Thursday, May 22, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்




சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்


சிவமயம்
கணபதி துணை

ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள்
சரித்திரம்.
-------------------------

காப்பு.
கணபதி வணக்கம்.

செம்பொன்மணி மாடமுயர் காரை யென்னுந்
     திருநகரிற் றிருவவதா ரஞ்செய் தோங்கி
அம்புவியிற் பெரியோர்கள் போற்றி செய்ய
     ஆதரவி னீரிரண்டு நெறியுங் காட்டி
நம்புநூல் பலவியற்றி விளக்கி யாண்ட
     நங்கள்குரு சொக்கலிங்க தேசி கன்றான்
இம்பர்வரு மாக்கதையிங் கியம்ப வின்சொல்
     இனியபொரு ளுதவியருள் சுமுக தேவே!


அனுகூல விநாயகர் துதி.

சீரி னேங்கு திருநகர்க் காரையிற்
பாரி னேங்கனு கூலப் பரம்பொருள்
தாரி னேங்கு கயமுகன் றண்மலர்
நேரி னேங்கிமுன் னின்றருள் செய்யுமே.



நாட்டு வளம்

சிவபெருமான், சீவர்களை உய்யக் கொண்டருளுகின்ற உத்தமமாகிய இந்தப் புவனியின் கண்ணே, சைவசமய பரமாச்சாரியர்களாகிய நால்வருள், முத்தமிழ் விரகர் தம்பிரான் றேழர், முனிவர் வாகீசர், என மூவர் திருவாய் மலர்ந்தருளிய திராவிடவேதப் பதிகங்கள் பெற்ற விசிட்டத் தலங்கள் பலவற்றுள் :-

“கூடலா டானை பூவணஞ் சுழிய
     றிருத்தலங் கானை குற்றாலம்
ஏடக மாப்ப னூரிரா மேசம்
     பராசலம் பிரான்மலை சாலி
வாடியே போற்றுந் திருப்புன வாயில்
     வளமுறு தலங்கள்பன் னான்குங்
கூடிய வுயிர்போற் கொண்டிடு சீர்த்தி
     குலவிடும் பெருமைபெற் றதுவும்.”

“சீரோங்கிய மணிவாசகப் பெருமான்றிரு வாக்காம்
பாரோங்கிய பதிகத்தலம் பலவற்றுளுங் கூடல்
பேரோங்குமுத் தரகோசமங் கைவா தவூர் பெரிதாம்
நேரோங்கிடு துறைமுன்றல நிலவத்திகழ் வதுவும்.”

சமயவிசேட நிருவாண ஆசாரிய தீக்ஷா குருமார்கள் விளங்கப்பெருவதும், பிரம ஷத்திரிய வைசிய சூத்திரர் முதலியோர் அவரவர்கள் வருணாசார தருமப்படி ஒழுகிவரப் பெறுவதும், பிரமசரிய கிருஹஸ்த வானப்பிரஸ்த  சந்நியாச ஆச்சிரமங்களையுடையவர்கள், தங்கள் சீலங்குறைவில்லாமல் நடந்துவரப் பெறுவதும், சரியை,கிரியை,யோக ஞானவான்கள் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய பதவிகளுக்குரியவர்களாய்ப் பொலியப் பெறுவதும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களைக் கொடுக்கத்தக்கதும், பாண்டிய அரசர்கள் சொக்கேசருடைய திருவருளால் செங்கோல் செலுத்தி அரசாளப் பெற்றதும், சச்சிதானந்த ஸ்வரூபர்களாகிய ஸ்ரீமீனாக்ஷி என்னும் தடாதகைப் பிராட்டியாரும், சோமசுந்தரக் கடவுளாகிய சுந்தரபாண்டியரும், ஸ்கந்த மூர்த்தியாகிய உக்கிரகுமார பாண்டியரும் தன்னகத்தே ஒருங்கிருந்து அற்புதமாய் அரசாளப் பெற்றதும், முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்கங்களில் சுந்தரேசப் பெருமானும் தெய்வத்தன்மை வாய்ந்த வித்துவசிரோமணிகளும் வீற்றிருந்து செந்தமிழாராய்ச்சி செய்து சிவபரத்துவம் விளக்கப் பெற்றதும், தெய்வத்தன்மை பொருந்திய இனிய செந்தமிழ் மொழியாகரராய்ச் சிவ பிரானை யொத்த அகத்திய மகாமுனிவர் விலங்குகின்ற பொதியமாமலை தன்னிடத்திற் பிராசிக்கப் பெறுவதும், அறுபத்து நான்கு திருவிளையாடல்களை அற்புதக் காட்சியாய்ப் பொற்புற நடித்தருளிய சுந்தரேசப் பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருவாலவாய்த் திருக்கோயில் போலியப்பெற்று வைகை நதி சூழ்ந்த துவாத சாந்தபுரமாகிய மதுரைமா நகரமானது தனக்குத் திருமுக மண்டலமாய்த் திகழப் பெறுவதும்,  யாதெனில் : -

