நான் டோக்கியோவில் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2006ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் வரை ஏறக்குறைய ஐந்தாண்டுகள் வசித்திருக்கிறேன். அங்கே சில விஷயங்கள்
என்னை மிகவும் ஆச்சிரியப்பட வைத்திருக்கிறது. அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், அவர்களுடைய சில பழக்க வழக்கங்கள்
நம் தமிழர்களின் பழக்கவழக்கங்களோடு ஒத்துப்போவது தான். எனக்குத் தெரிந்த அளவில் அவர்கள்
எவ்வாறு நம்மோடு ஒத்துப்போகிறார்கள் என்று சொல்கிறேன்.
முதலில் வீட்டிலிருந்து பார்க்கலாம்:
நம்மைப்போல் அவர்களும்
வீட்டிற்கு வெளியே தான் காலணிகளை கழட்டிவிட்டு உள்ளே வருகார்கள்.
நாம் தரையில் விரிப்பதற்கு
பாயை பயன்படுத்துவோம் (இப்பொழு தெல்லாம் பாயை
அருங்காட்சியகத்தில் காண முடியும்). அவர்கள் தரையின் மீதே பாயை பதித்து விடுகிறார்கள்.
அதற்கு ததாமி (Tatami) என்று பெயர்.
எனக்குத் தெரிந்து
நிறைய பேர் கட்டில் இல்லாமல் மெத்தை மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் படுத்து, காலையில் அதனை மடித்து வைப்பதுண்டு.
அதே மாதிரி, அங்கும் மெத்தை மட்டும் பயன்படுத்துகிறவர்கள் இன்னும்
இருக்கிறார்கள். நாங்கள் அங்கு இருக்கும்போது, எங்களுக்கு அது
ஒன்றும் வித்தியாசமாக தெரிந்ததில்லை.
நமக்கு அரிசி எவ்வாறு முக்கியமான
உணவோ, அவர்களுக்கும்
அரிசி தான் முக்கியமான உணவு. நாம் அந்த சாதத்தில் சாம்பார், ரசம், மோர் என்று கலந்து சாப்பிடுவோம். ஆனால் அவர்கள் சாதத்தை வைத்து என்னவெல்லாம்
செய்வார்கள் என்றால்,
ஒரு கிண்ணம்
சாதம் – இதில் மிசோ சூப் (miso
soup) மற்றும் ஊருகாயை வைத்து சாப்பிடுவார்கள்.
சுஷி ரைஸ் (sushi rice)
ஒனிகிரி(onigiri)
கரே ரைஸ்
(curry rice)
நாம் கீழே உட்கார்ந்து தான் சாப்பிடுவோம். அவர்களும் கீழே உட்கார்ந்து
தான் சாப்பிடுவார்கள். என்ன, அவர்கள் உயரம் கம்மியான ஒரு மேசையை போட்டு அதில் எல்லா உணவு வகைகளையும் வைத்து, அதன் அருகில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.
அடுத்து திருமணம் – அங்கு பல வருடங்களுக்கு முன்பு வரை பெற்றோர்களால்
நிச்சயக்கப்பட்ட திருமணம் தான் இருந்ததாம். காலப்போக்கில், மேற்கத்திய நாகரிகத்தின்
பாதிப்பால், அந்த நடைமுறை அழிந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம்
பெண் பார்க்க மூன்று நாட்கள் பெண்ணின் வீட்டிற்கு மணமகன் வீட்டார் போவார்களாம். மூன்றாவது
நாளில், பெண் வீட்டார் இனிப்பு பண்டம் கொடுத்தால் திருமணத்திற்கு
சம்மதம் என்று பொருளாம். மூன்று நாட்கள் பெண் வீட்டிற்கு சென்று பெண் பார்க்கும் பழக்கம்
நம்மிடம் இருந்தால், மாப்பிள்ளை வீட்டார்கள், மூன்று நாட்களும் பெண் வீட்டில் நன்றாக சாப்பிட்டே அவர்களை ஒன்றும் இல்லாமல்
ஆக்கிவிடுவார்கள்.
நாம் பின்பற்றும்
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை அவர்களும் அந்த காலத்தில் பின்பற்றியிருக்கிறார்கள்.
மாமியார் – மருமகள் பிரச்சனை அங்கேயும் இருந்ததாம்.
இந்த பெண் பார்க்கும்
படலம்,கூட்டுக்குடும்பம்
இவையெல்லாம் எங்களுக்கு ஜப்பானிய மொழி சொல்லிக்கொடுத்த அம்மையார் அவர்கள் சொன்னது தான்.
அவர்கள் எங்களை விட வயதில் மூத்தவர்கள். அவர்களுடைய தாயார் காலத்து வரைக்கும் இந்த
முறைகள் எல்லாம் இருந்தது என்றும், அவர்களுடைய தாயார், தன் மாமியாரைப் பார்த்து பயந்து வாழ்ந்ததை எல்லாம் சொல்லியிருக்கிறார்களாம்.
(எல்லா இடங்களிலும் இந்த மாமியார்-மருமகள் பிரச்சனை இருக்கும் போல)
இன்னொரு மிகப்பெரிய
ஒற்றுமை நமக்கும் ஜப்பானியர்களுக்கும் என்னவென்றால், நாம் பொங்கலை தை ஒன்றாம் தேதி(jan-14/15) கொண்டாடுவோம். அதே நாட்களில் கோஷோகட்சு (“koshogatsu”) அதாவது சிறிய புத்தாண்டு என்ற பெயரில் பொங்கலை கொண்டாடுகிறார்கள்.
நாம் எவ்வாறு நம்முடைய
முன்னோர்களை வழிபடுகிறோமோ, அதே மாதிரி அவர்களும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி, காண்டோ(kanto
region) பகுதிகளில் ஜூலை மாதம் 15ஆம் தேதி முன்னோர்களை வழிபடுகிறார்கள்.
இதுவரை நம்முடைய கலாச்சாரத்திற்கும், ஜப்பானிய கலாச்சாரத்திற்கும்
எனக்குத் தெரிந்த ஒற்றுமைகளை சொல்லியிருந்தேன். இன்று இவ்விரு கலாச்சாரங்களும் மேற்கத்திய
மோகத்தினால் அழிந்து கொண்டு வருகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
சரி, தமிழ் நாட்டை சேர்ந்தவர் ஒருவருக்கு ஜப்பானிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டிருக்கும்
விஷயம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி தெரியாதவர்கள்
இங்கே சென்று படிக்கவும் - தமிழருக்கு கௌரவம்