Monday, August 12, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – இயக்குனரை சந்திக்க சென்றது

                                                      -    தலைவா திரைப்பட அனுபவம் - முன்னுரை


நண்பர் அனகன் பாபு கேட்டுக்கொண்டதின் பேரில், நானும் என்னுடைய நாடக குழுவைச் சேர்ந்தவர்களும் எங்களுடைய புகைப்படத்தை அனுப்பினோம். ஒரு வாரம் கழித்து, ஒரு நாள் காலையில் அனகன் பாபு என்னை அழைத்து, இன்று மாலை நீங்கள் சரியாக 5.30 மணிக்கு “போண்டாய் பீச்சில் (Bondai Beach)” இருக்கும் சுவிஸ் கிராண்ட் ரிசார்ட் (Swiss Grand Resort) ஹோட்டலுக்கு சென்று இயக்குனர் விஜய்யை சந்தியுங்கள்,இதனை மற்றவர்களுக்கும் கூறிவிடுங்கள் என்று கூறினார். அன்று நான் வீட்டு அம்மணிக்கு ஹாஸ்பிடலில் கண்ணை காட்டுவதற்காக விடுமுறை எடுத்திருந்தேன். அதனால் எனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் மற்ற நண்பர்களுக்கு தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இருந்தாலும் எல்லோரும் சரியாக 5.15க்கு அந்த  ஹோட்டலில் சந்திப்போம் என்று பேசி வைத்துக்கொண்டு, எல்லோரும் சரியாக 5.25க்கு சென்றோம் (ட்ராஃபிக் அதிகமாக இருந்ததால் அந்த 10நிமிடம் தாமதம்). நான் என் குடும்பத்தையே கூட்டிக்கொண்டு சென்றிருந்தேன். வரவேற்பில் இருந்தவர்களிடம் இயக்குனர் விஜய்யை பற்றி கேட்டேன். அவர்கள் அவருடைய முழு பெயரை கேட்டார்கள். எப்பவோ அவருடைய முழு பெயரை படித்த நியாபகம் இருந்ததால், அழகப்பன் விஜய் என்று கூறினேன். அதற்கு அவர்கள், இந்த பெயரில் யாரும் அறை எடுக்கவில்லை என்றார்கள். நானும் விடாமல், இந்த மாதிரி, இந்த மாதிரி, இந்தியாவிலிருந்து படம் எடுக்கிறதுக்காக வந்தவர்கள் இங்க  தங்கியிருக்காங்களான்னு கேட்டேன். அவர்களும்,ஆமாம் ஒரு நாற்பது பேர்  வந்திருக்கிறார்கள் என்று கூறினார்கள். அவர்களில் யாராவது ஒருவரை  பார்க்க முடியுமா என்று கேட்டதற்கு, பார்க்க முடியாது, நீங்கள் சரியாக  யார் பெயரில் அறை பதிவு செய்யப்பட்டிருக்கு என்று சொன்னால், நாங்கள் பார்க்க அனுமதிப்போம் என்று கூறினார்கள். நான் உடனே, அந்த  நண்பருக்கு போன் போட்டேன், ஆனால் அவர் எடுக்கவேயில்லை. மீண்டும், மீண்டும் போட்டுப்பார்த்தேன், அவர் எடுக்கவேயில்லை. அப்புறம் அவர் வீட்டிற்கு போன் போட்டு, அவர் மனைவியிடம் பேசினால், “என்னது, நீங்க அதுக்குள்ள டைரக்டரை பார்க்க போயிட்டீங்களான்னு” கேட்டாங்க. அட கடவுளே!ன்னு நினைச்சுக்கிட்டு, இல்லைங்க, உங்க வீட்டுக்கார் தான்  பார்க்க சொன்னாரு, அதான் வந்தோம், ஆனா இங்க டைரக்டரை பார்க்க முடியலை,உங்க வீட்டுக்காரருக்கும் போன் போட்டா, எடுக்கவே மாட்டேங்கிறாருன்னு சொன்னேன். அவுங்களும், நான் பண்ணிப்பார்க்கிறேன்ன்னு சொல்லி, ஐந்து நிமிடம் கழித்து கூப்பிட்டு, என்னோட போனும் எடுக்க மாட்டேங்கிறாரு. கொஞ்ச நேரம் கழித்து திருப்பியும் பண்ணிப்பார்க்கிறேன்னு சொல்லி வச்சாங்க. நாங்களும் பேசாம அந்த சோபாவில உட்கார்ந்தோம். நம்ம ஆளுங்க சில பேர் மேலேயும் கீழேயும் போயிக்கிட்டும், வந்துக்கிட்டும் இருந்தாங்க. எங்களுக்கு அவுங்க கண்டிப்பா இந்த படக்குழுவோட தான் வந்தவங்கன்னு தெரிஞ்சுது. அவுங்க கிட்ட போய் பேசினா, நம்மளைப் பற்றி ரொம்ப சீப்பா நினைச்சுட்டாங்கன்னா(!!!), என்ன பண்றதுன்னு, நாங்களும்  அவுங்ககிட்ட எல்லாம் பேசாம ரொம்ப நேரம் அந்த சோபாவிலேயே உட்கார்ந்துக்கிட்டு இருந்தோம். இதுலேயே அரை மணி நேரம் ஓடிடுச்சு. அப்பத்தான் நம்ம நண்பர் போன் செஞ்சு, சாரிங்க சம்பந்தம், ஆபிஸ் மீட்டிங்ல இருந்தேன், அதான் போன் எடுக்கலை, இயக்குனர் வந்து லொகேஷன் பார்க்க போயிருக்காராம். இப்ப வந்திடுவாரு, நீங்க அங்கேயே இருங்கன்னு சொல்லி கட் பண்ணினாரு. அவர் பேசி முடிச்ச, ஐந்து நிமிஷத்துக்கெல்லாம், இயக்குனரும், இன்னும் சிலரும் வெளியிலிருந்து வந்தார்கள். இயக்குனரிடம் போய் என்னைய அறிமுகப்படுத்திக்கிட்டேன். அவரும் வந்து ரொம்ப நேரம் ஆச்சான்னு கேட்டாரு. இல்ல, ரொம்ப நேரம் ஆகலை, அரை மணி நேரம் தான் அச்சுன்னு சொன்னேன். அப்ப மற்ற நண்பர்களும் வந்து அறிமுகப்படுத்திக்கிட்டார்கள். உடனே, அவர் நான் மேல போய் கொஞ்சம் ஃபிரெஷ்ஷப் பண்ணிக்கிட்டு வந்துவிடுகிறேன்னு சொல்லி மேல போனாரு. 

அவரோட உதவி இயக்குனர், எங்களிடம் வந்து, என் பேரு கிருஷ்ணா, நான் இந்த படத்துக்கு உதவி இயக்குனர், சார் இப்ப வந்துடுவாரு. அதுக்குள்ள உங்க பேர் எல்லாம் கொடுங்கன்னு சொல்லி எங்க பேர் எல்லாம் எழுதிக்கிட்டு போனாரு. நாங்களும், சரி ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தோம்., உட்கார்ந்திருந்தோம், உட்கார்ந்து கொண்டேயிருந்தோம்.  

இயக்குனர் எத்தின மணிக்கு ஃபிரெஷ்ஷப் பண்ணிக்கிட்டு கீழே வந்தாருன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

தலைவா திரைப்பட அனுபவம் - நடிக்க தேர்வானது

                                  -  இன்னும் சொல்கிறேன்


1 comment:

  1. ஃபிரெஷ்ஷப் பண்ணிக்கிட்டு வரேன்னு போனவரு அப்படியே தூங்கிட்டாரோ ? .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete