Tuesday, May 20, 2014

வீட்டில் சமையலறை எங்கே இருக்கிறது




திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, எனக்கும் சமையற்கட்டிற்குமான தூரம் ரொம்பவே அதிகம். திருமணத்திற்கு முன்பு, அம்மாவிற்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று சமையலறைக்கு போனால், உனக்கு ஏண்டா, இந்த வேலையெல்லாம். நீ போய் உட்காரு, நான் உனக்கு வாய்க்கு ருசியா செய்றேன், நீ நல்லா சாப்பிடுன்னு சொல்லியே, என்னை சமையற்கட்டு பக்கம் விட்டதே இல்லை அவர்கள். திருமணத்திற்கு பிறகு, அம்மணியிடம், என் அம்மா, அவனுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடத்தான் தெரியும், அதனால அவனுக்கு நல்லா சமைச்சுக் கொடு என்று கூறிவிட்டார்கள். இதனால் அம்மணியும் என்னை சமையலறை பக்கம் விட்டதே இல்லை. ஆனா அவுங்க மனசுக்குள்ள, நான் சமைச்சு அவுங்க சாப்பிடணும்னு ஒரு ஏக்கம் இருந்திருக்கும் போல,அது எனக்கு தெரியாது.

எங்களுக்கு திருமணம் நடந்து சரியாக பத்து வருடங்கள் 13 நாட்கள் கழித்து தான் ஓவியா பிறந்தார்கள். முதல் முறையாக அம்மணி கருவுற்றிருக்கும் போது, சரி,இவ்வளவு வருடங்கள் கழித்து உண்டாகியிருக்கிறார்கள், அதனால் அவுங்களுக்கு பிடிச்சதை செய்யணும்னு நினைச்சு, நானும் ஆசையாக உனக்கு என்ன வேணும் சொல், வாங்கித்தருகிறேன் என்று தெரியாத்தனமாக கேட்டுவிட்டேன்.  அம்மணியும், எனக்கு ஒன்றும் வாங்கித் தர வேண்டாம், தினமும் நானே சமைத்து, சமைத்து போர் அடித்து விட்டது, அதனால் இன்றைக்கு மட்டும் நீங்கள் சமைத்து நான் சாப்பிட வேண்டும் என்று சொன்னார்கள் (இப்ப புரியுதா, அவுங்க மனசுக்குள்ள இருந்த ஆசை எந்த நேரத்துல வெளிப்பட்டிருக்குன்னு!!!). 


அடடா, வேலில போற ஓனானை வேட்டியில மடிச்சு வச்சுக்கிட்டோமேன்னு மனசுக்குள்ள புலம்பி, சரி இந்த ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறேன்னு சொல்லி, ஒரு சுப முகூர்த்த நாள் அன்றைக்கு, சமையலறைக்குச் சென்று எப்படியோ ஒரு மாதிரி சாம்பார் சாதம் செய்தேன்.  இதுல நான் ஒன்று  கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். என்னன்னா, எங்கள் அம்மாவின் சமையலில் கொஞ்சம் காரம் தூக்கலாகவே இருக்கும். அப்படியே நானும் சாப்பிட்டு பழகி விட்டேன். திருமணத்திற்கு பிறகு, அம்மணியின் சமையலில் காரம் என்பது ரொம்ப ரொம்ப கம்மியாகவே இருக்கும். கேட்டால், எங்கள் வீட்டில் யாரும் உங்களை மாதிரி, மிளகாய்த் துளை கொட்டி சாப்பிட மாட்டோம் என்று பதில் சொல்லுவார்கள். இன்னும் மீறிக் கேட்டால், பக்கத்துல மிளகாய்த்தூளை தண்ணீரில் கலக்கி வைத்து விடுகிறேன், வேண்டிய அளவிற்கு அதை ஊற்றி சாப்பிடுங்கள் என்று பதில் கூறி வாயை அடைத்துவிடுவார்கள். நான் சமைக்க ஆரம்பித்தபோது இந்த விஷயம் உடனே நியாபகத்துக்கு வந்தது. அதனால் நானும் ரொம்பவும் பார்த்து, பார்த்து காரத்தைப் போட்டு அந்த சாம்பார் சாதம் செய்து அவர்களுக்கு கொடுத்து, ஆவலோடு அவர்கள் சாப்பிடப் போவதை ரசித்து பார்க்க ஆரம்பித்தேன். 


அவர்கள் ஒரு ஸ்பூன் தான் எடுத்து வாயில் வைத்தார்கள். உடனே முகம் அஷ்டகோணலாகி விட்டது, “ஐயோ, பேசாம நானே இதை செய்திருக்கலாம், இப்படி வாய்க்கு விளங்காம செஞ்சிருக்கீங்களே, உங்களுக்கு தெரியாததை எல்லாம் செய்யாதீங்கன்னு சொன்னேன் இல்லன்னு ” ஒரே புலம்பல். (எனக்குத்தான் எதுவுமே செய்யத் தெரியாதே!!!,) நல்லாத்தானே செஞ்சோம்னு நானும் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டா, உப்பும் இல்லாம, காரமும் இல்லாம, சப்புன்னு இருந்துச்சு. எங்கடா தப்பு நடந்திருக்கும்னு யோசிச்சா, காரத்தை கம்மியா போட்டதுனால, உப்பையும் ரொம்ப கம்மியா போட்டிருந்திருக்கிறேன். அது சப்புன்னு ஆயிடுச்சு. அப்புறம் இரண்டு பெரும் எப்படியோ கொஞ்சத்தை முழுங்கி, மிச்சத்தை தூக்கிப் போட்டுட்டோம். அதற்கு பிறகு, அவர்கள் என்னைய சமைக்க சொல்லாம, எப்படியோ கஷ்டப்பட்டு அவுங்களே சமைச்சாங்க. அவுங்களுக்கு அப்ப எட்டு மாசம்னு நினைக்கிறேன், மீண்டும் ஒரு நாள் அவுங்க, நான் திருப்பியும் ரிஸ்க் எடுக்கிறேன் (நான் சமைக்கிறது, அவுங்களுக்கு ரிஸ்க்காம்!!!!), நீங்க இன்னைக்கு மட்டும் கொஞ்சம் ஒழுங்கா பார்த்து சமைக்கிறீங்களா, என்னால இன்னைக்கு ஒண்ணுமே செய்ய முடியலைன்னு சொன்னாங்க. நானும், சரி இந்த முறையாவது ஒழுங்காக செய்யணும்னு நினைச்சு, அதே சாம்பார் சாதத்தையே நல்லா செய்து கொடுத்தேன். இந்த முறை அவுங்க இரண்டு வாய் சாப்பிட்டார்கள். ஆகா, நல்லா இருக்கு போலன்னு நினைச்சேன், உடனே அவுங்க கண்லேருந்து தண்ணி வர ஆரம்பிச்சுடுச்சு, என்னன்னு பார்த்தா, போன தடவை காரம் கம்மியா போட்டதுனால, இந்த தடவை, மிளகாய்த்தூளை கொட்டியிருக்கேன். அந்த இரண்டு வாய் சாப்பிட்டதோட, கை எடுத்து கும்பிட்டு, தயவுசெய்து, நீங்க இனிமே சமைக்கவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்ப நான் சமையலறைக்குள் நுழைந்தது தான், இப்ப எனக்கு எங்கள் வீட்டில் சமையலறை எங்கே இருக்குதுன்னே மறந்து போச்சு. 

16 comments:

  1. தப்பிக்க இப்படி எல்லாம் வழி இருக்கா...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. பின்ன, நாங்க எல்லாம் யாரு.........

      Delete
  2. நள மஹாராஜா பட்டம் உங்களுக்கு கொடுக்கலாம் போல இருக்கே :)))))

    ReplyDelete
    Replies
    1. சமைக்கத் தெரியாமலே அந்த பட்டமா, பரவாயில்லை வாங்கிக்கிறேன்.

      Delete
  3. எதுக்கும் மூணாவது தடவை முயற்சி செய்து பார்த்தா ,சமையல் கிளிக் ஆயிடும் !

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு தடவை முயற்சி செஞ்சதே பெருசு, இதுல மூணாவது தடவையா?????

      Delete
  4. இது பிளான் பண்ணி செய்த சதி போல் தான் தெரிகிறது. நளபாகம் என்றால் என்ன என்று கூட தெரியாதா? அதுவும் இல்லாமல் restrount ல் எல்லாம் நளபாகம் தானே. very bad. மாதத்தில் or வாரத்தில் ஒரு நாள் சமையல் செய்யுங்கள். அது என்ன பெரிய ராக்கெட் சயின்ஸ்சா. செய்தபின் ஒரு பதிவு விபரமாக போடுங்கள் சரியா சகோ ....! முறைக்காதீர்கள் ...... வாழ்த்துக்கள் சகோ.....!

    ReplyDelete
    Replies
    1. பிளான் எல்லாம் ஒண்ணும் இல்லை. சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும். சமையலே எனக்கு தெரியாதே. சரி, நீங்கள் எல்லாம் சொல்றதுனால ஏதாவது ஒண்ணு செஞ்சு, அதை விவரமா ஒரு பதிவா போடுறேன்...

      Delete
  5. யோவ் நீ ரொம்ப ஸ்மார்ட்டான ஆளுய்யா கிச்சனில் இருந்து தப்பிக்க எப்படி எல்லாம் ஐடியா வைச்சு இருக்கே

    ReplyDelete
    Replies
    1. பொழைக்கக் கத்துக்குங்க பாஸ், எப்பப் பார்த்தாலும் பூரிக் கட்டையாலே அடி வாங்கி என்னத்துக்கு ஆகுறது??

      Delete
  6. சமையல் அனுபவம் மிகவும் பிரமாதம்! ஒரு சமையல் புத்தகத்தைப் பார்த்து செய்திருக்கலாமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. சமையல் புத்தகத்தை பார்த்து செஞ்சே இந்த நிலமைங்க!!!!!!

      Delete
  7. திரும்ப திரும்ப முயற்சித்தால் முடியாதா என்ன?

    ReplyDelete
    Replies
    1. பெரியவங்க நீங்க எல்லாம் சொல்றீங்க, சரி, திரும்ப திரும்ப செய்து பாக்கிறேன். வராமல போயிடும்....

      Delete
  8. பத்து வருடத்துக்கு முன்னாலே உள்ள விசயமா ? அப்படி இப்பவாவது.. தெரியுமா ?
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  9. அளவு....மிளகாய் தூளுக்கு முன் - மிளகாய் தூளுக்கு பின் சாம்பார் சாதம் எப்படி...? இருக்கும்.
    எல்லோர்...வீடுகளிலும் நடக்கும் சாட் சாத் நடப்பு. அழகான இயல் போடு எழுதி இருக்கிறீர்கள். சுவாரஸ்யமாக இருந்தது. சுவையாக, இல்லாளின் ஆசையை பூர்த்தி செய்தீர்களா?

    ReplyDelete