Friday, April 11, 2014

தலைவா திரைப்பட அனுபவம் (இறுதி பகுதி) - அமலாபால் சில்க்ஸ்மிதா மாதிரி இருக்கிறார் என்று நான் சொன்னது

தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கு இயக்குனரின் மேல் உள்ள பாசம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது

எங்களோட அந்த கன்டினிட்டி காட்சியை எடுக்கிறதுக்காக காமிரா எல்லாம் செட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்பத்தான் இயக்குனர் விஜய் கீழே உட்கார்ந்து எங்களோட பேசிக்கிட்டு இருந்தாரு. “நான் இந்தியா போனவுடனே, என்னோட மற்ற நண்பர்கள் கிட்டயெல்லாம் ஆஸ்திரேலியால போய் படம் எடுக்காதீங்க, அங்க பர்மிஷன் வாங்குறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதுக்கும் மேல அங்க செலவு ரொம்ப அதிமாகுதுன்னு சொல்லப்போறேன்ன்னு” சொன்னாரு. எங்க எல்லாருக்கும் என்னடா, இவரு இப்படி சொல்றாருன்னு ஒரு மாதிரியாயிடுச்சு. உடனே, எங்க கூட்டத்தில இருந்த ஒரு நண்பர், நீங்க இப்படி சொல்றீங்க, ஆனா பத்து வருசத்துக்கு முன்னாடி, “நள தமயந்தி” படத்தை முழுக்க ஆஸ்திரேலியாவில் தானே எடுத்தாங்கன்னு ஒரு கொக்கியைப் போட்டாரு. இயக்குனருக்கோ என்ன சொல்றதுன்னு தெரியலை. அதுக்குள்ள ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இயக்குனரிடம் சார், ரெடியாயிடுச்சுன்னு சொன்னாரு. இயக்குனரும் எங்களிடம் நாம முன்னாடி எடுத்த அந்த ஜாக்கிங் காட்சியோட கன்டினிட்டி காட்சியைத்தான் எடுக்கப்போறோம்ன்னு சொல்லி, அந்த காட்சியை விவரிச்சாரு. முதல்ல எடுத்த அந்த ஜாகிங் காட்சியில, நடிகர் விஜய், அமலாபால் கிட்ட, திரும்பி பாருங்கன்னு சொல்லுவாரு, அப்ப நாங்களும் ஜாகிங் பண்ணிக்கிட்டு அங்க நிப்போம். உடனே அமலாபால் எங்களிடம் வந்து எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லுவாரு, நாங்களும் முகத்தை தொங்கப்போட்டுக்கிட்டு திரும்பி போய்விடுவோம். அமலாபால் திரும்பி வந்தவுடனே,விஜய் “நீங்க என்ன சொன்னீங்க, எல்லோரும் போயிட்டாங்கன்னு” கேப்பாரு, அதுக்கு அமலாபால் விளக்கமா சொல்ற காட்சியை தான் எடுக்கப்போறோம்ன்னு இயக்குனர் சொன்னாரு. இதுல ஆளாளுக்கு ஒவ்வொரு வசனம், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, நீங்க தமிழ் கலாச்சாரம் தெரிஞ்ச பொண்ணு, உங்க அப்பா உங்களை நல்லா வளர்த்திருக்காருன்னு” இப்படியெல்லாம் சொல்லனும். 

அப்ப ஒளிப்பதிவாளர் என்னிடம், சார், நீங்க அமலாபாலைப் பார்த்து, “நீங்க சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கீங்கன்னு சொல்லுங்கன்னு சொன்னாரு (யாரை, யாரோடு ஒப்பிடுறதுன்னு ஒரு வரைமுறை இல்லாம போச்சு!!!). இயக்குனர் உடனே எங்களிடம், சில்க் ஸ்மிதா யாருன்னு தெரியுமான்னு கேட்டாரு. நாங்க எல்லோரும் அவுங்களை தெரியாம இருக்க முடியுமான்னு திருப்பி கேட்டோம். நான் இன்னும் ஒரு படி மேல போய், “சார் ஒரு காலத்துல அவுங்க என்னோட கனவுக்கன்னி. அவுங்க இறந்த அன்னைக்கு, கருப்பு துணியை சின்னதா வெட்டி, பேட்ச் மாதிரி சட்டையில குத்திக்கிட்டு, வேலை பார்க்கிற இடத்துல நானும் என்னோட நண்பர்களும் துக்கம் அனுசரிச்சோம்ன்னு” சொன்னேன். நீரவ் ஷா, இயக்குனர் கிட்ட, இவுங்க கிட்ட போய் சில்க் ஸ்மிதா யாருன்னு கேட்டீங்களேன்னு கேட்டு சிரிச்சாரு. முதல்ல ஒரு ரெண்டு ஷாட் எடுத்தாங்க. அப்புறம் இயக்குனர் என்ன நினைச்சாரோ, என்னிடம் நீங்க சில்க் ஸ்மிதா வசனத்தை சொல்ல வேண்டாம், அதுக்கு பதில் “நீங்க ரொம்ப உயரமா இருக்கீங்கன்னு” சொல்லுங்கன்னு சொன்னாரு. (அமலாபால் ரொம்ப உயரமாமா....) நாலைந்து டேக்குக்கு அப்புறம் அந்த ஷாட்டை எடுத்து முடிச்சாங்க. மணியோ மதியம் ஒரு மணியை தாண்டிடுச்சு. எங்களோட காட்சியெல்லாம் எடுத்து முடிச்சாச்சுன்னு சொன்னாங்க. அவுங்களுக்கும் அன்றைக்கு தான் கடைசி நாள். மறு நாள் காலையில இந்தியா போறாங்க. நாங்க இயக்குனர் கிட்ட, எல்லோரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்தாக்கலாம்னு சொன்னோம். அதுக்கு, நடிகர் விஜய் இப்ப ரெஸ்ட் எடுக்கிறாரு, அதனால அவரை கூப்பிட முடியாதுன்னு இயக்குனர் சொல்லிட்டதுனால, இயக்குனர், அமலாபால் ரெண்டு பேரோட சேர்த்து புகைப்படம் எடுத்துக்கிட்டோம். என்ன! ஒளிப்பதிவாளரையும்,இணை,துணை இயக்குனர்களையும் புகைப்படம் எடுக்காம விட்டுட்டோம்.


கன்டினிட்டி காட்சின்னு சொல்றாங்களே, இந்த ரெண்டு படத்தையும் பாருங்க, இதுல ஏதாவது கன்டினிட்டி தெரியுதா உங்களுக்கு.  

இது முதல் படம் – ஜாகிங் காட்சி.




இது அடுத்த படம் அந்த கன்டினிட்டி காட்சி.


முதல் படத்துல கடல் பின்னாடி இருக்கும். அடுத்த படத்துல இரும்பு கம்பிகள் போட்ட தடுப்பு தான் இருக்கும். இன்னும் நல்லா பார்த்தீங்கன்னா, இன்னொரு வித்தியாசம் தெரியும். அதாவது முதல் படத்துல நாங்க மொத்தம் ஒன்பது பேர் இருப்போம். ரெண்டாவது படத்துல எட்டுப் பேர் தான் இருப்போம். இதுக்குத்தான் கன்டினிட்டி காட்சி எடுக்கிறோம், அதனால அன்னைக்கு போட்ட காஸ்ட்யூமோட வாங்கன்னு சொன்னாங்க போல இருக்கு.

ஆனா, எது எப்படியோ, நான் நடிச்ச 4 காட்சிகளும் வந்துடுச்சு. என்ன!! அந்த உணவகக் காட்சியிலும்,நடனக் காட்சியிலும் கொஞ்சம் கத்திரி போட்டுட்டாங்க. அப்புறம் இந்த ஜாகிங் காட்சியில வசனத்துக்கு கத்திரி போட்டுட்டாங்க. ஆனாலும் அந்த ஐந்து நாளும் ஒரு திரைப்படத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். அதுவும் இங்க சிட்னியில படம் வெளியான மறு நாள் திரையரங்குக்குச் சென்று, அந்த வெள்ளித் திரையில் நான் தோன்றுவதை பார்த்தது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

இந்த படத்தை ஓவியா பார்த்த பிறகு, என்னுடைய மிகப்பெரிய ரசிகையாகி விட்டார். அடிக்கடி, “அப்பா நீங்க நடிச்ச படத்தை போடுங்கன்னு” சொல்லி ஒரே அன்புத்தொல்லை தான். இதுல இன்னும் ஒரு படி மேல போய், விஜய் நடித்த பாட்டு ஏதாவது பார்த்தால், உடனே “நீங்க நடிச்ச படத்துல தானே, இந்த அங்கிள் நடிச்சிருக்காருன்னு” ஒரு பிட்டை போடுவார். நான் உடனே, அப்படியில்லம்மா, அவர் நடிச்ச படத்துலத்தான் நான் நடிச்சேன்ன்னு சொல்லுவேன். ஓவியா இப்படியென்றால், இனியா தலைவா படத்தை பார்த்தாலோ, இல்லை நான் வரும் நகைச்சுவை காட்சியை பார்த்தாலோ, ஐ அப்பா, அப்பா” என்று குதிக்க ஆரம்பித்துவிடுவார். இன்னொரு நண்பரின் மகள், நண்பரிடம்”ஏம்பா சாம் அங்கிள், படத்துல கடைசி வரைக்கும் வரலைன்னு கேள்வி கேட்டிருக்காங்க”. எங்கையாவது ஒரு பொது இடத்துக்கு போனால், எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லாத நபர்கள் கூட, என்னைப் பார்த்து நீங்க தலைவா படத்துல நடிச்சவர் தானேன்னு கேட்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது அலுவலகத்துக்கு விடுமுறை எல்லாம் எடுத்து, சம்பளம் இல்லாமல் நடித்ததது எல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. 

-முற்றும்

Saturday, April 5, 2014

சிட்னியில் சித்திரைத் திருவிழா




சித்திரைத் திருவிழா என்றாலே நமக்கெல்லாம் உடனடியாக நியாபகத்துக்கு வரக்கூடியது மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழா தான். சிட்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கடந்த இரண்டு வருடங்களாக சிட்னியில் மிகப் பிரமாண்டமான சித்திரைத்  திருவிழாவை நடத்தி இருக்கிறது இந்த வருடமும் சிட்னியில் அவர்கள் சித்திரைத் திருவிழாவை வருகிற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி ரோஸ்ஹில்  ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்துகிறது. சென்ற ஆண்டுகளைப் போல், இந்த ஆண்டும் காலை 10மணி முதல் உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடு ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடக்க இருக்கிறது. மேலும் குழந்தைகளின் திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளின் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில்  முதன்முறையாக  திரை இசை  கிராமிய  பின்னணி  பாடகி  தஞ்சை  செல்வி  குழுவினரின் சிறப்பு இசை  நிகழ்ச்சியோடு  தமிழ் பாரம்பரிய கலையான  இந்திய  புகழ்  பூத்த  காவடி மற்றும்  கரகாட்ட கலைஞர்களின் நடன  நிகழ்ச்சியும்  இடம்பெற  இருக்கிறது. சென்ற ஆண்டுகளுக்கும், இந்த ஆண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால்சென்ற ஆண்டுகளில் காசில்ஹில்  லோயர்   ஷோ கிரௌண்டில் இந்த விழா நடைபெற்றது. ஆனால் இவ்வாண்டில் சிட்னிரோஸ்ஹில்  ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இவ்விழா நடைபெற உள்ளது. இந்த இடம் அனைவரும் எளிதாக வரக்கூடிய இடமாக இருக்கிறது. மேலும் இந்த இடம் முழுவதும் அதிமேற்கூரையால் மூடப்பட்டிருப்பதால், மழைக்கும் வெய்யிலுக்கும் கவலைப் படத் தேவையில்லை. அனுமதி கட்டணம் சென்ற ஆண்டுகளைப் போலவே பத்து டாலர்கள் தான். 


