Monday, December 9, 2013

முட்டை சைவமா? அசைவமா?

முன்பெல்லாம் சுத்த சைவர்கள் கோழி முட்டையை தொடக்கூட மாட்டார்கள். ஆனா இப்பொழுதோ அந்த மாதிரி சைவர்களை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது. சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்கள் முட்டையையும் சைவ உணவோடு சேர்த்துவிட்டு முட்டை சைவம் தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அசைவ உணவு சாப்பிடுபவர்களோ, இல்லை, இல்லை, முட்டை அசைவ உணவு வகையைச் சேர்ந்தது தான் என்று சைவ உணவு சாப்பிடுபவர்களோடு சண்டை போடுகிறார்கள். ஹி.. ஹி..  மற்றவர்கள் அந்த மாதிரி சண்டை போடுகிறார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் என் வீட்டிலேயே அந்த மாதிரி சண்டை நடந்தது...  நடக்கிறது. 

நான் வந்து பிறவிச் சைவம். அதாவது என் தாத்தா, கொள்ளுத் தாத்தா எல்லாம் அந்த காலத்துல சிவ பூசை செய்தவர்கள், அதனால் வீட்டில் அசைவம் சமைக்கக் கூடாது. இதனால் என் தந்தையும் அசைவ உணவு சாப்பிடாமல் வளர்ந்து இருக்கிறார். அவருடைய அதிர்ஷ்டம் என் தாயும் சிறு வயதிலியே அசைவ உணவு சாப்பிடுவதை விட்டு விட்டார்கள். எங்கள் சமூகம் அசைவ சாப்பாட்டுக்கு பெயர் போனது. கண்டிப்பாக எங்கள் சமூகத்தில் 100க்கு 95ப்பேர் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் தான் என் தந்தை  அதிர்ஷ்டம் செய்திருக்கிறார் என்று சொன்னேன். இப்படி என் தாயும், தந்தையும் அசைவம் சாப்பிடாததால் நானும் அசைவம் சாப்பிடாமல் தான் வளர்ந்து வந்தேன். நான் சின்ன வயசுல பயில்வான் மாதிரி ரொம்ப குண்டா இருப்பேனாம் (ஹி! ஹி!! இப்படியெல்லாம் சொல்லிக் கொள்ள ஆசைதான்!!!!). என் எடையை கூட்டுவதற்கு மருத்துவர்கள், என்னை தினமும் காலையில் பச்சை முட்டையை உடைத்து பாலில் கலந்து குடிக்கச் சொன்னார்கள். அது நாள் வரை வீட்டில் முட்டையை வாங்காமல் இருந்த என் அம்மா, அன்று முதல் முட்டையை வாங்கி எனக்கு பாலில் கலந்து குடுக்க ஆரம்பித்தார்கள். முதல் நாள் அந்த முட்டைப்பால் எப்படி இருக்கும் என்று தெரியாததால், நானும் ஆர்வமாக குடிக்க ஆரம்பிச்சேன். ஒரு வாய் குடிச்சவுடனே ஒரு குமட்டு, குமட்டுனுச்சு பாருங்க, அப்பா சாமி, இந்த கருமத்தை இனிமே குடிக்க கூடாதுன்னு நினைச்சேன். ஆனா எங்க அம்மாவோ நான் வாந்தி எடுக்கிற மாதிரி போனவுடனே, மூக்கைப் பிடிச்சுக்கிட்டு குடிடான்னு ஒரு அதட்டு அதட்டினார்கள். அப்புறம் கஷ்டப்பட்டு, மூக்கைப்பிடிச்சு முகத்தை அஷ்டகோணலா வச்சுக்கிட்டு ஒரு நாலைந்து நாள் குடிச்சேன். அதற்கு பிறகு காலையில எழுதிருக்கும்போதே, அம்மாவிடம், “நீ, முட்டைப்பாலை கொடுத்தா, குடிச்சுட்டு நான் வாந்தி எடுத்துவிடுவேன்னு பிட்டை எல்லாம் போட்டு, அழுது ஆர்பாட்டம் பண்ணி, அதிலிருந்து எஸ்கேப் ஆனேன். ஆனா, எங்கம்மாவுக்கு பேராசை, எப்படியாவது என்னை ஒரு பயில்வானாக ஆக்கிப் பார்க்கணும்னு. முட்டைப்பால் தான் சரி வர மாட்டேங்குது, அதனால முட்டை ஆம்லெட்டா போட்டுக்கொடுத்து உடம்பைத் தேத்திடணும்னு நினைச்சுக்கிட்டு, தினமும் எனக்கு ஆம்லெட் போட்டுக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா பாருங்க அந்த முட்டைப்பால் தான் வாய்க்கு விளங்களையே தவிர, ஆம்லெட் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அதனால நானும் முட்டையை சாப்பிட ஆரம்பிச்சேன். இது தான் சைவ உணவை சாப்பிட்டுக்கிட்டு இருந்த நான் முட்டையை சாப்பிட ஆரம்பிச்ச கதை. என்னடா, இவன் முட்டை சாப்பிடுறதுக்கு என்னமா ஒரு கதை விடுறான் பாருன்னு நினைக்காதீங்க. ஏன்னா, அம்புட்டும் நெசம். (சின்ன வயசுல நடந்த சில விஷயங்கள் நம்மளால என்னைக்குமே மறக்க முடியாது. எனக்கும் அப்படித்தான் இந்த முட்டைப் பால் குடிச்சது).

எனக்கு திருமணம் ஆனது. நானோ முட்டையை தவிர வேற அசைவ உணவு எதுவும் சாப்பிடுறதில்லை. ஆனா எங்க வீட்டு அம்மணியோ, “நடக்கிறது, ஊருவது, பறப்பது” இப்படி எதையுமே விட்டு வைக்கமாட்டாங்க. அதனால அவுங்க எப்பப்பார்த்தாலும் முட்டை சாப்பிடுறீங்க, ஆனா அதிலேருந்து வர்ற கோழியை மட்டும் ஏங்க சாப்பிட மாட்டேங்குறீங்கன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. நீங்க இனிமே சைவம்னு சொல்லாதீங்கன்னு வேற சொல்லுவாங்க. நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் போனா, நான் சைவங்க அப்படின்னு சொல்லுவேன். உடனே, வீட்டு அம்மணி, அவரு சைவம் தாங்க, ஆனா முட்டையெல்லாம் நல்லா சாப்பிடுவாருன்னு போட்டுவிடுவாங்க.  அப்ப அங்க இருக்கும் என்னைய மாதிரி ஒன்றிரண்டு சைவ ஆட்கள், முட்டையை இப்ப சைவத்துல சேர்த்துட்டாங்கன்னு சொல்லி, மத்தவங்களோட கோபத்தை கிளப்பி விடுவாங்க.

