உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-3




அன்றைக்கு இரவு அந்த டர்கிஷ் கெபாபை சாப்பிட்டு முடிச்சவுடனே,அம்மணி கொண்டு வந்திருந்த அரிசியை ரைஸ் குக்கர்ல வச்சு, சாதம் ஆனபிறகு புளிக்காய்ச்சலை போட்டு,புளியோதரையை செய்துவிட்டார்கள். எங்களுக்கு புளியோதரை ரெடி, ஆனா குழந்தைகளுக்கு தயிர் சாதம் பிசையறதுக்கு, தயிர் இல்லையே(அடிக்கிற வெயிலில் தயிரை வீட்டிலிருந்து கொண்டு வந்தால் ரொம்பவும் புளித்து விடும் என்பதால் கொண்டு வரவில்லை. பக்கத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வாங்க மறந்து விட்டோம். மணியோ இரவு பத்தாயிடுச்சு.பக்கத்துல ஒரு இந்திய உணவகம் இருந்தது நியாபகத்துக்கு வந்துச்சு அங்க போய் வெறும் தயிரை மட்டும் கேட்டுப்பார்த்து வாங்கிக்கிட்டு வரலாம்னு போனேன். நல்ல காலம் நான் போன நேரம் உணவகத்துல கணக்கு வழக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச நேரம் லேட்டாகியிருந்தா உணவகத்தை மூடியிருப்பாங்க. இந்த இடத்துல நான் ஆஸ்திரேலியாவிலுள்ள கடைகளைப் பற்றி சொல்லியாக வேண்டும். அதாவது இங்கு இருக்கும் கடைகள் எல்லாம் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரையும்,மற்றும் வெள்ளிக்கிழமையும் மாலை 7மணிக்கெல்லாம் மூடப்படும். வியாழக்கிழமை மட்டும் சற்று லேட்டாக 9 அல்லது 10மணி வரை திறந்திருக்கும். சனி,ஞாயிறுகளில் எல்லாம் மாலை 4மணிக்கெல்லாம் மூடப்படும். சூப்பர் மார்க்கெட் கடைகள் மட்டும் இரவு தாமதமாக மூடுவார்கள். நாங்கள் இங்கு வந்த புதிதில், இதெல்லாம் தெரிந்தும் சனி ஞாயிறுகளில், பொறுமையாக வீட்டைவிட்டு கிளம்பி ஷாப்பிங் போகலாம்னு போனா, அங்க ஒரு கடையும் திறந்திருக்காது. ரொம்பவே கடுப்பா இருக்கும். நான் டிராக் மாறி போறேன்னு நினைக்கிறேன். இந்த கடைகளைப் பற்றி வேற ஒரு பதிவுல சொல்றேன்.
அந்த உணவகத்துக்குள்ள போய், கொஞ்சம் தயிர்
கிடைக்குமான்னு கேட்டேன். அப்போது கல்லாவில் இருந்த பெண்மணி பணத்தை எல்லாம் எண்ணிக்கொண்டு இருந்தார்.அவருடைய கணவனைப் போல் இருந்தவர், அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டு, ஹிந்த்தியில் என்னமோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் தான் அந்த ஹோட்டலை நடத்துகிறவர்களாம் (கிளம்பும்போது கேட்டுத் தெரிந்துக்கொண்டேன்).
சகோதரர்களே, நன்றாக கவனியுங்கள்,வீட்டில் தான் நாம் நிதித்துறையை பிரதம மந்திரியான மனைவியிடம் கொடுத்துவிட்டு, வெறும் ரப்பர் ஸ்டாம்ப் குத்தும் ஜனாதிபதியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறோம். வியாபாரத்திலும் அந்த கணவன் தன் மனைவியிடம் நிதித்துறையை கொடுத்து விட்டு, வேலை செய்யும் ஊழியரைப்போல் நான் கேட்ட வெறும் தயிரை எடுத்து வர உள்ள சென்று விட்டார்.
போகும்போது என்னிடம் வெறும் தயிர் மட்டும் போதுமான்னு கேட்டார், நானும் அந்த தயிரோட கொஞ்சம் உப்பையும் கொடுங்கள் என்று சொன்னேன். அவரும் நான் கேட்டதற்கு தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று தயிரை ஒரு சின்ன பிளாஸ்டிக் கண்டெய்னரில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உப்பை தயிரில் கலந்திருக்கிறேன் என்று கூறி மூன்று டாலர் வாங்கிக்கொண்டு, அதை மனைவியிடம் கொடுத்தார். நானும் இந்த உணவகத்தில் பெண்மணியின் ஆட்சி தான் நடக்கிறது போலன்னு நினைத்துக்கொண்டு தயிரோடு தங்கியிருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தேன். மறு நாள் காலையில் தயிர் சாதம், புளியோதரை எல்லாம் எடுத்துக்கொண்டு "CATHEDRAL ROCKS" எனும் இடத்துக்கு போனோம். அதுவும் கியாமா போகிற வழியில் "கியாமா டௌன்ஸ் (KIAMA DOWNS)"எனும் இடத்தில் இருந்தது. ஆஹா, அந்த இடத்தை பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது.