“மழைமதி மூன்று பெய்து வளர்நதிப் பொருனைசூழ்ந்து
உழுதொழில் வளங்கள் யாவு முயர் ந்திடக்குடிகண்மல்கி
பழகுமுத் தரும மோங்கிப் பல்கிட நிலவி யீசன்
பழம்பதி யாக நீடும் பாண்டிநன் னாடேயாகும்“





16 comments:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.

      Delete
  2. அந்தக்கால தமிழ் அழகுற உள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  3. Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்.

      Delete
  4. தமிழ் சுவைத்தேன் நண்பரே, எனக்கு தங்களிடம் ஒரு ஆச்சர்யம் ஆஸ்ட்ரேலியாவில் வாழ்ந்து கொண்டு தமிழை சுவைக்க செய்வது தங்களின் தமிழ்ப்பற்றை பிரதி பலிக்கிறது நன்றி.
    Killergee
    www.Killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கில்லர்கீ.

      எனக்கு தமிழில் யாப்பு இலக்கணங்கள் எல்லாம் கொண்டு கவிதை எல்லாம் எழுதத் தெரியாது. பெரியவர்கள் அந்த காலத்தில் எழுதிய பாக்களை எல்லாம் இந்த காலத்திற்கு தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக கணினியில் ஏற்றுகிறேன். அவ்வளவே.

      Delete
  5. அருமை நண்பரே...

    பகிர்வு வெகு சிறப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி டிடி.

      Delete
  6. அக்காலத் தமிழைப படிப்பதே ஆனந்தம்தான். இத்தகு நடைக்கு மணிப்பிரவாள நடை என்பது பெயராகும். தமிழும் சமஸ்கிருதமும் கலந்த எழுத்து நடை. பின்னர் தோன்றியதே கரந்தை நடை, தனித் தமிழ் நடை
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ஓ! இந்த நடைக்கு பெயர் மணிப்பிரவாள நடையா!!!!
      தங்களிடம் இருந்து தான் நான் கற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete
    2. இப்பாடல்கள் மணிப்பிரவாள நடையா? தவறு கரந்தை ஜெயக்குமார் அவர்களே.இவை அனைத்தும் தொல்காப்பியம் கூறும் வழியில் அயல்மொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டவை. (உ-ம்) கயமுகன் = கஜமுகன்

      தமிழ் உரை நடையில் சமஸ்கிருதச் சொற்களைத் தமிழ்ப்படுத்தாமல் அப்படியே கலந்து எழுதுவதுதான் மணிப்பிரவாள நடை.

      மணிப்பிரவாள நடைபற்றி மேலுமறிய கீழ்க்கண்ட தமிழ் விக்கியைப் பாருங்கள்.

      https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88

      Delete
    3. பாக்களுக்குத் தரப்பட்டுள்ள உரை மணிப்பிரவாள நடையில்தான் எழுதப்பட்டுள்ளது. அதுபற்றிக் கரந்தை ஜெயக்குமார் கூறியிருந்தால் அது சரிதான். பாக்களனைத்தும் தொல்காப்பியத் தமிழ்தான்.

      Delete
  7. சுவாரஸ்யமான தகவல்கள் புதிய தகவல்களும். நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete