Monday, June 25, 2012

அமெரிக்காவில் அடியேன் - 1

நானும் மஸ்கட்,சிங்கப்பூர்,மலேஷியா,லண்டன்,ஜப்பான்,தென்கொரியா, ஆஸ்திரேலியா இப்படின்னு பல நாடுகளுக்கு போயிருந்தாலும், அமெரிக்காவுக்கு மட்டும் போக கூடிய வாய்ப்பு அமையலை. ச்சீ, ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு நானும் விட்டுட்டேன். அப்பத்தான் ஒரு நண்பர் அமெரிக்காவில இருக்கிற ஒரு தமிழ் கல்விக் கழகம் உலக அளவுல தமிழ் கல்வி சம்பந்தமா ஒரு மாநாடு நடத்துறாங்க, நீங்க அதுல ஒரு ஆய்வுக் கட்டுரையை படைக்கிறீங்களான்னு கேட்டாரு. நானும் ஒரு ஆர்வக் கோளாறுல ஒத்துக்கிட்டு எப்படியோ ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை அனுப்பிட்டேன். அப்புறம் முழுக்கட்டுரையையும் எழுதும்போது தான் தெரிஞ்சுது, தெரியாமல் இதுல காலை விட்டுடோம்னு. இருந்தாலும், எப்படியோ ஒரு வழியா அந்த கட்டுரையை எழுதி முடிச்சேன். மாநாடு நடத்துறவுங்க என்னோட கட்டுரையை தெரிவு செஞ்சு, அமெரிக்காவுக்கு போகனுங்கிற என்னோட நெடு நாள் ஆசையை நிறைவேத்திட்டாங்க. இந்திய குடிமகன்கிறதுனால விசா வாங்கியாகனும். ஒரு சுப முகூர்த்த நாள்ல, சிட்னில இருக்கிற அமெரிக்க தூதரகத்துக்கு போனேன். முதல்ல 9வது மாடிக்கு போனேன். ஷூவை எல்லாம் கழட்டி செக் பண்ண பிறகு, மொபைல் போனை ஆஃப் செய்து அவுங்ககிட்ட கொடுக்கனுமாம். அட கஷ்டகாலமேன்னு போனை கொடுத்துட்டேன்.       (என்ன(!) முக்கியமான கால்ஸ் எல்லாம் மிஸ் ஆகும் பரவாயில்லை, அமெரிக்காவுக்கு போகனும்னா, இதையெல்லாம் தியாகம் பண்ணித்தானே ஆக வேண்டியிருக்குது!!!). .அப்புறம் 58வது மாடிக்கு போயி நம்மளோட கைரேகைய கொடுக்கனுமாம். அதுவும் முதல்ல 4 விரல்ல உள்ள ரேகையும் அப்புறம் கட்டை  விரலுக்குள்ள ரேகையும் கொடுத்துட்டு , அங்க உட்கார்ந்திருக்கிற கூட்டத்துல போயி ஐக்கியமாகிடனுமாம். நானும் கைரேகையை எல்லாம் கொடுத்துட்டு, அந்த கூட்டத்துல போயி உட்கார்ந்து, எப்படா நம்மளை கூப்பிடுவாங்கன்னு காத்துக்கிட்டு இருந்தேன்.  ரொம்ப நேரம் கழிச்சு, ஒரு ஆபிசர் அம்மா என்னைய கூப்பிட்டாங்க. நானும் அவுங்க முன்னாடி போயி நின்னேன். எதுக்கு அமெரிக்காவுக்கு போறீங்கன்னு கேட்டாங்க. நானும் இந்த மாதிரி, இந்த மாதிரி, அமெரிகாவில தமிழ் கல்வி மாநாடு ஒண்ணு நடக்குது. அதுக்கு என்னையும் மதிச்சு  கூப்பிட்டிருக்காங்க, அதுக்காக போறேன்னு சொன்னேன். அப்ப நீங்க என்ன தமிழ் வாத்தியாரான்னு ஒரு கேள்வி கேட்டாங்க. அடடா, இவுங்க நம்மளை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களேன்னு நினைச்சு, சனிக்கிழமைல மட்டும் என்னோட ஆத்ம திருப்திக்கு தமிழாசிரியரா சேவை செய்யுறேன். வயித்து பொழப்புக்கு கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழுகிறேன்னேன். உடனே அந்த அம்மாவும் பயபுள்ள ஒழுங்கா தான் பதில் சொல்றான்னு புரிஞ்சுக்கிட்டாங்க. ஏன்னா, அந்த அப்ளிகேஷன்ல நான் என்ன வேலை பண்றேன்னு எழுதியிருக்கிறேனே!. சரி, எத்தனை வருஷமா கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழுறீங்கன்னு கேட்டாங்க. அது ஆச்சு ஒரு 20 வருஷமான்னேன். உடனே அந்த அம்மா ரொம்ப குஷியாகி (ஒரு இளிச்சவாயன் மாட்டிக்கிட்டான், இவன்கிட்ட என்ன கேள்வி வேனாலும் கேட்கலாம்னு நினைச்சுட்டாங்க. அது மட்டும் இல்ல, என்னோட பால் வடியும் முகத்தை பார்த்து,  இவன்கிட்ட, நம்மளோட சந்தேகத்தை எல்லாம் தீர்த்துக்கலாம்னு நினைச்சுட்டாங்க போல). நீங்க தினமும் ஆபீஸுக்கு போனவுடனே என்ன பண்ணுவீங்கன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கன்னு, கம்ப்யூட்டர்ல வேலை பார்க்குறவன் கிட்ட கேக்கக்கூடாத கேள்வியை கேட்டாங்க. இவுங்க கிட்ட போயி, காலைல போனவுடனே மெயில், பேப்பர் எல்லாம் படிச்சுட்டு தான் வேலை செய்ய ஆரம்பிப்பேன்னு சொல்ல முடியுமா. அதனால என்னமோ 8 மணி நேரமும் வெறும் வேலையை மட்டும் பார்க்குற மாதிரி கொஞ்சம் பீலா எல்லாம் விட்டேன். பாவம் அந்த அம்மா நான் சொன்னதை எல்லாம் ஆச்சிரியமா கேட்டு நம்பிட்டாங்க.அப்புறம், பாஸ்போர்ட் டோக்கியோவிலா வாங்கினிங்க? டோக்கியோவில எத்தனை வருஷம் இருந்தீங்கன்னு கேட்டாங்க. நானும் கிட்டதட்ட ஒரு அஞ்சு வருஷம்னேன். உடனே அந்த அம்மா, சிட்னில எத்தனை வருஷமா இருக்கீங்கன்னு கேட்டாங்க? அதுக்கும் அஞ்சு வருஷமா இருக்கேன்னேன். இவ்வளவு நேரமா, நான் சொன்னதுக்கு எல்லாம் ஆச்சிரியமா என்னைய பார்த்து தலையெல்லாம் ஆட்டிக்கிட்டு இருந்தவுங்களுக்கு, திடீர்னு ஏதோ சந்தேகம் வந்திருக்கும் போல, சந்தேகமா என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்த்தாங்க. எனக்கு அவுங்க சந்தேகமாதான் பார்க்கிறாங்கன்னு புரியலை. நாம ரொம்ப அழகா இருக்கோம் போல, அதனால தான் நம்பளை அப்படி  பார்க்கிறாங்கன்னு நினைச்சேன். ரொம்ப நேரமா, என்னைய பார்தது மட்டுமில்லாம, என்னோட பாஸ்போர்ட்ல இருக்கிற எல்லாப் பக்கத்தையும் வேற பார்த்தங்களா, அப்பத்தான், என்னோட மரமண்டைக்கு புரிஞ்சுது, நாம அழகா இருக்கோம்னு அவுங்க பாக்கலை, ஏதோ சந்தேகம் வந்துடுச்சு, அதான் அப்படி பார்த்திருக்காங்கன்னு. அவுங்களுக்கு என்ன சந்தேகம் வந்திருக்கும்னு நானும் யோசித்துப் பார்த்தேன், “ஒவ்வொரு நாட்டிலும் 5 வருஷம் தான் இவன் இருப்பான் போல, இப்ப அமெரிக்காவில போயி வேலை தேடிப்பானோன்னு சந்தேகம் வந்திருக்கும்னு நினைச்சேன்”, அப்ப நம்ம அமெரிக்காவுக்கு போற கனவு, கனவாவே போயிடுமோன்னு எனக்கு பயம் வந்துடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு, உங்களுக்கு குடும்பம் இருக்கான்னு கேட்டாங்க. ஏன் இல்லாம, ஒரே ஒரு மனைவியும், ரெண்டே ரெண்டு குழந்தைகளும் இருக்காங்கன்னு சொன்னேன். திருப்பியும் என்னைய பார்த்தாங்க, அப்புறம் அவுங்களே இல்லன்னு தலையை ஆட்டிக்கிட்டாங்க. எப்படியோ ஒரு வழியா தெளிஞ்சு, உனக்கு விசாவை கொடுக்கிறோம்னு சொன்னாங்க. அப்புறம் தான் எனக்கு உயிரே வந்துச்சு. ரொம்ப நன்றியம்மா சொல்லி வெளியே வந்தேன்.
அட கிரகமே, விசாவுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, அங்க போனா, இன்னும் எவ்வளவு கஷ்டம் வருமோன்னு பயமாயிடுச்சு. "வல்லவனுக்கு  புல்லும் ஆயுதம்கிற மாதிரி", என்ன கஷ்டம் வந்தாலும் நம்ம மூளையை வச்சு சமாளிச்சுக்கலாம்னு ஒரு குருட்டு தைரியத்துல, அமெரிக்கா போறதுக்கு விமானத்துல எறிட்டேன்.  அடுத்த பதிவுல இன்னும் சொல்றேன்.
                                                                                                                                              பகுதி-2

1 comment:

  1. அமெரிக்கா என்ன சும்மாவா பாஸ்!!

    ReplyDelete