அங்கே கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு, பிறகு எங்கே
போகலாம்னு நான் "கியாமா சுற்றுலா அலுவலகத்தில்" இருந்து சுட்டுக்கிட்டு வந்த
புத்தகக்தை புரட்டிப்பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போது ஓவியா, அப்பா நாம மறுபடியும்
அந்த ப்லோ ஹோல் எடத்துக்கே போகலாம். நேத்து நீங்க எங்களை சீக்கிரம் கூட்டிக்கிட்டு
வந்துட்டீங்க, அதனால மறுபடியும் போய் ரொம்ப நேரம் அங்க இருக்கணும்னு சொன்னாங்க. சரி, அவுங்க ஆசையை என் கெடுப்பானேன்னு, மறுபடியும்
கியாமாவிற்கு போய், முதல்ல சாப்பிட ஒரு அருமையான இடமா பார்த்து உட்கார்ந்து சாப்பிட்டோம்.
எங்களோட புளியோதரை ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா தயிர் சாதம் தான் காலைவாரி விட்டுடுச்சு.
புளிப்புன்னா, புளிப்பு அப்படி ஒரு புளிப்பு. அடப்பாவி, இந்த புளிப்புத்தயிருக்குத்தானா
மூணு டாலர்ன்னு நினைச்சுக்கிட்டு, தயிர் சாதத்துல மறுபடியும் தண்ணி எல்லாம் ஊத்தி,
எப்படியோ ஓவியாவிற்கும் இனியாவிற்கும் கொடுத்தோம். இனியா கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு,
அதுக்குமேல சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம்.
ஏற்கனவே, அவுங்க "தண்ணி குடிச்சா வாந்தி வரும்னு"
சொல்லியிருக்கிறதுனால
(அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்-தண்ணி குடித்தால் வாந்தி வரும்)
(அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்-தண்ணி குடித்தால் வாந்தி வரும்)
அவுங்க சாப்பிட்ட வரை போதும்னு சாப்பாட்டுக்கடையை
ஏறக்கட்டி, அந்த ப்லோ ஹோலுக்கு போனோம். எங்க நல்ல நேரம் அன்றைக்கும் தண்ணீர் நல்லா
மேலே எழும்பி வந்துச்சு. கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துவிட்டு, வீட்டுக்கு போகலாம்னு
கிளம்பினோம். போகும்போது "GRAND PACIFIC DRIVE" வழியாக போய் அந்த "SEA
CLIFF BRIDGE" யையும் பார்த்துக்கொண்டு போகலாம்னு முடிவெடுத்து அந்த "GRAND
PACIFIC DRIVE" ஸைன் போர்டை பார்த்துக்கொண்டே போனோம். அப்படி போகும்போது என்ன
பிரச்சனை என்றால், இரண்டு மூன்று பாதைகள் பிரியும்போது அந்த ஸைன் போர்ட் இருக்காது.
அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் ஒரு குத்து மதிப்பா வண்டியை ஓட்டிக்கிட்டு போனேன்.
ஒரு வழியா ஊர்,உலகத்தை எல்லாம் சுத்தின பிறகு, அந்த ப்ரிட்ஜும் கண்ணுல தென்பட்டுச்சு.
அந்த இடத்தை பார்க்தவுடனே ஆஹா, இவ்வளவு
கஷ்டப்பட்டு வந்தது வீண் போகலைடா சாமின்னு நினைக்க தோணுச்சு. இத்தனைக்கும் இந்த ப்ரிட்ஜ்
வெறும் 660 மீட்டர் தான். ஆனாலும் கண்ணுக்கு அப்படி ஒரு அழகான விருந்தை அந்த ப்ரிட்ஜ்
கொடுத்துச்சு. வண்டியை ஓரங்கட்டுறதுக்கு கொஞ்சம் இடம் விட்டுவச்சிருந்தாங்க. அந்த இடத்துல
வண்டியை ஓரங்கட்டிட்டு, இறங்கி புகைப்படம் எல்லாம் எடுத்துக்கிட்டு 4.30 மணியைப்போல
வீடு வந்து சேர்ந்தோம்.
அந்த மூன்று நாளும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும்,
இந்த வருடத்திற்கான ஒரு புத்துணர்ச்சியாகவும் அமைஞ்சது.



