Wednesday, February 27, 2013

வீட்டு வேலை – நிறைவு


ஒரு வழியா வீட்டு அம்மணிக்கு ஆபிரேஷன் முடிஞ்சிடுச்சு. ஆனா மறு நாள்லேருந்து, எனக்கு வீட்டு வேலை ஆரம்பமாயிடுச்சு. காலைல நான் எழுந்து குளிச்சு, டீ போட்டு குடிச்சு, அம்மணியை எழுப்பி அவுங்களுக்கு இடது கண்ல(ஆபிரேஷன் பண்ணாத கண்) ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு மருந்து போட்டு, அப்புறம் பாலை கலந்து குடுத்து முடிக்கும்போது சரியா, சின்ன மகாராணி எழுந்திருப்பாங்க. அவுங்களை தூக்கி வச்சுக்கிட்டு, அதையும்,இதையும் காமிச்சு பாலை கொடுத்து முடிச்சு, அப்புறம் குளிப்பாட்டிகிட்டு இருக்கும்போதே பெரிய மாகாரணி எந்திரிச்சிடுவாங்க. சின்ன மகாரணியை குளிப்பாட்டி முடிச்சு, டிரஸ் போட்டுவிட்டு, பெரிய மகாரணியை கவனிக்க ஆரம்பிக்கணும். அவுங்களை ரெடி பண்ணி, காலைல சாப்பிடுறதுக்கு பிரட் கொடுத்து, டே-கேருக்கு(day care) கூட்டிக்கிட்டு போகணும். சின்னவங்களை வீட்டில விட்டுட்டு போக முடியாது, அதனால அவுங்களையும் கார்ல உட்காரவச்சு பெல்ட்டை போட்டு, அங்க போனவுடனே அந்த பெல்டை கழட்டி, அவுங்களை தூக்கிக்கிட்டு, பெரியவங்களை கையை புடிச்சு கூட்டிக்கிட்டு போயி விட்டுட்டு வந்து, மறுபடியும் சின்னவங்களுக்கு பெல்ட்டை போட்டு, திருப்பி வீட்டுக்கு  வந்து , கார்லேருந்து அவுங்களை இறக்கி விட்டுட்டு, அம்மணிக்கு வலது கண்ல மருந்து விடணும். அதுவும் சரியா ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு மருந்தும், நாலு மணி நேரத்துக்கு ஒரு மருந்தும் போடணும். அதற்கப்புறம்  பிரட் டோஸ்ட் பண்ணி அவுங்களுக்கு சாப்பிட கொடுத்துட்டு, நானும் சாப்பிடுவேன். சிங்க்ல இருக்கிற கொஞ்ச பாத்திரத்தை கழுவி, கவுத்துட்டு வந்து உட்காரலாம்னு பார்த்தா, சின்னவுங்க அப்ப தான் டாய்லெட் போயிருப்பாங்க. உடனே அவுங்களுக்கு நாப்பியை மாத்திட்டு, அரிசையை எடுத்து குக்கர்ல வச்சுட்டு அப்பாடான்னு உட்காருவேன். கொஞ்ச நேரத்துலேயே, ரெண்டு மணி நேரத்துக்கு போட வேண்டிய மருந்துக்கான நேரம் வந்துரும். மறுபடியும் அவுங்களுக்கு கண்ல மருந்தைப் போட்டுட்டு உட்காருவேன். சின்னவுங்களுக்கு, என்னது இவன் எப்ப பார்த்தாலும் அம்மாவையே கவனிச்சிக்கிட்டு இருக்கானே, நம்மளை கவனிக்க மாட்டேங்கிறானேன்னு நினைச்சு அழுக ஆரம்பிச்சுடுவாங்க. இவுங்க அழுவுறாங்களேன்னு தூக்க போனா, என்னைய தூக்க விடமாட்டாங்க. அம்மா தான் தூக்கணும்னு, ரொம்ப பொறுமையை சோதிப்பாங்க. அப்புறம் எப்படியோ, கஷ்டப்பட்டு அவுங்களை தூக்கிக்கிட்டு, வீட்டுக்கு பின்னாடி போயி ஆவுங்களோட கொஞ்ச நேரம் விளையாடிட்டு, உள்ள வந்தா மதியம் சாப்பிடுறதுக்கான நேரம் வந்துடும். உடனே நண்பர்களின் புண்ணியத்தில், அவர்கள் கொடுத்த சாப்படை எல்லாம் எடுத்து சூடு பண்ணி, முதல்ல சின்னவங்களுக்கு குழவா பிசைந்து, ஊட்டி விட ஆரம்பிப்பேன். அவுங்க பசிக்கு ஒரு நாலு வாய் மட்டும் வாங்கிக்கிட்டு, அப்புறம் சாப்பிட மாட்டேன்னு ரகளை பண்ணுவாங்க. மறுபடியும் அவுங்களை தூக்கிக்கிட்டு வீட்டுக்கு பின்னாடி போயி காக்கா, குருவி எல்லாம் காமிச்சு, எப்படியோ கஷ்டப்பட்டு கொடுத்து முடிச்சுடுவேன். சில நாள்ல, அதுல கொஞ்சத்தை வச்சுடுவாங்க. உடனே அம்மணி, உங்களுக்கு அவளை டாக்கிள் பண்ண தெரியலை. நானாயிருந்தா எப்படியாவது அவளுக்கு ஊட்டி விட்டுடுவேன்னு புலம்புவாங்க (சின்னவங்க ஒழுங்கா சாபிடலையாம்!!). அப்புறம் தட்டுல அவுங்க கேக்கிறதை எல்லாம் எடுத்து வச்சு கொடுத்துட்டு, நானும் சாப்பிட்டு முடிச்சு, மறுபடியும் அந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி முடிச்சா, பெரியவங்களை கூப்பிட போற நேரம் வந்துடும்,அவுங்களை போயி கூட்டிக்கிட்டு வந்து, ரெண்டு மகாரணிகளுக்கும்,அம்மணிக்கும் பாலை கொடுத்து, அப்புறம் நான் டீயை போட்டு குடிச்சு, வீட்டுல இருக்கிற நொறுக்குத் தீனியை ரெண்டு பேருக்கும் சாப்பிட கொடுத்து மறுபடியும் அம்மணிக்கு கண்ணுல மருந்தை போட்டுவிட்டு உட்கார்ந்தா, ரெண்டு மகாரணிகளுக்குள்ள சண்டை வந்துடும், அந்த சண்டையை பஞ்சாயத்து பண்ணி முடிச்சு, ராத்திரிக்கு நண்பர்கள் கொடுத்த மாவை வச்சு தோசையை எல்லோருக்கும் ஊத்திக் கொடுத்து,ஊட்டிவிட்டு,நாங்க சாப்பிட்டு முடிச்சு, அந்த பாத்திரதை எல்லாம் கழுவி வச்சா படுக்கிற நேரம் வந்துடும். மறுபடியும் கண்ணுக்கு மருந்து போட்டுட்டு, ரெண்டு பேரையும் தூங்க வச்சுட்டு, சரி, நாம போய், இந்த வலைப்பூவுக்கு எதாவது கிறுக்கலாம்னு யோசிப்பேன். அது வெறும் யோசிப்போட முடிஞ்சிடும். ஏன்னா கண்ணு ரெண்டும் என்னைய தூங்க வைன்னு கெஞ்ச ஆரம்பிச்சிடும்.அப்புறம் எங்கேருந்து கணினி பக்கம் போறது, அதனால நானும் தூங்க போயிடுவேன். இதுல நடுவுல மூணு நாலு தடவை துனியெல்லாம் துவைச்சு காயப்போட்டு, அப்புறம் மடிச்சு வைக்கணும். வீடு ரொம்ப குப்பையா இருக்குனு, அம்மணி ஒரே புலம்பல், அதை நான் இந்த காதுல வாங்கி அந்த காதுல வெளியே விட்டுடுவேன். ஒரு நாள் அவுங்களுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு, நானே எப்படியோ வீட்டை முழுக்க கூட்டுரேன்னாங்க. ஐயையோ, வம்பா போச்சேன்னு நினைச்சுக்கிட்டு (அவுங்க ஒரு நாலு வாரத்துக்காவது குனியக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க), அதனாலே நானே வீட்டை கூட்டினேன். இதுல பெரிய மகாராணி வாரத்துல மூணு நாள் தான் டே-கேருக்கு போவாங்க. மத்த நாள்ல எல்லாம் வீட்டுல தான் இருப்பாங்க. அப்ப, ரெண்டு பேரையும் பார்த்துக்கிறது இருக்கே, அப்பப்பா! நாக்கு தள்ளிடும்.
அந்த ரெண்டு வாரத்துல தான் தெரிஞ்சுது, வீட்டு வேலையும் ஒண்ணும் சாதாரணமானது இல்லைன்னு. நான் ஆபிஸ்ல இருக்கும்போது, மெயில், தினமலர், விகடன்ன்னு இப்படி எல்லாத்தையும் பாத்துக்குவேன். ஆனா அந்த ரெண்டு வாரமும், என்னால ஒண்ணு கூட பார்க்க முடியலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இந்தியாவில வீட்டு வேலை பார்க்கும் மனைவிக்கு, கணவன் சம்பளம் தர வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவர போறாங்கன்னு பேப்பர்ல படிச்சேன். கணவன் வெளியில போய் சம்பாதிக்கிறான், மனைவி வீட்டில் இருந்து, வீட்டை கவனிச்சுக்கிறாங்க, இதுல எதுக்கு மனைவிக்கு சம்பளம்னு யோசிச்சேன். ஆனா, இந்த ரெண்டு வாரம் வீட்டை கவனிச்சுக்கிட்டதுல, அவுங்களுக்கும் சம்பளம் முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அது அவுங்களை உற்சாகப்படுத்தும். மேலும் அவுங்களுக்கு நாமளும் சம்பாதிக்கிறோம்னு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். அதனால நான் அடுத்த மாசத்திலிருந்து அவுங்களுக்கு ஒரு சம்பளத்தை போட்டுக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். 




Friday, February 15, 2013

காதலர் தினம்


எங்களுக்கு திருமணமான புதுசுல, வீட்டு அம்மணி ஒவ்வொரு காதலர் தினத்துக்கும், “இன்னைக்கு காதலர் தினம், எனக்கு என்னங்க வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு கேப்பாங்க”. நானும் சலிக்காம நமக்கு தான் 365 நாளும் காதலர் தினமாச்சே, அப்புறம் எதுக்கு தனியா, இந்த நாளை வேற கொண்டாடணும்னு சொல்லி ஒண்ணும் வாங்கித்தராம மழுப்பிவிடுவேன். இந்த பதிலையே கேட்டுக்கேட்டு, அவுங்களுக்கும் புளிச்சுப்போயிருக்கும்னு நினைக்கிறேன்,அதனால அந்த மாதிரி கேக்கிறதையே நிறுத்திட்டாங்க. இந்த வருஷம் எங்களுக்கு 14வது காதலர் தினம். அடுத்த வருஷம் எதாவது நல்லதா வாங்கிக்கொடுக்கலாம், அதனால இந்த வருஷம் அதற்கு முன்னேற்பாடா, ஒரு ரோசா பூவை வாங்கிக்கொடுக்கலாம்னு நினைச்சு, ஆபிஸ்லேருந்து வரும்போது, ஒவ்வொரு பூக்கடையா ஏறி எறங்கினேன். சொல்லி வச்ச மாதிரி, எல்லா கடன்காரங்களும் ஒத்த ரோசா பூவை பத்து டாலருக்கு விக்கிறாணுங்க. அடப்பாவிகளா, இதுக்கு எங்க வீட்டிலேயே ஒரு பூவை பறிச்சு, அதுக்கு கொஞ்சம் ஜிகினா வேலை பண்ணி, கடைல வாங்கின மாதிரி செட்டப் செஞ்சு அவுங்களுக்கு, காதலோடு கொடுக்கலாமேன்னு நினைச்சு, வீட்டுக்கு வந்தேன். ஆனா பாருங்க, எங்க வீட்டுல இருக்குற ஒரு செடிக்கும் நாங்க தண்ணியே ஊத்தமாட்டோம். அப்பப்ப பெய்யுற மழைல தான் அந்த செடிங்க உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. வீட்டுக்கு வெளியில இருக்கிற மூணு,நாலு ரோசாச்செடியில, ஒரு பூ கூட பூக்கலை. அந்த செடிங்க எல்லாம், “வா மகனே, நீங்க எங்களுக்கு ஒழுங்கா தண்ணி ஊத்த மாட்டீங்க, ஆனா நாங்க மட்டும் நீங்க நினைக்கிற நேரத்துல பூ பூக்கணுமா,,அஸ்கு ,புஸ்குன்னு நினைச்சிருக்கும் போல. ஆக மொத்தத்துல வீட்டிலிருந்து பூவை பறிச்சு கொடுக்கலாம்னு நினைச்ச நினைப்புலையும் மண்ணு விழுந்துடுச்சு. உம், அப்படி சொல்ல முடியாது, எங்க வீட்டு அம்மணிக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டு, வீட்டுக்குள்ள போனேன். கொஞ்ச நேரம் வரைக்கும் பார்த்தேன், அவுங்களா கேக்கிற மாதிரி தெரியலை, அதனால, நானே என்னம்மா, இன்னைக்கு காதலர் தினமாச்சே, நீ ஒண்ணுமே என்கிட்ட கேக்கலை, அப்படின்னு அவுங்க வாயை கொஞ்சம் பிடுங்கினேன். உடனே அவுங்களுக்கு கோபம் வந்துடுச்சு. கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல ஒரு காதலர் தினத்தன்னைக்காவது எனக்கு ஒரு பூவாவது வாங்கிக் கொடுத்திருக்கிங்களான்னு கேட்டாங்க. (அவுங்க கணக்குல கொஞ்சம் வீக், கல்யாணம் ஆகி எத்தனை காதலர் தினம் வந்திருக்குன்னு கரெக்டா சொல்ல தெரியலை!!!). ச்சை, நம்ம வீட்டு பூச்செடிங்க எல்லாம் காலை வாரி விட்டுச்சேன்னு நினைச்சுக்கிட்டு, கோவிச்சுக்காதேடா, அடுத்த வருஷம் இதே நாள்ல சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லி ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். (இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல, அப்ப பார்த்துக்கலாம்னு ஒரு நம்பிக்கை!!!).

உண்மையான காதல் எந்த பருவத்தில வருதுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். எனக்கு தெரிஞ்சதை, இந்த கவிதைல சொல்லியிருக்கிறேன் (கவிதைன்னு நீங்க நம்புவீங்க என்ற நம்பிக்கையில்,கவிதைன்னு சொன்னேன்). 


விடலைப் பருவத்தில்
வருகிற காதலோ
வெறும் இனக் கவர்ச்சியே

திருமணம் முடிந்தவுடன்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமம் தான் அதிகமாக இருக்கும்

நடுத்தர வயதில்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமமும் காதலும் சரிசமமாக இருக்கும்

வயதான காலத்தில்  
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
நூறு சதவீதம் காதல் மட்டுமே இருக்கும்

எல்லோருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். இன்னைக்கு காதலர் தினமா இருக்கிறதுனால, இந்த பதிவை போடும்படி ஆகிவிட்டது. இல்லை என்றால், என்னோட சோக கதையை, அதாங்க, நான் கஷ்டப்பட்டு வீட்டு வேலை செஞ்சதை பத்தி எழுதியிருப்பேன். கண்டிப்பா அடுத்த பதிவு அது தாங்க.

Monday, February 11, 2013

வீட்டு வேலை


எங்க வீட்டு அம்மணி, நீங்க பாட்டுக்கு காலைல 7.30 மணிக்கு கிளம்பி போயி ராத்திரி 7.30 மணிக்கு தான் வீட்டுக்கு வரிங்க. அதனால உங்களுக்கு நான் வீட்டுல செய்யுற வேலை எதுவுமே தெரிய மாட்டேங்குது. ஒரு நாளாவது, நான் உங்களை மாதிரி வெளில போயிட்டு, நீங்க வீட்டு வேலை எல்லாம் செஞ்சு பார்த்தா தான் தெரியும், ஆபிஸ் வேலையை காட்டிலும் வீட்டு வேலை எவ்வளவு கஷ்டம்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. கெட்டதை எல்லாம் யாராவது சொன்னாங்கன்னா, காதை பொத்திக்கணும்னு சின்ன வயசுல அம்மா சொன்னது தான் அந்த நேரத்துல நியாபகத்துக்கு வருமா, அதனால நானும் அவுங்களோட இந்த புலம்பலை எல்லாம் கேக்குற மாதிரி ஒரு காதுல கேட்டு இன்னொரு காதுல வெளியே விட்டுருவேன் (அவுங்க முன்னாடி காதை பொத்திக்க முடியுமா என்ன!!!).இவங்களுக்கு எல்லாம் வீட்டை நிர்வாகம் பண்றதுனால, நாட்டையே நிர்வாகம் பண்றோம்னு ஒரு நினைப்பு, அதான், எப்பப்பார்த்தாலும் உலகத்துலேயே, வீட்டு வேலை செய்யுறது தான் ரொம்ப கஷ்டமான வேலைன்னு ஒரு பில்டப் கொடுத்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சுப்பேன். ஆனா அவுங்களோட இந்த புலம்பல் ஒரு நாளைக்கு உண்மையாக போகுதுன்னு எனக்கு அப்பவெல்லாம் தெரியலை.

எங்க வீட்டு அம்மணிக்கு ரெண்டு கண்ணுலையும் பிரஷர் இருக்கு,அதுலேயும் ஒரு கண்ணு ரொம்பவே மோசமா பாதிச்சிருச்சு. அதனால அந்த கண்ணுக்கு ஆபிரேஷன் செஞ்சாகணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. மூணு வாரத்துக்கு முன்னாடி, அந்த ஆபிரேஷனை வீட்டு அம்மணி செஞ்சுக்கிட்டாங்க. இந்த ஆபிரேஷன் செஞ்சதுனால ஆறு வாரத்துக்கு ரொம்ப வேலை எல்லாம் செய்யக்கூடாது, முக்கியமா தலையை குனியக்கூடாது, அதிக எடை உள்ள பொருளையோ,குழந்தையோ தூக்கக்கூடாது. அப்புறம் சமையல் செய்யக் கூடாதுன்னு, இப்படி ஏகப்பட்ட கூடாதுகளை எல்லாம் டாக்டர் சொன்னாரு. ஆஹா, நாம நம்மலாள ஆறு வாரம் எல்லாம் லீவு போட முடியாது, எப்படியும் ஒரு ரெண்டு வாரமாவது லீவு போட்டு, வீட்டு வேலை எல்லாம் செய்யணும் போல இருக்கேன்னு அப்பத்தான் என்னோட மண்டைல ஒரைச்சது. சரி, கழுதை வீட்டு வேலை என்ன பெரிய கொம்பான்னு நினைச்சுக்கிட்டு கோதாவுல இறங்கிட்டேன். ஆபிரேஷன் செய்யுற அன்னையிலிருந்தே என்னோட பொறுமையை சோதிக்கிற நாள் ஆரம்பமாயிடிச்சு. 12.30 மணிக்கு ஆஸ்பிட்டல்ல இருக்கணும்னு சொன்னாங்க. நாங்களும் எங்களோட நண்டு,சிண்டை எல்லாம் கூட்டிக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு போனோம். ஒரு மணி நேரம் கழிச்சு, ஒரு நர்சம்மா வந்து, வீட்டு அம்மணியை கூட்டிக்கிட்டு உள்ளே போனாங்க. அவுங்க உள்ள போன உடனே, என்னோட ரெண்டாவது மகாரணியார்  அம்மான்னு ஒரு கத்து கத்துன்னாங்க பாருங்க, அங்க உட்கார்ந்திருந்தவுங்க எல்லாரும் குழந்தைக்கு என்னமோ ஆயிடிச்சுன்னு என் பக்கத்துல வந்து என்னாச்சு, என்னாச்சுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும், ஒண்ணும் ஆகலை, அவுங்க வந்து “அம்மா கொடுக்கு” அதனால தான் இப்படின்னு சொன்னேன். (சின்ன மகாரணிக்கு அம்மா மட்டும் இருந்தா போதும். அதுவும் ராத்திரியாயிட்டா, நான் என்ன கொடுத்தாலும் சரி, நீ வேண்டாம், எனக்கு அம்மா தான் வேணும்னு சொல்லி, என்கிட்டவே வர மாட்டாங்க). அங்க இருந்த இன்னொரு தாத்தா, பெரிய குழந்தை சமத்தா இருக்குதே, பரவாயில்லையேன்னு சொன்னாரு. நான், அவருக்கிட்ட, இவுங்க “அப்பா கொடுக்கு” அதான் கத்தலை அப்படின்னேன்(இவுங்க சின்னவுங்களுக்கு நேர் எதிர், இவுங்களுக்கு நான் இருந்தா போதும். அதுவும் சனி, ஞாயிறுல எல்லாமே நான் தான் இவங்களுக்கு பண்ணனும்). சின்ன மகாராணியோட அழுகையை கேட்டு, வெளியே வந்த இன்னொரு நர்ஸ், நீங்க ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்து, உங்க மனைவியை கூட்டிக்கிட்டு போங்கன்னு சொல்லி, நேரடியா வெளியில போங்கன்னு சொல்லாம என்னைய வெளியே துரத்தி விட்டுட்டாங்க. நானும் ஒரு ரெண்டு மணி நேரம் தானே, எப்படியாவது இவுங்க ரெண்டு பேரையும் சமாளிப்போம்னு நினைச்சுக்கிட்டு, ரெண்டு பேரையும் வெளியே கூட்டிக்கிட்டு வந்துட்டேன். ஆனா ரெண்டு மணி நேரம் எல்லாம் ஆகலை, அஞ்சு மணி நேரம் ஆச்சுங்க, வீட்டு அம்மணி வெளியில வர்ரதுக்கு. ஆபிரேஷன் என்னமோ ஒன்றரை மணி நேரம் தான். மிச்ச நேரம் எல்லாம் அவுங்க வெளியில உட்கார்ந்து காத்துக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா, உள்ள உட்கார்ந்து காத்துக்கிட்டு இருந்திருக்காங்க. அந்த அஞ்சு மணி நேரம், ரெண்டு மகாரணிகளையும் பார்த்துக்கிட்டு இருந்ததே பெரிய சாதனையா போச்சு எனக்கு. சரி, அந்த ரெண்டு வாரத்திலே, நான் எப்படி வீட்டு வேலை எல்லாம் செஞ்சேன்னு அடுத்த பதிவுல சொல்றேன் (பாத்திரம் எல்லாம் கழுவி, ரொம்ப அசதியாயிடுச்சு!!!)

Thursday, January 31, 2013

தாமதமான பதிவு


என்னடா போன வருஷம் 62 பதிவுகளை பதிச்சுட்டேன்னு சொன்னான். இந்த வருஷம் ஆரம்பிச்சு ஒரு மாசம் முடியுது, ரெண்டே ரெண்டு பதிவுகளை தான் பதிச்சிருக்கான்னு (அதிலும் ஒரு பதிவு, வீட்டு அம்மணியோடது!), நீங்க நினைக்கிறது எனக்கு கேக்குது. என்னங்க பண்றது, இங்க நாங்க பொங்கல் திருவிழாவை ஜனவரி மாதம் 20ஆம் தேதி  மிக விமர்சையா கொண்டாடினோம். அதுக்காக நிறைய வேலைகள் எல்லாம் செய்ய வேண்டியிருந்தது. இவன் ஒருத்தன் தான் எல்லா வேலையும் செஞ்ச மாதிரி பேசுறானேன்னு நினைக்காதீங்க. இங்கில்பர்ன்ல இருக்கிற தமிழ் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த திருவிழாவை கொண்டாடினோம். நான் இதுல பெரியவங்க நாடகம் ("ஒரு காதல் கதை") ஒண்ணும், சிறு குழந்தைகளின் சிறிய நாடகம் ஒன்றும் ("அல்வா சாப்பிட்டால்") மேலும் மேடை சிரிப்பு நிகழ்ச்சி ("கண்ணம்மாப்பேட்டை") ஒன்றும் பண்னினேன். இது எல்லாத்துக்கும் கடைசி நேரத்தில் தான் கதை மற்றும் நாடக வசனம் எல்லாம் எழுதி அதுல நடிக்கிறவங்களுக்கு கொடுத்து மனப்பாடம் பண்ண சொல்லி அவர்களை எல்லாம் ஒரு வழி பண்ணி ஒரு வழியா அரங்கேற்றினோம். அதனால 20ஆம் தேதி வரைக்கும் என்னால வலைப்பூ பக்கம் வர முடியலை. 21ஆம் தேதி, எங்க வீட்டு அம்மணி வலது கண்ணுல "GLAUCOMA" ஆபிரேஷன் செஞ்சுக்கிட்டாங்க.    அதனால நான் ரெண்டு வாரம் லீவு போட்டு, வீட்டு வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன். (இதெல்லாம் சூட்டோட சூட்டா சொல்லிடனும். அதற்கப்புறம் நான் காதல் கீதத்தோட முடிவு பகுதியை பதியுறேன்) . இதற்கு நடுவுல போன வெள்ளிக்கிழமை இரவு என்னோட மிக மிக நெருங்கிய நண்பரோட மகன் (அவர் இந்த வருடம் மருத்துவராகியிருப்பார்)தவறிவிட்டார். அந்த துக்கமும் சேர்ந்துக்கொண்டதால், என்னால் கணினி பக்கமே போக முடியவில்லை.  

இவையெல்லாம் தான் என்னோட தாமதத்துக்கு காரணங்கள். கண்டிப்பாக இனிமேல் ஒழுங்காக பதிவுகளை பதிவேன் என்று நம்புகிறேன். 


Tuesday, January 8, 2013

புராண காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி

காதல் கீதம் தொடர்கதையை தான் முடிக்க வேண்டும் என்று எண்ணிக்
கொண்டிருந்த வேளையில், வீட்டு அம்மணிக்கு, தானும் எதையாவது எழுத வேண்டும் என்று ஒரு விபரீதமான எண்ணம் தோன்றிவிட்டது. அவர்கள் எதையாவது எழுதியிருந்தால் மட்டும் பரவாயில்லை, அதை என்னுடைய வலைப்பூவில் பதிய வேண்டும் என்று கட்டளையிட்டது தான் என்னை பயமுறுத்தியது. அதனால் தான் நான் விபரீதமான எண்ணம் என்று சொன்னேன்.  நானும் விட்டுக்கொடுக்காமல், நீ பாட்டுக்கு கண்டதையும் எழுதினால் எப்படி பதிவது என்றேன். உடனே, நீங்க தத்துபித்துன்னு எழுதுறதை விட நான் நல்லா தான் எழுதுவேன் என்று கூறி, ஒரு கட்டுரையையும் எழுதி கொடுத்தார்கள், அதை படித்தவுடன் தான் தெரிந்தது, ஆஹா, நமக்கு போட்டி வெளியில் எல்லாம் இல்லை,வீட்டுக்குள்ளேயே இருக்காங்கன்னு. ஏதோ என் பொழப்புல மண்ணை அள்ளிப்போடாம இருந்தா சரி தான்னு நினைச்சுக்கிட்டு , நானும் அந்த கட்டுரையை இந்த பதிவுல பதியுறேன்.  


இந்திய நாடு நிறைய விஷயங்களில் உலகத்திற்கு,முன்னோடியாக இருந்திருக்கிறது. இன்றைக்கு மகப்பேறு மருத்துவத்தில் நவீன விஷயமாக நாம் கருதுவது, கருவை வெளியே வைத்து வளர்க்கும் முறை, அதாவது ஆங்கிலத்தில் “IVF” முறையை தான். ஆனால், இந்த முறை நம் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்களில் கையாளப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு என்று, தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருக்கருகாவூரில் “கர்ப்பரட்சாம்பிகை” கோவிலின் தல வரலாறு சொல்கிறது.


