Monday, December 30, 2013

திரும்பி பார்க்கிறேன்

சகோதரி ராஜிஅவர்கள் “திரும்பி பார்க்கிறேன்” என்ற தொடர் பதிவில் என்னையும் சேர்த்து விட்டார்கள். அதில் 2013ல் நடந்த அனுபவங்களை எல்லாம் எழுதச் சொல்லியிருந்தார்கள். நான் இதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் உங்களுடன் சேர்ந்து திரும்பி பார்க்க போகிறேன். காரணம், சின்ன வயதிலிருந்தே, என்னுடைய சோகமான தருணங்களை நான் யாருடனும் பகிர்ந்து கொண்டது கிடையாது. என்னைப் பொருத்த வரையில், எல்லோருக்கும் வாழ்கையில் ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். இதில் நம்முடைய கஷ்டத்தை அடுத்தவரிடம் பகிர்ந்து அவருக்கு இன்னும் கஷ்டத்தை கொடுக்கக் கூடாது என்பது தான். இந்த கருத்துக்கு நிறைய நண்பர்கள் உடன்பட்டதில்லை. அப்புறம் எதற்கு நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் என்று கேட்டிருக்கிறார்கள். இதில் உச்சபட்சமாக என்னுடைய அம்மாவே, “டேய், நீ உன் மன பாரத்தை இறக்கி வைக்காமல், உனக்குள்ளேயே வச்சு,அமுக்கிக்கிட்டு  இருக்கிறதுனாலத்தான், நீ வளரவேயில்லை” என்று சொல்லியிருக்கிறார்கள். “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று சொல்லுவது போல, 2012ஆம் ஆண்டில், நான் நெஞ்சுக்குள் அமுக்கி வைத்திருந்த கஷ்டங்கள் எல்லாம் பாரம் தாங்காமல் பொங்கி கவிதையாக வெளி வந்து, கொஞ்சம் மனதை லேசாக்கியது. ஆனால் அந்த கவிதை  பல நண்பர்களின் மனதை பாரமாக்கி விட்டது என்பதை அவர்களின் தொலைப்பேசி அழைப்பின் மூலமாக தெரிந்து கொண்ட பிறகு வருத்தப்பட்டேன். அதனால் தான் நான் மீண்டும் என்னுடைய சோக கீதங்களை வாசிக்கவில்லை. சரி, இனி பதிவிற்குள் செல்வோம்.
 
என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் மலேசியா நாட்டில் நடைபெற்ற “உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டு” மலரிலும் - புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி, சிட்னியில் நடைபெற்ற “உலக இலக்கிய தமிழ் மாநாட்டு” மலரிலும்  - புலவர்களின் பார்வையில் சங்க கால போர்கள்  வெளிவந்தது. இதன் மூலம் எந்த ஒரு ஆய்வுக் கட்டுரையையும் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை நான் பெற முடிந்தது.
 நான் வார இறுதியில் பயிற்றுவிக்கும் தமிழ் பள்ளியில், மாணவர்களை ஊக்குவித்து, அவர்களையும் இங்கு நடைபெற்ற “உலக இலக்கிய தமிழ் மாநாட்டு” மலரில் கட்டுரைகளை படைக்கச் செய்தது. இதன் மூலம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குழந்தைகளாலும் தமிழில் கட்டுரைகளை எழுத முடியும் என்று தெரிந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
 
 இந்த ஆண்டின் மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணம், நான் கனவிலும் நினைத்துப்பார்க்காதது ஒன்று நடந்தது. ஆம், நான் தலைவா படத்தில் நடித்தது. இதற்கு முன்பு வரை, திரைப்படத்துறையை நான் சாதாரணமாகத்தான் நினைத்ததுண்டு. ஆனால் இந்த படத்தில் நடித்த பிறகு, அத்துறையின் மீது ஒரு மதிப்பே வந்து விட்டது. இந்த இடத்தில், நான் இயக்குனர் விஜய்க்கும், நண்பர் அனகன் பாபுவிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
 
சென்ற ஆண்டும் சிட்னியில் ஆறு வெவ்வேறு மேடைகளில் பெரியவர்களுக்கான நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றினேன். மேலும் ஏழு வெவ்வேறு மேடைகளில் குழந்தைகளுக்கான நாடகங்களையும் எழுதி, அவர்களை நடிக்கவைத்து மேடையேற்றினேன். குழந்தைகளின் நாடகங்களில் “63 நாயன்மார்களின் ஒருவரான அப்பூதி அடிகளின் வாழ்க்கை வரலாறும்” ஒன்று. இதன்மூலம், என்னாலும் நாடகங்களை குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி எழுதி இயக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
 பதின்னைந்தாவது (15வது) திருமண நாளை வீட்டு அம்மணியின் பெற்றோர்களோடு கொண்டாடியது ஒரு மறக்க முடியாத தருணம். கல்யாணமாகி எத்தனை வருடம் ஆனாலும் என்ன, அமலாபால் மாதிரி யாராவது கண்ணுக்கு தென்பட்டால், படத்தில் பயன்படுத்திய பூவையும்,வாழ்த்து அட்டையையும்    கொடுத்து காதலை சொல்லிவிட வேண்டியது தான். (அதுக்காகத்தான் பத்திரமா அந்த பூவையும், அட்டையையும் வீட்டு அம்மணிக்கு தெரியாம மறைச்சு வச்சிருக்கேன்)
இந்த 15 வருட திருமண வாழ்கையில், வீட்டில் இருக்கும் மனைவி அப்படி என்ன பெருசா வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணியிருந்த எனக்கு, நான் இரண்டு வாரம் வீட்டு வேலை பார்த்ததில் வீட்டில் இருக்கும் மனைவியின் அருமை புரிந்தது. அதிலும் நான் முழுதாக வீட்டு வேலையை பார்க்கவில்லை, சாப்பாடு எல்லாம் நண்பர்கள் கொடுத்தார்கள். அந்த நண்பர்களுக்கு எல்லாம் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதனால் தான், மகளிர் தினத்தன்று, நான் “பெண்” என்ற ஒரு புதிய ஆத்திச்சூடியை எழுதினேன்.
 
இறுதியாக,ஸ்கூல் பையன் அறிமுகம் கிடைத்தது. அவரின் புண்ணியத்தால் நிறைய நண்பர்கள் அறிமுகமானர்கள். அதனால் அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

பின் குறிப்பு: வீட்டு அம்மணி படிக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல அமலாபால் மாதிரி பொண்ணு, காதல்..  அப்படியிப்படின்னு ஏதோ ஒரு flowல எழுதித்தொலைத்துவிட்டேன். தயவு செய்து, யாரும் அவரிடம் சொல்லிடாதீங்க. பிளீஸ்.... !!!

21 comments:


  1. ///என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் மலேசியா நாட்டில் நடைபெற்ற “உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டு” மலரிலும் - புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி, சிட்னியில் நடைபெற்ற “உலக இலக்கிய தமிழ் மாநாட்டு” மலரிலும் - புலவர்களின் பார்வையில் சங்க கால போர்கள் வெளிவந்தது. இதன் மூலம் எந்த ஒரு ஆய்வுக் கட்டுரையையும் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை நான் பெற முடிந்தது. ///

    அண்ணே நீங்க பெரிய ஆளா இருக்கீங்கண்ணே அது தெரியாம நான் உங்களை கலாய்த்துட்டேண்ணே... அண்ணே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அண்ணே

    ReplyDelete
    Replies
    1. அடடா!!! என்ன பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லிக்கிட்டு. ஒருத்தவங்களை கலாய்க்கும்போது தான் நெருக்கும் அதிகமாக ஆகும். அதனால நீங்கள் தைரியமா என்னை கலாய்க்கலாம். அப்பத்தானே, நானும் உங்களை கலாய்க்க முடியும்.
      வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரா.

      Delete
  2. ///நான் வார இறுதியில் பயிற்றுவிக்கும் தமிழ் பள்ளியில், மாணவர்களை ஊக்குவித்து,///

    நம்ம ஊரு ஊக்கிற்கு அங்க நல்ல வாய்ப்பாண்ணே

    ReplyDelete
    Replies
    1. இங்க மட்டும் இல்ல,நம்ம ஊரு ஊக்கிற்கு எல்லா இடத்துலேயும் நல்ல வாய்ப்பு இருக்கு.

      Delete
  3. ///வீட்டு அம்மணி படிக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல ///

    என்ன அண்ணே வீட்டு அம்மணிக்கு தமிழ் தெரியாதாண்ணே??

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்பூடி கேட்டுப்புட்டீங்க?. அவுங்களுக்கு நல்லா தமிழ் தெரியும். அவுங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தான் என் வலைப்பூவிற்குள் வருவார்கள். அவுங்க இதை படிக்கிறதுக்குள்ள, என்னைய அவுங்க கிட்ட இங்க இருக்கும் சில பேர் போட்டுக்கொடுத்துடுவாங்க. அவுங்களுக்காகத்தான், இந்த பிளீஸ் எல்லாம்...

      Delete
  4. //இறுதியாக,ஸ்கூல் பையன் அறிமுகம் கிடைத்தது.///

    அண்ணே இந்த அறிமுகத்தை விட்டு வீடாதிங்கண்ணே... சென்னைக்கு சென்றால் இவர் புண்ணியத்தில் நமக்கு நல்ல விருந்து கிடைக்குமண்ணே...

    ReplyDelete
    Replies
    1. விருந்தா? ஆஹா கிளம்பிட்டாங்களே....

      Delete
    2. அவரை விட்டுட்டுவோமா என்ன?. கண்டிப்பா இந்த தடவை சென்னைல அவரை போய் பார்த்து விருந்து சாப்பிட்டு தான் அடுத்த வேலையே.

      ஸ்பை - நீங்க மட்டும் ஒவ்வொரு உணவகத்துக்கும் போய் சாப்பிட்டதோட மட்டுமல்லாம, அந்த சாப்பாடு ஐட்டம் எல்லாத்தையும் போட்டோ பிடிச்சு போட்டு எங்களை ஏங்க வச்சீங்களே, அது நியாமா. அதனால அதுக்கு தண்டனையா, நாங்க சென்னை வந்தவுடனே எங்களுக்கு விருந்து தந்தே ஆகனும்.

      Delete
  5. 2014 இன்னும் சிறப்பாக அமைய இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  6. இந்த பயம் நல்லது...!

    வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நான் எப்பவுமே வீட்டுல எலி!!! தாங்க.

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  7. //நான் வார இறுதியில் பயிற்றுவிக்கும் தமிழ் பள்ளியில், மாணவர்களை ஊக்குவித்து, அவர்களையும் இங்கு நடைபெற்ற “உலக இலக்கிய தமிழ் மாநாட்டு” மலரில் கட்டுரைகளை படைக்கச் செய்தது. இதன் மூலம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குழந்தைகளாலும் தமிழில் கட்டுரைகளை எழுத முடியும் என்று தெரிந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.//

    உள்ளூரில் இருந்துகொண்டு நாங்கள் ஒன்றும் சாதிக்காமல் இருக்கிறோம், வாழ்த்துக்கள் சார், தங்களது தமிழ்ப்பணி தொடர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளில் இந்த மாதிரி ஏதாவது ஒரு பொதுத் தோண்டில் ஈடுபடுத்திக்கொண்டால் தான் நன்றாக இருக்கும். இல்லையென்றால், நாம் ஏதோ தனிமையாகி விட்டமாதிரி ஒரு எண்ணம் தோன்றும்.

      Delete
  8. //மனைவி அப்படி என்ன பெருசா வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணியிருந்த எனக்கு, நான் இரண்டு வாரம் வீட்டு வேலை பார்த்ததில் வீட்டில் இருக்கும் மனைவியின் அருமை புரிந்தது//

    இருக்கும்போது அருமை தெரியாது சார், நான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். ஜன-1 ஆம் தேதி தான் வீட்டம்மாவும் குழந்தைகளும் சென்னை வருகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க.
      ஆஹா. தனிக்காட்டு ராஜாவா!!! நாளையோட அந்த குறுகிய கால சுதந்திரம் பறிபோகிறதா!!!!

      Delete
  9. அருமையான பகிர்வு.

    எத்தனை நல்ல விஷயங்களை சத்தமில்லாது செய்து வருகிறீர்கள்.... பாராட்டுகள் நண்பரே......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  10. அப்பா!
    இவ்வளவு புத்தகங்களும் ஆய்வுக் கட்டுரையும் எழுதியிருக்கிறீர்களா?
    மேலும் எழுதிக் குவிக்க வாழ்த்துக்கள் .
    என் அம்மா தமிழ் வித்வான் படித்தவர் என்பதால் எனக்கு தமிழில் ஆர்வம் நிறைய உண்டு. ம்ம்ம் ....... நானும் ஏதாவது செய்யணும்

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிறிய திருத்தம். நான் இதுவரை எழுதியது மூன்று ஆய்வுக் கட்டுரைகள் தான். மற்ற கட்டுரைகள் எல்லாம் என்னிடம் பயிலும் தமிழ் பள்ளி மானவர்களின் ஆக்கங்கள். அவர்களுக்கு நான் வெறும் ஒரு ஊன்றுகோல் மட்டும் தான்.

      இப்பொழுது தான் தெரிகிறது.தங்களின் எழுத்தாற்றல். "தாயைப் போல பிள்ளை, நூலை போல சேலை" என்று சும்மாவா சொன்னார்கள். நானும் தங்களின் கதைகளை நிதானமாக படிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சீக்கிரம் அதையும் செய்கிறேன்.

      Delete