Wednesday, July 4, 2012

அமெரிக்காவில் அடியேன் - 2

 
நானும் லாஸ் எஞ்செல்ஸ் போற விமானத்துல ஏறி உட்கார்ந்தேன். இந்த விமானத்துல சைவ சாப்பாடு வாய்க்கே விளங்கலை.ஒரு சின்ன கரண்டி அளவு வெள்ளை சாதமும், இல்ல! இல்ல! பொங்க சாதமும்!! (அந்த அளவுக்கு குழஞ்சு இருந்துச்சு), வேகவச்ச இரண்டு,மூன்று மஷ்ரூமும்,கொஞ்சம் கீரையும் கொடுத்தாங்க.எப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டேன். இன்னும் இரண்டு நேரத்துக்கு, இதையேத்தான் கொடுக்கப் போறாங்களோன்னு பயம் வந்துடுச்சு. ஆனா, இதையே கொடுக்காம, ஏதோ தம்மாத்துண்டு பர்கர் கொடுத்தாங்க(எப்படித்தான் அவ்வளவு சின்னதா பர்கர் செய்வாங்களோ!!). அதை மட்டும் கொஞ்சம் திருப்தியா சாப்பிட்டு, எப்படியோ 13 மணி நேரத்தை அந்த விமானத்துல ஒப்பேத்தி லாஸ் எஞ்செல்ஸ் விமான நிலயத்துக்கு வந்து சேர்ந்தேன்.அங்கேயும் குடியுரிமைத் துறையில இருக்கிற ஒரு அம்மா தான்,எனக்கு அமெரிக்காவில 6 மாசம் வரைக்கும் தங்குறதுக்கு அனுமதி தந்தாங்க.அதுக்கப்புறம் என்னோட ஒரே ஒரு பெரிய பெட்டியை எடுத்துக்கிட்டு, வலது பக்கம் திரும்பினவுடனே, என் பெட்டில ஒட்டியிருந்த ஸ்டிக்கரைப் பார்த்து, இங்கேயே அந்த பெட்டிய போடுங்கன்னு சொன்னாங்க. என்னை மாதிரியே மற்ற ஊர்களுக்கு போறவங்களையும் அங்கேயே அவுங்க பெட்டியை எல்லாம் போடச் சொன்னாங்க. எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துடுச்சு., இவுங்க நம்ம பெட்டியை “san jose” போற விமானத்துல ஏத்தாம வேற விமானத்துல ஏத்திட்டா என்ன பண்றது. சரி, பெட்டி போனா போகட்டும், அதுக்குள்ள தங்கமும்,வெள்ளியுமா இருக்குது!!!. அந்த பெட்டிக்குள்ள இன்னொரு சின்ன பெட்டியும்(hand baggage பெட்டி) அந்த சின்ன பெட்டிக்குள்ள ஏழெட்டு சட்டை, பேன்ட் தான் இருக்குது. இதுக்கு போயி நாம ஏன் கவலை படனும்னு மனசை தேத்திக்கிட்ட போதுதான், மூளைக்குள்ள ஒரு அலாரம் அடிச்சுது.என்னன்னா!அந்த பெட்டிக்குள்ள இரண்டு சட்டை பேன்ட் புதுசா வச்சிருந்தேன் அந்த இரண்டும் மாமனார் வீட்டுல கொடுத்தது. அதுல ஒரு சட்டை பேன்டைத்தான் நான் கட்டுரையை வாசிக்கிற அன்னைக்கு போட்டுக்கனும்னு வீட்டு அம்மணியோட உத்தரவு. பெட்டி மட்டும் வராம போகட்டும் அப்புறம் வச்சுக்கிறேன் கச்சேரியைன்னு மனசுக்குள்ள அந்த உத்தரவு மிருதங்கம் வாசிச்சது. கண்டிப்பா பெட்டி கிடைச்சிடுங்கிற நம்பிக்கைல அடுத்த விமானம் எங்க நிக்கும்னு போர்டிங் பாஸ்ல பார்த்து 65A கேட்டுக்கு வழியை தேடிக்கிட்டு போனேன்.சரி, எதுக்கும் மேல இருக்கிற டி‌வி பொட்டில ஒரு தடவை பார்த்துடலாம்னு பார்த்தா, அதுல கேட் 66ன்னு காட்டுனுச்சு. திருப்பியும் 66கேட்டை தேடி கண்டுப் பிடிச்சு போனேன். அப்பவே காலைல 8மணியாயிடுச்சு. 9.20க்கு அந்த விமானம்,அதனால 8.50க்கு எல்லாம் போர்டிங் பண்ணனும்னு சொல்லியிருந்தாங்க.