முல்லைவதனம் என்னும் ஊரில் கௌதமர், கார்த்திகேயர் என்று இரண்டு முனிவர்கள் தவம் செய்தார்கள். குழந்தையில்லை என்ற குறையை சொல்லி அவர்களிடம் நித்திருவர் – வேதிகை தம்பதியினர் முறையிட்டனர். அதற்கு அந்த முனிவர்கள், அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் முல்லைவன நாதரையும், அம்மனையும் வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று உபதேசித்தார்கள். அவ்வாறே அந்த தம்பதியினரும் உபதேசிக்க, வேதிகா கருவுற்றாள்.
கணவர் ஊரில் இல்லாமல், வேதிகை மட்டும் தனித்து இருந்த சமயத்தில், தாய்மையின் அடையாளமான கருவை சுமந்திருந்த காரணத்தால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்திருந்ததினால் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதனை அடைந்த வேதிகை மீண்டும் அந்த அம்பாளிடம் சென்று முறையிட்டாள். அம்பாளும், வேதிகையின் மேல் இறக்கம் கொண்டு, அன்னை கர்ப்பரட்சாம்பிகையாக தோன்றி, கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து, குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி “நைந்துருவன்” என்று பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.


கரு காத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம், இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவலகில் கருத்தரிக்காதவர்களை, கருத்தரிக்க வைக்கவும், கருத்தரித்தவர்களின் கருவையும் காப்பாற்ற வேண்டும் என்று பிராத்தனை செய்ய, அன்னையும் அந்த வேண்டுகோளை ஏற்று, இத்தலத்தில் வீற்றிருந்து, நமக்கெல்லாம் அருள் புரிகிறாள். இதனால் தான், கருவை ரட்சித்த அந்த அம்மனுக்கு “கர்ப்பரட்சாம்பிகை” என்று பெயர் வந்தது.
என்னதான், இந்த நிகழ்ச்சி ஒரு புராண கதையாக இருந்தாலும், இன்றும் இந்த அம்மனை, குழந்தை பேறு இல்லாதவர்கள் வணங்கினால், கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. அதற்கு நானே ஒரு சிறந்த உதாரணம். எனக்கு திருமணமாகி சரியாக பத்து வருடங்கள் முடிந்து தான் ஓவியா பிறந்தாள். அதுவும் இந்த அம்மனை வணங்கி, அங்கு கொடுக்கப்பட்ட நெய் பிரசாதத்தை, சாப்பிட்ட பிறகு தான், நான் கருவுற்றேன். அதே மாதிரி, ,குழந்தை தங்காதவர்களும், குழந்தை தங்க வேண்டும் என்று வேண்டினாலும், நல்லபடியாக சுகப் பிரசவம்  ஆகி குழந்தையை பெற்றடுக்க வேண்டும் என்று வேண்டினாலும் கண்டிப்பாக நடக்கிறது. எனக்கு ஓவியா கொடுக்கப்பட்ட தேதிக்கு நான்கு வாரத்திற்கு முன்பே பிறந்தாலும், சுகப்பிரசவத்தில் தான் பிறந்தாள். எனக்கு தெரிந்த சில தோழிகள், தங்கள் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தாலும், இரண்டாவது குழந்தைக்கு இந்த அம்மனை வணங்கி, சுகப்பிரசவத்துக்கான ஸ்லோகத்தை தினமும் படித்து, இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்திருக்கிறார்கள். தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று யாரும் கவலைப் பட வேண்டாம். ஒரு முறை இந்த கோவிலுக்கு போய் வணங்கி வாருங்கள், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இன்றைய நவீன மருத்துவத்தில் இறந்த ஒருவரின் இதயத்தையோ, கண்ணையோ மற்றொவருக்கு பொருத்தி,அவரின் வாழ்கையில் விளக்கேற்றி வைக்கிறோம். ஆனால் இதற்கு இன்னும் ஒரு படி மேல போய், நம் சித்தர்கள் “கூடு விட்டு கூடு பாயும்” கலையில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது இறந்த ஒருவரின் உடலில் தங்களின் ஆன்மாவை உள்ளே செலுத்தி, இறந்தவரையே நடமாடவிட்டிருக்கிறார்கள். அதே போல் ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது, மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கஸ்ருதா என்ற முனிவர் காடராக்ட் ஆபரேஷன் செய்து, அதை பற்றிய விவரங்களை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று. ஆக மொத்தத்தில், அந்த காலத்தில் நம் சித்தர்கள், ஞானிகள் செயத்தை தான், நாம் இன்றைய நவீன மருத்துவத்தில் செய்துக்கொண்டிருக்கிறோம்.  
- கீதா சம்பந்தம் 

Tuesday, January 1, 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என்ன எழுதப்போறோம், எதை எழுதப்போறோம்னு போன வருஷம் ஆரம்பத்துல ஒரு தயக்கம் இருந்துச்சு. சரி, நம்ம சொந்த கதை,சோக கதையெல்லாம் எழுதுவோம்னு நினைச்சு எழுத ஆரம்பிச்சேன். எப்படியோ 62 பதிவுகளை போன வருஷத்துல பதிச்சுட்டேன். என்னோட இந்த தத்துபித்து உளறல்களை எல்லாம் நீங்களும் படிச்சு, இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஹிட்டுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக இந்த வருடமும் உங்களுக்கு பிடித்த வகையில் என்னுடைய பதிவுகள் இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறிக்கொள்கிறேன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் குடும்பத்தாரின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, December 29, 2012

காதல் கீதம் - 8

 பகுதி - 7  
ஜானகி சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு அடைக்கப்பன் சென்றான். இவர்கள் இருவரும் சென்ற பிறகு, ஜானகி தந்தையின் நெருங்கிய நண்பரும், கூட  வேலை பார்பவருமான முத்து எழுந்து போனார். அவர் அன்று சிவகங்கைக்கு ஒரு வேலையாக வந்து, அந்த வேலை முடியாததால், அந்த பூங்காவில் வந்து உட்கார்ந்திருந்தார். அவர் உட்கார்ந்திருப்பது தெரியாமல், ஜானகியும், அடைக்கப்பனும் அவருக்கு முன்னால் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்ட முத்து, தன் வேலையை முடித்துக்கொண்டு, நேராக தன் டிபார்ட்மெண்டுக்கு சென்று, ஜானகியின் தந்தை நாராயணனை தேடினார். அவரும் வேலையை முடித்து, வீட்டிற்கு கிளம்புவதற்கு தயாராக இருந்தபோது முத்துவைப் பார்த்தார்.

“என்ன முத்து, நீ இன்னைக்கு லீவு தானே போட்டிருந்த?” என்று கேட்டார் நாராயணன்.

“ஆமா நாராயணா, நீ இப்ப வீட்டுக்கு தானே போறே?, உன்னைய பார்த்து பேசுறதுக்கு தான் நான் இப்ப வந்தேன்” என்றார் முத்து. 

“சரி, வா என்னோட வேண்டிலேயே பேசிக்கிட்டு வீட்டுக்கு போலாம்” என்றார் நாராயணன்.

இல்லை நாராயணா, இது கொஞ்சம் முக்கியமான விஷயம், வெளியில இருக்கிற டீ கடைல போய் பேசுவோம்” என்று கூறி, டீ கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நாராயணனும் ஏதோ முக்கியமான விஷயம் என்று எண்ணிக்கொண்டு ஆலைக்கு வெளியில் இருக்கும் டீ கடைக்கு முத்துவோடு போனார்.
முத்து, ரெண்டு டீயை ஆர்டர் பண்ணிவிட்டு, பின்னாடி இருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்தார், பின்னாடியே வந்த நாராயணனும்,அவர் எதிரில் உட்கார்ந்து,

“என்ன முத்து, அப்படி முக்கியமான விஷயம்” என்றார்.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த முத்து, “கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்யுறதுக்கு, மெட்ராஸ்லேருந்து வந்திருக்கிற தம்பியை பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று கேட்டார் முத்து.

“யாரு, அந்த அடைக்கப்பன் தம்பியா?, அந்த பையன் ரொம்ப நல்ல பையனாத்தான் இருக்கான்” என்றார் நாராயணன்.

அவன் உனக்கு சொந்தமா” என்று கேட்டார்.

“ஒரு வகைல பார்த்தா அந்த பையன் தூரத்து சொந்தம் தான். என் தங்கச்சி மாப்பிள்ளையோட மாமா பையன் தான் இந்த அடைக்கப்பன். ஆமா எதுக்கு இப்ப அந்த பையனை பத்தி கேக்குற? என்றார் நாராயணன்.

“விஷயம் இருக்கு, இன்னைக்கு சிவகங்கைக்கு போயிருந்தேன் இல்ல, அங்க ஹாஸ்பிடல்ல என்னோட ரிபோர்ட் கிடைக்கிறதுக்கு 1 மணி நேரம் ஆகும்னு சொன்னாங்க. அதனால பக்கத்துல இருக்கிற பூங்காவில போய் உட்கார்ந்து இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு பின்னாடி ரெண்டு பேர் வந்து உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாங்க. பெண்ணோட குரல் ரொம்ப பழக்கபட்ட குரலாட்டம் இருந்துச்சு. மெதுவா திரும்பி பார்த்தா, அவுங்க எனக்கு முதுகை காட்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது, அந்த பொண்ணு வேற யாரும் இல்ல, நம்ம ஜானகி,அந்த பையனும் அடைக்கப்பண்ணு” சொன்னார் முத்து.

“அவுங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்களா” என்று கேட்டார் நாராயணன்.

“ஆமா, ஆனா அவுங்க பேசிக்கிட்டதிலிருந்து என்ன தெரிஞ்சுதுன்னா, ஜானகி படிப்பை முடிச்சதும், உங்கிட்ட அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்னு சொல்லுவான்னு நினைக்கிறேன்” என்றார் முத்து.

“உனக்கு தெரியும் இல்ல முத்து, நான் அவளை எப்படி எல்லாம் வளர்த்தேன்னு, கடைசில அவளும் இப்படி காதல், கத்திரிக்காய்ன்னு விழுந்துட்டாளே” என்று வருத்தப்பட்டார் நாராயணன்.

“இதுல வருத்தப்படுறதுக்கு என்ன இருக்கு நாராயணா. இந்த காலத்துல காதல் எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா ஆயிடுச்சு. ஆனா, நம்ம ஜானகி யாரோ ஊர் பேர் தெரியாதவனை காதலிக்கலை. ஒரே இனத்துல, அதுவும் உனக்கு நல்லா தெரிஞ்ச பையனைத்தான் காதலிச்சிருக்கா. அதோட அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப கண்ணியமா தான் பழகுறாங்க. பேசாம அந்த பையனுக்கே அவளை கட்டி வச்சிடேன்” என்றார் முத்து.

“இவ இன்னமும் படிப்பையே முடிக்கலை. அதுக்குள்ள கல்யாணத்தை எப்படி பண்றது. முதல்ல இந்த வாரம் சிதம்பரத்துக்கு பொண்ணு பார்க்க போறோம். அது நல்ல படியா அமைஞ்சுதுன்னா, அப்புறம் இவளைப் பற்றி யோசிக்கலாம். அதோட அந்த பையனைப் பத்தியும் இன்னும் நல்லா விசாரிக்கணும்” என்றார் நாராயணன்.

“ஆமா, அந்த பையன் வீடு உங்க கோவில் கிடையாது தானே. அதை முதல்ல தெரிஞ்சுக்க” என்றார் முத்து.

“அவுங்க எங்களோட கோவில் கிடையாது அது நல்லா தெரியும். எனக்கு என்ன மனசு கஷ்டமா இருக்குதுன்னா, நான் ஒரு நல்ல மாப்பிள்ளையா அவளுக்கு தேடணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்பா, உங்களுக்கு அந்த சிரமம் எல்லாம் வேண்டாம்னு, இவளே ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திட்டா. உம். எல்லாம் கலி காலம்” என்று சலிச்சுக்கிட்டார் நாராயணன்.   

“இங்க பாரு நாராயணா, இன்னும் கொஞ்சம் நாள் போயிருந்தா நீயே அந்த பையனைப் பத்தி விசாரிச்சு, மாப்பிள்ளையாக்கிக்கிட்டு இருப்ப. அதனால, ஜானகியைப் பத்தி தப்பா நினைக்காமா ஆக வேண்டியதை பாரு.  உனக்காக நான் அந்த பையனைப் பத்தி விசாரிச்சு சொல்றேன். உன் பையன் கல்யாணம் முடிஞ்சவுடனே, இவுங்க கல்யாணத்தையும் நடத்தி, அந்த தம்பியையும் நம்ம ஃபேக்டரிலேயே வேலையை மாத்திக்க வச்சுட்டா, அப்புறம் உன் பொண்ணு உன்னைய விட்டு எங்கேயும் போகமாட்டா” என்றார் முத்து.   

“சரி முத்து, இந்த விஷயத்தை யாருக்கிட்டேயும் சொல்லாதே. நானே வீட்டுல இதை பத்தி பேசபோறதில்லை. பையன் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் இதைப் பத்தி வாயே திறக்கப்போறேன்” என்றார் நாராயணன்.

“என்ன நாராயணா நீ பேசுற, நான் போய் இதை யாருக்கிட்டையாவது சொல்லுவனா?. ஜானகியும் எனக்கு ஒரு மக மாதிரி தான். நீ கவலையே படாதே. சரி கிளம்பலாம் வா” என்றார் முத்து.

நாராயணன், தன் மகளைப் பற்றி எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார். அங்கு ஜானகி அடுப்படியில் தன் தாய்க்கு உதவியாக வேலை செய்துக் கொண்டிருந்தாள். தந்தையை பார்க்த்தவுடன்,காபி போட்டு எடுத்துச் சென்றாள்.

“இந்தாங்கப்பா காபி” என்று கூறி காபியை கொடுத்தாள்.

நாராயணன் சிறிது நேரம் அவளிடமிருந்து காபியை வாங்காமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். இந்த பூனையும் பால் குடிக்குமான்னு சொல்ற மாதிரி இருந்துக்கிட்டு, இவளும் காதலிக்கிறாளேன்னு உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டார்.

“என்னப்பா, புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க. முதல்ல காப்பியை வாங்கிக்குங்க” என்றாள் ஜானகி.

காபியை வாங்கிக்கொண்டு, “ஒண்ணும் இல்லம்மா, முதல்ல உங்க அண்ணனுக்கு கல்யாணத்தை முடிக்கலாமா, இல்ல உனக்கு முடிக்கலாமான்னு யோசிக்கிறேன்” என்றார் நாராயணன்.

“என்னப்பா இது, நான் இன்னமும் படிப்பையே முடிக்கலை. அதுக்குள்ள எனக்கு எதுக்கு கல்யாணம். முதல்ல அண்ணனுக்கு முடிங்க”, அப்புறம் எனக்கு பார்க்கலாம்” என்றாள்.

“சரிம்மா, உங்கண்ணனுக்கு, இந்த இடம் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். அப்படி முடிஞ்சிருச்சுன்னா, கல்யாணத்தை உடனே வச்ச்சுகிற மாதிரி இருக்கும். அதனால, நீ பாட்டுக்குன்னு இன்னைக்கு உன் ஃப்ரெண்ட்டை பார்க்க போன மாதிரி, அடிக்கடி போகாதே, கல்யாண வேலை எல்லாம் நிறைய இருக்கு” என்றார்.

“சரிப்பா” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றாள். அவளுடைய மனதோ,அப்பாவுக்கு எதாவது விஷயம் தெரிஞ்சிருக்குமோ என்று குழம்பியது. அப்பாவுக்கு தெரிஞ்சிருக்காது, நாமா தான் யாருக்கும் தெரியாம காதலிக்கிறோமே என்று உடனே மனதை சமாதானப்படுத்தினாள்.  

வெள்ளிக்கிழமை அன்று, அடைக்கப்பன் லீவு போட்டு, மெட்ராஸுக்கு போனான். சனிக்கிழமை ஜாகியின் வீட்டில், ஜாகியின் பெற்றோர், ஜானகி, சிதம்பரம் மற்றும் அவர்களின் அப்பத்தா எல்லோரும் மெட்ராஸுக்கு சிதம்பரத்திற்கு பொண்ணு பார்க்க கிளம்பி நேராக ஜானகியின் அத்தைப் பெண் உண்ணாவின் வீட்டுக்கு சென்று இறங்கினார்கள். அன்று காலை 11மணிக்கு வடபழனி கோவிலில் சிதம்பரத்திற்கு பெண் பார்ப்பதாக ஏற்பாடாகியிருந்தது. சிதம்பரம் வீட்டில் எல்லோருக்கும் பெண்ணைப் பிடித்து விட்டது. உடம்பு சரியில்லாமல் இருக்கும் அந்த பெண்ணின் ஆயாவிற்கு, தன் பேத்தியின் கல்யாணத்தை சீக்கிரம் பார்த்து விட வேண்டும் என்பதால், கலியானத்தை ஒரு மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று அந்த பெண் வீட்டார், ஜானகியின் வீட்டில் சொன்னார்கள். ஜானகியின் வீடும், அதற்கு ஒத்துக் கொண்டது. ஆனால், சிதம்பரத்திற்கு மட்டும், இதில் வருத்தம். அவன் நினைத்தது, திருமணத்திற்கு ஒரு ஆறு மாதங்களாவது இருக்கும், அதற்குள் பெண்ணிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி, காதலை வளர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்தான். பெண் பார்த்து முடித்து, மீண்டும் உண்ணாவின் வீட்டிற்கு வந்தார்கள். அங்கே, அடைக்கப்பன் ஜானகிக்காக காத்துக் கொண்டிருந்தான். 
பகுதி - 9 
                                            - [தொடரும்]