பசுவிலிருந்து தானே பால் கிடைக்குது, அப்ப பாலை சைவம் தானேன்னு சொல்றோம். கோழியிலிருந்து கிடைக்கும் முட்டையை மட்டும் ஏன் அசைவம்னு சொல்றோம்னு நான் யோசிச்சதுண்டு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ராஜேஷ்குமார் எழுதின ஒரு நாவலை படிக்க நேர்ந்தது. அப்ப அதில அவரு கோழி முட்டை சைவம் தான் சொல்லியிருந்தாரு. எப்படின்னா, பத்து, பதினைந்து வருடத்துக்கு முன்பு வரை, முட்டை அசைவமாக தான் இருந்தது. காரணம் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் எதிர்கால குஞ்சு இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு முட்டைகளை உற்பத்தி செய்தார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய் முட்டை என்பது ஓர் உணவுப் பொருளாக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, உள்ளே உயிர் இல்லாத முட்டைகள் தான் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அதனால் முட்டை சைவமே என்று சொல்லியிருந்தார்.

ஒரு பெரிய எழுத்தாளர், இதனைப் பற்றி கண்டிப்பா ஆராய்ச்சி பண்ணாம எழுதியிருக்க மாட்டார், அதனால முட்டை சைவம் தான்னு சொல்லிக்கலாம்.


Wednesday, December 4, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – யூடியூப் புகழ் நடிகர் சாம் ஆண்டர்சன்




10.45 மணியை போல கிருஷ்ணா வந்து என்கிட்ட உங்க காட்சியை எடுக்கப்போறோம், அதனால மேல வாங்கன்னு கூப்பிட்டாரு. அவரு வந்து கூப்பிடறதுக்கு ஐந்து நிமிடம் முன்னாடி, சொல்லிவச்ச மாதிரி என்னோட மற்ற நண்பர்கள் எல்லாரும் வரிசையா வர ஆரம்பிச்சாங்க. இவுங்க எல்லாம் லேட்டா வருவாங்கன்னு நினைச்சா, எல்லோரும் சீக்கிரமாகவே வந்துட்டாங்களே, நாம நினைச்சது நடக்கலையேன்னு எனக்கு வருத்தமாப்போச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுது, கிருஷ்ணா என்னைய நம்பாம, எல்லோருக்கும் போன் போட்டு கொஞ்சம் சீக்கிரமாக வர சொல்லியிருக்காருன்னு. அப்புறம் நாங்க எல்லோரும் மேல போனோம். அப்பத்தான் நான் போன பதிவுல சொன்ன காட்சியை எடுத்து முடிச்சிருந்ததுனால, இயக்குனர் கொஞ்சம் பிரேக் விட்டிருந்தாரு. எங்களையெல்லாம் பார்த்த இயக்குனர், நடிகர் விஜய் கிட்ட, சார் இவுங்க தான் நம்ம படத்துல நடிக்கிற அந்த “batchelor team” அப்படின்னாரு. உடனே, விஜய்யும் எங்களைப் பார்த்து எப்படி இருக்கீங்கன்னு கேட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. ஒரு ரெண்டு நிமிஷம் தான் எங்களோடு பேசியிருப்பாரு, அதுக்குள்ள அவரோட மேக்கப் மேன் வந்து அவரை கூட்டிக்கிட்டு போயிட்டாரு. அப்பத்தான் ஒருத்தரை நான் பார்த்தேன். அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு, ஆனா சரியா அடையாளம் தெரியலை. பக்கத்துல இருந்த இன்னொரு நண்பரிடம், அவரை காமிச்சு, “ஏங்க இவரு யாருங்க, இவரை எங்கேயோ நான் பார்த்திருக்கேன்னு சொன்னேன்”. உடனே அந்த நண்பரும், “அட! இவரை தெரியலையா, இவரு தான் யூடியூப் புகழ் சாம் ஆண்டர்சன் அப்படின்னாரு. உடனே எனக்கு நல்லா நியாபகம் வந்துடுச்சு. கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான், “அது இது எது” ன்னு ஒரு டி‌வி நிகழ்ச்சியை யூடியூப்ல பார்த்தேன். 


அதுக்கு பிறகு தான் இவர் நடிச்ச அந்த யூடியூப் மெகா ஹிட் திரைப்படமான “ராசாத்தி”யை பார்த்தேன். அதிலிருந்து இவரோட பரம விசிறியாயிட்டேன். எப்பவெல்லாம் எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குதோ, அப்பவெல்லாம் இவர் அந்த படத்துல நடிச்ச நடனத்தையும், பவர் ஸ்டாரோட பேட்டியையும் யூடியூப்ல பார்ப்பேன்.



நண்பர்களே, நீங்கள் மற்ற காணொளியை பார்க்கலைன்னாலும் பாராவாயில்லை, மேலே உள்ள இந்த காணொளியை மட்டுமாவது பாருங்க. "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்". 

நானும் என் நண்பரும் இவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது தான், இயக்குனர், சாம் ஆண்டர்சனை கூட்டிக்கிட்டு வந்து, எங்களிடம் "சார் யாருன்னு தெரியுமான்னு" கேட்டாரு. என்னோட நண்பரும் சாம் ஆண்டர்சன் சாரை தெரியாம இருக்குமா அப்படின்னாரு. இவரை எத்தனை தடவை நாங்க யூடியூப்ல பார்த்திருக்கோம், அப்படின்னேன். என் நண்பரும், "என்ன சார் நீங்க, அன்னைக்கு அந்த அது இது எது நிகழ்ச்சியில, கடைசி வரைக்கும் நீங்க நடிச்ச படத்துல இடம்பெற்ற வசனத்தை சொல்லவேயில்லையே" அப்படின்னாரு. அவரும், எனக்கு மறந்துபோச்சுங்க, அதனால தான் அன்னைக்கு சொல்ல முடியாம போச்சுன்னு சொன்னாரு. நான் இவரை கொஞ்சம் ஓட்டலாம்னு முடிவு பண்ணி, "சார், அன்னைக்கு தான் உங்களுக்கு மறந்து போயிருக்கும், இன்னைக்கு உங்களோட பரம ரசிகர்களின் விருப்பத்திற்காக அந்த வசனத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்னு" சொன்னேன். உடனே, அவர் ரொம்ப சீரியஸா, "ஏங்க, உண்மையிலேயே எனக்கு நியாபகம் இல்லைங்க. ரொம்ப சாரிங்க" அப்படின்னாரு. இதையெல்லாம் பக்கத்துல நின்னு  பார்த்துக்கிட்டு இருந்த இயக்குனருக்கு ஒரே ஆச்சிரியம். அவர் கிட்ட, "பாருங்க உங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்காங்க" அப்படின்னு சொன்னாரு. ஆனா, எங்களுக்கு இல்ல தெரியும் நாங்க அவருக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள்னு.

அந்த புகழ் பெற்ற வசனம் இது தான், 


எனக்கு சாம் ஆண்டர்சன் எப்படி இங்க வந்தாரு, அவருக்கு என்ன ரோல்ன்னு ஒரே குழப்பம். உடனே கிருஷ்ணாவிடம் போய், இவர் என்னவாக நடிக்கிறாருன்னு கேட்டேன். அவர் வந்து அமலாபாலுக்கு கணவராக நடிக்கிறாருன்னு சொன்னாரு. அவர் இன்னைக்கு தான் வந்தாரான்னு கேட்டேன். அவர் ஏற்கனவே வேற ஒரு நிகழ்ச்சிக்காக மெல்போர்ன் வந்திருந்தாரு, இந்த படத்துல நடிக்கிறதுக்காக இன்னைக்கு சிட்னி வந்திருக்காருன்னு சொன்னாரு. நீங்க படத்துல பார்த்தீங்கன்னா, விஜய், அவரிடம் தேங்க்யு சாம், எங்களுக்காக ஆஸ்திரேலியா வரைக்கும் வந்ததுக்குன்னு சொல்லுவாரு, அதுக்கு அவர் ஆஸ்திரேலியாவில சூட்டிங் நடந்ததுனால ஓகே, இந்தியாவ இருந்தா கஷ்டமா இருக்கும் அப்படின்னு சொல்லுவாரு. அந்த வசனத்தோட உண்மையான அர்த்தம், நான் மேல சொன்னது தான். அவர் மெல்பர்ன்ல இருந்ததுனால, அவரை சிட்னிக்கு வரவழைத்து அந்த காட்சியை எடுத்திருக்காங்க.



அதற்கு பிறகு, இயக்குனர் எங்களையெல்லாம் கூப்பிட்டு அந்த நடன வகுப்பு காட்சியை விளக்க ஆரம்பிச்சாரு. அந்த காட்சியை எப்படியெல்லாம் நகைச்சுவையா எடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன். என்ன, அந்த காட்சிக்கு கத்திரி போட்டு, ரொம்பவும் சுருக்கிட்டாங்க. இந்த காட்சி மட்டுமில்ல, அந்த உணவகக் காட்சி, கடைசில அமலாபால் எனக்கு திருமணம் ஆயிடுச்சுன்னு சொல்ற காட்சி இப்படி மூணு காட்சியையும் சுருக்கிட்டாங்க. அதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

- இன்னும் சொல்கிறேன்

Monday, December 2, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கே சிக்கன் சாப்பாடு கிடையாது!!!!


போன பதிவுல நான் ஒண்ணு சொல்லாம விட்டுட்டேன். அதாவது, அன்னைக்கு எடுத்த அந்த ஜாகிங் காட்சி முழுமையா முடியலை. இயக்குனர், எங்ககிட்ட, இந்த காட்சியோட continuityக்காக நீங்க இன்னொரு நாள் வர வேண்டியிருக்கும்ன்னு சொன்னாரு. அப்படின்னா இன்னும் ரெண்டு நாள் வரனுமான்னு கேட்டோம். ஆமா, இந்த காட்சியும், அப்புறம் நடன வகுப்பு காட்சியும் தான் பாக்கியிருக்கு, அதனால இன்னும் ரெண்டு நாள் வந்தா போதும்ன்னு சொன்னாரு. உடனே, நாங்க ஐயா, எப்படியாவது சனி,ஞாயிறாப்பார்த்து சூட்டிங் வைங்கன்னு கெஞ்சாத குறையா அவரிடம் கேட்டோம். (படத்துல தோன்றுகிற இந்த ஊர் ஆங்கில கலைஞர்களுக்கு மட்டும் குறைந்தது ஒரு நாளைக்கு $100 சம்பளம். ஆனா எங்களுக்கோ இந்த படத்துல நடிக்கிறதுக்கு சம்பளம் கிடையாது. போதாக்குறைக்கு  ஆபிஸுக்கு ரெண்டு நாள் லீவு வேற போட்டாச்சு, இதுல இன்னமும் லீவு போடுகிற மாதிரியாச்சுன்னா என்னங்க பண்றது. அதனாலத்தான் இப்படி ஒரு பிட்டை போட்டோம்). இயக்குனரும் முடிந்த வரையில் லீவு நாள்ல படப்பிடிப்பு வைக்கிறோம்னு சொன்னாரு.
மறு நாள் வெள்ளிக்கிழமை ஆஃபிஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா பிறகு மறுபடியும் 10 மணிக்கு sms, அதாவது மறு நாள் காலையில 10மணிக்கு பழைய இடத்துக்கு (அதாவது எங்க நடன வகுப்பு காட்சியை எடுக்கிறேன்னு சொல்லி, நாங்க லீவு போட்டு காத்திருந்த இடத்துக்கு) வந்துடுங்க. அது வந்து நடனம் கத்துக்கிற மாதிரி காட்சி, அதனால அதுக்கேத்த மாதிரி, tshirt, phant எடுத்துக்கிட்டு வாங்கன்னு மெசேஜ்.  நான் மட்டும் சனிக்கிழமை காலையில அந்த marickville இடத்துக்கு போனேன். வீட்டு அம்மணிக்கு முதநாள் எல்லோரடையும் போட்டோ எடுத்துக்கிட்டதே போதும் போல, அதனால அவுங்க நாங்க வரலைன்னு சொல்லிட்டாங்க. நான் சரியா 10 மணிக்கு போய் சேர்ந்தேன். அந்த இடத்துல மேல வேற ஒரு காட்சி எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அந்த காட்சி என்னன்னா, அமலாபால், விஜய் கிட்டேயும், சந்தானத்து கிட்டேயும் மறுநாள் நீங்க ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு வந்துடுங்கன்னு சொல்ற காட்சி. நான் மேல போய் கொஞ்ச நேரம் நின்னு பார்த்துக்கிட்டு இருந்துட்டு, கீழே வந்துட்டேன். அப்பத்தான் மாடிப் படிக்கட்டுல