நானும் கேட்-66ல போயி உட்கார்ந்து, எனக்கு ரொம்ப பிடிச்ச இளையராஜா பாடல்களை கேட்டுக்கிட்டு இருந்தேன். மணியோ 9மணியாயிடுச்சு,அந்த கேட்ல கூட்டத்தையும் காணோம், அந்த விமானத்துல வேலை பார்க்குறவங்களையும் காணோம். எனக்கு ஒரே குழப்பமா போச்சு. மறுபடியும் அங்கேயே இருக்கிற டி‌வி பொட்டில போயி பார்த்தேன். அது கேட்-66ன்னு தான் காட்டிக்கிட்டு இருந்துச்சு. என்னடா இது ஒண்ணுமே புரியலையேன்னு யோசிச்சு,அங்க இருக்கிற தகவல் நிலையத்துல போயி ஏங்க, இந்த மாதிரி “san jose” போற விமானம் எந்த கேட்ல நிக்குதுன்னு கேட்டேன். கவுண்ட்டர்ல இருக்கிற அம்மாவுக்கு நான் பேசுன ஆங்கிலம் புரியல போல இருக்கு, அவுங்க திருப்பி என்ன கேட்டீங்கன்னு, கேட்டாங்க.மறுபடியும் நான் கேட்டதையே திருப்பி சொன்னேன். அவுங்க “san jose”, அந்த மாதிரி எந்த ஊரும் இல்லையேன்னு சொன்னாங்க.நானும் “san joseயைவேற விதமா எல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஒண்ணும் வேலைக்கு ஆகலை. மணியோ 9.05ஆயிடுச்சு. இனிமே இவுங்க கிட்ட பேசி புரிய வைக்க முடியாதுன்னு முடிவு பண்ணி, நான் என்னோட போர்டிங் பாஸை எடுத்துக் காமிச்சு சைகை பாஷைல எப்படி போகனும்னு கேட்டேன்.உடனே, அந்த அம்மாவும், ஓ! சேன் உஸேவாஅது கேட்-64Aன்னு சொன்னாங்க. எனக்கு ஒரே சந்தேகம் “san joseன்னுஎழுதுறாங்க, ஆனா சொல்றதை மட்டும் என்னமோசேன் உஸேன்னுசொல்றாங்களேன்னு. (அந்த ஊருக்கு போனப்புறம் தான் ஏன் அப்படி சொல்றாங்கன்னு தெரிஞ்சுது). திருப்பியும் அந்த சந்தேகத்தை கேட்டு, அவுங்களுக்கு அதை புரிய வச்சு முடிக்கிறதுக்குள்ள, விமானம் போயிடும்னு முடிவு பண்ணி, அந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ற வேலையை விட்டுட்டேன்.ஆனா ஏன் இப்படி தாப்பா டி‌வி பொட்டில காட்டுறாங்கன்னு அவுங்க கிட்ட கேட்டேன். அந்த அம்மாவும் ஓ!அதை மாத்தலை போல இருக்குன்னு ரொம்பவும் அசால்டா சொன்னாங்க. அட!கஷ்டமே, இதை நம்பி இருந்தா, நாம அந்த விமானத்தை விட்டிருப்போமேன்னு வேக வேகமா கேட்-64A எங்க இருக்குதுன்னு தேடிக்கிட்டே போனேன், போனேன்,போயிக்கிட்டே இருந்தேன். ஒரு பெரிய சுத்து சுத்தி, ஒரு வழியா அந்த கேட்டுக்கு வந்து சேர்ந்தேன். நல்ல வேளையா, அப்பத்தான் எல்லோரும் வரிசைல நின்னு போர்டிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நானும் போயி அந்த வரிசைல நின்னேன். அப்ப ஒரு அறிவிப்பு செஞ்சாங்க. அதாவது,கைப் பெட்டி பெருசா இருந்தா, அதை விமானத்துக்குள்ள வைக்க முடியாது, அதனால விமானம் ஏறுவதற்கு முன்னாடி அங்க நிக்கிறவங்ககிட்ட கொடுத்துடுங்க, அவுங்க ஒரு ரசீது கொடுப்பங்க. இறங்கும்போது, நீங்க உங்க பெட்டியை வாங்கிக்கலாம்னு சொன்னாங்க. நான் வெறும் கம்ப்யூட்டர் பையை வச்சிருந்ததுனால, எனக்கு அந்த பிரிச்சனை இல்லாம போச்சு. என்னோட போர்டிங் பாசை சரி பார்த்த பிறகு, நடந்து போயி விமானத்துக்குள்ள ஏறச் சொன்னாங்க. நடந்து போயி விமானத்துக்கிட்ட போனவுடனே, எனக்கு ஒரே ஆச்சிரியமாகவும்,அதிர்ச்சியாகவும் போயிடுச்சு. ஏன் எனக்கு அப்படி ஆச்சுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                               பகுதி-3

No comments:

Post a Comment