Monday, November 24, 2014

நவம்பர் மாதம்–இல்லை! இல்லை!! இது மவம்பர் மாதம்(ஆண்களின் உடல் ஆரோக்கியம்)


 
 

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக “மவம்பர் (Movember Foundation)” என்னும் ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனம் , இங்கு ஆஸ்திரேலியாவில் ஆண்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்  மாதம் முழுவதும் மீசையை மழிக்காமல் வளரக்கச்  சொல்லி இதில் பங்குப்பெறுமாறு அழைக்கிறது. அதன்படி இந்த விழிப்புணர்வில் பங்குபெறும் ஆண்கள், முதலில் அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு , அந்த இணையத்தளத்தில் , ”MO SPACE” என்று ஒரு பக்கத்தை உருவாக்கிக்கொண்டு, நவம்பர் மாதம் முழுவதும் மீசையை வழிக்காமல் இருப்பார்கள். இப்படி அவர்கள் தங்களின் முக அழகை மாற்றிக் கொண்டு,இந்த விழிப்புணர்வில் பங்குபெறுவதால். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் நண்பர்கள்,உறவினர்கள்,உடன் பணிபுரிபவர்கள் என எல்லோரும் அவரின் அந்த இணையத்தள பக்கத்திற்கு சென்றோ அல்லது அவரிடம் நேரிடையாகவோ பணத்தை அன்பளிப்பாக அளிப்பார்கள். இப்படி இந்த விழிப்புணர்வில் பங்குபெற்ற அனைவரின் மூலமாக கிடைக்கும் பணத்தை எல்லாம் அந்த தொண்டு நிறுவனம், ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கு அளித்துவிடும். இதில் ஆண்கள் மட்டும் பங்கு பெறுவதில்லை, பெண்களும் பங்குக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள், ஓட்டு மீசையை வைத்துக்கொண்டு, இந்த விழிப்புணர்வில் பங்குக்கொள்கிறார்கள். இதில் பங்குபெறும் ஆண்களை “MOBROS” என்றும் பெண்களை “MOSISTAS” என்றும் அழைக்கிறார்கள்.  

இந்த விழிப்புணர்வில் எனக்கு தெரிந்த தமிழ் நண்பர்கள் யாராவது பங்கேற்றிக்கிறார்களா என்று பார்த்த பொழுது, இதோ நான் இருக்கிறேன் என்று கூறி நண்பர் திரு.ஜவஹர்லால் நேரு அவர்கள் சென்ற ஆண்டு இந்த விழிப்புணர்வு மாதத்தில் கலந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை அனுப்பினார். (இவர் பொதுவாக மீசையை மழிப்பவர்).  

 




பெண்களுக்கு வரும் மார்பகப் புற்று நோயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆண்களுக்கு வரும் இந்த புரோஸ்டேட் புற்று நோயைப் பற்றி நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. இந்த நோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி இணையத்தளத்திலும், மருத்துவ நண்பரிடமும் படித்து கேட்டதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஆண்களுக்கு வயதாகும்போது, இந்த புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு பிரச்கனைகள் ஏற்படாமலிருக்க அந்த மருத்துவ நண்பர் கூறிய அறிவுரைகள் என்னவென்றால்,

·         தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். (இந்த தண்ணீர் தான் நம்முடைய உடம்புக்கு எவ்வளவு நல்ல வேலைகளை செய்கிறது)

·         இருக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு,ஜீன்ஸ் பாண்ட் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். (இதுக்குத்தான் நம்மூரில் அந்த காலங்களில் பட்டாப்பட்டி டிரௌசரை அணிந்து வேட்டியை அணிந்துகொண்டார்களோ!!!)

·         சில படங்களில், நகைச்சுவை என்ற பெயரில்,”நான் உள்ளாடையை அணியவில்லை என்று கூறுவார்கள்” அப்படி உள்ளாடை அணியாமல் இருக்க்மான பாண்ட் அணிந்தாலும் இந்த புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாம்.

·         ஆண்களாகிய நாம் எப்பொழுதும் அலைப்பேசியை பாண்ட் பாக்கெட்டில் தான் வைத்திருப்போம். அலைப்பேசியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மூலமாகவும் இந்த நோய் வரக்கூடிய அபாயம் உள்ளது (அடக்கடவுளே. அப்புறம் எங்க தான் அந்த போனை வைத்துக்கொள்வதாம்!!!)

·         புகைப்பிடிப்பதுனாலும் இந்த நோய் வருமாம்(புகைப்பிடிப்பதால் எந்த நோய் தான் வராது!!!!)

·         கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவு வகைகளை தவிர்க்து விட வேண்டும். அதாவது இந்த ஜங்க் உணவுகளை தவிர்க்து விட வேண்டும்.

·         பழங்கள்,காய்கள் போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.

·         உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதாவது BMI (Body Mass Index) சரியாக இருக்க வேண்டும்.

 
இங்கு, வருடந்தோறும் ஒரு மாதம் முழுவதும் இந்த நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இந்த விழிப்புணர்வை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.

 
பின்குறிப்பு:

பல வருடங்களுக்கு முன் நான் லண்டனுக்கு சென்றபோது, அங்குள்ளவர்களைப் பார்த்து, எனக்கும் மீசையை எடுத்தால் என்ன என்று ஒரு விபரீத ஆசை தோன்ற, நானும் உடனே மீசையை எடுத்துவிட்டேன். எடுத்த பிறகு தான் தெரிந்தது, ஏண்டா எடுத்தோம்னு, ஏன்னா, என் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே சகிக்கலை. போதாக்குறைக்கு என்னுடன் பணிபுரிந்த தமிழ் நண்பர்கள் எல்லாம், டேய், நாங்க தினமும் உன்னைய பார்த்து, அணு அணுவாக செத்துக்கிட்டு இருக்கோம். ஏதாவது செய்து, சீக்கிரம் மீசையை வளர்த்துக்கோன்னு சொல்லி கடுப்படித்தார்கள்”. இப்ப அதை நினைச்சு பார்க்கும்போது, நண்பர் கில்லர்ஜி தான் நியாபகத்துக்கு வந்தாரு. அவருடைய புகைப்படத்தை பார்த்தபோது, எப்படித்தான் இப்படி மீசையை உரம்போட்டு வளர்க்கிறாரோன்னு தோணுச்சு. இவர் நவம்பர் மாதம் மட்டும் இங்கு வந்தால், இவர் தான் அதிகமான அன்பளிப்பை அந்த தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியிருப்பார். அவரை புகைப்படத்தில் பார்க்காதவர்கள் இங்கு சென்று அவரைப் பார்க்கவும் - கில்லர்ஜியின் புகைப்படம்

Wednesday, November 19, 2014

பாவப்பட்ட ஜீவன்களான ஆண் சகோதரர்கள் அனைவருக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்!!!!!



“எலேய், மாடசாமி இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமாடா?”

“இன்னைக்கு புதன் கிழமை தானே, அதுக்கு என்ன சேகரு”

“அதுக்கு என்னவா? சரி, மார்ச் 8ஆம் தேதி என்ன நாள்னு தெரியுமா உனக்கு?

“ஓ! அதுவா, அன்னைக்கு பெண்கள் தினம் ஆச்சே.”

“பெண்கள் தினம் எல்லாம் உனக்கு தெரியுது, ஆனா இன்னைக்கு ஆண்கள் தினம்னு தெரியலை இல்ல மாடசாமி.”

என்னது, ஆண்கள் தினமா? அப்படி ஒரு தினம் இருக்குதா என்ன?”

சரியாப்போச்சு, உன்னைய மாதிரி தான் இங்க, நிறைய ஆம்பிளைங்களுக்கு ஆண்கள் தினம்னு ஒண்ணு இருக்கிறதே தெரியலை. 1999லிருந்து இந்த நாளை அதாவது நவம்பர் 19ஆம் தேதியை ஆண்கள் தினம்னு கொண்டாடிக்கிட்டு வராங்க”.

அடப்பாவிகளா, உலகம் முழுக்க, பெண்கள் தினத்தை என்னமா விளம்பரம் பண்ணி கிராமத்துல இருக்கிற எனக்கு கூட தெரிய வச்சுட்டாணுங்க. ஆனா பாரு இந்த ஆண்கள் தினத்தை ஒரு பயலும் சொல்லவே இல்லை. ஆமா, இந்த டிவிக்காரனுங்க கூட “பெண்கள் தின ஸ்பெஷல்ன்னு சொல்லி ஏதாவது போடுவானுங்க,ஆனா ஆண்கள் தின ஸ்பெஷல்ன்னு ஒண்ணும் போடக்காணோமே சேகரு”.

“டி‌விக்காரங்களுக்கே தெரியாதோ என்னமோ,யார் கண்டா”.

நீ என்னமோ 1999லேருந்து இந்த நாளை கொண்டாடுறாங்கன்னு சொல்ற, ஆனா நம்ம நாட்டில கொண்டாடுறாங்களா சேகரு?

“வெஸ்ட் இண்டீஸ் நாட்டுல தான் இந்த நாளை முதன் முதலா கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. அப்புறம் ஆஸ்திரேலியாவுல 2003லேருந்தும், இந்தியாவுல 2007லேருந்தும் கொண்டாடுறாங்க. இன்னும் நிறைய நாடுகளிலும் கொண்டாடுறாங்க மாடசாமி”

“நம்ம ஆண்களுக்கு எப்பவுமே விளம்பர படுத்திக்க புடிக்காது இல்ல, அதனால தான் இந்த நாளையும் விளம்பரப்படுத்தல போல”

“சரியா சொன்ன மாடசாமி, நாம என்னைக்கு தான் நம்மளை முன்னிருத்தியிருக்கோம் சொல்லு, அந்த காலத்துல வேணா, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம், ஆனா இந்த காலத்துல நாம எல்லாத்திலும் பின்னாடி நின்னு, பெண்களைத்தானே முன்னாடி நிறுத்துறோம்”.

“ஆமா,ஆமா, படிக்கிற பசங்க கூட அதைத்தானே பண்றாங்க சேகரு”

“படிக்கிற பசங்க, பெண்கள் முன்னேறட்டும்னு விட்டுக்கொடுக்கிறாங்க. ஆனா, இந்த பெண்கள் எப்பத்தான் புரிஞ்சுப்பாங்களோ!”

“இப்ப எல்லாம் சில பெண்கள் தன் கணவனோட குடும்பத்தாரை பிடிக்கலைன்னா, உடனே பொய்யா வரதட்சணை வழக்கைப் போட்டு, அப்பாவி கணவனையும், அவனோட குடும்பத்தாரையும் கம்பி என்ன வச்சிடுறாங்க சேகரு”.

“பெண்களுக்கு உள்ள சுதந்திரத்தை சில பெண்கள் தப்பா பயன்படுத்துறதுனாலத்தான், உண்மையான சுதந்திரத்தை அவுங்களால முழுசா அனுபவிக்க முடியலை”.

அடடா, ஆண்கள் தினம்னு சொல்லி, இப்ப பெண் சுதந்திரத்துக்கு போயிட்டோம் பாரு சேகரு”

“ஆமா இல்ல, என்ன பண்றது, பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம்னு, நம்மளை மாதிரி ஆண்கள் நினைச்சுக்கிட்டே இருக்கிறதுனால தான், ஆண்கள் தினமான இன்றைய தினத்தை கூட நாம பெருசா எடுத்துக்கிறதில்லை மாடசாமி”.

“ஆண்கள் தினம்னு ஒண்ணு இருக்குது, அது இன்னைக்குத்தான்னு சொல்லி எனக்கு புரிய வச்சதுக்கு ரொம்ப டாங்சு சேகரு”.

ஆண்கள் தின வாழ்த்துக்கள் சகோதரர்களே!!!.

பின்குறிப்பு – அதிவிரைவில் ஆண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய ஒரு பதிவு உங்களுக்காக வரவிருக்கிறது.  

Monday, November 17, 2014

கனவில் வந்த காந்தி(10)






என் கனவுல கொஞ்ச நாள் வரைக்கும் அனுஷ்கா, த்ரிஷா, ஹன்ஸிகா போன்றவர்கள் தான் வந்துக்கொண்டிருந்தார்கள். அப்ப அமலாபால் வரலையான்னு கேட்காதீங்க,அவுங்க எனக்கு உடன்பிறவாத தங்கச்சியாக்கும்


ஆனா எப்ப பதிவுலக நண்பர் மீசைக்கார கில்லர்ஜி அறிமுகம் ஆனாரோ, 



                                                                கில்லர்ஜி

அன்னையிலிருந்து இவுங்க எல்லாம் என் கனவுல வருவதே இல்லை. ஏன்னா, எல்லோருக்கும் அவரோட மீசையைப் பார்த்து பயமாம். இதை நான் சொல்லலை, அவுங்களே என்னோட கனவுல கடைசியா ஒரு தடவை வந்து இதை சொல்லிட்டு, நீங்க அவருக்கு நண்பராக இருக்கீங்க, அதனால உங்க கனவுலேயும் நாங்க வர மாட்டோம்னு சொல்லிட்டாங்க. என்னடா இது, விஷயம் இவ்வளவு சீரியஸா இருக்கேன்னு கேட்டா, அவுங்க எல்லோரும் சொன்ன பதில் என்னன்னா, ஒரு நாள் அவுங்களும் அவரோட கனவுல வந்திருக்காங்க. ஆனா நம்ம நண்பர் சும்மா இருக்காமா, தன்னோட பால் வடியும்(?) முகத்தை அவுங்க கிட்ட காமிச்சிருக்காரு, அவ்வளவு தான், சின்னப்பசங்க பூச்சாண்டியைப் பார்த்து பயந்து போன மாதிரி அவுங்க எல்லாம் பயந்துட்டாங்களாம். அதனால அவரோட கனவுல இவுங்க தரிசனம் கொடுக்கிறதே இல்லையாம். இவரோட நண்பனாக இருக்கிற ஒரே காரணத்துக்காக, என் கனவுலேயும் இவுங்க வர மாட்டேன்னுட்டாங்க. என்ன கொடுமைங்க இது!!!....
.
இப்ப என்னடான்னா, நேத்து ராத்திரி, திடீர்னு கனவுல நம்ம மகாத்மா காந்தி வந்துட்டாரு. வந்தவரு என்னைய நலம்  விசாரிச்சுட்டு போயிருந்தாருன்னா பரவாயில்லை, அதை விட்டுட்டு கேள்விக்கணைகளையா தொடுத்து , அதுக்கு பதிலையும் வாங்கிக்கிட்டு தான் போனாரு. அப்ப போகும்போது, நான் முதல்ல உன் நண்பரோட கனவுல தான் வந்து, இந்த கேள்விகளை எல்லாம் கேட்டேன். உன் நண்பர் தான், உன்னோட கனவுலையும் வரச்சொல்லி என்னை அனுப்பினாருன்னு சொல்லிட்டு போனாரு.

முன்னாடியெல்லாம், நான் பாட்டுக்கு சிவனேன்னு, கனவுல வரவுங்களை எல்லாம் பார்த்துக்கிட்டு, நிம்மதியா தூங்கிக்கிட்டு இருந்தேன். இப்ப கில்லர்ஜி, என்னடான்னா, மகாத்மா காந்தியை நம்ம கனவுக்கு அனுப்புராரு. காந்தி கனவுல வர்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய மனுஷன் கிடையாதுங்கோ!!!

சரி, காந்தி கனவுல வந்து என்ன கேள்வி எல்லாம் கேட்டாருன்னு கேக்கிறீங்களா? இதோ அவரோட கேள்விகளும், என்னோட பதில்களும்.


1. நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?

இந்த ஆன்மா இதுவரை எடுத்த ஜென்மங்களே போதும். இனி வேறு ஒரு ஜென்மம் வேண்டாம். இறைவனின் காலடியில் இருப்பதே போதும்.

2. ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா?

லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவேன்.லஞ்சம் வாங்குபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் நடு ரோட்டில் கசையடி கொடுப்பதற்கான புதிய சட்டத்தை உருவாக்குவேன்.

3. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்என்ன செய்வாய்?

இந்த சட்டத்திற்கு கண்டிப்பாக அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும். ஏனென்றால், அவர்கள் இந்தியாவிற்கு வந்து லஞ்சத்தை கொடுத்து வேலைகளை முடித்துக்கொண்டு, சீக்கிரம் வெளிநாட்டுக்கு திரும்புவதிலேயே குறியாக அல்லவா இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் தண்டனை. லஞ்சம் கொடுத்து அவர்கள் மாட்டினால், அவர்களுக்கு கசையடியோடு, மீண்டும் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று அவர்களுக்கு விசாவை வழங்க மாட்டேன்.

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

முதியோர்களை அவரவர் பிள்ளைகள் கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு கவனிக்கத் தவறிய பிள்ளைகளைளின் வேலையை பறித்து விடுவேன். மீண்டும் அவர்கள் தங்களின் வயதான பெற்றோர்களை கவனிக்கும் வரை அவர்களுக்கு வேலை எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?

அரசியலுக்கு வருபவர்கள் இனி தேர்வு எழுதி தான் வர வேண்டும் என்று ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்.

6. மதிப்பெண் தவறெனமேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?

மதிப்பெண் முறையை ஒழித்து வெளிநாடுகளில் இருப்பது மாதிரி கிரேடு சிஸ்டத்தை கொண்டு வருவேன்.


7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?

விஞ்ஞானிகள் அனைவரும் சிறந்த முறையில் பாதுக்காகப்படுவர்.

8. இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

கண்டிப்பாக செய்ய வேண்டும். அவ்வாறு மறுக்கும் பட்சத்தில், மக்களே அந்த ஆட்சியாளர்களை கீழே இறக்கிவிடுவர்.

9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பட்ஜெட் போட்டுத்தான் குடும்பம் நடத்துவார்கள்.

10. எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?

முதல் கேள்விக்கான பதிலே, இந்த கேள்விக்கான பதில் ஆகும்.

நான் சொன்ன பதில்கள் எல்லாம் காந்திக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சாம், அதனால, நீ உன் நண்பர்கள் 10 பேரை சொல்லு, நான் அவுங்க கனவுல போய், இந்த கேள்விகளையெல்லாம் கேக்கிறேன்னு கேட்டாரு. எனக்கு மத்தவங்களை மாட்டி விடுறதுல இஷ்டமே இல்லை. பாவம் அவுங்களாவது நிம்மதியா கனவு கண்டுக்கிட்டு தூங்கட்டும், காந்தி போய் அவுங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு, நான் யார் பேரையும் காந்திக்கிட்ட சொல்லலை.

என் கனவுல காந்தி வந்தே ஆகணும்னு நீங்க நினைச்சீங்கன்னா, நான் ஒரு மந்திரம் சொல்லித்தரேன், அதை சொல்லிட்டு நீங்க படுத்தீங்கன்னா, கண்டிப்பா கனவுல காந்தி வருவாருங்கோ...

“மீசைக்கார நண்பா, என் கனவுலேயும் காந்தியை வரச்சொல்”

இதுதாங்க அந்த மந்திரம்...


Tuesday, November 11, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 6 (பள்ளியில் செய்திகள் வாசிக்கும் நேரம்)



பள்ளிக்கூடத்தில் இப்போது கடைசி பருவம் (last term) நடந்து கொண்டிருக்கிறது. சென்ற பருவத்தில் (3rd term), ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் மாணவர்கள் ஒரு நிமிடத்திற்கு குறையாமல் பேச வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஓவியாவிற்கு செவ்வாய்க்கிழமையாக அமைந்திருந்தது. இதனை "நியூஸ் டைம்(news time)" என்று கூறுகிறார்கள். அந்த பருவம் ஆரம்பித்த முதல்வாரத்தில் இது சம்பந்தமான கடிதத்தை கொடுத்து விட்டார்கள்மேலும்..... 

Monday, November 10, 2014

காதல் - யார் ஜெயித்தது?






யார் முதலில் காதலை
 சொல்வது என்ற போட்டியில்
தோற்றது நாமாக இருந்தாலும்
ஜெயித்தது என்னவோ நம் காதல்


 


நான் கொடுத்த முத்தத்தை
திருப்பிக்கொடு என்று கேட்டேன்
அதனாலென்ன திருப்பிக் கொடுக்கிறேன்
என்று கூறி என் நிழலை முத்தமிட்டு
அதற்கு விமோசனத்தை அளித்து விட்டாய்!



பின் குறிப்பு - உனக்கு எதுக்குடா  கவிதை எழுதுகிற வேலை எல்லாம் என்று கேட்பது காதில் விழுகிறது நண்பர்களே, ஆனால் ஆசை யாரை விட்டது.
 

Wednesday, November 5, 2014

கடவுளை நம்பினால்.............. ஒரு உண்மை சம்பவம்!!!


வாழ்கையில் இறைவனை மறக்காமல் எப்பொழுதும் நினைத்துக்கொண்டு இருந்தால், கண்டிப்பாக அவன் நம்மளை கை விடமாட்டான் என்ற கருவை கொண்டு தான், நான் “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” நாடகம் என்ற ஒரு நாடகத்தை எழுதி சைவ மாநாட்டில் மேடையேற்றினேன்.  அந்த காலத்தில் இறைவன் நேரில் தோன்றி தன் பக்தர்களின் குறைகளை போக்கினான், ஆனால் இந்த காலத்தில் எங்கே அது மாதிரி எல்லாம் நடக்கிறது என்று யோசிக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை, நம்முடைய குறைகளை போக்குவதற்கு இறைவன் எந்த வழியிலையாவது நமக்கு துணை புரிவான் என்று அந்த நாடகத்தில், நீதிபதியின் கனவில் அசிரிரியாக குரல் ஒலித்தமாதிரி சொல்லியிருந்தேன். அந்த காட்சி அரேங்கேறும்போது, நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த சிலர் சிரித்துவிட்டனர். அதாவது இம்மாதிரியெல்லாம் கதையில் தான் நடக்கும் என்ற ரீதியில் அவர்கள் சிரித்தது என் மனதை சற்று சஞ்சலப்படுத்திவிட்டது. இந்த மாதிரியெல்லாம் நடக்காதா, நாம் தான் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டோமோ என்றெல்லாம் எண்ணினேன். ஆனால், “நீ மனதை சஞ்சலப்படுத்தாதே, நாடகத்தில் சொல்லியிருக்கிற மாதிரியே நான் ஒருவருடைய கனவில் ஒலித்திருக்கிறேன்” என்று சக்தி விகடனில் வெளிவந்த இந்த கட்டுரை மூலம் இறைவன் எனக்கு உணர்த்திவிட்டான்.

நான் அந்த கட்டுரையை படித்தபோது அடைந்த ஆச்சிரியத்துக்கு அளவே இல்லை. வெஸ்ட் இண்டீஸீல் இருக்கும் பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட ஒருவருடைய உடல் நிலை சரியாவதற்கு  மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை சொல்லச் சொல்லி, அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழருடைய  கனவில் ஒலித்திருக்கிறது ஒரு குரல்.அந்த தமிழரும் இது வெறும் கனவு தான் என்று ஒதுக்கி விடாமல், சம்பத்தப்பட்டவர்களிடம் இதை சொல்லி, அவர்களும் அந்த கட்டளையை பின்பற்றியதால்,  உடல்நலம் குன்றியவரின் உடல் நிலை தேறியிருக்கிறார். அந்த கட்டுரையை அப்படியே நீங்கள் படிப்பதற்காக இங்கே பதிகிறேன். (நன்றி சக்தி விகடன்).


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாரு கமிவபந்தனாத்
ம்ருத்தியோர் முஷியமாம்ருதாத்
- மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்
அது 2001ம் வருடம். மேற்கு இந்தியத் தீவு ஜமைக்கா நகரத்தின் வெஸ்ட்இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. மேற்கு இந்தியத் தீவின் பிரபலமான கண் மருத்துவர் டாக்டர் சார் (Dr.Chaar) சிகிச்சைக்காக அங்கு அனுமதிக் கப்பட்டிருந்தார்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர். மாஸிவ் அட்டாக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடலின் பல பாகங்கள் செயலிழந்த நிலையில் இருந்தார். ஆறு மாத காலமாகத் தொடர்ந்த சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால், அவரின் மனைவி டாக்டர் குரேந்திரா, மகள் வந்தனா இருவரும் கவலையில் ஆழ்ந்தனர்.
அன்றைக்கு, குடும்ப நண்பர்களான ஓம்கார் பர்சாத் தம்பதி, ராமச்சந்திரன் தம்பதி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். டாக்டரின் மனைவி வங்கிக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆகவே, வந்த நண்பர்களை மருத்துவமனையில் கணவருக்குத் துணையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு, வங்கிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், வேறு ஏதோ வேலையாக அந்த மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஓம்கார் பர்சாத், ராமச்சந்திரன் இருவரையும் நன்கு தெரியும். அவர்கள் அங்கே கவலையுடன் இருப்பதைக் கண்டு, அருகில் சென்று விசாரித்தார். அவர்கள் தங்கள் குடும்ப நண்பரான டாக்டர் சார் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சையில் இருக்கும் விஷயத்தைத் விவரித்தார்கள்.
   



