளுக்கும்,அம்மணிக்கும் பாலை கொடுத்து, அப்புறம் நான் டீயை போட்டு குடிச்சு, வீட்டுல இருக்கிற நொறுக்குத் தீனியை ரெண்டு பேருக்கும் சாப்பிட கொடுத்து மறுபடியும் அம்மணிக்கு கண்ணுல மருந்தை போட்டுவிட்டு உட்கார்ந்தா, ரெண்டு மகாரணிகளுக்குள்ள சண்டை வந்துடும், அந்த சண்டையை பஞ்சாயத்து பண்ணி முடிச்சு, ராத்திரிக்கு நண்பர்கள் கொடுத்த மாவை வச்சு தோசையை எல்லோருக்கும் ஊத்திக் கொடுத்து,ஊட்டிவிட்டு,நாங்க சாப்பிட்டு முடிச்சு, அந்த பாத்திரதை எல்லாம் கழுவி வச்சா படுக்கிற நேரம் வந்துடும். மறுபடியும் கண்ணுக்கு மருந்து போட்டுட்டு, ரெண்டு பேரையும் தூங்க வச்சுட்டு, சரி, நாம போய், இந்த வலைப்பூவுக்கு எதாவது கிறுக்கலாம்னு யோசிப்பேன். அது வெறும் யோசிப்போட முடிஞ்சிடும். ஏன்னா கண்ணு ரெண்டும் என்னைய தூங்க வைன்னு கெஞ்ச ஆரம்பிச்சிடும்.அப்புறம் எங்கேருந்து கணினி பக்கம் போறது, அதனால நானும் தூங்க போயிடுவேன். இதுல நடுவுல மூணு நாலு தடவை துனியெல்லாம் துவைச்சு காயப்போட்டு, அப்புறம் மடிச்சு வைக்கணும். வீடு ரொம்ப குப்பையா இருக்குனு, அம்மணி ஒரே புலம்பல், அதை நான் இந்த காதுல வாங்கி அந்த காதுல வெளியே விட்டுடுவேன். ஒரு நாள் அவுங்களுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு, நானே எப்படியோ வீட்டை முழுக்க கூட்டுரேன்னாங்க. ஐயையோ, வம்பா போச்சேன்னு நினைச்சுக்கிட்டு (அவுங்க ஒரு நாலு வாரத்துக்காவது குனியக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க), அதனாலே நானே வீட்டை கூட்டினேன். இதுல பெரிய மகாராணி வாரத்துல மூணு நாள் தான் டே-கேருக்கு போவாங்க. மத்த நாள்ல எல்லாம் வீட்டுல தான் இருப்பாங்க. அப்ப, ரெண்டு பேரையும் பார்த்துக்கிறது இருக்கே, அப்பப்பா! நாக்கு தள்ளிடும்.
அந்த ரெண்டு வாரத்துல தான் தெரிஞ்சுது, வீட்டு வேலையும் ஒண்ணும் சாதாரணமானது இல்லைன்னு. நான் ஆபிஸ்ல இருக்கும்போது, மெயில், தினமலர், விகடன்ன்னு இப்படி எல்லாத்தையும் பாத்துக்குவேன். ஆனா அந்த ரெண்டு வாரமும், என்னால ஒண்ணு கூட பார்க்க முடியலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இந்தியாவில வீட்டு வேலை பார்க்கும் மனைவிக்கு, கணவன் சம்பளம் தர வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவர போறாங்கன்னு பேப்பர்ல படிச்சேன். கணவன் வெளியில போய் சம்பாதிக்கிறான், மனைவி வீட்டில் இருந்து, வீட்டை கவனிச்சுக்கிறாங்க, இதுல எதுக்கு மனைவிக்கு சம்பளம்னு யோசிச்சேன். ஆனா, இந்த ரெண்டு வாரம் வீட்டை கவனிச்சுக்கிட்டதுல, அவுங்களுக்கும் சம்பளம் முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அது அவுங்களை உற்சாகப்படுத்தும். மேலும் அவுங்களுக்கு நாமளும் சம்பாதிக்கிறோம்னு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். அதனால நான் அடுத்த மாசத்திலிருந்து அவுங்களுக்கு ஒரு சம்பளத்தை போட்டுக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். 




Friday, February 15, 2013

காதலர் தினம்


எங்களுக்கு திருமணமான புதுசுல, வீட்டு அம்மணி ஒவ்வொரு காதலர் தினத்துக்கும், “இன்னைக்கு காதலர் தினம், எனக்கு என்னங்க வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு கேப்பாங்க”. நானும் சலிக்காம நமக்கு தான் 365 நாளும் காதலர் தினமாச்சே, அப்புறம் எதுக்கு தனியா, இந்த நாளை வேற கொண்டாடணும்னு சொல்லி ஒண்ணும் வாங்கித்தராம மழுப்பிவிடுவேன். இந்த பதிலையே கேட்டுக்கேட்டு, அவுங்களுக்கும் புளிச்சுப்போயிருக்கும்னு நினைக்கிறேன்,அதனால அந்த மாதிரி கேக்கிறதையே நிறுத்திட்டாங்க. இந்த வருஷம் எங்களுக்கு 14வது காதலர் தினம். அடுத்த வருஷம் எதாவது நல்லதா வாங்கிக்கொடுக்கலாம், அதனால இந்த வருஷம் அதற்கு முன்னேற்பாடா, ஒரு ரோசா பூவை வாங்கிக்கொடுக்கலாம்னு நினைச்சு, ஆபிஸ்லேருந்து வரும்போது, ஒவ்வொரு பூக்கடையா ஏறி எறங்கினேன். சொல்லி வச்ச மாதிரி, எல்லா கடன்காரங்களும் ஒத்த ரோசா பூவை பத்து டாலருக்கு விக்கிறாணுங்க. அடப்பாவிகளா, இதுக்கு எங்க வீட்டிலேயே ஒரு பூவை பறிச்சு, அதுக்கு கொஞ்சம் ஜிகினா வேலை பண்ணி, கடைல வாங்கின மாதிரி செட்டப் செஞ்சு அவுங்களுக்கு, காதலோடு கொடுக்கலாமேன்னு நினைச்சு, வீட்டுக்கு வந்தேன். ஆனா பாருங்க, எங்க வீட்டுல இருக்குற ஒரு செடிக்கும் நாங்க தண்ணியே ஊத்தமாட்டோம். அப்பப்ப பெய்யுற மழைல தான் அந்த செடிங்க உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. வீட்டுக்கு வெளியில இருக்கிற மூணு,நாலு ரோசாச்செடியில, ஒரு பூ கூட பூக்கலை. அந்த செடிங்க எல்லாம், “வா மகனே, நீங்க எங்களுக்கு ஒழுங்கா தண்ணி ஊத்த மாட்டீங்க, ஆனா நாங்க மட்டும் நீங்க நினைக்கிற நேரத்துல பூ பூக்கணுமா,,அஸ்கு ,புஸ்குன்னு நினைச்சிருக்கும் போல. ஆக மொத்தத்துல வீட்டிலிருந்து பூவை பறிச்சு கொடுக்கலாம்னு நினைச்ச நினைப்புலையும் மண்ணு விழுந்துடுச்சு. உம், அப்படி சொல்ல முடியாது, எங்க வீட்டு அம்மணிக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டு, வீட்டுக்குள்ள போனேன். கொஞ்ச நேரம் வரைக்கும் பார்த்தேன், அவுங்களா கேக்கிற மாதிரி தெரியலை, அதனால, நானே என்னம்மா, இன்னைக்கு காதலர் தினமாச்சே, நீ ஒண்ணுமே என்கிட்ட கேக்கலை, அப்படின்னு அவுங்க வாயை கொஞ்சம் பிடுங்கினேன். உடனே அவுங்களுக்கு கோபம் வந்துடுச்சு. கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல ஒரு காதலர் தினத்தன்னைக்காவது எனக்கு ஒரு பூவாவது வாங்கிக் கொடுத்திருக்கிங்களான்னு கேட்டாங்க. (அவுங்க கணக்குல கொஞ்சம் வீக், கல்யாணம் ஆகி எத்தனை காதலர் தினம் வந்திருக்குன்னு கரெக்டா சொல்ல தெரியலை!!!). ச்சை, நம்ம வீட்டு பூச்செடிங்க எல்லாம் காலை வாரி விட்டுச்சேன்னு நினைச்சுக்கிட்டு, கோவிச்சுக்காதேடா, அடுத்த வருஷம் இதே நாள்ல சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லி ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். (இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல, அப்ப பார்த்துக்கலாம்னு ஒரு நம்பிக்கை!!!).

உண்மையான காதல் எந்த பருவத்தில வருதுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். எனக்கு தெரிஞ்சதை, இந்த கவிதைல சொல்லியிருக்கிறேன் (கவிதைன்னு நீங்க நம்புவீங்க என்ற நம்பிக்கையில்,கவிதைன்னு சொன்னேன்). 


விடலைப் பருவத்தில்
வருகிற காதலோ
வெறும் இனக் கவர்ச்சியே

திருமணம் முடிந்தவுடன்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமம் தான் அதிகமாக இருக்கும்

நடுத்தர வயதில்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமமும் காதலும் சரிசமமாக இருக்கும்

வயதான காலத்தில்  
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
நூறு சதவீதம் காதல் மட்டுமே இருக்கும்

எல்லோருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். இன்னைக்கு காதலர் தினமா இருக்கிறதுனால, இந்த பதிவை போடும்படி ஆகிவிட்டது. இல்லை என்றால், என்னோட சோக கதையை, அதாங்க, நான் கஷ்டப்பட்டு வீட்டு வேலை செஞ்சதை பத்தி எழுதியிருப்பேன். கண்டிப்பா அடுத்த பதிவு அது தாங்க.

Monday, February 11, 2013

வீட்டு வேலை


எங்க வீட்டு அம்மணி, நீங்க பாட்டுக்கு காலைல 7.30 மணிக்கு கிளம்பி போயி ராத்திரி 7.30 மணிக்கு தான் வீட்டுக்கு வரிங்க. அதனால உங்களுக்கு நான் வீட்டுல செய்யுற வேலை எதுவுமே தெரிய மாட்டேங்குது. ஒரு நாளாவது, நான் உங்களை மாதிரி வெளில போயிட்டு, நீங்க வீட்டு வேலை எல்லாம் செஞ்சு பார்த்தா தான் தெரியும், ஆபிஸ் வேலையை காட்டிலும் வீட்டு வேலை எவ்வளவு கஷ்டம்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. கெட்டதை எல்லாம் யாராவது சொன்னாங்கன்னா, காதை பொத்திக்கணும்னு சின்ன வயசுல அம்மா சொன்னது தான் அந்த நேரத்துல நியாபகத்துக்கு வருமா, அதனால நானும் அவுங்களோட இந்த புலம்பலை எல்லாம் கேக்குற மாதிரி ஒரு காதுல கேட்டு இன்னொரு காதுல வெளியே விட்டுருவேன் (அவுங்க முன்னாடி காதை பொத்திக்க முடியுமா என்ன!!!).இவங்களுக்கு எல்லாம் வீட்டை நிர்வாகம் பண்றதுனால, நாட்டையே நிர்வாகம் பண்றோம்னு ஒரு நினைப்பு, அதான், எப்பப்பார்த்தாலும் உலகத்துலேயே, வீட்டு வேலை செய்யுறது தான் ரொம்ப கஷ்டமான வேலைன்னு ஒரு பில்டப் கொடுத்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சுப்பேன். ஆனா அவுங்களோட இந்த புலம்பல் ஒரு நாளைக்கு உண்மையாக போகுதுன்னு எனக்கு அப்பவெல்லாம் தெரியலை.