நம்ம கிருஷ்ணா ரொம்ப பரிதாபமா நின்னுக்கிட்டு இருந்தாரு. நான் அவர்கிட்ட, ஏங்க இன்னைக்காவது அந்த நடனவகுப்பு காட்சியை எடுத்துடூவீங்க இல்லன்னு கேட்டேன் (ஏன்னா, இந்த காட்சியை எடுக்கிறேன்னு சொல்லி தான் அன்னைக்கு நாங்க மூணு மணிநேரம் வெட்டியா காத்துக்கிட்டு இருந்து, கடைசில எடுக்காம திரும்பி போனோம்). கண்டிப்பா எடுத்துடலாம் சார். இன்னைக்கு தான் என் வயித்துல பீர் வார்த்த மாதிரி இருக்கு சார். இப்பத்தான் ஒழுங்கா ஷெட்யூல் படி ஒழுங்கா சூட்டிங் போயிக்கிட்டு இருக்கு. அதனால எப்படியும் இன்னைக்கு நடன வகுப்பு காட்சி முடிஞ்சுடும் ஆமா, எங்க மற்றவங்க எல்லாம் காணோம் அப்படின்னு கேட்டாரு. அப்ப என் பக்கத்துல வேற ஒரு நண்பர் மட்டும் தான் நின்னுக்கிட்டு இருந்தாரு. நான் உடனே, ஏங்க, நீங்க என்னைக்கு தான் சொன்ன நேரத்துக்கு சூட்டிங் ஆரம்பிச்சிருக்கீங்க? 10 மணின்னு நீங்க சொன்னதுனால, எல்லோரும் 11 மணிக்கு மேல தான் வருவாங்கன்னு கொஞ்சம் அடிச்சு விட்டேன். ஐய்யையோ, 11 மணிக்கா!! இன்னும் அரை மணி நேரத்துல உங்க காட்சியை எடுக்க ஆரம்பிச்சுடுவோம், அதனால கொஞ்சம் எல்லாரையும் சீக்கிரம் வரச்சொல்லுங்க. இல்லன்னா விஜய் சார், சந்தானம் சார், அமாலாபால் மேடம்ன்னு எல்லோரும் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரியாயிடும்னு புலம்பினாரு. அவர் புலம்பியதை பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷம். எப்பவுமே நாங்க தான் மணிக்கணக்கா காத்துக்கிட்டு இருப்போம். இன்னைக்கு எங்களுக்காக இவுங்க காத்துக்கிட்டு இருக்க போறாங்களேன்னு மனசு பேயாட்டாம் போட்டுச்சு. ஒப்புக்கு, அவரிடம் நான் போன் பண்ணி, சீக்கிரம் வர சொல்றேன்னு சொன்னேன். அப்புறம் அவர் அங்கிருந்து நகர்ந்து போனாரு. நானும் அந்த இன்னொரு நண்பரும் பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப இந்தியாவிலிருந்து வந்திருந்த தயாரிப்பு மேலாளர் (production manager) எங்க கிட்ட வந்து அறிமுகப்படுத்திக்கிட்டாரு. அப்புறம் அவர் எங்களை நீங்க எத்தனை வருஷமா இருக்கீங்க? எல்லாருக்கும் சொந்த வீடா? அப்படி, இப்படின்னு கேள்வி மேல கேள்வி கேக்க ஆரம்பிச்சாரு. நான் இவரோட பேசி, நம்ம சினிமா அறிவை கொஞ்சம் வளர்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா, மனுஷன் எங்களை தோண்டி துருவிட்டாரு. அடடா! இந்தாள்கிட்ட போய் மாட்டிக்கிட்டோமேன்னு நொந்து போயிட்டேன். அப்பத்தான் ஒரு உதவியாளர் அவரிடம் வந்து, அண்ணே, ஹீரோயினுக்கு சிக்கன் பிரியாணி வாங்கணும், காசு கொடுங்கன்னு” கேட்டாரு. உடனே, அவர், “ஏண்டா அவுங்க சிக்கன் இல்லாம சாப்பிட மாட்டாங்கலாமா?. ஒரு சிக்கன் பிரியாணி பதினெட்டு டாலர் ஆகுது, டெய்லி எல்லாம் வாங்கி கட்டுப்படியாகாது" அப்படின்னாரு. காசு கேட்டவரோ, “இல்லன்னே, வந்து.. .. அப்படின்னு" இழுத்தாரு. அதுக்கு அவரும், “வெளிநாட்டில எல்லாம் வந்து, எனக்கு அது வேணும், இது வேணும்னு கேக்கிறது எல்லாம் ஓவர். அதனால இன்னைக்கு மத்தியானம் என்ன சாப்பாடு வருதோ, அதையே கொடு, அவுங்க இல்ல சிக்கன் பிரியாணி தான் வேணும்னு கேட்டா, அப்ப போய் வாங்கி வான்னு” சொல்லி இருபது டாலரை கொடுத்தாரு. இதைப் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கு ஒரே ஷாக் ஆயிடுச்சு. ஆஹா, ஹீரோயினுக்கே இந்த நிலமையா!!  இருபது டாலருக்கு, இப்படி கணக்கு பார்க்கிறங்களேன்னு நினைச்சுக்கிட்டு, என்னோட நண்பரை பார்த்தேன். அவரும் என்னைய பார்த்து நக்கலா சிரிச்சாரு. நான் அந்த தயாரிப்பு மேலாளர் கிட்ட, “ஏன்னே, தினமும் மதியம் அசைவ சாப்பாடு தானே உங்க எல்லாருக்கும்” அப்படின்னு கேட்டேன். அதற்கு அவர், என்னங்க விளையாடுறீங்களா, ஏற்கனவே தினமும் இரவு அசைவ சாப்பாடு, இதுல மதிய சாப்பாடும் அசைவ சாப்பாடுன்னா எப்படிங்க கட்டுப்படியாகும்னு திருப்பி கேட்டாரு. அப்ப நம்ம முத நாள் ஷூட்டிங்ல, ஜூஸ் கேட்டதுக்கு, தண்ணி கிடச்சதே பெருசு தான்னு, அப்புறம் என் மற்ற நண்பர்கள் கிட்ட எல்லாம் சொன்னேன்.

