Monday, December 9, 2013

முட்டை சைவமா? அசைவமா?

முன்பெல்லாம் சுத்த சைவர்கள் கோழி முட்டையை தொடக்கூட மாட்டார்கள். ஆனா இப்பொழுதோ அந்த மாதிரி சைவர்களை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது. சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்கள் முட்டையையும் சைவ உணவோடு சேர்த்துவிட்டு முட்டை சைவம் தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அசைவ உணவு சாப்பிடுபவர்களோ, இல்லை, இல்லை, முட்டை அசைவ உணவு வகையைச் சேர்ந்தது தான் என்று சைவ உணவு சாப்பிடுபவர்களோடு சண்டை போடுகிறார்கள். ஹி.. ஹி..  மற்றவர்கள் அந்த மாதிரி சண்டை போடுகிறார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் என் வீட்டிலேயே அந்த மாதிரி சண்டை நடந்தது...  நடக்கிறது. 

நான் வந்து பிறவிச் சைவம். அதாவது என் தாத்தா, கொள்ளுத் தாத்தா எல்லாம் அந்த காலத்துல சிவ பூசை செய்தவர்கள், அதனால் வீட்டில் அசைவம் சமைக்கக் கூடாது. இதனால் என் தந்தையும் அசைவ உணவு சாப்பிடாமல் வளர்ந்து இருக்கிறார். அவருடைய அதிர்ஷ்டம் என் தாயும் சிறு வயதிலியே அசைவ உணவு சாப்பிடுவதை விட்டு விட்டார்கள். எங்கள் சமூகம் அசைவ சாப்பாட்டுக்கு பெயர் போனது. கண்டிப்பாக எங்கள் சமூகத்தில் 100க்கு 95ப்பேர் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் தான் என் தந்தை  அதிர்ஷ்டம் செய்திருக்கிறார் என்று சொன்னேன். இப்படி என் தாயும், தந்தையும் அசைவம் சாப்பிடாததால் நானும் அசைவம் சாப்பிடாமல் தான் வளர்ந்து வந்தேன். நான் சின்ன வயசுல பயில்வான் மாதிரி ரொம்ப குண்டா இருப்பேனாம் (ஹி! ஹி!! இப்படியெல்லாம் சொல்லிக் கொள்ள ஆசைதான்!!!!). என் எடையை கூட்டுவதற்கு மருத்துவர்கள், என்னை தினமும் காலையில் பச்சை முட்டையை உடைத்து பாலில் கலந்து குடிக்கச் சொன்னார்கள். அது நாள் வரை வீட்டில் முட்டையை வாங்காமல் இருந்த என் அம்மா, அன்று முதல் முட்டையை வாங்கி எனக்கு பாலில் கலந்து குடுக்க ஆரம்பித்தார்கள். முதல் நாள் அந்த முட்டைப்பால் எப்படி இருக்கும் என்று தெரியாததால், நானும் ஆர்வமாக குடிக்க ஆரம்பிச்சேன். ஒரு வாய் குடிச்சவுடனே ஒரு குமட்டு, குமட்டுனுச்சு பாருங்க, அப்பா சாமி, இந்த கருமத்தை இனிமே குடிக்க கூடாதுன்னு நினைச்சேன். ஆனா எங்க அம்மாவோ நான் வாந்தி எடுக்கிற மாதிரி போனவுடனே, மூக்கைப் பிடிச்சுக்கிட்டு குடிடான்னு ஒரு அதட்டு அதட்டினார்கள். அப்புறம் கஷ்டப்பட்டு, மூக்கைப்பிடிச்சு முகத்தை அஷ்டகோணலா வச்சுக்கிட்டு ஒரு நாலைந்து நாள் குடிச்சேன். அதற்கு பிறகு காலையில எழுதிருக்கும்போதே, அம்மாவிடம், “நீ, முட்டைப்பாலை கொடுத்தா, குடிச்சுட்டு நான் வாந்தி எடுத்துவிடுவேன்னு பிட்டை எல்லாம் போட்டு, அழுது ஆர்பாட்டம் பண்ணி, அதிலிருந்து எஸ்கேப் ஆனேன். ஆனா, எங்கம்மாவுக்கு பேராசை, எப்படியாவது என்னை ஒரு பயில்வானாக ஆக்கிப் பார்க்கணும்னு. முட்டைப்பால் தான் சரி வர மாட்டேங்குது, அதனால முட்டை ஆம்லெட்டா போட்டுக்கொடுத்து உடம்பைத் தேத்திடணும்னு நினைச்சுக்கிட்டு, தினமும் எனக்கு ஆம்லெட் போட்டுக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா பாருங்க அந்த முட்டைப்பால் தான் வாய்க்கு விளங்களையே தவிர, ஆம்லெட் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அதனால நானும் முட்டையை சாப்பிட ஆரம்பிச்சேன். இது தான் சைவ உணவை சாப்பிட்டுக்கிட்டு இருந்த நான் முட்டையை சாப்பிட ஆரம்பிச்ச கதை. என்னடா, இவன் முட்டை சாப்பிடுறதுக்கு என்னமா ஒரு கதை விடுறான் பாருன்னு நினைக்காதீங்க. ஏன்னா, அம்புட்டும் நெசம். (சின்ன வயசுல நடந்த சில விஷயங்கள் நம்மளால என்னைக்குமே மறக்க முடியாது. எனக்கும் அப்படித்தான் இந்த முட்டைப் பால் குடிச்சது).

எனக்கு திருமணம் ஆனது. நானோ முட்டையை தவிர வேற அசைவ உணவு எதுவும் சாப்பிடுறதில்லை. ஆனா எங்க வீட்டு அம்மணியோ, “நடக்கிறது, ஊருவது, பறப்பது” இப்படி எதையுமே விட்டு வைக்கமாட்டாங்க. அதனால அவுங்க எப்பப்பார்த்தாலும் முட்டை சாப்பிடுறீங்க, ஆனா அதிலேருந்து வர்ற கோழியை மட்டும் ஏங்க சாப்பிட மாட்டேங்குறீங்கன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. நீங்க இனிமே சைவம்னு சொல்லாதீங்கன்னு வேற சொல்லுவாங்க. நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் போனா, நான் சைவங்க அப்படின்னு சொல்லுவேன். உடனே, வீட்டு அம்மணி, அவரு சைவம் தாங்க, ஆனா முட்டையெல்லாம் நல்லா சாப்பிடுவாருன்னு போட்டுவிடுவாங்க.  அப்ப அங்க இருக்கும் என்னைய மாதிரி ஒன்றிரண்டு சைவ ஆட்கள், முட்டையை இப்ப சைவத்துல சேர்த்துட்டாங்கன்னு சொல்லி, மத்தவங்களோட கோபத்தை கிளப்பி விடுவாங்க.

பசுவிலிருந்து தானே பால் கிடைக்குது, அப்ப பாலை சைவம் தானேன்னு சொல்றோம். கோழியிலிருந்து கிடைக்கும் முட்டையை மட்டும் ஏன் அசைவம்னு சொல்றோம்னு நான் யோசிச்சதுண்டு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ராஜேஷ்குமார் எழுதின ஒரு நாவலை படிக்க நேர்ந்தது. அப்ப அதில அவரு கோழி முட்டை சைவம் தான் சொல்லியிருந்தாரு. எப்படின்னா, பத்து, பதினைந்து வருடத்துக்கு முன்பு வரை, முட்டை அசைவமாக தான் இருந்தது. காரணம் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் எதிர்கால குஞ்சு இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு முட்டைகளை உற்பத்தி செய்தார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய் முட்டை என்பது ஓர் உணவுப் பொருளாக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, உள்ளே உயிர் இல்லாத முட்டைகள் தான் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அதனால் முட்டை சைவமே என்று சொல்லியிருந்தார்.

ஒரு பெரிய எழுத்தாளர், இதனைப் பற்றி கண்டிப்பா ஆராய்ச்சி பண்ணாம எழுதியிருக்க மாட்டார், அதனால முட்டை சைவம் தான்னு சொல்லிக்கலாம்.


17 comments:

  1. முட்டையை எப்படி சாப்பிட்டாலும் எனக்குப் பிடிக்கும். அப்படியே உடைத்து வாயில் ஊற்றிக்கொள்ளலாம், ஆம்லேட், ஆப் பாயில் செய்து சாப்பிடலாம், அவித்து சாப்பிடலாம், பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், இப்படி எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும் ருசியில் குறைவில்லாதது...