எங்க வீட்டு அம்மணிக்கு ரெண்டு கண்ணுலையும் பிரஷர் இருக்கு,அதுலேயும் ஒரு கண்ணு ரொம்பவே மோசமா பாதிச்சிருச்சு. அதனால அந்த கண்ணுக்கு ஆபிரேஷன் செஞ்சாகணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. மூணு வாரத்துக்கு முன்னாடி, அந்த ஆபிரேஷனை வீட்டு அம்மணி செஞ்சுக்கிட்டாங்க. இந்த ஆபிரேஷன் செஞ்சதுனால ஆறு வாரத்துக்கு ரொம்ப வேலை எல்லாம் செய்யக்கூடாது, முக்கியமா தலையை குனியக்கூடாது, அதிக எடை உள்ள பொருளையோ,குழந்தையோ தூக்கக்கூடாது. அப்புறம் சமையல் செய்யக் கூடாதுன்னு, இப்படி ஏகப்பட்ட கூடாதுகளை எல்லாம் டாக்டர் சொன்னாரு. ஆஹா, நாம நம்மலாள ஆறு வாரம் எல்லாம் லீவு போட முடியாது, எப்படியும் ஒரு ரெண்டு வாரமாவது லீவு போட்டு, வீட்டு வேலை எல்லாம் செய்யணும் போல இருக்கேன்னு அப்பத்தான் என்னோட மண்டைல ஒரைச்சது. சரி, கழுதை வீட்டு வேலை என்ன பெரிய கொம்பான்னு நினைச்சுக்கிட்டு கோதாவுல இறங்கிட்டேன். ஆபிரேஷன் செய்யுற அன்னையிலிருந்தே என்னோட பொறுமையை சோதிக்கிற நாள் ஆரம்பமாயிடிச்சு. 12.30 மணிக்கு ஆஸ்பிட்டல்ல இருக்கணும்னு சொன்னாங்க. நாங்களும் எங்களோட நண்டு,சிண்டை எல்லாம் கூட்டிக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு போனோம். ஒரு மணி நேரம் கழிச்சு, ஒரு நர்சம்மா வந்து, வீட்டு அம்மணியை கூட்டிக்கிட்டு உள்ளே போனாங்க. அவுங்க உள்ள போன உடனே, என்னோட ரெண்டாவது மகாரணியார்  அம்மான்னு ஒரு கத்து கத்துன்னாங்க பாருங்க, அங்க உட்கார்ந்திருந்தவுங்க எல்லாரும் குழந்தைக்கு என்னமோ ஆயிடிச்சுன்னு என் பக்கத்துல வந்து என்னாச்சு, என்னாச்சுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும், ஒண்ணும் ஆகலை, அவுங்க வந்து “அம்மா கொடுக்கு” அதனால தான் இப்படின்னு சொன்னேன். (சின்ன மகாரணிக்கு அம்மா மட்டும் இருந்தா போதும். அதுவும் ராத்திரியாயிட்டா, நான் என்ன கொடுத்தாலும் சரி, நீ வேண்டாம், எனக்கு அம்மா தான் வேணும்னு சொல்லி, என்கிட்டவே வர மாட்டாங்க). அங்க இருந்த இன்னொரு தாத்தா, பெரிய குழந்தை சமத்தா இருக்குதே, பரவாயில்லையேன்னு சொன்னாரு. நான், அவருக்கிட்ட, இவுங்க “அப்பா கொடுக்கு” அதான் கத்தலை அப்படின்னேன்(இவுங்க சின்னவுங்களுக்கு நேர் எதிர், இவுங்களுக்கு நான் இருந்தா போதும். அதுவும் சனி, ஞாயிறுல எல்லாமே நான் தான் இவங்களுக்கு பண்ணனும்). சின்ன மகாராணியோட அழுகையை கேட்டு, வெளியே வந்த இன்னொரு நர்ஸ், நீங்க ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்து, உங்க மனைவியை கூட்டிக்கிட்டு போங்கன்னு சொல்லி, நேரடியா வெளியில போங்கன்னு சொல்லாம என்னைய வெளியே துரத்தி விட்டுட்டாங்க. நானும் ஒரு ரெண்டு மணி நேரம் தானே, எப்படியாவது இவுங்க ரெண்டு பேரையும் சமாளிப்போம்னு நினைச்சுக்கிட்டு, ரெண்டு பேரையும் வெளியே கூட்டிக்கிட்டு வந்துட்டேன். ஆனா ரெண்டு மணி நேரம் எல்லாம் ஆகலை, அஞ்சு மணி நேரம் ஆச்சுங்க, வீட்டு அம்மணி வெளியில வர்ரதுக்கு. ஆபிரேஷன் என்னமோ ஒன்றரை மணி நேரம் தான். மிச்ச நேரம் எல்லாம் அவுங்க வெளியில உட்கார்ந்து காத்துக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா, உள்ள உட்கார்ந்து காத்துக்கிட்டு இருந்திருக்காங்க. அந்த அஞ்சு மணி நேரம், ரெண்டு மகாரணிகளையும் பார்த்துக்கிட்டு இருந்ததே பெரிய சாதனையா போச்சு எனக்கு. சரி, அந்த ரெண்டு வாரத்திலே, நான் எப்படி வீட்டு வேலை எல்லாம் செஞ்சேன்னு அடுத்த பதிவுல சொல்றேன் (பாத்திரம் எல்லாம் கழுவி, ரொம்ப அசதியாயிடுச்சு!!!)