2012ல் முதன் முதலாக சித்திரைத் திருவிழாவிற்கு, "கலைமாமணி" டாக்டர். புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருவாட்டி. அனிதா குப்புசாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாக அடியேன் அவர்கள் இருவரையும் இங்குள்ள தமிழ் முழக்கம் வானொலிக்காக தொலைபேசியில் பேட்டி எடுத்தேன். 


சென்ற ஆண்டு  "கலைமாமணி" திருவாட்டி. சின்னபொண்ணு மற்றும் கிராமிய பின்னணி பாடகர். திரு. வேல்முருகன் அவர்களும் வந்து சிறப்பித்தார்கள். 

 தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தார்கள் நடத்திய இந்த சித்திரைத் திருவிழாவிலும், தீபாவளி நிகழ்ச்சியிலும் முதன் முதலில் என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடைய நாடகங்களை மேடையேற்ற வாய்ப்பு தந்தார்கள். அதற்காக அவர்களுக்கு என்னுடைய நன்றியை இந்த பதிவில் தெரிவித்துக்கொள்கிறேன். 







இந்த வருடமும் அவர்கள் என்னை ஒரு குறு நாடகம் போடுமாறு கேட்டார்கள், ஆனால் நான் இந்தியா சென்று திரும்புவதால் நாடகம் எழுதி பயிற்சி செய்வதற்கு கால அவகாசம் இருக்காது என்று கூறி மறுத்துவிட்டேன். அடுத்த வருடம் கண்டிப்பாக பெரியவர்கள் நாடகம் ஒன்றும், குழந்தைகள் நாடகம் ஒன்றும் போட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். 

Wednesday, April 2, 2014

ஓவியாவின் கிராஃப்ட் வேலைப்பாடு (craft work)


இந்த படம் நான் இந்தியாவில் இருக்கும்போது, இங்கு வீட்டில் அவராக யோசித்து செய்தது. படங்களை தாளில் வரைந்து அதனை வெட்டி மற்றொரு வெள்ளைத்தாளில் ஒட்டியிருக்கிறார். 

இந்த படத்திற்கான அவரது விளக்கம்: மேலும் படிக்க ...

Monday, March 31, 2014

ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் பணக்கார நிறுவனங்களான அட்டைப்பூச்சிகள்


அங்காடித்தெரு படத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.  அந்த படத்தில் பெரிய வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலமையை அப்பட்டமாக தோலுரித்திருப்பார்கள். மேலும் அவர்கள் நின்று கொண்டே பல மணிநேரம் வேலை செய்வதால், பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நிலை உபாதைகளையும் சொல்லியிருப்பார்கள். அந்த படம் வெளி வந்த போது, இந்த மாதிரி பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை செலுத்துவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுங்கள், நாங்கள் எப்பொழுதும் போல் தான் இருப்போம். யாரும் எங்களை ஒன்றும் பண்ண முடியாது என்று அந்த நிறுவனங்கள் தங்களின் போக்கை சிறிதும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதற்கு உதாரணம், முகநூலில் வெளிவந்துள்ள இந்த செய்தி.

என்னடா, நீ முகநூலுக்குள்ளேயே போக மாட்டியே அப்புறம் எப்படி உனக்கு இது தெரிந்தது என்று நீங்கள் கேட்பது, எனக்கு கேட்கிறது. உலகத்துலேயே முகநூலில்  ப்ராக்ஸி கணக்கு (proxy account) வைத்திருப்பவன் நானாகத்தான் இருப்பேன். இரு நாட்களுக்கு முன்பு அம்மணி தன்னுடைய முகநூலுக்கு வந்த ஒரு செய்தியை, படித்து காண்பித்தார்கள். அப்பொழுது தான் தெரிந்தது, வறுமையின் காரணமாக பணக்கார நிறுவனங்களிடம் தங்களுடைய வாழ்க்கையை தொலைப்பவர்கள் இருக்கும்வரை, பணக்கார முதலைகள் மாறப்போவதில்லை என்று. அந்த செய்தியை படித்தபோது மனது மிகவும் கனத்துப்போனது.  இதை நீங்களும் படித்திருப்பீர்கள். அப்படி படிக்காதவர்களுக்காக இதோ அந்த செய்தி . 

SHARE பண்ணுங்க pls....
சில
நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ்
சென்றிருந்தேன். இரவு 9 மணி.
அதிகக் கூட்டம் இல்லை. நாள்
முழுக்க உழைத்த களைப்புடன்,
வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த
சிறு புன்னகையுடன்
துணிகளை எடுத்துக் காட்டிக்
கொண்டிருந்தார் அந்தப் பெண்.
மெலிந்த தேகம். மிஞ்சிப்
போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘
திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘
திருநெல்வேலிகாரங்கதான்
நிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘
இப்போ அப்படி இல்ல...
அவங்கல்லாம் வேற கடைக்குப்
போயிட்டாங்க.. நாங்க
திருவண்ணாமலை பிள்ளைங்க
நிறைய பேரு இருக்கோம். 150
பேராச்சும் இருப்போம்..’’
‘‘தினமும்
எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘
காலையில 9 மணிக்கு வரணும்.
நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘
அப்படின்னா 14 மணி நேரம்
வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட்.
இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம்
உண்டா?’’
‘‘
ஷிப்டா... அதெல்லாம்
தெரியாதுண்ணே. 
காலையில
வரணும். நைட் போகனும்.
அவ்வளவுதான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘
கேண்டீன் இருக்கு. கொஞ்ச,
கொஞ்ச பேரா போய்
சாப்பிட்டு வருவோம்.’’
‘‘
எத்தனை மணிக்கு தினமும்
தூங்குவீங்க?’’
‘‘12
மணி, 1 மணி ஆகும்.
காலையில எழுந்ததும்
வந்திருவோம்’’
‘‘
தங்குற இடம், சாப்பாடு எல்லாம்
நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணே.
நாள் முழுக்க
நின்னுகிட்டே இருக்குறோமா...
அதுதான் உடம்பு எல்லாம்
வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘
ம்ஹூம்.. உட்காரக் கூடாது.
வேலையில
சேர்க்கும்போதே அதை எல்லாம்
சொல்லித்தான் சேர்ப்பாங்க.
மீறி உட்கார்ந்தா கேமராவுல
பார்த்துட்டு சூப்பரவைசர்
வந்திடுவார்’’
- யாரோ ஒரு வாடிக்கையாளருடன்
நீண்ட நேரம் பேசிக்
கொண்டிருப்பதையும்
சூப்ரவைஸர் கேமராவில்
பார்க்கக்கூடும். அதனால் அந்தப்
பெண் இங்கும் அங்குமாக
துணிகளை எடுத்து வைத்தபடியேப்
பேசுகிறார்.
‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500
ரூபாய்.’’
‘‘
வெறும் 5500 ரூபாய்தானா?
வேற
ஏதாவது முன்பணம், கல்யாணம்
ஆகும்போது பணம் தர்றது...
அதெல்லாம் உண்டா?’’
‘‘
இல்லண்ணே... அது எதுவும்
கிடையாது. இதான் மொத்த
சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன
பண்ணுவீங்க?’’
‘‘
தங்குறது, சாப்பாடு ஃப்ரீ.
எனக்கு ஒண்ணும் செலவு இல்லை.
சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம்
அனுப்புவேன். மீதி பேங்க்
அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘
எத்தனை வருஷமா இங்கே வேலைப்
பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப்
போகுது.
அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான்.
இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல்
மாசத்துலேர்ந்து மாசம் 5500
ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘
ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம்
வாங்குறாங்களா?’’
‘‘
சூப்ரவைசருங்க வாங்குவாங்க.
அதுவும் பத்து வருஷம்
வேலை பார்த்திருந்தாதான்.
இல்லேன்னா ஏழாயிரம்,
எட்டாயிரம்தான்.’’
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு.
அதுக்கு ஒரு நாளைக்கு 200
ரூபாய் சம்பளத்துலப்
பிடிச்சுக்குவாங்க.’’
‘‘
பிடிச்சுக்குவாங்களா?
அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘
அதான் சொல்றனேண்ணே...
லீவு உண்டு. ஆனால் சம்பளம்
பிடிச்சுக்குவாங்க. அதனால
நாங்க பெரும்பாலும் லீவு போட
மாட்டோம்’’
‘‘
அப்போ ஊருக்குப்
போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம்
ஊருக்குப் போயிட்டு வருவேன்.
அதுக்கு லீவு கொடுப்பாங்க.
ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம்
கிடையாது’’
‘‘
ஊருக்குப்
போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப்
போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற
விலைக்கு வாங்க முடியுமா?
வெளியில பாண்டி பஜார்ல
எடுத்துட்டுப் போவோம்.
இங்கே எடுத்தாலும் சில சுடிதார்
மெட்டீரியல்
கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘
உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’