வெங்கட்ராமன், வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழத்தில் ஃபைனான்ஸ் துறையில் பணியாற்றியவர். 1998 முதல் அமெரிக்காவில் தங்கி, தனது ஃபைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் தொழிலை கவனித்து வந்தார். ''அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது. விரைவில் அவர் நலம்பெற்று வருவார். நானும் அவருக்காகப் பிரார்த்திக்கிறேன்'' என்று டாக்டரின் மகள் வந்தனாவுக்கு ஆறுதல் கூறி விடைபெற்றார். பிறகு, தனது வேலை விஷயமாக வங்கிக்குச் சென்றவர், அங்கே டாக்டரின் மனைவியையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவருக்கு அப்போது தெரியாது... அந்தக் குடும்பத்தாருக்கு அருள்புரிய திருவுளம் கொண்டுவிட்ட பரம்பொருள், அதற்கு தன்னையே கருவியாக்கப் போகிறது என்று! வெங்கட்ராமன் அமெரிக்காவுக்கு திரும்பிய மூன்றாவது நாள்... அவரது கனவில் ஒரு தெய்விகக் குரல் ஓங்கி ஒலித்தது.
''திருமதி குரேந்திராவும் அவருடைய மகள் வந்தனாவும் தினமும் நீராடி முடித்து, மடியாக காலை மாலை இரு வேளையும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைப் பாராயணம் செய்யச் சொல். அடுத்து வரும் பத்து நாட்களும் டாக்டர் சார்க்கு சோதனையான காலம். அதைக் கடந்துவிட்டால், அதன்பின் யாவும் நலமாகவே நடைபெறும். அவர் பூரண குணம் பெற்றதும், திருக்கடையூருக்குச் சென்று இறை தரிசனம் செய்யச் சொல்'' என்று உத்தரவு போல் ஒலித்த அந்தக் குரல், வேறொரு கட்டளையையும் பிறப்பித்தது.
காலையில் கண்விழித்தபோதும், அந்தக் கனவுக் குரலின் கட்டளையை வெங்கட்ராமனால் மறக்க முடிய வில்லை. அந்த அளவுக்குத் துல்லியமாக ஒலித்த உத்தரவு அது.
இதை ஏதோ ஒரு கனவு என்று விட்டுவிட வெங்கட்ராமனுக்கு மனம் இல்லை. டாக்டர் சார் அவர்களின் மனைவியிடம் சொல்லலாமென்றால், அவரைத் தொடர்பு கொள்வதற்கு போன் நம்பரோ, இமெயில் முகவரியோ வெங்கட்ராமனிடம் கிடையாது. சரி, நண்பர் ஓம்கார் பர்சாத் மூலம் தெரிவிக்கலாம் என்றாலும், அவர்கள் இதை நம்புவார்களா? அப்படியே நம்பினாலும், பஞ்சாபைச் சேர்ந்த டாக்டர் குரேந்திரா, மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி வழிபடுவது என்பதெல்லாம் சாத்தியமா? இப்படிப் பல கேள்விகள் வெங்கடராமனின் மனதில் எழுந்து, அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தின.
எனினும், இதுகுறித்து நண்பர் ஓம்கார் பர்சாத்துக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தார். அதில், கனவுக் குரல் குறித்த விவரத்தை விளக்கியவர், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை உரிய முறையில் உச்சாடனம் செய்ய, ராமச்சந்திரன் தம்பதி உதவி செய்யலாமே என்ற தனது கருத்தையும் தெரிவித்தார். மற்றபடி, இதை ஏற்பதும் ஏற்காததும் டாக்டர் சார் குடும்பத்தாரின் விருப்பம் என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார் வெங்கட்ராமன்.
ஓரிரு நாட்களில் ஓம்கார் பர்சாத்திடம் இருந்து, 'டாக்டரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது. தங்களின் தகவலை திருமதி குரேந்திராவிடமும் மகள் வந்தனாவிடமும் தெரிவித்துவிட்டேன். தாங்கள் கூறியபடியே, டாக்டர் குரேந்திராவும் அவர் மகளும் தினமும் நீராடி, மடியுடுத்தி, மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடவுள் அனுக் கிரஹம் செய்யட்டும்என்று பதில் வந்தது..
ரியாக பத்தாவது நாள்...
வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சுமார் ஆறு மாத காலம் எந்தவித முன்னேற்றமும் இன்றி, பிழைப்பது கடினம், எது வேண்டுமானா லும் நடக்கலாம் என்று கைவிடப்பட்ட நிலையில் இருந்த டாக்டர் சாரின் உடல் நிலையில் அதிசயிக்கத்தக்க முன்னேற் றம் காணப்பட்டது. அடுத்த சில நாட் களில் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்ட டாக்டர் சார், விரைவில் பூரண குணம் பெற்றார்.
திருமதி குரேந்திராவும் மகள் வந்தனாவும் செய்த பிரார்த்தனை பலித்தது. மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் வல்லமையால் மரணத்தை வென்றார் டாக்டர் சார். அவர் குணம் அடைந்த தகவல் வெங்கட்ராமனுக்கும் நன்றியுடன் தெரிவிக்கப்பட்டது.
சில வருடங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக் கழகத்துக்குச் சென்றிருந்த வெங்கட்ராமன், நண்பர் ஓம்கார் பர்சாத் வீட்டுக்கும் சென்றிருந்தார். அங்கே டாக்டர் சாரையும் சந்தித்தார். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் இருப்பதைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி வெங்கட்ராமனுக்கு. வெங்கட்ராமனின் கரம் பற்றி நெஞ்சம் நெகிழ நன்றி சொன்ன டாக்டர் சார், அவருக்குப் பிரதியுபகாரமாக தான் ஏதேனும் செய்ய விரும்புவதாகச் சொன்னார். 'என்ன செய்ய வேண்டும்? உத்தரவிடுங்கள்என்றும் வற்புறுத்தினார்.
வெங்கட்ராமன் மிகுந்த தயக்கத்துடன், ''நான், சென்னை சங்கர நேத்ராலயாவின் சேவைகளுக்காகவும், அதன் தேவைகளுக்காகவும் இந்திய
வம்சாவளியினரிடமும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் நன் கொடைகள் பெற்று வழங்கும் 'ஓம் டிரஸ்ட்என்ற அமைப்பின் (அமெரிக்காவில் உள்ளது) துணைத் தலைவராக இருக் கிறேன். நீங்கள் பிரதியுபகாரமாக எனக்கு ஏதேனும் செய்ய விரும்பி னால், சென்னையில் உள்ள சங்கர நேத்ரால யாவுக்கு 2,500 யு.எஸ். டாலர்கள் வழங்குங்கள்'' என்றார். அவர் சொன்னபடியே அந்தத் தொகைக்கு உடனடியாக காசோலை வழங்கினார் டாக்டர் சார். அந்த காசோலையை வெங்கட்ராமன் சென்னைக்கு அனுப்பி வைக்க, அதற்கு நன்றியாக இங்கே சங்கர நேத்ராலயாவின் இலவச சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு படுக்கைக்கு டாக்டர் சார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.
டாக்டர் சாரிடம் நன்றி தெரிவித்துக்கொண்ட வெங்கட்ராமன், ''ஒருமுறை நீங்கள் திருக்கடவூருக்கு வந்து கால சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் அவரால் இந்தியா வர இயலவில்லை.
இவையனைத்தும் நடைபெற்றது 2001ம் ஆண்டில்! அதன் பிறகு 12 வருடங்கள் எந்தக் குறையுமின்றி, சிறப்பாக மருத்துவ சேவையை தொடர்ந்த டாக்டர் சார், கடந்த 2013ல் தான் காலமானார். அதற்குப் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் டாக்டரின் மனைவியைச் சந்தித்த வெங்கட்ராமன், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், கனவில் ஒலித்த உத்தரவின்படி வாய்ப்பு கிடைக்கும்போது ஒருமுறை திருக்கடவூருக்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.
2014ல் பெங்களூரு வந்த திருமதி குரேந்திரா, சென்னைக்கும் வந்தார். அவர் வந்ததற்கான நோக்கங்கள் இரண்டு. ஒன்று, திருக்கடவூர் தரிசனம். மற்றொன்று சென்னைசங்கர நேத்ராலயாவைப் பார்வையிட! வெங்கட்ராமனின் உதவியுடன் இரண்டும் திருப்தியாக நிறைவேறின. சென்னை சங்கர நேத்ராலயாவுக்கு வந்தவர், தனது மகள் வந்தனா மூலமாக 11 ஏழை நோயாளிகளுக்கு மேஜர் ஆபரேஷன்களை இலவசமாகச் செய்வதற்காக 2,500 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தார். மேலும், இந்தச் சேவையை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அன்று, காலனிடம் இருந்து பக்த மார்க்கண்டேயனைக் காத்தருளிய காலகாலனின் பேரருள், இன்றைக்கும் தன் அடியவர்களைக் காத்து நிற்கிறது என்பதற்கும், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் மகிமைக்கும் இந்தச் சம்பவம் ஒரு சாட்சி!

Monday, October 27, 2014

நடிகருக்கு பாலாபிஷேகம் ஆனால் ரசிகருக்கு கிடைத்த பரிசோ மரணம்!!!!





(சிலையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் தீவிர ரசிகர்)



(இவரை மாதிரியானவர்கள், எப்போவாவது தங்களின் பெற்றோரை இப்படி வணங்கி இருப்பார்களா???)
 
தங்கள் அபிமான நடிக நடிகையரின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான வெறியை எப்போது தான் இந்த ரசிகர்கள் விலக்கிக்கொள்ளப்போகிறார்களோ? திரைப்படம் என்பதை ஒரு பொழுதுபோக்குக்கான அம்சமாக பார்க்காமல், அதில் நடித்திருக்கும் தங்கள் அபிமான நடிகர்கள் ஏதோ பெரிய சாதனையை செய்து விட்டார்கள் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்து, அவர்களை பாராட்டி, சீராட்டி கொண்டாடுகின்ற கூத்துக்களை எல்லாம் பார்க்கும்போது, இவனுங்க எல்லாம் என்னைக்கு தான் திருந்தப்போறாங்களோன்னு நினைக்கத் தோன்றும். சில வருடங்களுக்கு முன்பு, நடிகை குஷ்பூவின் அதிதீவிர ரசிகர்கள் அவருக்கு ஒரு கோயிலை எழுப்பி ஒரு மானங்கெட்ட செயலை செய்தார்கள். இப்போது நடிகர் விஜய்யின் உருவ சிலையை வடிவமைத்து, நீங்கள் குஷ்புவிற்கு கோயில் எழுப்பினால், நாங்கள் எங்கள் நடிகருக்கு சிலை எழுப்புவோம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அந்த சிலை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கு வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இப்படி ரசிகர்கள் பைத்தியமாய் நடிகர்களின் பின்னால் அலைகிறார்கள். இப்படி தங்களின் குடும்பத்தை கவனிக்காமல் பொறுப்பில்லாமல் இருப்பவர்களை என்ன சொல்வது!. உண்மையில் இவர்களால், இவர்களது குடும்பம் நன்மை அடைந்திருக்குமா என்பது கேள்விக்குறியே தான்.





 
சரி, இவர்களாவது பரவாயில்லை, தங்களின் பணத்தையும் நேரத்தையும் தான் வீனடித்திருக்கிறார்கள். வேறு ஒரு ரசிகரோ, தன்னுடைய உயிரையே அந்த நடிகருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். கத்தி படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ஒரு ரசிகர், அங்கே வைக்கப்பாட்டிருந்த நடிகர் விஜய்யின் மெகா கட்அவுட்டிற்கு, பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எண்ணி, அந்த கட்அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கால் தடுக்கி கீழே விழுந்து உயிர் துறந்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்தது தமிழ்நாட்டில் இல்லை, கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் வடக்கன்சேரியாகும். அந்த ரசிகரின் பெயர் உன்னியாம். விலைமதிப்பில்லாத உயிரை, நடிகருக்கு பாலாபிஷேகம் செய்யப்போய் மாய்த்திருக்கிறார். சில காலங்களுக்கு முன்பு, விஜய்,அஜீத் ரசிகர்கள் மோதிக்கொண்டு, உயிர் விட்ட சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன.

இம்மாதிரியான ரசிகர்கள் ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் ஹைடெக் ரசிகர்கள், அதாவது முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களின் நடிகர்களை பின் தொடர்பவர்கள்.இவர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களோடு நேருக்கு நேர் மோதிக்கொள்ளாமல், இணையம் வாயிலாக மோதிக்கொள்பவர்கள்.

இந்த நடிகர்கள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கிறவர்கள். பாழாய்ப்போன இந்த ரசிகர்கள் தான் தங்களின் கைக்காசைப்போட்டு அவர்களின் படத்தை பார்த்து, அதனை ஓட வைப்பவர்கள். இவையெல்லாம் தெரிந்தும் கூட, இந்த பைத்தியக்கார ரசிகர்கள் அவர்களின் பின்னால் சென்று தங்கள் வாழ்க்கையை தொலைப்பது தான் வேதனையான விஷயம்.
 
பின்குறிப்பு:
கேரள ரசிகர் உயிர் இழந்த சம்பவம் அந்த நடிகருக்கு தெரிந்திருக்குமா?

(படங்கள் உதவி - தட்ஸ்தமிழ் இணையம்)