10.45 மணியை போல கிருஷ்ணா வந்து என்கிட்ட உங்க காட்சியை எடுக்கப்போறோம், அதனால மேல வாங்கன்னு கூப்பிட்டாரு. அந்த நேரத்துக்கு என்னோட மற்ற நண்பர்கள் எல்லாம் வந்துட்டாங்களா, அப்புறம் யுடியூப் புகழ் நடிகரை சந்தித்ததை பற்றியெல்லாம் அடுத்த பதிவுல சொல்றேன்.

தலைவா திரைப்பட அனுபவம் – யூடியூப் புகழ் நடிகர் சாம் ஆண்டர்சன்

- இன்னும் சொல்கிறேன்


Tuesday, November 26, 2013

புகைவண்டி அனுபவம்

பொதுவா நான் தினமும் காலை 7.55 மணிக்கு புகைவண்டியை எடுத்து 9.00/9.05க்கு அலுவலகத்துக்குள் நுழைவேன். போன மாதத்தில் இருந்து புகைவண்டிகளுக்கான நேர அட்டவணையை மாற்றிவிட்டார்கள். எனக்கு இந்த புது அட்டவணை முழுமையாக பிடிபடாததால 7.51 வண்டியை தான் எடுக்கிறேன். அதை விட்டால் 7.54க்கு ஒரு வண்டி இருக்கும் என்று தெரியும். இன்று காலை எந்திரிக்கவே கொஞ்சம் லேட்டாகி விட்டது. அதனால அடிச்சு புடிச்சு கிளம்பினேன். அப்பவே தெரியும் 7.51 வண்டியை பிடிக்க முடியாதுன்னு. சரி எப்படியும் 7.54 வண்டியையாவது பிடித்துவிடலாம்னு வேக வேகமா வீட்டிலிருந்து காரை எடுத்துக்கிட்டு போனேன். சிக்னல் கிட்ட வரும்போது தான், சரியா சிகப்பு விளக்கு விழுந்துச்சு. நடக்கிறவங்களுக்கான சிக்னல் வந்துச்சு. பார்த்தா யாரும் ரோட்டை கடக்கிற மாதிரி தெரியலை. யாரோ ஒரு பிரகஸ்பதி, ரோட்டை கடக்கிறதுக்கான பொத்தானை அமுக்கிவிட்டுட்டு, சிக்னல் வருகிற வரைக்கும் காத்திருக்காமல் வண்டிகள் வராத நேரம் பார்த்து சாலையை கடந்து போய் விட்டார் போல இருக்கு (இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் அபராதம் போட மாட்டேங்குறாங்க!!!). ஒரு வழியா நான் காரை கொண்டு போய் நிறுத்திட்டு, புகைவண்டி நிலையத்துக்குள்ள நுழையும்போது, ஒரு வண்டி வந்து நின்னுச்சு. நானும் 7.54 வண்டி தான் வந்துடுச்சுன்னு, ஓடிப்போய் உள்ளே ஏறி உட்கார்ந்தேன். எனக்கு எப்பவுமே அலுவலகத்துக்கு போகும்போதும்,வரும்போதும் தமிழ் புத்தகம் படிக்கும் வழக்கம் உண்டு. அது மாதிரி, இன்னைக்கு காலையிலும் இங்கு உள்ள நூலகத்திலிருந்து எடுத்த “பாண்டிமா தேவி” புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சுட்டேன். கொஞ்ச நேரம் போன பிறகு தான் தலையை தூக்கி வெளியே பார்த்தேன். அப்ப வண்டி ஒரு ஸ்டேஷன்ல நின்னுக்கிட்டு இருந்துச்சு. பார்த்தா அது “லிவர்பூல்” ஸ்டேஷன். நான் இருக்கும் “இங்கில்பர்ன்” ஸ்டேஷன்லேருந்து சிட்டிக்கு போறதுக்கு ரெண்டு வழி இருக்கும். ஒரு வழி ஏர்போர்ட் வழியா செல்லக்கூடிய வழி. மற்றொன்று சுற்றிக் கொண்டு போகும் வழி. இரு வழிக்கும் கிட்டதட்ட 20 நிமிடம் வித்தியாசம் இருக்கும். அதனால சிட்டிக்கு போறவங்க எல்லோரும் ஏர்போர்ட் வழியில தான் போவாங்க. ஆனா நான் இன்னைக்கு ஏறிய வண்டியோ சுற்று வழியில செல்லக்கூடிய வண்டி. இந்த மாதிரி தப்பா எறிட்டா, “கிளென்பீல்ட் ஸ்டேஷன்ல” (எங்க ஸ்டேஷன்லேருந்து ரெண்டாவது ஸ்டேஷன்) இறங்கிக்கிட்டு மாறிப்போகலாம். ஆனா நானோ புத்தகம் படிக்கிற ஆர்வத்துல, அந்த ஸ்டேஷனை விட்டுட்டேன். இனி ஒண்ணும் பண்ண முடியாது, லேட் ஆனது, ஆனது தான்னு மறுபடியும் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். அப்ப எனக்கு முன்னாடி உள்ள சீட்ல ஒரு பெண்மணி வந்து உட்கார்ந்தாங்க. 

நானும் மும்முரமா அந்த கதையை படிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாரோ தமிழ்ல பேசுற மாதிரி சத்தம் கேட்டுச்சு. புத்தகத்திலிருந்து தலையை தூக்கி, சுத்தி பார்வையை ஓட விட்டா, தமிழ்க்காரங்க யாரும் இருக்கிற மாதிரி தெரியலை. மறுபடியும் புத்தகத்துல தலையை நுழைச்சுட்டேன். திருப்பியும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம், “வேணாம், வேணாம், சொல்றேன் கேளு” அப்படின்னு சினிமால பேசுற மாதிரி வசனம் கேட்டுச்சு. ஒரு வேளை நம்ம போன் தான் அன்லாக் ஆகி, யூடியூப் ஏதாவது ஓபன் ஆயிடுச்சான்னு ஒரு சின்ன சந்தேகம். போனை எடுத்துப்பார்த்தா, அது ரொம்ப சமர்த்து பாப்பாவா லாக் ஆகியேயிருந்தது. கொஞ்ச நேரம் காதை தீட்டிக்கிட்டு உத்துக்கேட்டேன், சந்தேகமே இல்லை யாரோ தமிழ் படம் பார்த்துக்கிட்டு வராங்கன்னு தெரிஞ்சுது. சுத்திப் பார்த்தா எந்த முகமும் தமிழ் முகமாட்டம் தெரியலை. அப்புறம் யாருடா தமிழ் படத்தை பார்த்துக்கிட்டு வராங்கன்னு, முன்னாடி சீட்டை எட்டிக்கிட்டு பார்த்தா, அந்த பெண்மணி சின்னதா இருக்கிற டி‌வி‌டி ப்ளேயர்ல படம் பார்த்துக்கிட்டு வந்தாங்க. இத்தனைக்கும் அவுங்க அந்த ஒயரை காதுல தான் மாட்டி இருந்தாங்க. ஆனாலும் அவுங்களுக்கு சத்தம் பத்தலை போல, அதனால சத்தம் எவ்வளவுக்கெவ்வளவு வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு வச்சிருக்காங்க. நல்ல காலம், அவுங்களை யாரும் ஒண்ணும் கண்டுக்கலை. சரி, ஏதாவது ஒரு புது படமா இருக்கும், கொஞ்ச நேரம் அதை பார்த்துக்கிட்டு போகலாம்னு நினைச்சு, நானும் புத்தகத்தை மூடி வச்சுட்டு, எட்டிக்கிட்டு அந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். பார்த்தா கொஞ்சம் பழைய படம். எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ்ன்னு ஒரு காமெடி ஸீன் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நானும் நல்லா ரசிச்சு பார்த்துக்கிட்டு வந்தேன். அப்ப தான் வண்டி, “கிரான்வில் ஸ்டேஷன்ல” நின்னுச்சு. உடனே அந்த பெண்மணி, அப்படியே அந்த டி.வி.டி. ப்ளேயரை மூடிட்டு எந்திரிச்சாங்க. 

நானும், அடடா, அந்த அம்மா எந்திரிச்சிட்டாங்களே, சரி எந்த ஸ்டேஷன்ன்னு பார்த்தா, ஆஹா, நம்ம இறங்கி வேற வண்டி மாற வேண்டிய ஸ்டேஷன் ஆச்சேன்னு, இறங்கப் பார்த்தா, கதவு மூட ஆரம்பிச்சுடுச்சு. நம்ம உருவம் தான் ரொம்ப சின்ன உருவம் ஆச்சே, அதனால கதவு மூட, மூட நான் வண்டிக்கு வெளியே குதிச்சுட்டேன் (ஒல்லியா இருக்கிறதுனால நிறைய வசதி!!!). அப்பாடான்னு அடுத்த வண்டியை பிடிச்சு ஒரு வழியா 9.30 மணிக்கு ஆபிஸ் போய் சேர்ந்தேன். எங்க டீம்ல எப்பவுமே ஒண்ணு ரெண்டு பேர் கொஞ்சம் லேட்டா வருவானுங்க, இன்னைக்குன்னு பார்த்து எல்லாரும் சீக்கிரமா வந்துட்டானுங்க போல, நான் தான் கடைசியா வந்து என் சீட்ல உட்கார்ந்தேன். 

நான் உட்கார்ந்த உடனே போன், பார்த்தா வீட்டு அம்மணி. “என்னங்க கரெக்டா ஆபிஸ் போய் சேர்ந்திட்டீங்களான்னு” ஒரு விசாரணை. நம்ம வண்டி மாறி ஏறுன விஷயம் தெரிஞ்சு தான் கேக்கிறாளான்னு, மண்டைக்குள்ள ஒரு குடைச்சல். அதெல்லாம் தெரிஞ்சிருக்காதுன்னு மனசை சமாதானம் பண்ணி, “இல்ல இப்பத்தான் ஆபிஸ்குள்ளேயே போறேன்ன்னு” சொன்னேன். “உடனே, ஏங்க அவ்வளவு லேட்ன்னு” ஒரு கேள்வி. நான், “இல்லம்மா, வண்டியை வர்ற வழியில, ரொம்ப நேரம் நிறுத்தி போட்டுட்டாங்கன்னு, அதான் லேட்டு (இங்க அடிக்கடி அந்த மாதிரி நடக்கும்). அதனால  இன்னைக்கு வீட்டுக்கு வரதுக்கு கொஞ்சம் லேட்டாகும்னு ஒரு பிட்டை போட்டேன். சரி, சரி ஒழுங்கா வேலையைப் பார்த்துட்டு வாங்கன்னு சொல்லி வச்சாங்க. நான் மட்டும், கதை படிச்சுக்கிட்டு போனதால வண்டி மாறி ஏறிட்டேன்ன்னு சொல்லியிருந்தேன், அவ்வளவு தான், உங்களுக்கு இதே பொழப்பா போச்சு, கதை புக் படிக்க ஆரம்பிச்சீங்கன்னா, வெளி உலகத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கதைக்குள்ளேயே மூழ்கிடுவீங்களேன்னு ஒரே டோஸ் மழை பொழிஞ்சிருக்கும்.


என்னங்க பண்றது, வீட்டு அம்மணிக்கு அப்படி பயப்படுறதுனால தான், இப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டியதாக இருக்கு. 

Friday, November 22, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – அமலாபால் “அண்ணா” என்று சொன்னது


நானும், குடும்பத்தை கூட்டிக்கிட்டு வந்த இன்னொரு நண்பரும், கிளம்பலாம்னு நினைச்சு, வீட்டு அம்மணியை கூப்பிட போனா, அவுங்க எங்களை விட ரொம்ப பிசியா இருந்தாங்க. அவுங்க வந்திருந்த அத்தனை பேர் கூடவும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க. டான்ஸ் பாய்ஸ், எடுபிடிங்கன்னு ஒருத்தர் பாக்கி இல்லாம போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க. இவுங்க இப்போதைக்கு வர மாட்டாங்க. அதனால, இயக்குனர் பேக்அப் சொன்ன பிறகே போகலாம்னு முடிவு பண்ணி விஜய் அமலாபால் நடனக்காட்சியை படமாக்கிறதை பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் முன்பு சொல்லியிருந்த மாதிரி முன்னாள் கதாநாயகி காயத்ரி ரகுராம்” இந்த படத்துக்கு இணை இயக்குனராகவும் இரண்டு பாட்டுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியிருக்காங்க. அவுங்க நடன அசைவுகளை சொல்லிக்கொடுத்தவுடனே, விஜய் எந்த வித தப்புமில்லாம ஆடிடுறாரு, ஆனா அவர் கூட ஆடுற அந்த டான்ஸ் பாய்ஸும் சரி, அமலாபாலும் சரி, ஒழுங்கா ஆடமா, நிறைய டேக் வாங்கினாங்க. மணி கிட்டதட்ட 7.30 மணியாயிடுச்சு, அப்பத்தான் இயக்குனர் பேக்அப் சொன்னாரு. இந்த நடன காட்சியை, அவுங்க கீழே நின்னு எடுத்துக்கிட்டு இருந்தாங்க, நாங்க எல்லாம் மேலே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தோம். ஐந்தரை,ஆறு மணிக்கு எல்லாம் கூட்டம் சேர ஆரம்பிச்சுடுச்சு. நம்ம மக்களுக்கு எப்படி தான் தெரியுமோ, தெரியலை, பொட்டானிக்கல் கார்டன் உள்ளுக்குள்ள நடக்கிற சூட்டிங்கை பார்க்க வந்துட்டாங்க. இதுல கொடுமை என்னன்னா, நாங்க மதியம் 2.30 மணிக்கு நடிக்கிறதுக்காக சூட்டிங் ஸ்பாட்டை தேடிக்கிட்டு அந்த பொட்டானிக்கல் கார்டன்ல போயிக்கிட்டு இருக்கோம். அப்ப எங்க கூட 5 கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு எங்களோட நடந்து வந்தாங்க. இப்படி நிறைய பேர் இங்க சூட்டிங் நடக்கிறதை தெரிஞ்சுக்கிட்டு வந்துட்டாங்க. இயக்குனர் பேக்அப்ன்னு சொன்னவுடனே, நடிகர் விஜய் கீழேருந்து மேல வர ஆரம்பிச்சாரு. உடனே அவருக்கு பாதுகாவலாக அவருக்கு பக்கத்துல ரெண்டு பேர் வர ஆரம்பிச்சாங்க. மேல வந்தவரு எங்களை பார்த்ததும் சிரிச்சாரு. நாங்க அவர் கிட்ட போட்டோ எடுக்கணும்னு சொன்னவுடனே, எடுத்துக்கலாமேன்னு சொல்லி, பக்கத்துல இருந்தவங்களை பார்த்தாரு. உடனே அந்த ரெண்டு பெரும் கொஞ்சம் தள்ளி போய் நின்னுக்கிட்டாங்க. நான் உடனே என்னோட செல் போனை நண்பரிடம் கொடுத்துட்டு, குடும்பத்தோட அவர் பக்கத்துல போய் நின்னு போடோ எடுத்துக்கிட்டோம். அப்ப பெரிய மகாராணி கீழே நின்னாங்க. சின்ன மகாரணியை நான் தூக்கி வசுக்கிட்டு இருந்தேன். விஜய் கீழே குனிஞ்சு, பெரிய மகாரணியை தூக்கிக்கிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தாரு. 



அப்புறம் நண்பரும் அவரோட குடும்பமும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டாங்க. நாங்க போட்டோ எடுக்கிறதை பார்த்து உடனே மக்கள் எல்லாரும் வரிசையா நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. விஜய்யும் அப்புறம் கொஞ்ச பேருக்கு போட்டோவிற்கு போஸ் கொடுத்துட்டு போயிட்டாரு. நாங்க அப்புறம் இயக்குனர், உதவி இயக்குனர் கிருஷ்ணா, காயத்ரி ரகுராம் இவுங்க கூட எல்லாம் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம். 




இவுங்களோட இருந்ததுனால அமலாபலை பார்க்காம விட்டுட்டோம். சரி பரவாயில்லை இன்னொரு நாள் அவுங்களோட போட்டோ எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பி நடக்க ஆரம்பிச்சோம். பார்த்தா அங்க ஒரு கூட்டம் அமலாபால் கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கு. ஆஹா, இங்க தான் இருக்காங்களா, இன்னைக்கே இவுங்களோடையும் போட்டோ எடுத்துடனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு அவுங்க பக்கத்துல போனோம். நானும் போட்டோ எடுக்கிறதுக்காக வந்து நின்னதை பார்த்த அமலாபால், உடனே என்கிட்ட, “அண்ணா, நம்க்கு இன்னும் சூட்டிங் முடியலை, நாளைக்கும் நாம பார்த்துப்போம் அண்ணா” அப்படின்னாங்க. என்னது!! அண்ணனான்னு எனக்கு ஒரு நொடி இதயமே நின்னுடுச்சு. இப்பத்தான் இவுங்களை ரூட் விட்டுக்கிட்டு இருக்கோம், அதுக்குள்ள அண்ணான்னு சொல்றாங்களேன்னு ஒரு மாதிரியாயிடுச்சு. இதுல எங்க வீட்டு அம்மணி என்னைய பார்த்து ஒரு நக்கலா சிரிச்சாங்க பாருங்க, அது இன்னும் ரொம்பவும் கொடுமையாயிடுச்சு. சரி, பரவாயில்லை இவுங்களோட ரெண்டு மடங்கு வயசாகுது நமக்கு, அங்கிள்ன்னு சொல்லாம, அண்ணான்னு சொன்னாங்களேன்னு மனசை தேத்திக்கிட்டு, “எனக்கு பரவாயில்லை, என்னோட மனைவிக்காக தான் இப்ப போட்டோ எடுத்துகிறேன்ன்னு சொல்லி, வீட்டு அம்மணியையும், ரெண்டு மாகாராணிகளையும் அவுங்க பக்கத்துல நிக்க சொல்லி போட்டோ எடுத்தேன். 


இதுல பெரிய மாகாராணி ஒரே அழுகை, நான் தான் அந்த அக்காவை போட்டோ எடுக்கணும்னு. நான் அது எல்லாம் எடுக்க முடியாதுன்னு சொன்னேன். உடனே இன்னமும் அழ ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் அமலாபால், “எதுக்கண்ணே அவுங்களை அழ வைக்கிறீங்க, அவுங்க எடுக்கட்டும்னு சொல்லி, அவுங்களுக்காக குனிஞ்சு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாங்க. 


அப்புறம் தான் பெரிய மகாரணிக்கு சிரிப்பே வந்துச்சு. கடைசில நாங்க ஸ்டேஷன் வந்து train எடுத்து ஒரு வழியா வீட்டுக்கு வந்தோம். மறு நாள் வெள்ளிக்கிழமை ஆஃபிஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா பிறகு மறுபடியும் 10 மணிக்கு sms, அதாவது மறு நாள் காலையில 10மணிக்கு பழைய இடத்துக்கு (அதாவது எங்க நடன வகுப்பு காட்சியை எடுக்கிறேன்னு சொல்லி, நாங்க லீவு போட்டு காத்திருந்த இடத்துக்கு) வந்துடுங்க. அது வந்து நடனம் கத்துக்கிற மாதிரி காட்சி, அதனால அதுக்கேத்த மாதிரி, tshirt, phant எடுத்துக்கிட்டு வாங்கன்னு மெசேஜ்.  

அந்த நடன வகுப்பு காட்சியை எப்படி எடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கே சிக்கன் சாப்பாடு கிடையாது !!!!

- இன்னும் சொல்கிறேன்


Tuesday, November 19, 2013

இந்த காலத்து குழந்தைகள்


இந்த காலத்துல பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஐ-போன், ஐ-பேட், டேப்லேட் போன்றவைகளை பற்றி அம்மாவின் கருவறைக்குள்ளேயே கரைத்துக் குடித்து விட்டு தான் வெளியே வருகிறார்கள் போல. அந்த அளவுக்கு அவர்களின் அறிவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் ஒன்றரை வயது குழந்தை, அவருடைய ஐ-போனை ஆண் பண்ணி, பிறகு அன்-லாக் பண்ணி, ஒரு விரலால் தட்டிக்கொண்டு இருக்கும். இன்னொரு நண்பரின் மூன்று வயது குழந்தை, ஐ-போனில் இருக்கும் விளையாட்டை தானாகவே திறந்து விளையாடும். இவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கும். எப்படி இவர்களுக்கு இந்த வயதிலேயே இவ்வளவு அறிவு திறன் இருக்கிறது. இவர்களின் இந்த அபிரிதமான அறிவு வளர்ச்சி எப்படி வருகிறது என்று யோசிக்க தோணும். இவர்களின் இந்த வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர்களாகிய நாம் பதில் சொல்லி மாள முடியாது. அதிலும் அவர்கள் கேட்கும் தர்மசங்கடமான 'அடல்ட் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்பது நம்முடைய திறமைக்கு சவால் விடும் காரியமாகும். இவர்கள் கேட்கும் இந்த 'அடல்ட் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பது பற்றி ஒரு வார இதழில் வெளி வந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது.அந்த கட்டுரையில், குழந்தைகள் மன நல மருத்துவர் அந்த மாதிரியான கேள்விகளை மிக அழகாக கையாளலாம் என்று கூறியிருக்கிறார். அதனை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். கண்டிப்பாக இது இளம் பெற்றோர்களுக்கு நன்மையாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருடைய பதில்களை படியுங்கள்.

''ஃபர்ஸ்ட் நைட்னா என்னம்மா?'' -குழந்தையின் இந்தக் கேள்விக்கு, 'கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வர்ற முதல் நைட்தான், ஃபர்ஸ்ட் நைட்என்ற சிம்பிளான ஒரு பதில் போதும். சில குழந்தைகள் விடாமல், 'அப்ப என்னம்மா செய்வாங்க?’ என்று கேட்பார்கள். 'அங்கிளும் ஆன்டியும் அதுக்கு முன்ன நேர்ல பேசியிருக்க மாட்டாங்க. அன்னிக்குதான் நிறைய பேசுவாங்க, அவங்களோட லைஃப் பத்தி பிளான் பண்ணுவாங்கஎன்று வயதுக்கு ஏற்றமாதிரி விளக்கம் சொல்லலாம்.

அதேபோல, 'காதல்னா என்ன..?’என்று கேட்டால், 'உனக்கு சாக்லேட், டாய்ஸ் பிடிக்கும்ல. அதேபோல ஒரு அங்கிளுக்கு ஒரு ஆன்டியை பிடிச்சா, அல்லது ஆன்டிக்கு அங்கிளை பிடிச்சா... அது காதல், அன்பு, பிரியம்!’னு சொல்லலாம். இந்தக் கேள்வியை 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கேட்டா, 'ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது 25 வயதுக்கு அப்புறம் வர்றதுதான் உண்மையான காதல்!’னு அடிக்கோடிட்டு சொல்லலாம்.

'குழந்தை எப்படிம்மா பொறக்குது?’ - இது அடுத்த கேள்வி. 'கல்யாணம் ஆனவுடனே, அந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடவுள் குழந்தை கொடுப்பார். அந்தக் குழந்தை 10 மாசமா அம்மா வயித்துக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா வளரும். அப்புறம் அது பெருசாயிடும், இடம் பத்தாதுல... வயித்துல இருந்து வெளிய வந்துடும்!’ என்று சொல்லுங்கள்.

'எய்ட்ஸ்னா என்னம்மா..?’ என்று கேட்டால், 'ஹெச்..வி-னு ஒரு கிருமியால ஏற்படற நோய். நாம சுத்த பத்தமா இல்லாம இருந்தா, எய்ட்ஸ் நோய் வரும்!’ என்ற அடிப்படை விளக்கம் 10 வயதுவரை போதுமானது.
டி.வி-யில் பார்க்கும் பார் காட்சிகள், பக்கத்து வீட்டுக்காரர் அல்லது உறவுக்காரர் குடித்துவிட்டு சலம்புவதைப் பார்த்து குழந்தைகள் கேள்வி கேட்டால், 'அது கெட்ட தண்ணி. அதைக் குடிச்சா, கெட்ட சந்தோஷம்தான் கிடைக்கும். ஹெல்த் எல்லாம் கெட்டுப்போயிடும். அதனால அதை எப்பவுமே குடிக்கக் கூடாது!’ என்று சொல்லிக் கொடுங்கள்'' என்றார்.

''பொதுவாக குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் டீச்சரிடம்தான் முதலில் தங்கள் கேள்விகளை கட்டவிழ்த்துவிடுவார்கள். அதற்கு அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக பதில் சொன்னால்தான், தங்களின் உலகத்தை தொடர்ந்து அவர்கள் உங்களிடம் பகிரப் பழகுவார்கள். ஒருவேளை தங்களுக்குப் பதில் கிடைக்காமல் போனாலோ, பதிலுக்குப் பதிலாக பெற்றோர் டென்ஷன் ஆனாலோ, பக்கத்து வீட்டு அங்கிள், ஆன்டி, டிரைவர் என்று பதில் தேட ஆரம்பிப்பார்கள்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில், 'ஃபர்ஸ்ட் நைட்னா என்ன அங்கிள்?’ என்று ஏழு வயதுப் பெண் குழந்தை வீட்டு டிரைவரிடம் கேட்பதில் உள்ள விபரீதத்தைப் புரிந்துகொண்டு, குழந்தைகளின் கேள்விகள் எப்போதும் பெற்றோரை நோக்கியே மடை திறக்கும் சூழலை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்'' என்ற டாக்டர், ''சில குழந்தைகள் ஃப்ரெண்ட்ஸ், பக்கத்து வீடு என்று வெளிப்பழக்கத்தில் சிலசமயம் கெட்ட வார்த்தை கற்று வந்து வீட்டில் பேசுவார்கள். அதைக் கேட்டவுடன் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ வேண்டாம். அது பண்பற்ற வார்த்தை என்பதையும், அவ்வாறான வார்த்தைகளைப் பேசுபவர்களை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும் என்றும் விளக்கமாகச் சொல்லுங்கள். மேலும் குழந்தை யாரிடமிருந்து அந்த வார்த்தையை கற்றுக்கொள்கிறதோ, அவர்களிடம் குழந்தை முன் அதுபோன்ற வார்த்தைகளைப் பேச வேண்டாம் என்று சொல்வதுடன், அவர்களின் பழக்கத்தையும் தவிருங்கள். சக குழந்தைதான் உங்கள் குழந்தைக்கு அந்த வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்கிறது என்றால், அதன் பெற்றோரிடம் முறையிடுங்கள். தங்கள் பிள்ளை பற்றி சொல்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றாலும், சொல்வது உங்கள் கடமை'' என்றார் அழுத்தமாக.

தொடர்ந்தவர், ''அதேபோல ஐந்து வயதுக்குள்ளேயே குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் போன்றவற்றைக் கற்றுத் தர வேண்டும். 13 - 19 வயதிலான காலகட்டம், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ரொம்பவே சிக்கலான காலகட்டம். இந்த வருடங்களில் குழந்தைகள், பெற்றோர்கள் எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அது வயதின் கோளாறு. அதைப் புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் கோபப்பட்டு பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போகும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவர்களின் ஹார்மோன் கோபங்களைப் பொருட் படுத்தாமல், அன்பை மட்டுமே தொடர்ந்து தந்து கொண்டிருக்க வேண்டும்'' என்று அழகாக முடித்தார் அந்த மன நல மருத்துவர்.

உண்மையில் இந்த கட்டுரையை படிக்கும்போது, குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது, நாம் நம் குழந்தைகளோடு சேர்ந்து உணவு உண்ண வேண்டும். அது பெரும்பாலும் இரவு உணவாக தான் அமையும். அப்படி நாம் நம் குடும்பத்தாரோடு சேர்ந்து உணவு உண்ணும்போது, அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகளை நாம் பகிர்ந்து கொண்டால், குழந்தைகளும், அவர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகளை நம்மிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பகிர்ந்துக் கொள்ளுவதால் நாம் தான் அவர்களுக்கு உற்ற நண்பர்களாக அதாவது “Best Friend” ஆக இருப்போம். என் தாய் அடிக்கடி சொல்லுவார்கள், ஒரு குழந்தைக்கு உண்மையான ரோல்மாடல் அந்த குழந்தையின் பெற்றோர் தான் என்று. அதனால் தான், பெற்றோர்களாகிய நாம் சரியாக நடந்து கொண்டால், குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக வளருவார்கள்.


“எல்லா குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே”.  

Monday, November 18, 2013

பெண்ணிற்குள் ஆண்

ஆணும் பெண்ணும்
சரிசமம் என்றேன் நான்
ஆனால் நீயோ
இல்லை!! இல்லை!!
ஆண் தான் உசத்தி
"ஜான் பிள்ளையானாலும்
அவன் ஆண் பிள்ளை"
என்று சொல்லியிருக்கிறதை
பார் என்றாய். நானோ,
ஆண் பெண்ணிற்குள் தான்
இருக்கிறாள் என்பதை
ஆங்கிலத்தில் "SHE"க்குள்
தான் "HE" இருக்கிறது
என்பதையும்
"WOMAN"க்குள் தான்
"MAN" இருக்கிறது
என்பதையும் எவ்வளவு
அழகாக உணர்ந்து
சொல்லியிருக்கிறார்கள்,
இதை எப்பொழுது தான்
இந்த ஆண்கள்
புரிந்து கொள்வார்களோ
என்று எண்ணி வருந்தினேன்!!!