‘‘
ம்ஹூம்... அதெல்லாம்
தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன
விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘
தெரியலை..’’
‘‘
ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘
நெல் விவசாயம்..’’
‘‘
எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘
தெரியலை.. ஆனால்
கம்மியாதான் இருக்கு’’
‘‘
இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப்
பார்க்குறதுக்குப்
பதிலா சரவணா ஸ்டோர்ஸ்ல
வேலைப்
பார்த்தேன்னு சொல்லி திருவண்ணாமலையி
லேயே ஒரு துணிக்கடையில
வேலை வாங்க முபயாதா?’’
‘‘
வாங்கலாம். ஆனா இதைவிட
கம்மியா சம்பளம் கொடுப்பாங்க.
இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும்
சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ.
சம்பளக் காசு மிச்சம்.
அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப்
பார்ப்பீங்க?’’
‘‘இந்த ஒரு கடையில மட்டும்
பொம்பளைப் பிள்ளைங்க மட்டும்
800
பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும்
சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’
‘‘
ஆவடில எங்க
அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும்
ஒரு நாள் லீவு போட்டுட்டுப்
போயிட்டு வருவேன்.’’
-
கனத்த மனதடன் அந்தப்
பெண்ணிடம்
விடைபெற்று நகர்ந்தோம்.
அந்த
தளம் முழுக்கவும், அடுத்தடுத்த
தளங்களிலும் இதேபோன்ற
உழைத்துக் களைத்த பெண்கள்.
அவர்களின்
உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும்
சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த
பிரமாண்ட கட்டடம் ஓர்
ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.
SHARE பண்ணுங்க(படித்தது)

-  (நன்றி முகநூல்)


எனக்கு ஒன்று மட்டும் புரியலை, அதாவது இந்திய அரசாங்கத்தில் "தொழிலாளர் நலத்துறை அமைச்சகம்"  என்று ஒன்று இருக்கிறது. அந்த துறை இந்த மாதிரி நிறுவனங்களிடம், தொழிலாளர்களின் நலன் பாதுக்காகப்படுகிறதா என்று சரி பார்க்காதா? இல்லை அப்படி பார்க்க வருகிறவர்களிடம், பணக்கார முதலைகள், பணத்தை கொடுத்து சரி கட்டிவிடுகிறார்களா?

வல்லரசு நாடாக ஆவதற்கான முன்னேற்றப்பாதையில் இந்தியா சென்றுக்கொண்டிருக்கிறது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எனக்குத் தெரிந்து, இந்தியாவில் பணக்காரர்கள் மட்டும் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள், ஏழைகளாகவே இருக்கிறார்கள். 

இந்த பதிவிற்கு தொடர்பான, என்னுடைய முந்தைய பதிவை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும் - 
சுதந்திர இந்தியாவில் கொத்தடிமைகள்