Saturday, July 13, 2013

இறந்தவர்கள் உயிர் பிழைத்த அதிசயம்

ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த செய்தியை பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. ரவி சாஸ்திரி என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிபவர். அவரை இதய கோளாறு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள் சேர்த்திருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு பிறகு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள், அவரது உறவினர்களும் அவருடைய  உடலை  வீட்டிற்கு கொண்டு வந்து, இறுதிச் சடங்குகளை செய்வதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது அன்று இரவு, ரவியின் கால் விரல் அசைதிருக்கிறது. அதனை கண்ட உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உயிருடன் இருப்பதும், இருதயம் பலவீனமாக இருப்பதும் தெரிவந்திருக்கிறது. அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அவர் மறு நாள் எழுந்து உட்கார்ந்து, உறவினர்களோடு பேசியுள்ளார், அவருடைய மனைவி, சிவபெருமானை தொடர்ந்து பூஜித்து வந்தோம், அவர் அருளால் தான் என் கணவர் எமனின் பிடிக்குள் சென்று மீண்டு வந்துள்ளார் என்று கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே, அவர் கடவுளின் அருளால் தான் மீண்டு வந்தாரா அல்லது நம் மருத்துவர்களின் சரியான கவனிப்பின்மையால், அவர் இறந்ததாக அறிவித்து விட்டார்களா? என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். எது எப்படியோ, அவரை அடக்கம் பண்ணுவதற்குள்ளாகவே, அவர் உயிருடன் இருப்பது தெரிந்து அவரை காப்பாற்றி விட்டார்கள். இவருடைய விஷயத்தில், யாருக்கும் பயம் வந்திருக்காது. விரல் அசைவை பார்த்து, உயிர் இருக்கும் போல இருக்கே என்று எண்ணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது.

ஆனால் இன்னும் ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது ஏப்ரல் மாதத்தில், மதுரை மாவட்டத்தில், இப்படி தான் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இதில் அவர் ஒரு கட்சியின் கிளைச் செயலாளர் வேற. அந்த மருத்துவமனையில் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அவருடைய உறவினர்களும், அவருக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் செய்து, உடலை ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அவரது கட்சியினரும் மயானத்துக்கு வந்து  இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். மயானத்தில் அவரது உடலை தகனம் செய்வதற்கு முன்பு, உடலின் மீது தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிறது. அப்போது அவரது உடல் அசைந்து, அவர் எழுந்து உட்கார்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். (பின்ன, என்ன தான் சொந்தக்காரர்களாக இருந்தாலும், மயானத்துல எரிக்கிறதுக்கு முன்னாடி, இறந்த உடல் எழுந்து உட்கார்ந்துச்சுன்னா, யாருக்கு தான் பயம் வராது!!!) பின்னர் அவர் மட்டும் எழுந்து தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அவரை பார்த்த அவர் மனைவி, மிகவும் சந்தோசப்பட்டு, பழச்சாறு கொடுத்திருக்கிறார். அதனை குடித்த அவர், தான் மிகவும் தெம்பாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


இப்படி, இறக்கிறவர்கள் எல்லாம் மீண்டும் பிழைத்துக் கொண்டால், அவர்களின் உறவினர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.  ஆனால் பாவம் பூமாதேவி தான், என்ன பாண்ணுவாள். சரி, இவர்கள் எல்லாம் இறைவன் அருளால் தான் பிழைத்துக் கொண்டார்களா? இது தான் மில்லியன் டாலர் கேள்வி. ஆத்திக அன்பர்களுக்கு, இது இறைவனின் செயலாகத்தான் தோன்றும். அதே சமயம், நாத்திக அன்பர்களுக்கு, இது முழுக்க முழுக்க மருத்துவர்களின் கவனக்குறையால் ஏற்பட்டாதாக தான் தோன்றும். 

No comments:

Post a Comment