    ReplyDelete
    Replies
    1. ///முட்டையை எப்படி சாப்பிட்டாலும் எனக்குப் பிடிக்கும்.///

      ஓ அப்படியா நான் இந்தியா வரும் போது முட்டையை உடைக்காமல் உங்கள் வாயில் திணிக்கிறேன் அப்ப எப்படி சாப்பிடுறீங்க என பார்க்கிறேன் ஹீ.ஹீ

      Delete
    2. முட்டை மேல் உங்களுக்குள்ள பிரியம் நன்றாக தெரிகிறது. இந்தியாவில முட்டை விலை ஏன் எறிப்போச்சுன்னு இப்பத்தான் எனக்கு தெரியிது.

      Delete
  2. //முன்பெல்லாம் சுத்த சைவர்கள் கோழி முட்டையை தொடக்கூட மாட்டார்கள். ///

    அப்ப அசுத்த ( அதாவது குளிக்காத ) சுத்த சைவர்கள் கோழி முட்டையை சாப்பிடுவாங்கன்னுதானே சொல்ல வருகிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. என்ன! உங்கள் அறிவு!!!. எப்படி இப்படி தெளிவா சிந்திக்கிறீங்கன்னு தெரியலை. ஒரு வேளை ரூம் போட்டு யோசிப்பீங்களோ!!!

      Delete
  3. 100 க்கு 200 சதவிகிதம் அசைவ உணவுகள் சாப்பிடும் எங்கள் குடும்பத்தில் நானும் உங்களை மாதிரி சைவம்தான் ஆனா என்ன நீங்க முட்டை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா நான் முட்டை மட்டும் பொரிச்சா மீன் சாப்பிடுவேன் அவ்வளவுதாங்க..( கல்கத்தா போன்ற நகரங்களில் மீனும் சைவம்தான் என்று சொல்லுகிறார்கள் )

    ஸ்கூல் பையா கவனிச்சுக்க நான் இந்தியா வரும் போது எனக்கு மீன் முட்டை மட்டும் ஆர்டர் பண்ணனும் அதுக்குதான் இந்த கருத்து நோட் பண்ணீ வைச்சுக்க

    ReplyDelete
    Replies
    1. நீங்க இந்தியா போகும்போது, ஸ்கூல் பையா உங்களை மீன் முட்டை கிடைக்காத ஹோட்டலுக்குத் தான் கூட்டிக்கிட்டு போவாரு.

      Delete
  4. :)))))

    Vegetarian, Non-Vegetarian என்பதைத் தவிர இப்போது Eggitarian என் மூன்றாவது வகை ஒன்று கொண்டு வந்தாயிற்று இப்போது......

    ReplyDelete
  5. முட்டை சைவம்ன்னு கிருபானந்த வாரியார் சுவாமிகளே சொல்லி இருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு புதிய தகவலை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சகோதரி

      Delete
  6. அதி குளிர் கூடிய நாடான சுவிஸ் நாட்டிலும் முட்டை சைவம் என்று
    தான் சொல்கின்றார்கள் இங்கு உள்ள எமது நாட்டைச் சேர்ந்த ஐயர்கள் :))))(இந்தக் குளிருக்கு ஆகக் குறைந்தது முட்டையாவது குடிக்கணும் இல்லாது போனால் பெட்டியில தான் போகணும் :))) )

    ReplyDelete
    Replies
    1. //":))))(இந்தக் குளிருக்கு ஆகக் குறைந்தது முட்டையாவது குடிக்கணும் இல்லாது போனால் பெட்டியில தான் போகணும் :))) )//" - சரியா சொன்னீங்க. எனக்கு முட்டையை குடிக்கப் பிடிக்காது. ஆனா சாப்பிட மட்டும் பிடிக்கும்.

      Delete
  7. Please refer this blog:
    http://achimakan.blogspot.in/2004/11/blog-post_109989415442717442.html

    ReplyDelete
  8. தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  9. நெருப்பு கோழி முட்டைய சிங்கம் சாப்பிட்டு நான் டிஸ்கவரி சேனலில் பார்த்து இருக்கிறேன் அப்படி என்றால் முட்டை எப்படி சைவமாகும்!

    ReplyDelete
  10. நெருப்பு கோழி முட்டைய சிங்கம் சாப்பிட்டு நான் டிஸ்கவரி சேனலில் பார்த்து இருக்கிறேன் அப்படி என்றால் முட்டை எப்படி சைவமாகும்!

    ReplyDelete