Wednesday, August 21, 2013

555 – விமர்சனம்


படத்தோட தலைப்பை பார்த்தவுடன், இதென்ன சிகரெட் பேர் மாதிரி இருக்கிறதேன்னு யோசிச்சுக்கிட்டே படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். சிகரெட் பேருக்கும் இந்த படத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 555ன்னு பொறிக்கப்பட்ட ஒரு லாக்கெட்டினால் பெரிய விபத்து ஏற்படுகிறது. அதனால் தான் இந்த தலைப்பை வைத்து இருப்பார்கள் போல. வில்லனிடமிருந்து, தன்னையும் தன் காதலியையும் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார் பரத்.

ஒரு மிக மோசமான விபத்துல பரத் தன்னோட பயணம் செய்த காதலியை பறிகொடுக்கிறார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளாததுனால, அவருக்கு அவருடைய அண்ணன் சந்தானம், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறவைக்கிறார். ஒரு கட்டத்துல சந்தானமும், மனநல மருத்துவரும், உங்களுக்கு ஒரு காதலியே கிடையாது, நீங்களே ஒரு கற்பனை கதாப்பாத்திரதை உருவாக்கி, அந்த கதாப்பாத்திரத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கீங்கன்னு சொல்றாங்க. சூழ்நிலைகளும் இதற்கு ஏற்றார் போல் அமைகிறது. அதனால் பரத் மட்டும் இல்லை,படம் பார்க்கும் நாமும் தான் குழப்பமடைகிறோம். உண்மையிலேயே அவர் கற்பனை கதாப்பாத்திரத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோன்னு சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. ஆனால் பரத்தோ, இதையெல்லாம் நம்பாமல் நான் சொல்வதெல்லாம் உண்மை. அதை நிரூபிப்பதற்காக தன் காதலியின் வீட்டிற்கு இரவில் செல்கிறார். அங்கு அவரை ஒரு கும்பல் துரத்துகிறது. அந்த கும்பல் எதுக்காக அவரை துரத்துகிறது, காதலி உண்மையிலேயே இருக்கிறாளா என்பதையெல்லாம் ஏகப்பட்ட திருப்பங்களோடு சொல்வது தான் இந்த 555.
இந்த படத்தின் கதாநாயகனே திரைக்கதை தான். நல்ல விறுவிறுப்பாகவும், த்ரில்லிங்காகவும், ஏகப்பட்ட ட்விஸ்ட்களோடு படம் நகர்கிறது. ஆனால் எடுத்துக்கொண்ட மூலக்கரு தான் நம்பும்படியாக இல்லை. 30 வருடங்களுக்கு முன் கவுரவ கொலை செய்யப்பட தன் காதலியின் உருவ அமைப்பில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கதாநாயகியின்(பள்ளியில் படிக்கிறார்) பெற்றோரை கொன்று, அவரை தத்தெடுத்து வளர்க்கும் வயதான பணக்கார வில்லன், கதாநாயகியின் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்ய நினைக்கிறாராம். அட கடவுளே! எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ!!!!. சில இடங்களில் மிக சாதாரண லாஜிக் கூட இயக்குனருக்கு தெரியவில்லை(இணை இயக்குனர்களுக்கும்,உதவி இயக்குனர்களுக்கும் கூடவா அந்த ஓட்டைகளை தெரியாமல் இருக்கும்!!!). அந்த சாதாரண லாஜிக்கைப் பற்றி சொன்னால், படம் பார்க்கும்போது அந்த விறுவிறுப்பு போய்விடும் என்பதால் அதனை நான் சொல்லவில்லை.  

சந்தானம் ஒரு நகைச்சுவை நடிகாரக இல்லாமல், குணச்சித்திர நடிகராக இதில் நடித்திருக்கிறார். கதாநாயகி மிர்திகா மிகவும் அழகாக இருக்கிறார். பரத்திடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புவது லூசுத்தனமாக இருக்கிறது. இன்னும் எத்தனை படத்தில் தான், கதாநாயகிகளை இந்த மாதிரி ஒரு லூசுத்தனமான கதாப்பாத்திரமாக காட்டப்போகிறார்களோ?. கதாநாயகியின் வளர்ப்பு அத்தையாக வருபவர், அழகான வில்லி கதாப்பத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். இன்னொரு கதாநாயகி வேற, அவரும் பரத்தை காதலிக்கிறார்.  

இதுல எதுக்காக பரத் ‘6 பேக்’, இல்லையில்லை ‘8 பேக் வச்சிருக்கிறாருன்னு தெரியலை(6 பேக்கா, 8 பேக்கான்னு தெரியலை). ஆனாலும் அதற்காக பரத்தின் உழைப்பு நன்றாக தெரிகிறது.


நன்றாக திரைக்கதையை கொண்டுபோன விதத்துக்காக, இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.  

No comments:

Post a Comment