Friday, January 13, 2012

தமிழன் ஒருவனால் தமிழ் அன்னை துகிலுரிக்கப்பட்டாள்

இன்று உலகமெங்கும் தமிழும் ஆங்கிலமும் சேர்ந்து உருவாகிய கொலவெறி பாட்டு மிகவும் பிரபுலமடைந்து இருக்கிறது. ஆனால் உண்மையான தமிழ் உணர்வு கொண்ட தமிழனால், இந்த தமிழ் கொலையை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு பாடல், ஒன்று தமிழில் இருக்க வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். இப்படி இரண்டும் கலந்து ஏன் இரு மொழிகளையும் கொச்சைப் படுத்த வேண்டும்.  இந்த பாட்டை பற்றி, எழுதியவரிடம் கேட்டால், "நான் ஆங்கிலத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட அதில் தமிழ் வாசனை வீசும் (அப்படியா..??) அனைத்துத் தமிழர்களும் இதைக் கேட்க வேண்டும் என்பதே அதற்கு காரணம் (கேட்டு விட்டு எல்லோருக்கும் தமிழ் மறந்து போக வேண்டும் என்ற நல்ல எண்ணம்) என்கிறார்".  இவரை எல்லாம் ஒரு தமிழன் என்று சொல்லுவதற்கே நா கூசுகிறது.  இதுவே, இவர் இந்த பாடலை முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் எழுதி பாடி, புகழ் பெற்றிருந்தால், உண்மையிலேயே பெருமை அடையலாம். ஆனால் இப்போது காறித் துப்பத்தான் தோன்றுகிறது.
இந்த பதிவை பதித்ததால் ஏற்பட்ட பாவத்தை , யாழ்ப்பாணத்து தமிழ் சகோதரர், 'தமிழ் கொலவெறிப்பாட்டு'க்கு எதிராக, தமிழில் எழுதி அதே மெட்டில் பாடியிருக்கும் 'என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறிடா?' என்ற பாட்டை பதித்து  போக்கிக்கொள்கிறேன்.
'கொலவெறிடா - யாழ்ப்பாணம் பதிப்பு' என்ற தலைப்பில் வந்துள்ள அந்தப் பாடலின் வரிகள் முழுமையாக:

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பை இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

1 comment:

  1. இந்த பாட்டு மீது உங்களுக்கு அப்படி என்ன கொலைவெறி? தமிழ் மொழி என்ற ஒன்றை பற்றி சுத்தமாக அறியாத நாடுகளுக்கெல்லாம் தமிழ் மொழியை அறிமுகப்படுத்திய பெருமை இந்த பாடலையே சாரும் .... கொஞ்சம் பாசிட்டிவா யோசியுங்களேன் பிரதர்.!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete